Pages

நேசம் நம் சுவாசம் !

Sunday, January 16, 2011

கொசுத் தொல்லை

                 கடி - 1
                  மீப கால சினிமா ஒன்றில் "இந்த கொசுத் தொல்லை தாங்க முடியலயே" என்கிற வசனத்தைக் கேட்டிருப்பீர்கள். ரிஷி மூலம், நதி மூலம் என்பது போல் இந்த வசன மூலம் எது என்று பார்த்தால் அது எங்கள் பாக்டரிதான். இன்னும் சொல்லப் போனால் இரண்டு, மூன்று ஆண்டுகளுக்கு முன்பு எங்கள்  பாக்டரியின் , எங்கள் ப்ளாண்டில் சாட்சாத் எங்கள் போர்மன்  திருவாயிலிருந்து உதிர்ந்த வாக்கியம்தான் ,"இந்த கொசுத் தொல்லை தாங்க முடியலயே" என்பது.... இது எப்படியோ ,யார் மூலமோ அந்த காமெடி ட்ரேக் எழுதுபவர் காதிற்கு எட்டி அதை அவர்  'கபால்' என்று பிடித்துப் போட்டு காசு பார்த்து விட்டார்.
               என்ன , இந்த வசனம் என் அலுவலகத்தின் கைங்கர்யம்தான்  என்பதை என் நெருங்கிய நண்பர்கள், உறவின் முறையினர் ஒத்துக் கொண்டுவிட்டனர்... உங்களுக்கும் தெரிந்திருக்கட்டுமே என்பதால்தான் எழுதுகிறேன்...
                சரி...கதைக்குள் வருவோம்...இந்த கதையின் நாயகன் சுப்பிரமணியன்.....  I .T .I படித்து ,எங்கள் பாக்டரியில் சீனியர் டெக்னீஷியனாக 'வேலை பார்ப்பதாக' சொல்லிக் கொள்பவன். ஆள் நெடுநெடு என்று உயரமாய், கச்சலாய் இருப்பான்...கடினமான யூனிபார்மில் கொஞ்சம் பூசினாற்போலிருப்பான்...கண்கள் சதா அலை பாய்ந்து கொண்டே இருக்கும்... கமல்ஹாசன் மீசை  வைத்துக் கொள்ளும்போதெல்லாம் இவனும் மீசை  வைத்துக்  கொள்வான்...அவர் எடுத்தால் இவனும் எடுத்து விடுவான்...மற்றபடி, கொக்கு பறப்பதற்கு முன் ஒரு நடை நடக்குமே அது மாதிரித்தான் சுப்பிரமணியன், சாதாரணமாகவே  நடப்பான்.  நகரும்  பஸ்ஸை பிடிக்கும் அவசரம் அந்த நடையில் தெரியும்...
                  முன்பெல்லாம் அவனை 'கேயெஸ்'..'கேயெஸ்' என்று இனிஷியல் சொல்லித்தான் கூப்பிட்டுக் கொண்டிருந்தோம்...மூன்று வருஷத்திற்கு முன்னால் நடந்த யுனியன் எலெக்ஷனில் குதித்தபோது 'உங்கள் வைர வாக்குகளை தோழர் கொ.சு.மணிக்கு அளித்து இமாலய வெற்றி காண வைப்பீர்' என்ற வாசகங்களுடன்  ஜம்போ ப்ளேக்ஸ்யில் கம்பீர நடை பயின்று கொண்டிருந்தார் நம்ப தொரை..."டேய் நம்ப 'கேயெஸ்'டா" என்று அவனவனும் அடையாளம் கண்டுகொண்டு கூத்தாடினான்.எலெக்ஷன்ல  என்னமோ ஊத்திகிச்சுன்னாலும் அன்று முதல் எங்கள் பிளான்ட் தோழர் 'கேயெஸ்'ஸின் திருநாமம் 'கொசு மணி' என்று புனருத்தாரணம் ஆனது.
                நான் என்று மட்டுமில்லை ... பெரும்பாலோனோரும்  அவனுக்கு 'கேயெஸ்' என்ற சுருக்கப் பெயரை விட 'கொசு மணி' என்ற பெயரே மிகவும் பொருத்தமானது என்று கருதியதால் அந்த எலெக்ஷன் வந்தது ஒரு விதத்தில் நல்லதுதான் என்று உணர்ந்தோம் !
                   ஆனால் , தேர்தல் தோல்வியில் அவன் துவண்டு விடவில்லை...மாறாக கொசு மாதிரி 'சர்ட்'...சர்ட்' டென்று பறந்து கொண்டே இருந்தான்..உண்மையில் கொசு ஒரு புத்திசாலி ஜீவன். நாம் எளிதில் 'ரீச்' பண்ணமுடியாத நம் உடல் பிரதேசம் பார்த்து உட்கார்ந்து கடிக்கும். நாம் நின்று கொண்டிருந்தால் காலைப் பதம் பார்க்கும்... படுத்துக் கொண்டிருந்தால் முதுகில் தன் வாய்வரிசையை காண்பிக்கும் ... நாம் வளைந்து நெளிந்து அதை zero - in பண்ணி நெருங்குகையில் உறிஞ்ச வேண்டியதை உறிஞ்சிவிட்டு எஸ்கேப்..... வெறுமனே நம்மை நாமே அடித்துக் கொண்டு நம் கையை நாமே  பார்த்துக் கொண்டிருக்க வேண்டியதுதான்..
                  அதே போல்தான் நம்ப கொசு மணியும்... லேசில் சிக்காமல் பறப்பதில் கில்லாடி.. அப்படித்தான்  ஒரு நாள்............

