Pages

நேசம் நம் சுவாசம் !

Friday, October 29, 2010

ரசமான ரசம் !
(இந்த கதையைப் போல்  எல்லோருடைய வாழ்க்கையிலும் சம்பவங்கள் நடந்திருக்கும்.... 'நமக்கு  முன் கூட்டியே இப்படி நடக்கும் என்று தெரியாமல் போனதே' என்று எத்தனையோ முறை புலம்பியிருப்போம்... அப்படித்தெரியாமல் போவதுதான்  வாழ்க்கையின் சுவாரஸ்யமே! )

"என்ன, இன்னிக்கும் சாம்பார்தானா ,ரசமில்லையா  ?"-என்றான் ரூபன், சலிப்புடன்.(அப்படி கேட்டிருக்க வேண்டாம்.)

"ஒங்க அருமை புள்ளையை   கடைக்கு அனுப்பி தக்காளி,கொத்துமல்லி,பூண்டு வாங்கிட்டு வரச் சொல்லுங்க ...வேணா ரசம் வைக்கிறேன்" -இது சுமதி.

"குயந்தை புஸ்தகத்தே எடுத்து வெச்சிண்டு  படிக்கறதே அபூர்வம்...படிக்கட்டும். நானே போயி வாங்கிட்டு வந்துடறேன்" என்றபடி  செய்தித்தாளை  கடாசி விட்டு சட்டையை மாட்டிக்கொண்டு கிளம்பினான். (கிளம்பியிருக்கவேண்டாம்.)

செருப்பை மாட்டிக்கொண்டிருக்கையில் "இந்தாங்க ஸ்கூட்டர் சாவி" என்றாள் சுமதி.

"ஆமா இங்க இருக்கற மார்கெட்டுக்கு ஸ்கூட்டர்ல போகணுமா?..நடந்தே போயிட்டு வந்துடறேன்" என்று தெருவில் இறங்கினான்.  (ஸ்கூட்டர்லியே போயிருக்கலாம்)

நடந்து மெயின் ரோடை அடைந்ததும், ட்ராபிக் சிக்னலுக்காக அவனை ஒட்டி வந்து நின்றது ஒரு பேருந்து. 'அவ்வளவு தூரம் நடக்கணுமா? ரெண்டு ரூபா கொடுத்து மார்க்கெட்டுக்கு போயிடலாமே..' என்று (தோன்றாமலிருந்திருக்கலாம்) தோன்றியது.

பஸ்சிலும் கூட்டமில்லை. பின்பக்க நுழைவு வழியாக ஏறி சீட்டில் அமர்ந்தான், ரூபன். கண்டக்டர் , டிரைவருக்கருகில் நின்றுகொண்டு பேசிக்கொண்டிருந்தார்.'இங்க வரட்டும்.. டிக்கட் வாங்கிக் கொள்ளலாம்' என்று இரண்டு ரூபாய் நாணயத்தை கையில் வைத்துகொண்டு வெளியில்  வேடிக்கை பார்த்தபடியிருந்தான்.(அப்படியே வேடிக்கை பார்த்துக் கொண்டேயிருந்திருக்கலாம்)

ஏதேச்சையாக  ரூபன் பஸ்சிற்குள் பார்க்க, அவனுக்கு முந்தைய சீட்டில் அமர்ந்திருந்த ஒரு பெரியவரின் ஜிப்பாவை ஒரு ரௌடி 'ப்ளேடு' போடவும் ரூபனுக்குத் தூக்கிவாரிப் போட்டது! "ஐயோ..திருடன்" என்று கத்தியபடி 'ஆக்ஷன் கிங் அர்ஜுனாக' தன்னை பாவித்துக் கொண்டு ,ரூபன் அந்த ரௌடியின் முதுகுப் புற சட்டையைக் கோர்த்துப் பிடித்து ஓங்கி ஒரு குத்து விட்டான். 'சர்ட்'டென்று  திரும்பிய ரௌடி , பின்பக்க நுழைவு வழியாக இறங்கி ஓட முயல, ரூபனும் அவனைத் துரத்திக் கொண்டு ரன்னிங்கிலேயே இறங்கி துரத்த, அவன் சற்றும் எதிர்பாராத சந்தர்ப்பத்தில் ரௌடி, ரூபனுடைய  இடது  கையில்  'சரக்'கென்று கத்தியை செருகி வெளியே எடுத்ததில் 'குபுக்'கென்று ரத்தம் கொட்டியது. கொட்டிய 'ஏ' பாசிடிவைப்  பார்த்த  ரூபன், மயங்கி சரிய  ரௌடி'எஸ்'ஆனான்.

'சடன்'  ப்ரேக் போட்டு நின்ற பஸ்சில்லிருந்து கண்டக்டரும், பர்சைப் பறி கொடுத்த  பெரியவர் உட்பட அனைவரும் இறங்கி ஓடி வந்தனர்.

"பிக்பாக்கெட்டுங்க  நிறைய பேர் சுத்தறுதுனால நான் பைசாவே பர்சுல வைக்காமே பைக்குளையே வெச்சுக்குவேன்...இது  தெரியாம இப்படி  குத்துப்படணும்னு ஒன் தலையெழுத்து  " என்று பெரியவர் சொன்னதும்,  "யோவ்.. டிக்கெட் வாங்கிட்டியா இல்லியா" என்று கண்டக்டர் கேட்டதும் மயக்க நிலைக்குப் பயணப்பட்டுக் கொண்டிருந்த ரூபனுக்கு அமானுஷ்யமாகக் கேட்டது.

***** 
ஹாஸ்பிடல்.

கையில்  கட்டுப் போட்டபடிக் கட்டிலில் கிடக்கும் ரூபனுக்கருகில் மூக்கை முந்தானையில் சிந்தியபடியிருந்தாள், சுமதி."என்னங்க... பசிக்குதா... சாப்பிடறீங்களா?" என்றாள்.

"ம்ம்ம் ...ம்ம்"   என்று முனகியபடி உட்கார்ந்தான் , ரூபன்.

தட்டில் ,சோறிட்டு சாம்பாரை ஊற்றியவளிடம் "என்ன, இன்னிக்கும் சாம்பார்தானா,ரசமில்லையா  ?"என்று இத்தனைக்கும் காரணமான முதல் வரி கேள்வியைக் கேட்டு விட்டு நாக்கைக் கடித்துக் கொண்டான், ரூபன்.





6 comments:

helmina said...

hahahah looks like ur experience.. Great narration uncle.. Kudos

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

ரசமாய் இருக்கு!!

ரிஷபன் said...

ஹா.. ஹா.. இதுக்குதான் போட்டதை சாப்பிடணும்.

G.DineshKumar said...

inimela vettula yarum sambarthananu ketka mattanga poliruku...

Unknown said...

Oru rasathukaga evvalavu ratham sinthavendrumentru theriyama pochu.... inimelavathu thakkali illamal rasam vaikka kathukkungo!!!

naanhabi said...

இந்த கதை உங்கள் பத்து வயதில் எழுதியதோ என எண்ணத்தோன்றுகிறது !
-மு. ஹபி!