Pages

நேசம் நம் சுவாசம் !

Friday, December 31, 2010

"புத்தாண்டு நல்வாழ்த்துகள்-2011"

               ந்த வார துவக்கத்தில் திருச்சிக்கு செல்லும் பாக்கியம் கிடைத்தது.அங்கு அடியேன் சென்று இறங்கிய நாள் தொட்டு ,மீண்டும் சென்னைக்கு ரயில் ஏறும் வரையில் மூன்று நாட்களும் நசநசவென்று தூறலும், மழையும் ! நல்லவனாகவே இருக்கப்படாதப்பா...என்று என்னை நானே சபித்தேன்.. ஏனெனில், போன காரியத்தை கவனிக்க முடியாமல் இப்படி மழையால்  தொந்தரவு வரும் என்றால் எதற்காக இத்தனை நல்லவனாக இருக்க வேண்டும்? ( ஹி..ஹி கொஞ்சம் ஓவராயிடிச்சோ?)

               மழைக்காக ஒதுங்குவதற்கு இடம் தேடியபோது சின்னையா  பிள்ளை சத்திரத்தில் தற்போது அமைத்திருக்கும் ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் தென்பட்டது. அங்கிருந்த ப்ரொவ்சிங் சென்டருக்குப் போய் வலையை மேய்ந்துவிட்டு வலைப்பூவை முகர்ந்து கொண்டிருந்தபோது என் பக்கத்து சிஸ்டத்தில் ஏதோ டைப் அடித்துக் கொண்டிருந்த ஒரு நடுத்தர வயது மனிதர் தன் வேலையை விட்டு விட்டு என் வலைப்பூவை நோட்டமிடத் தொடங்கினார்.
"என்ன ப்ளாகா?" என்றார்.
"அமாம்" என்றேன், கித்தாப்பாக.
"என்ன பேர்ல எழுதறீங்க?"
"எல்லென் என்ற பெயரில்"- இது நான்.
விஷயம் தெரிந்த ஆசாமி போல இருக்கிறதே என்று நான் யோசிக்கும் முன்பே , அவர் எழுந்து என் கையைக் குலுக்கினார். " சமீபத்தில்தான் ப்ளாக்கில் உங்கள் படைப்புகளை பதிவு பண்ணத்தொடங்கி இருக்கிறீர்கள் அல்லவா? வெரி குட்... நன்றாக இருக்கிறது... கதைகளும் சரி... உங்கள் ஓவியங்களும் ரசனைக்குரியதாய் உள்ளன...தொடர்ந்து எழுதுங்கள் ", என்று என்னை உற்சாகப்படுத்தினார் .
எனக்குள் ஒரு நடுக்கம் பரவியது... " ஐயா ...தாங்கள்......?" என்று இழுத்தேன்.
"ஹாஹ்ஹா.... நானா ? " என்று சிரித்தவர், தனது ஜோல்னாப் பைக்குள்  கைவிட்டு  தன் விசிட்டிங் கார்டை நீட்ட , எனக்கு வியப்பும் சந்தோஷமும்... அந்த மனிதர்  வேறு யாருமில்லை... உயர்திரு ஆரண்யநிவாஸ் ஆர்.ராமமூர்த்தி அவர்கள்தான் !! அடியேன்  ஒரு ப்ளாக்கைத் தொடங்குவதற்கு இவருடைய ப்ளாக்கே காரணம். எமது ஒவ்வொரு படைப்பையும் கண்ணில் விளக்கெண்ணை விட்டுக் கொண்டு பார்த்து விமரிசனம் செய்து உற்சாகம் ஊட்டிய பெருமகனார்... என் கண் முன்னே... ஆஹா ,என்ன பாக்கியம் செய்திருக்கிறேன் ... அவர் கைகளை கால்களாய் எண்ணி ஒற்றிக் கொண்டேன்... பொது இடமானதால் அவ்வளவு மரியாதைதான் செய்ய முடிந்தது...
அவருடைய சிறிய வேலை அந்த சென்டரில்  முடிந்ததும் வெளியில் வந்து வெகு நேரம் பேசினோம். மிகுந்த எதார்த்த சிந்தனைகளுடனும் அதீத நகைச்சுவை உணர்வுகளுடனும் அவர் பேசியவை அனைத்தும் இப்போதும் எனக்குள் ஒலித்துக் கொண்டிருக்கின்றன. 
மூன்று ப்ளாக்குகள் எழுதுகிறார்.... .எனினும் சற்றும் கர்வமே இன்றி முதல் அறிமுகத்திலேயே  என்னுடன் அத்தனை நட்பு பாராட்டினார்... அவருடைய  பாசாங்கற்ற 
எழுத்துகளைப் போலவே அவரும் இருந்தார்... அவருடைய கீர்த்தனைகளைப் பற்றி சிலாகித்து நான் பேசிய போது அடக்கத்துடன் "எல்லாம் அவன் அருள்..." என்றார்.
"வீடு, தி.கோயிலில்தான் ... வாருங்களேன்.." என்றார்...
முகவரி வாங்கி பத்திரப் படுத்திக் கொண்டேன்... "அடுத்த முறை வரும்போது அவசியம் வருகிறேன்" என்றேன்."வரும்போது மறக்காமல் ஒரு கோணிப்பை எடுத்து வருகிறேன்... உங்கள் இல்லத்தில் விளைந்திருக்கும் மா, கொய்யா, மாதுளை,சப்போட்டா பழங்களை அள்ளிச் செல்வேன்" என்று அடியேன்  சொன்னேன். 
"மிகவும் சந்தோஷம்.... நான் எழுதியதை இன்னமும் நினைவு வைத்துள்ளீர்களே' என்றவர் "புத்தாண்டு நல்வாழ்த்துகள்-2011"என்று கூறி விடை பெற்றார்.
             அன்று பெய்த மழையை மிகவும் வாழ்த்தினேன் !
 

