Pages

நேசம் நம் சுவாசம் !

Wednesday, October 27, 2010

அனிதா

நான்தான் டெலிபோனில் அழைத்தேன்."ஹலோ அனிதா, நான் ஜெகன் சென்னையிலிர்ந்து பேசறேன்.எப்படி இருக்கீங்க?
"ஓ ! ஜெகன் , நான் நல்லா இருக்கேன் "-குரலில் சின்னதாய் ஒரு தயக்கம்.
"ஒங்க ட்ரான்ஸ்பர் ஆர்டர் பார்த்தேன்.வெல்கம்  டு அவர் நுங்கம்பாக்கம் பிராஞ்ச். எப்ப ஜாயின் பண்ணப் போறீங்க?"
"வர்ற புதன்கிழமை ஜாயின் பண்ணலாம்னு இருக்கேன் " 
என் உற்சாகத்தின்  பத்து சதவீதம் கூட அனிதாவின் குரலில் இல்லை.ஏன்... என்னாயிற்று? 
"புதன்கிழமை நேரா நம்ம வீட்டுக்கு வந்துடுங்க....டிபன் முடிச்சிட்டு ஆபிஸ் போகலாம் " என்றேன்.
"எதுக்கு ஜெகன்.. சிரமம்.. எங்க அண்ணன் வீடு நுங்கம்பாக்கம் பிராஞ்ச்க்கு பக்கத்திலேதான். அங்கிருந்து வந்துடுவேன்." என்றவள் அவசர அவசரமாக "பிராஞ்ச்ல மீட் பண்ணுவோம்" என்று சொல்லி போனை துண்டித்தாள்.
ம்ம்ம்.ம்ம்  கிட்டத்தட்ட 15 வருட பழக்கம். நான் திருச்சியில் கிளார்க்காக வேலை  பார்த்த போது, அனிதா  எனக்கு ஜூனியராக ஜாயின்  செய்தாள். நாகர்கோயில் பெண்.மிதமான அழகு. மிகவும் திருத்தமாக  உடை அணிந்திருந்தாள் .ஆனாலும்  பார்வையில் ஒரு மிரட்சி.கூடவே வந்த அவள் அப்பாதான் எங்கள் எல்லோரிடமும் "கொஞ்சம்  பாத்துக்கோங்க" என்று சொல்லிவிட்டுப் போனார்.
நான் உள்பட சில நண்பர்கள் அவளுக்கு நட்பாக இருந்து பேங்க்கின் அன்றாட அலுவல் விஷயங்களை சொல்லிக் கொடுத்தோம். கற்பூர புத்தி. ஒரே வாரத்தில் பிடித்துக் கொண்டாள் . அப்போது , திருச்சி ஒய்.டபிள்யு.சி.ஏயில் தங்கியிருந்து ஆபீசுக்கு வந்தாள். அவள் ஊர் அளவுக்கு சாப்பாடு நன்றாக இல்லை என அடிக்கடி புலம்புவாள். நாங்கள் வீட்டிலிருந்து  எடுத்து வரும்போது அவளுக்கும் சேர்த்தே எடுத்து வருவோம்.ஒன்றாக லஞ்ச சாப்பிடுவோம்.
அந்த வருட  தீபாவளியின்போதுதான் அவள் எங்கள் எல்லோருக்கும் மிக நெருக்கமானாள். தீபாவளியை  ஒட்டி அவள் ஹாஸ்டல் ஒட்டுமொத்தமாக    
காலியாகிவிட அவள் நாகர் கோயிலுக்கு போகாததால் எங்கள்  வீடுகளுக்கு விசிட் அடிப்பதாக ப்ளான். ஒரு லேடி கிளார்க் தீபாவளிக்கு முதல் நாளிரவு தன்னுடைய வீட்டிற்கு அழைத்துப் போய் விட்டார்கள். அங்கே தங்கி தீபாவளி கொண்டாடி விட்டு மறு நாள் என் வீட்டிற்கு வந்தாள். 
என் அம்மா அனிதாவிற்கு ஒரு சாரி வைத்துக் கொடுத்து அதை அணிந்து கொள்ளச் சொன்னாள். அம்மாவின் அந்த அன்பிலும், எங்களின் கூட்டுக் குடும்ப அட்டகாசங்களிலும் நனைந்து நெகிழ்ந்து போனாள். "ஜெகன்,ஒங்க அம்மாவுக்கு நான் க்ரிச்டியன்னு தெரியுமா?"ன்னு கேட்டாள். மதியான சாப்பாட்டுக்கு முன்பு எங்க சித்தப்பா "அனிதாவோட ஜீசசும் நம்பளோட கிருஷ்ணரும் ஒண்ணுதான்னு" ஒரு பெரிய உரை நிகழ்த்தினார். 
எங்கள் வீட்டு 18 உருப்படிகளுடனும் அனிதாவிற்கு நன்றாக டயம் பாஸ் ஆனது.
 