                நான்  அப்போதுதான், நைட் ஷிப்டிற்கு வந்து என் சீட்டில் அமர்ந்தேன். உடனே போர்மேனிடமிருந்து போன்.
                "சார்,பரமசிவம் பேசறேன்" என்றேன்.
                "பரமசிவம் ,  அந்த கொசு மணி என்னய்யா நாலு மணிக்கெல்லாம் கிளம்பறான்...டூட்டி அஞ்சரை வரை உண்டுன்னு அவனுக்கு தெரியுமா..தெரியாதா?"
                "தெரியலியே சார்" -வில்லங்கத்தை விலை கொடுத்து வாங்கப் போகிறாய் என்று என் உள்மனம் ஊளையிட்டது. 
                 "அவன் கிளம்பி வாசல்ல நிக்கிறப்போ கையும் களவுமா புடிச்சிப்பிட்டேன். எங்க கிளம்பியாச்சு?ன்னு கேக்குறேன்.. தெனாவெட்டா "ஊட்டுக்கு'ன்றான்....நான்தான், 'ரீவைண்டிங் போன ரெண்டு மோட்டார் சரியாகி வந்திருச்சு... ஓட்டிப் பாத்துட்டு போ'ன்னு  சொல்லி ப்ளான்ட்டுக்கு அனுப்பி இருக்கேன்.அவன லேசில விடாதையா...இன்னிக்கு அவன் ஓட்டிப் பாத்திட்டுத்தான் போகணும்..." என்றார்.
                 ஆஹா, கெரகம் பிடிச்சிடிச்சு....இன்னிய ஷிப்டு உருப்பட்டாமாதிரிதான்..
                 "சரி,சார்" என்றேன் அவசர அவசரமாய்..
          ***************
                 "என்ன சார் , அந்த எருமைத்தலையன் எதுவும் சொன்னானா?" -எருமைத்தலையர் ,என்று செல்லமாக மணியால் விளிக்கப்பட்டவர் எங்கள் போர்மன்.
                 "ரீவைண்டாகி வந்திருக்கிற ரெண்டு மோட்டாரையும் ஓட்டிப் பாத்திட்டு அப்புறமா கிளம்புவியாம்" என்றேன்.
                "அந்தாள் என்னா சொன்னான்?" இது மணி. 'கொசு' மணி.
                 "ஒன்னை ஓட்டிப் பாத்திட்டு போகச்சொன்னார்" என்றேன்.
                 "இப்பிடியேத்தான் என் கையிலயும் அந்தாள் சொன்னான்...இனிமே நான் பாத்துக்கிறேன்" என்றபடி ரீவைண்டாகி வந்திருக்கிற ரெண்டு மோட்டாரையும் ஒரு மோசமான 'லுக்' விட்டான், கொசு மணி. என்னைப் பார்த்து,"ஒரு 'தம்'மடிச்சிட்டு, அப்டியே ஒரு டீ குடிச்சிட்டு  வந்திடறேன், சார் " என்று சொல்லி நகர்ந்தான்.
                  நேரம் ஓடிக் கொண்டிருந்தது.. ஆளைக் காணவில்லை. நான் எனது மற்ற வேலைகளில் கவனம் செலுத்த, இரவு ஏழு மணி போல் வந்து சேர்ந்தான்.
                  " என்ன மணி, மோட்டாரப் பாக்கலியா?" என்றேன்.
                  "அதுக்குத்தான் டூல்செல்லாம்  எடுத்திட்டு வந்தேன் சார்" என்றபடி ஒவ்வொரு மோட்டாரையும் தகுந்த இடைவெளி கொடுத்து நகர்த்தினான். அவை பழைய  மோட்டார்கள் . ரீவைண்ட் செய்து பெயிண்ட் அடித்து அனுப்பியிருந்தனர்.    ஒரு பார்வைக்கு 'சௌகார்'ஜானகிக்கு 'பேசியல்'  செய்து லிப்ஸ்டிக் அடித்தது போல் சமர்த்தாக இருந்தன அவை.