Saturday, December 25, 2010

ஆடும் அணங்கு

               ந்த டிசம்பர் சீசனுக்கு நம் பங்காக இந்த ஓவியத்தை உங்கள் பார்வைக்கு வைக்கின்றோம். இந்த ஓவியம் 1994 =இல் திருவனந்தபுரத்தில் இருந்தபோது வரைந்தது...'இதே போல் நிறைய ஓவியங்கள் வரைந்து கொடுத்தால் நானே என் செலவில் உனக்காக ஒரு ஓவிய கண்காட்சி நடத்துவேன்' என்று உற்சாகப்படுத்திய கேரள சேச்சிக்கு நன்னி!!










முற்பகல் செய்யின்....


"நறுக்கின வெங்காயம் போதும் ...அது அப்படியே  இருக்கட்டும்      மூணு  மொளகா வத்தலையும் பூண்டையும் மிக்சியில போட்டு நல்ல மையா அரைச்சு வை. நான் அதுக்குள்ளே சிக்கன கிளீன் பண்ணிடறேன்"

"சிக்கன டிரஸ் பண்ணித்தானே வாங்கி வந்தீங்க?"

"என்னாதான் அவங்க பண்ணிக் கொடுத்தாலும் நாம ஒரு தரம் கிளீன் பண்ணினாத்தான் எனக்கு திருப்தி"

"அமெரிக்கா பிள்ளை வர்ரான்னா நாலு தடவை கூட கிளீன் பண்ணுவீங்க சாமி.."

"ஏய்..இந்த கிண்டல்தானே வேணாங்கிறது ...அருண் வந்தாலும் சரி... இல்லேன்னாலும் சரி... நான் ரெண்டுவாட்டியாவது   கிளீன் பண்ணிட்டுத்தான் சில்லி ப்ரை பண்ணுவேன்"

"எங்கப்பாவுக்கும் சில்லி ப்ரைன்னா ரொம்பப் பிடிக்கும்....தாத்தா மாதிரியே பேரனும் எப்பப் பாத்தாலும் 'சில்லி ப்ரை,சில்லி ப்ரை'ன்னு கேக்கறான்"

"மிக்சியில அரைக்க சொன்னேனே .... அரைச்சிட்டியா? அப்பாவுக்குப் பிடிக்கும் ...ஆத்தாவுக்குப் பிடிக்கும்னுட்டு"

"எங்கப்பா பத்தி சொன்னதும் ஏன் இப்படி 'சுர்ர்ர்ர்'ன்னு வருது?"

"உனக்கு ஞாபகம் இருக்கோ இல்லியோ... என்னால மறக்க முடியுமா, காமாட்சி?"

"அடாடா ... ஆரம்பிச்சிட்டீங்களா ஒங்க புராணத்தே...எங்கப்பாவ எதுனாச்சும் சொல்லாட்டா உங்களுக்கு பொழுதே போகாது சாமி"

"சரி..சரி ... அரைச்சிட்டியா...அதை இப்படி வெச்சிட்டு நாலு தக்காளியே அரிஞ்சு வை"