"ரொம்ப்ப்ப பிடிச்சிருந்தது" என்றாள், மறு நாள் ஆபீசில்.
அதற்க்கப்புறம் என் வீட்டு சாப்பாடு முதலில் அவள் கைக்குப் போய் விட்டுத் தான் எனக்கு வரும்.என் நண்பர்கள்தான் ,"ஏண்டா ஜக்கு, அம்மாகிட்ட சொல்லி மேலாக உப்பு போட்டு அனுப்ப சொல்லுடா" என்பார்கள். அவளுடைய பிரத்யேக ஷாப்பிங்களுக்கு நளினி,ஜெயந்தி  ஆகியோரும் , புத்தகம் மற்றும் இதர ஷாப்பிங்களுக்கு நான் , சுந்தர், பாலா மூவரும் கம்பெனி கொடுப்போம்.
இதெல்லாம் கொஞ்ச நாட்களுக்குத் தான்.....
ஒரு முறை அனிதா நாகர்கோயிலுக்கு லீவில் போனாள். நானும், சுந்தரும்  பஸ்சில்லேற்றிவிடப் போனோம். நடு வழியில் பசித்தால் இருக்கட்டும்  என்று கொஞ்சம் பிஸ்கட்டும்,பழங்களும் வாங்கிக் கொடுத்தேன்."தேங்க்ஸ்"என்றாள்.

நான்கு நாள் லீவு முடிந்து வந்த அனிதா, எதையோ பறிகொடுத்தவள் போல இருக்கவும், நண்பர்கள் "என்னாயிற்று" என்று விசாரித்தோம்.ஒன்றும் பதில் இல்லை. கலகலப்பு இல்லாமல் அவள் முகத்தில் ஒரு சோகம் குடிகொண்டிருந்தது.  நாங்கள் எங்கள் மண்டையைப் போட்டு உடைத்துக் கொண்டதுதான் மிச்சம்.அனிதாவிடமிருந்து நோ ரெஸ்பான்ஸ்! 

லஞ்சின் போது கூட அனிதா  தனியாக சாப்பிடத் தொடங்கினாள். "என்னன்னும் சொல்ல மாட்டேங்கிறா...ஊரில் ஏதாவது ப்ராப்லமோ  என்னமோ...கொஞ்ச நாள் அவ போக்கிலேயே விட்டு விடுவோம்" என்றாள், ஜெயந்தி.

விட்டு விட்டோம்.