                   மணி,மோட்டாரின் அச்சைப் பிடித்து சுற்றினான். பிறகு.. சப்ளை  கொடுத்து  
ஓட விட்டான். ரெண்டு மோட்டாரும் பதிவிசாக ,புக்ககம் வந்த புது நாட்டுப்பெண்ணைப் போல் சப்தமில்லாமல் இயங்கின.
                  அரை மணிக்கொருதரம் அவறிற்கு ஜுரம் அடிக்கிறதா என்கிற ரீதியில் தொட்டு,தொட்டுப் பார்த்தான்.'பேரிங்' சவுண்ட் இல்லாமல் ஓடுகிறதா என்று  நீளமான திருப்புளியை மோட்டாரில் வைத்து மறுபக்கம் காதை வைத்து செக் பண்ணினான். ஓடிக்கொண்டிருந்த இரண்டு மோட்டாரையும் நவகிரகம் சுற்றுவது போல சுற்றி சுற்றி வந்தான், மணி.
                  ஒன்பது  மணி போல வேலை முடிந்து எல்லாவற்றையும் 'பேக்கப்' செய்து விட்டு என்னிடம் வந்தான்."சார் ரெண்டு மோட்டாரும் நல்லாத்தான் ஓடுது....டெஸ்ட் பண்ணிட்டேன்... ஒரு 'தம்' மடிச்சிட்டு வர்றேன்" என்றான் கொசு மணி.
                  "ஏன், மணி கிளம்பலியா வீட்டுக்கு?" என்றேன் நான்.
                  "அதெப்படி சார் ... ஓட்டிப் பாத்திட்டு போக சொன்னத்துக்கப்புறம்.....பாக்காம போனா என்னா மருவாதி சார்?" என்றான்.
                  "அதுதான் ஓட்டி பாத்திடியே மணி" என்றேன்.
                  "எங்கே சார் ஓட்டிப் பாத்து முடிச்சேன்... இப்பதான்  ஓட்டிப் பாத்திக்கிட்டு இருக்கேன் சார்....ஓட்டின்னா 'ஓவர் டைம்'" என்று விளக்கம் அளித்தான்.
                            **************
                    மறு நாள் போர்மன் ரூமில் ஒரே சத்தம்."எந்த முட்டாள் உன்னை 'ஓவர் டைம்' பாக்கச்சொன்னான்?" என்று மணியிடம் போர்மன் 'லபோ திபோ' என்று காட்டு கத்தல் போட்டார்.
                    "நீங்கதானே சார் நேத்து என்னை ஓட்டிப் பாத்துட்டு போக சொன்னீங்க " என்று படு பவ்யமாக கூறியிருக்கிறான்.
                     என்னிடம் விசாரித்தார், போர்மன். நானும் "நீங்கதானே அவனை ஓட்டிப் பாத்திட்டுப் போகச் சொன்னீங்க.." என்றேன் நமட்டு சிரிப்புடன்.
                      " யோவ்... நான் மோட்டாரத்தான் ஓட்டிபாக்க சொன்னேன்..இவனை ஓவர்டைம் பாக்க சொல்லலே.."
                      "எதையும் கிளியரா புரியறா மாதிரி , குளப்பமில்லாம சொல்ல கத்துக்குங்க"என்று சொல்லிவிட்டு "ம்ம் ம்ம் ...ஓ.டி ரெஜிஸ்டர்ல கையெழுத்துப் போடுங்க" என்று வந்த காரியத்தை முடித்துக் கொண்டு அவன் கிளம்பிப் போனதை ஊர்ஜிதப் படுத்தி விட்டு  எங்கள் போர்மேன் உதிர்த்த வாக்கியம்தான் ,"யோவ்...இந்த கொசுத் தொல்லை தாங்கமுடியலியே..." என்பது...


