Pages

நேசம் நம் சுவாசம் !

Thursday, February 24, 2011

வாலண்டைன்ஸ் தினம்

        

              வாலண்டைன்ஸ் தினம் கடந்து போன பின்புதான் ,"அடடா" என்று தோன்றியது....லேட்டா என்ட்ரி ஆவதுதானே காதலின் ஸ்பெஷலே...!
               எழுதாமல் எப்படி விடுவது ? சரி... இம்முறை 'கவிதையில்  கை வைப்போமே' என்று தோன்றியதன் விளைவாய் இதோ வருகிறது மூன்றே மூன்று  வரி - இரண்டு வார்த்தை கவிதை...

              விதி யாரை விட்டது...படியுங்கள்


                                    காதல் 

                      நினைக்கும்...

                      நினைக்கும் என நினைக்கும்...

                      நினைக்கும் என நினைக்கும் என நினைக்கும் ....

                                 *****************
  

Tuesday, February 15, 2011

அப்புடு.... இப்புடு....எப்புடு..?

         
            அப்புடு.... இப்புடு....எப்புடு..?                        
                                      (ரொம்ப தப்புடு)
(முன் குறிப்பு : முதலில் பின் குறிப்பு படிக்கவும்)





          என்.டி.ராமராவ்காரு     சி. எம். ஆக ஆந்திரத்தை 'ஓஹோ' என்று அரசாண்டு கொண்டிருந்த காலகட்டம் அது. வில்லாக சர்டிபிகேட்டுகளையும் , அம்பாக அப்ளிகேஷன்களையும் கருதிக்கொண்டு ,அடுத்த வேளை 'புவ்வாவு'க்கு   ஏதாவது வேலை  கிடைக்குமா என்று   நான் வேட்டையாடிகொண்டிருந்தேன். என்.டி.ராமராவ்காரு, என்னை உடனடியாக ஆந்திர  மாநிலத்திற்கு வருமாறும் ,எனக்கு ஒரு வேலைவாய்ப்பு தருவதில் பெருமைப்படுவதாகவும் கூறி (மன்றாடி) அழைக்காவிட்டாலும் நான் அங்கு போவதாக முடிவு செய்து ஒரு சுபயோக சுபதினத்தில் ஹைதராபாத்தில் எனது ரூ.199.95 பைசா பாட்டா செருப்பு கால்களைப் பதித்தேன்.