ஒரு நாள் நான் கேஷில் இருந்தேன். மாதக் கடைசியானதால் வங்கியில் கூட்டமும்  அதிகம் இல்லை. பணத்தை கட்டி வைத்துக் கொண்டிருந்தேன். அனிதா என் காபினுக்குள்  வந்தாள். "ஜெகன்,ஒரு வாரமாகவே என் மனசு சரியாகவே இல்லை. நான் ஒன்னு சொன்னா கோவிச்சுக்க மாட்டீங்களே ...." என்றாள்.
"என்ன?" 
"ஐ லைக் யு" என்றாள்.
எனக்கு தூக்கிவாரிப் போட்டது ! இன்ஸ்டண்டாக வியர்த்தது!! 
எங்களை யாரும் கவனிக்கவில்லை என்பதை ஊர்ஜிதப் படுத்திக்கொண்டேன். "என்ன சொல்றே,அனிதா?" என்றேன் 
"எஸ்... வாழ்ந்தா உன்னோடத் தான் வாழணும்னு நினைக்கிறேன். உன்னை,உன்னோட அன்பை, உன்னோட குடும்பத்தை எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு...அதிகப்பிரசங்கித்தனமா பேசறேன்னு நினைக்காதே...லைப் பூரா உன் கூட வாழணும்னு நினைக்கிறேன். மறுக்க மாட்டியே?" என்று கண்கள் கலங்கக் கேட்டாள்.
"சாயங்காலம் பேசலாம்"  என்று சமாதானமாய்க்  கூறினேன்.

அன்று மாலை அவளைச் சந்தித்து இந்த ஒரு தலைக் காதல் எப்படி திருமணமாய் பரிணமிக்க முடியாது என்பதை மிகுந்த கவனமான வார்த்தைகளைக் கொண்டு அவள் புரிந்துகொள்ளும் வகையில் விளக்கினேன். அனிதா  தன மனதை மிக மிக அந்தரங்கமாக என்னிடம் பகிர்ந்துகொண்டதற்கு என் நன்றியையும்  , அவள் காதலை நான் ஏற்றுக் கொள்ள இயலாத நிலைக்கான காரணத்தையும் மிகவும் பக்குவமாக சொன்னேன் .

அழுகையினூடே ,புரிந்து கொள்ள முயற்சிப்பதாக  சொன்னாள்."என்னை நிராகரித்து விட்டாலும் உன் மேல் எனக்கு கோபம் இல்லை .....உன்னிடம் எனக்கு இன்னும் காதல்தான் அதிகமாகிறது" என்றாள், கண்களைத் துடைத்தபடி.

                   ******************
இப்படியே 15 வருடங்கள் ஓடி விட்டன. இப்போது, மீண்டும் அனிதா....ஆனால், திருமணமாகி, தாயாகி விட்ட அனிதா ! 

புதன்கிழமை ஜாயின் செய்தாள் . மேனேஜர் , சக அதிகாரிகள் எல்லோருக்கும் அறிமுகம் செய்து வைத்தேன். மதியம் , அவள் அண்ணி கட்டி கொடுத்த லஞ்ச்சை சாப்பிட்டாள். என் பாமிலியைப் பற்றி விசாரித்தாள். அவள் கணவரைப் பற்றியும், மகனைப் பற்றியும் பேசியபோது பெருமிதப்பட்டுக்கொண்டாள்.

ஒரு வாரம் சென்ற பின்பு, கொஞ்சமாய் பேசத் தொடங்கினாள் . வீட்டிற்கு வர அழைப்பு விடுத்தேன். மெல்லிய புன்னகையே அவளின் பதிலானது.