           (கடிகள் தொடரும் )




                  
                


Monday, January 10, 2011

Swami Vivekananda Speech at Chicago - Welcome Address

ஜனவரி 12 --சுவாமி விவேகானந்தாவின் ஜன்ம தினம் ... அவருடைய கம்பீரக் குரலைக் கேட்போம் ,வாருங்கள்..

Sunday, January 2, 2011

சங்கீத சீசன் 
            திருச்சி அகில இந்திய வானொலி நிலையத்தில் பணிபுரிந்த நாட்கள் எம் வாழ்வின் மறக்கவொண்ணாத இனிய நிகழ்வு....எத்தனையோ கச்சேரிகளை இசைப்பதிவு செய்யும் பாக்கியம் கிடைத்தது...மனம் நிறைந்த சந்தோஷத்துடன் குதூகலமாக பதிவு செய்த கச்சேரிகள் இன்றும் AIR -இன் இசைக் கருவூலத்தில் உள்ளன.
                  இசை விற்பன்னர்கள் மேடையேறி அமர்ந்ததும் எங்கள் எல்லோர்க்கும் ஒரு பரபரப்பு தொற்றிக்கொள்ளும். அவர்கள் ஸ்ருதியை சரிபார்க்கிற நேரத்திற்குள் நாங்கள் balancing  செய்ய தயாராக இருக்க வேண்டும். ரசிகாசைப் பார்த்து ஒரு புன்முறுவல் புரிந்து விட்டு அவர்கள் இசைக்கத் துவங்கும்போது balancing  பணி ஆரம்பிக்கும். அதாகப்பட்டது ,அந்த மேடையை அலங்கரிக்கும்  எல்லா கலைஞர்களின் குரல் மற்றும்  வாத்தியங்களின் ஒலி அளவை  amplifier  -இல்  தேவைக்கேற்ப கூட்டி, குறைத்து ரம்யமான இசையைக் காற்றில் தவழ விடும் ரசவாதம். கொஞ்சம் பிசகினாலும் எவரும்  ரசிக்க முடியாது.
                 எனக்கு இந்த வேலை சுலபமாக இருந்ததற்கு காரணம் இசை மீதான என் பிரத்யேக காதல். அனுபவித்து balancing   -ஐ முடித்து விட்டு மேடையை அலங்கரிக்கும் அந்த இசை மேதையை கிடைத்த பேப்பரில்  வரைந்து 'தனி' நேரத்தின்போது அவரிடம் ஆட்டோக்ராப் வாங்கி விடுவேன்....  அப்பேர்ப்பட்ட சந்தர்ப்பங்களில் வரையப்பட்ட சில ஓவியங்கள் இந்த வாரம் உங்களின் பார்வைக்கு...