           எனது சித்தி வீடு  ஹைதராபாத்தில் பாலா நகரில் இருந்தது. 'எந்தடு பஸ்சுடு பாலா நகருடு போகுடு' என்று எல்லா தமிழ் வார்த்தையோடும் ஒரு 'டு'வை சேர்த்தடித்து எனக்கும் எனது ஒன்றரையணா ஜோல்னா பைக்கும்  அதிக சேதாரம் ஏற்படா வண்ணம் பேசி, சித்தி வீடடைந்தேன். சித்திக்கும் என் கசின்களுக்கும் , நான் யார் துணையும் இன்றி தனியாக அவர்கள் வீடடைந்ததில் ஆச்சர்யம். கசங்கிப் போயிருந்த காலரைத் தூக்கி விட்டுக் கொண்டு என் பிரதாபத்தை பீட்டர் விட்டேன். 
            தெலுங்கு ஒரு 'டப்பா லேங்குவேஜ்' என்கிற என் எண்ணத்தை தவிடு பொடியாக்கும் சம்பவம் அடுத்த இரண்டு நாட்களில் நடக்கப் போவது தெரியாமல் அன்று முழுவதும் தெனாவெட்டாய்  திரிந்தேன்.
              சித்தப்பு HAL -இல் எக்சிக்யூடிவ். கசின்ஸ்   பள்ளிப்  படிப்பில் இருந்தனர். சித்தியோ 'லேடிஸ் க்ளப்' பின் காரியதரிசினி. எல்லாரும் ரொம்ப பிசி. நான் மட்டும் தான் அந்த வீட்டில் வெட்டி ஆபீசர். 
               சம்பவ தினத்தன்று , சித்தப்பு ஆபிஸ்க்கு கிளம்பிட்டார். யுனிபார்மை மாட்டிக்  கொண்டு கசின்சும் ஸ்கூலுக்குப் போயாச்சு. அவர்கள் போகும் வழியில் இருக்கும் அரிசிக் கடையில் வீட்டிற்கு அரிசிப் போட சொல்லிவிடும்படி சித்தி அவர்களிடம் காலையிலேயே சொல்லியிருந்தார்கள்.  'buf  கொண்டைக்கு ஊசி குத்தியபடி  சித்தி என்னிடம் ,"நேர போய் லெப்ட்ல திரும்பினா மளிகைக் கடை.. ..அங்க இந்த லிஸ்ட்ட குடுததுடு. அங்கிருந்து எதிர் சாரிக்கு வந்து பால் பூத்தை ஒட்டின சந்துல நேர போயி ரைட் எடுத்தா அரிசிக் கடை ஒண்ணு இருக்கும். நம்ப வீட்டு நம்பரை எழுதி தர்றேன்... அவங்ககிட்ட காமிச்சு 'வாளு இண்டிக்கு பீயம் பம்ப்பால பாப்பா செப்பின்தா'ன்னு கேளு" என்றதும் ,'எவ்வளவோ செஞ்சுட்டோம் ...இதை செய்ய மாட்டோமா' என்று வீட்டு நம்பரை ஒரு தாளில் எழுதி எடுத்துக் கொண்டு  கிளம்பினேன்.
                 சாலையில் இறங்கினேன்.  'தொரகுனா இடுவண்டி சேவா' பாடல் எவர் வீட்டில் இருந்தோ கசிந்து கொண்டிருந்தது. அதை சட்டை செய்யாமல் மனது முழுக்க 'வாளு இண்டிக்கு பீயம் பம்ப்பால பாப்பா செப்பின்தா ?' என்று உருப்போட்டபடி மளிகைக் கடையை அடைந்து லிஸ்ட்டை விசிறியடித்து  விட்டு, அரிசிக் கடையை நோக்கிய என் இரண்டாம் கட்ட லட்சிய பயணத்தைத்  தொடர்ந்தேன். 
                  'வாளு இண்டிக்கு பீயம் பம்ப்பால பாப்பா செப்பின்தா ?'
                  'வாளு இண்டிக்கு பீயம் பம்ப்பால பாப்பா செப்பின்தா ?'
                   என்று சிவாஜி மாதிரி, கமல் மாதிரி , ரஜினி மாதிரி  விதவிதமான மாடுலேஷனில் ஜெபித்துகொண்டே போய் என் இலக்கை அடைந்தேன். கடையில் செம கூட்டம். மனதுக்குள் 'வாளு இண்டிக்கு பீயம் பம்ப்பால பாப்பா செப்பின்தா ?' ரீல் ஓடியது.
சின்ன வயசில் அம்மா சொன்ன 'அத்திரிமாக்கு கொழக்கட்டை' கதை ஞாபகம் வந்தது.
                   கூட்டம் குறைந்ததும் அடிமேல் அடி வைத்து முன்னேறினேன்... 
                   காதில் பெரிய பெரிய கடுக்கன்களுடன், வெற்றிலையை குதப்பிக் கொண்டு அமர்ந்திருந்த முதலாளியை நெருங்கினேன்... அவருடைய சாதா பார்வையே முறைப்பது போல் இருந்தது.. கையில் தயாராக வைத்திருந்த தாளை உயர்த்திக் காண்பித்து தயங்கி, தயங்கி "வா ...ளு...   இன் ...டி...க்கு   பி. பீ... யம்    ப....ம்......பா .....லா   ...."என்று நாக்கு தடுக்கி, கண்கள் பிதுங்கி, தொண்டைக்குள் என் இதயம் சிக்கி சீரழிந்து, சொல்ல வந்த வாக்கியத்தை முடிக்க இயலாமல் நான் தடுமாறி தட்டாமாலை  சுற்றிக் கொண்டிருந்ததை உணர்ந்த 'கடுக்கன்',தெலுங்கில் ஏதோ சொல்ல, நான், அம்பேல்  ஆனேன். ஆந்திரா முழுவதும் ராமராவ் 'கிருஷ்ண பரமாத்மா' வாக நிறைந்து  இருப்பார் போல...என் பக்கத்தில் நின்று கொண்டு என்னை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த அப்பேற்பட்ட ஒரு 'கிருஷ்ண பரமாத்மா',"ரைஸ்  பேக் ' அல்ரெடி சென்ட் டு யுவர் ஹௌஸ்" ன்னு முதலாளி சொல்றாருப்பா." என்றார்.
                என்னிடமிருந்து ஒரு பெருமூச்சு குதித்தது  !!
                                
                                ***************
                         
                அடுத்த காரியமாக, பாலாஜி பப்ளிகேஷன்ஸின் '30 நாட்களில் தெலுங்கு' எங்கே கிடைக்கும் என்று தேடத் தொடங்கினேன்..

                                 **************
(பின் குறிப்பு : பத்திரிகைகள் தமது சர்குலேஷன்  குறையும்போது ரஜினி படத்தைப்          போட்டு சர்குலேஷனை  எகிற வைக்கும் உத்தி இந்த இடுகையில் கையாளப்பட்டுள்ளது..)