சனியன்று சீக்கிரமே வேலைகள் முடிந்து விட்டன. கிளம்பினோம். "அனிதா, ஹவ் அபௌட் எ காபி? " என்றேன்.
"ஷ்யூர் " என்றாள்.
'எல்லென் கார்டன் காபி'க்கு சென்றோம்.இரண்டு காபி ஆர்டர் செய்தேன்.
"இப்ப தெளிவாயிட்டீங்களா,மேடம்" என்றேன். புரிந்துகொண்டிருப்பாள்.
"எப்பவுமே தெளிவுதான்" என்றாள்.
"நாம எப்பவும் போல நல்ல நண்பர்களாகவே இருப்போம்" என்றேன்.
"ம்ம்ம்ம் ..ம்ம் .. ஜெகன், நீங்க என்னை எப்பவும் நல்ல பிரெண்டாகவே நினைக்கறீங்க.. அப்படியே இப்பவும் நினைச்சுக்குங்க ..அதுதான் உங்களோட உயரிய  குணம்."
ஒரு கெட்டிலில் பால், சிறிய கிண்ணத்தில் டிகாக்ஷன் , மற்றொரு கிண்ணத்தில் சர்க்கரையும் டேபிளுக்கு  மேல் வைத்தார் ,பேரர்.
லேசாக செருமிக் கொண்டாள், அனிதா."நட்பு எப்போதும் பரிசுத்தமானது,ஜெகன்.அது பௌதீக மாற்றம் மட்டுமே ஏற்படுத்தக்  கூடியது .நட்பை மீறி சுயநலமோ ,துளியேனும் காமமோ தலை தூக்கி அந்த நட்பினால் கிடைக்கும் உறவு தனக்கு எப்போதுமே வேண்டும், தனக்கு மட்டுமே கிடைக்கவேண்டும் என்று எண்ணத் தொடங்குகையில், அது காதலாக உருமாறுகிறது. நட்பு எப்படி பரிசுத்தமானதோ அதைப்  போலவே, காதலும் தூய்மையானதே! ஆனால் வெவேறு என்டைடி. மேலும் நட்பு ,காதலாக மாறும் சாத்தியம் உள்ளது. ஆனால் காதலாக பரிணமித்தபின் அது சாகா வரம் பெற்ற காதலாகவே இயங்குகிறது. மீண்டும் எக்காலத்திலும் அது நட்பாக பரிமளிக்க முடியாது"
"ஓக்கே..ஓக்கே.... காபி எடுத்துக்குங்க, அனிதா" என்றேன்,சூழ்நிலையை கலகலப்பாக்கும்  வகையில்.
பாலை ஒரு கப்பில் ஊற்றிக் கொண்டாள். "இந்த பாலில் டிகாக்ஷன் ஊற்றப் படுகிற வரையில் இது தூய்மையான பால். டிகாக்ஷன் ஊற்றப்பட்டு விட்டால் , அது காபியாகி விடும். அதன் பின்பு அது பால் இல்லை. மீண்டும் பாலாக மாறவே  முடியாது,
ஜெகன்" என்றாள். இதை விட நாசுக்காக எவராலும் பேச முடியாது என்று எனக்குத் தோன்றியது.
நானும் காபி கலந்து கொண்டேன். எனக்கு சர்க்கரை போட்டுக் கொண்டேன். அனிதாவின் கோப்பைக்கும் சர்க்கரையை இடும் வகையில், கப்பை நகர்த்தி "சர்க்கரை  " என்றேன்.
"எனக்கு வேண்டாம்" என்றாள்.
"ஏன்  ....டியாபெடிக் பயம் ?' என்றேன்.
"அப்படியெல்லாம் இல்லை... கசப்புக்கு பழகிகிட்டேன்" என்றாள், அனிதா.

வெளியில் வந்தோம்.....அதிகம் பேசவில்லை. நெருடல் இல்லாத வேறு வேறு பாதைகளில் பயணப்பட்டோம். 
*  *  *  *  *










3 comments:

naanhabi said...

முதலில் கீதா, இப்போது அனிதாவா .... பலே ! என்னவோ பெரிய திருப்பம் இருக்கும் என்று எதிர்பார்த்தேன். முடிவில் தத்துவம் மட்டுமே இருந்தது . கதையில் பால் இருந்தது ஆனால், காபி டிக்காஷன் போதவில்லை ! இன்னொரு ஸ்ட்ராங் காபி தாருங்களேன்.
சின்ன சின்ன எழுத்து பிழைகள் இருந்தாலும்,
பரவாயில்லை.

நன்றி !
அன்புடன் ஹபி...

என்றென்றும் உங்கள் எல்லென்... said...

உங்களுடைய விமரிசனத்திற்கு நன்றி,பாய். குறைகளை குறைத்துக் கொள்ள முயற்சிக்கிறேன்.

Unknown said...

oru periya thathuvathai evvalavu simple aaga sollapatturukku. ithu rasamillai athirasam...
Ram ...