                   27 .04 .1981 அன்று குன்னக்குடி திரு. வைத்யநாதன் அவர்களின் கச்சேரி. தன் மோகன சிரிப்பை சிந்தியபடி வியப்பில் தன் கண்களை அகல விரித்து ,"ஆஹா ... என்னை படமா வரைஞ்சுட்டேளா?  பேஷ்" என்றபடி கையெழுத்து போட்டுக் கொடுத்தார்.




                      திருவாரூரில் நடந்த சங்கீத மும்மூர்த்திகள் விழாவில் மண்டலின் வாசித்த U  சீனிவாஸ் ஒரு பால் வடியும் முகம் கொண்ட குழந்தை  ... 89 -ம் வருடம்.



                    1993 -ம் வருடம் திருமதி சரஸ்வதி ராமநாதன் அவர்களின் அறிமுகம் கிடைத்தது.. அந்த பாசம் மிகுந்த சகோதரியின் அறிவுத்திறனையும், பேச்சுதிறனையும் அருகிருந்து ரசிக்கும் வாய்ப்பு கிடைத்தது.வாய் நிறைய எனை 'லக்ஷ்மிநாராயணன்' என்று அழைத்து அன்பு பாராட்டிய பெருந்தகை .




                    மார்ச் மாதம்..... 1989  -ம் வருடம் . மிகவும் சாஸ்த்ரீயமாய் வாசித்துக் கொண்டிருந்தார் லால்குடி திரு.ஜெயராமன். கையெழுத்தில் தன் பங்கிற்கு வயலினை வரைந்து விட்டு 'இது எப்படி இருக்கு ?' என்ற பாணியில் என்னைப் பார்த்து முறுவலித்தார்.





                     திருவாரூர் கச்சேரி... சாயந்திரம்  ஆறு மணிக்கு...மூணே முக்காலுக்கெல்லாம் 'வேகு வேகென்று' தனது வாத்திய பெட்டி சகிதம் பந்தலுக்குள் நுழைகிறார், அந்த கலைஞர். ஒரு சேரில் அமர்ந்து இளைப்பாறிக்கொண்டிருந்த எனக்கு தூக்கிவாரிப் போட்டது... அட.. இது கத்ரி அல்லவா...ஓடோடிச்சென்று வரவேற்கிறேன்.."எனக்கு ஒரு ஒரு மணி நேரம் ரெஸ்ட் எடுக்கணும்... கொஞ்சம் ஏற்பாடு பண்ண முடியுமா?" என்று மிக பணிவுடன் கேட்ட அந்த மாமேதையை இப்போது நினைத்தாலும் சிலிர்க்கிறது. காரியதரிசிஇடத்து  கூட்டிச் சென்று  அவருக்கு உதவ முடிந்ததது.
                    வழக்கம் போல் 'தனி ஆவர்த்தனத்தின்' போது அவருடைய படத்தை நீட்டி ஆட்டோக்ராப் கேட்டபோது  "ஓ ...நீங்களா?"என்று என்னையும் நினைவில் வைத்து கேட்டு , கையெழுத்து போட்டுக் கொடுத்தார்.



என்ன தவம் செய்தேனோ !!