Monday, February 7, 2011

சமய சஞ்சீவி



                               சமய சஞ்சீவி(!)

                         தே மாதிரி ஒரு தை மாதம்தான் ....திருச்சிக்கருகில் ஒரு கோவில் கும்பாபிஷேகம்....என் நண்பனும் தூரத்து உறவினனுமான தங்கராஜிற்கு அந்த கும்பாபிஷேகத்திற்கு  'சவுண்ட் சிஸ்டம்' செய்ய காண்ட்ராக்ட் கிடைத்தது.. அவனுக்கு ஏற்கெனவே நாலைந்து அல்லக்கை அசிஸ்டன்ட்கள் இருந்தாலும் ராஜகோபுர ஸ்பாட்டிற்கு ஒரு ஆள் தேவையாய் இருந்தது.  அவன் போதாத காலம், அவனை என்னிடம் அழைத்து வந்து,"பரமசிவம்... துறு துறுன்னு வேலை செய்யற ஆள் எவனாச்சும் இருந்தா சொல்லேன்" என்று என்னிடம் சொல்ல வைத்தது.
                   நாமதான் அடுத்தவங்களுக்கு உதவறத்துக்குன்னே இந்த ஜன்மம் எடுத்து தொலைச்சிருக்கமே .... உடனே ," 'கொசு' மணின்னு எங்க ஆபிஸ்ல ஒரு ஆள் இருக்கான்.லீவு போட்டு வேண்ணா வரச் சொல்றேன்.ரேட்டு பேசிக்கோ " என்றேன்.

                    கும்பாபிஷேக தினம்.  கூட்டம் 'ஜே..ஜே' என்று அலை மோதுகிறது. முதலமைச்சரின் வருகையினால் மாவட்டம் முழுவதிற்கும்  சிறப்பு விடுப்பு வேறு. அக்கம்பக்கம் ஊர்களில் இருந்தெல்லாம் ஜனங்கள் வந்து குவிந்து கொண்டிருந்தனர். மற்ற  கோபுரங்களுக்கு அல்லக்கைகளை அனுப்பிவிட்டு , 'கொசு' மணி சகிதம் காலை ஐந்து மணிக்கெல்லாம் தங்கராஜ் ராஜகோபுரம் ஏறிவிட்டான்.
                     ராஜகோபுரத்துக்கு மூணு ஐயர்மார்கள்.பெரிசு பெரிசாய் நாமம் போட்டுக்கொண்டு ரெண்டு 'மைக்' கேட்டனராம். தங்கராஜ் 'மைக்'கை செட் பண்ண'கொசு' மணி கேபிள் இழுத்து ஆம்ப்ளிபயரில் கனெக்ஷன் கொடுத்திருக்கிறான். 'மைக்'கைக் கண்டதும் ஐயர்மார்கள், அவர்கள் கோஷத்தை ஆரம்பித்து விட்டனர். தங்கராஜ் மற்ற கோபுர அல்லக்கைகளுடன் தொடர்பு கொண்டு ஏற்பாடுகளை சரி பார்த்துகொண்டான்.
                     மணி ஆறாகிறது....ஏழாகிறது.... எட்டாகிறது.... வெயில் சுறு சுறுவென்று ஏற ஆரம்பித்தது .பத்தரைக்குத்தான் கும்பாபிஷேகம் நடக்க இருக்கிறது. நேர்முக வர்ணனைக்கு ஒரு 'மைக்'கை ரெடி பண்ணும்போது தங்கராஜிற்கு தலைவலி ஆரம்பித்திருக்கிறது. பசியும் சேர்ந்து கொள்ளவே கொஞ்சம் தள்ளாட தொடங்கினான். போதாகுறைக்கு  'ஜிவ்'வென்று  வேத கோஷத்தை கணீரென்று   ஐயர்கள் ஓதத் துவங்கியதும் 'மல்டிபிள் டிஸார்டர்' அவனுக்கு ஆரம்பித்தது. 
                   "கொசு மணி  ..... பயங்கரமா தலை  வலிக்குதுப்பா.." என்று கூறியிருக்கிறான்.
                   "அண்ணே.. இங்கன ப்ளாஸ்க் ரொப்பி காபி இருக்குது...எடுத்தாரட்டா ?" என்று உதவும் கரங்களை நீட்டியிருக்கிறான், 'கொசு'மணி.
                   "காபியோட ஒரு சாரிடான் போட்டேன்னா தலைவலி ஓடிரும் 'கொசு' "
                   "இப்படி 200 அடிக்கு மேல நின்டுக்கிட்டு சாரிடான் கேட்டா எங்கண்ணே போறது?
                   "எதுனாச்சும் பண்ணு 'கொசு'மணி... தலைவலி மண்டயப் பொளக்குது"
                   வெயிலுக்குப்  போட்டிருந்த குல்லாயை எடுத்து தலையை சொறிந்தான், 'கொசு'மணி. தங்கராஜு படும் பாட்டை காண  சகிக்க முடியாமல் என்ன பண்ணலாம் என்ற யோசனையுடன் 'கொசு'மணி, கோபுர விளிம்பு வரை சென்று தன் தலையை ஒரு கையாலும், முகவாய்க்கட்டையை மறு கையாலும் சொறிந்தபடி யோசித்தான். கீழே இறங்கி போய் மாத்திரை வாங்கி மீண்டு வர முடியுமென்று அவனுக்குத் தோன்றவில்லை. கீழே பார்த்தால் புள்ளி,புள்ளியாய் ஜனங்கள்...
                   "ஆஹா...'என்று துள்ளிக்குதிக்காத குறையாக "இப்ப ரெடி பண்ணிடறேன் அண்ணே" என்று உற்சாகமாக அலைந்த அவன் கண்கள் எதையோ தேடின.
                   எல்லாம் வினாடி நேரத்தில் ரெடி ஆகின. தலையில் தான் போட்டிருந்த தொப்பிக்குள் ' ஒரு சாரிடான் வாங்கி அனுப்பவும், ப்ளீஸ்' என்று எழுதி ஒரு ஒரு ரூபாய் நாணயத்தையும் அந்த தொப்பிக்குள் இட்டு ,சாரம் காட்டி மிச்சமிருந்த கப்பாணி  கயிறில் தொப்பியைக் கட்டி மெதுவாக கீழே இறக்கினான்.
                    இடையிடையே "அண்ணே... கொஞ்சம் பொறுத்துக்குங்க... சாரிடான் இதோ வந்திடும்" என்று துடித்துக்  கொண்டிருக்கும் தங்கராஜிற்கு ஆறுதல் அளித்துக் கொண்டிருந்தான்.
                     அவன் சொன்னது போலவே சிறிது நேரத்தில் புண்ணியவான் எவரோ செய்த உதவியால் சாரிடான் 'கொசு'மணியின் கைக்கு வந்து சேர்ந்தது. 'பிளாஸ்கை' சரித்து ஒரு பெரிய சொம்பில் காபி எடுத்துக் கொண்டு , தலையைப் பிடித்தபடி அமர்ந்திருக்கும் தங்கராஜிடம் போய் ,"அண்ணே, காபியும் சாரிடானும் ரெடி...இந்தாங்க" என்றான்.
                    சஞ்சீவி மலையை தூக்கி வந்த அனுமானை ராமன் கட்டிக்கொண்டது போல் ஆலிங்கனம் செய்ய முன் வந்தபடி, தங்கராஜ் "கொசு மணி ....நீ பெரிய ஆளுய்யா " என்று கூற ,
                    " அண்ணே... ஒரு நிமிஷம்... ஒரு பத்து ரூபா கொடுங்க.."என்றான், 'கொசு'மணி.
                    'கொசு'மணி ஏதோ விளையாடுவதாக எண்ணிய தங்கராஜ், "தர்றேம்ப்பா... முதல்ல மாத்திரையை கொடு"எனவும்,
                     "அண்ணே... காசைக் கொடுங்க.. மாத்திரையும் காபியும் உங்க கைக்கு வரும்" என்று கறாராகக் கூறியிருக்கிறான்.
                     "என்னப்பா ... அநியாயமா இருக்கு.. சாரிடான் ஒரு ரூபாய்தானே"
                     "ஒரு ரூபாய்தான்னே... ஆனா ,அதை இவ்வளவு உயரத்திற்கு, நீங்க கேட்ட பத்து நிமிஷத்துக்குள்ளே, என் மூளையை கசக்கி ,கொண்டு வந்தேன் இல்லே...அதுக்கான பீஸ்தான் எச்சாவா நான் கேக்குறது... பத்து ரூவாவ கொடுத்திட்டு சாரிடான் போட்டு காபி குடிங்க அண்ணே .... இந்த டயத்தில காசை பாக்காதிங்க" என்றான்.
                      வேறு வழி தெரியாததால் தங்கராஜும் அப்படியே செய்தான்.

                     கும்பாபிஷேகத்தை  எல்லாம் நல்லபடியாக முடித்து  , இத்தனை விஷயத்தையும் ஒரே மூச்சில் என்னிடம் சொன்ன தங்கராஜ் அந்த சம்பவத்திற்குப் பிறகு இது நாள் வரை என்னிடம் வேறு எந்த உதவியும் கேட்கவே இல்லை...

             ***********