பேசிக் கொண்டே சுந்தரம் , சிக்கனை சுத்தம் செய்து பெரிய துண்டுகளாக வெட்டி வைத்துக் கொண்டார். "உங்கப்பாவ நான் ரொம்ப மதிக்கிறேன்.. இல்லேன்னு சொல்லலே...ஆனாலும் அன்னைக்கு எக்மோர் ரயிலடியில சொன்னாரு பாரு... என்னதான் எங்கம்மா உன்னைய கொடும படுத்தினதாகவே இருக்கட்டும் ...உன்ன ஊருக்குக் கூட்டிட்டுப் போகும் போது ,'மாப்பிள்ளே ,எம் பொண்ண கண்ணுக்கு கண்ணா வளத்தேன்...அது  கலங்கி நிக்குது...  உங்கம்மா தன்னோட மருமகனு நினைக்க வேண்டாம்... தாயில்லாப் பிள்ளைன்னாவது நினைக்க வேண்டாமா?  இப்படி வாய்க்கு வந்தபடி பேசலாமா? உங்கம்மாதான் சொல்றாங்கன்னா நீங்களாவது கொஞ்சம் அனுசரணையா இருக்கக் கூடாதா ?  ம்..ம்ம்.....உங்களுக்கு ஒரு பொட்டப் பிள்ள பிறந்து அதக் கட்டிக் கொடுக்கும்போதுதான்  என்னோட வலி உங்களுக்குப் புரியும்'ங்கிறார்"

"அப்பா அப்ப சொன்னதுதான் நடக்காம  போயிடிச்சே...அப்புறம் அவருப் பேச்சு என்னத்துக்குங்க?"

சுந்தரம், வெட்டிய சிக்கன் துண்டுகளை மசாலாவுடன் சேர்த்துப் பிசைந்து       பாத்திரத்தின் மேல், தட்டைப் போட்டு மூடினார்."அதான் சிங்கக் குட்டி போல நமக்கு அருண் பிறந்தவுடனே , அந்த சம்பவத்த மறக்க நினைக்கேன்.முடியல"

"சிங்கக் குட்டி..சிங்கக் குட்டின்னு செல்லமாத்தான் வளத்தோம் ...என்னாச்சு. நாலெழுத்துப்  படிச்சுப் பெரிய ஆளா ஆனதும் ,அமெரிக்காப் போறேன்'ன்னு போனான்... கை நிறையா சம்பளம் வந்ததும் , சிங்கக் குட்டிக்கு தல கால் புரியல...கூட வேலைப் பாக்கிறப் பொண்ண கட்டிக்கிறேன்'னான்"

"சேர்ந்து  வாழப் போறவன் அவன்... அவன் சந்தோஷம்தான் நம்ம சந்தோசம். இந்த மட்டும் நம்ம நாட்டுப் பொண்ணா பாத்து வெச்சானே..அதை நினைச்சு சந்தோஷப்படுவியா"

"என்னதான் நம்ம நாட்டுப் பொண்ணுன்னு நீங்க  சமாதானம் சொன்னாலும் கன்னடப் பொண்ணு கன்னடப் பொண்ணுதான்... நம்ம தமிழ்ப் பொண்ணு தமிழ்ப் பொண்ணுதான்"

"சரி.. நடந்தது நடந்து போச்சு... அருண் வர்ற நேரம் ஆச்சு... அவன்கிட்ட இது மாதிரிப் பேசி அவன் மூட அப்செட் பண்ணிடாதே ,காமாட்சி.... புள்ள நாளைக்கு ப்ளைட்டப்  பிடிச்சு அமெரிக்கப் போறான்... நல்லபடியா போய்ச் சேரணும்"

அருணை நினைத்து பெருமைதான் சுந்தரத்துக்கும், காமாட்சிக்கும். ஆனாலும் ,அவன் 'வர்ஷாவைத்தான் கல்யாணம் பண்ணிக்கொள்வேன்' என்று பிடிவாதம் பிடித்ததில் லேசாய் வருத்தம். ஆனால் , வர்ஷாவின் அழகும், படிப்பும், சம்பளமும்,சமர்த்துதனமும் பெற்றவர்களுக்கு மிகவும் பிடித்துப் போனதால் , பெரிதாய் அங்கலாய்த்துக்  கொள்ளாமல்  அனுசரித்துப் போயினர்.

என்னதான் பர்கர்,பீட்சா என்று அமெரிக்காவில் சாப்பிட்டு பழகினாலும் அருணுக்கு அப்பா செய்த சிக்கன் சில்லி ப்ரை என்றால்அத்தனை இஷ்டம். சுந்தரமும் சளைக்காமல் அவன் வரும்போதெல்லாம் செய்து கொடுத்து சாப்பிட வைத்து சந்தோஷப்படுவார்.

அரை மணி நேரம் தாண்டி அருண் காலிங் பெல்லை அழுத்தியவுடன் ,காமாட்சி ஓடிப் போய்க் கதவைத் திறந்தாள்.

"வாப்பா அருண்....என்ன வர்ஷா வரலியா?"

"இல்லம்மா"  என்றபடி வீட்டிற்குள் வந்த அருணை, சுந்தரம் கட்டிக் கொண்டார். "நீ இந்தியாவுக்கு வந்து 5 நாளாயிடிச்சு...இப்பத்தான் அப்பாவைப் பாக்கணும்,அம்மாவைப் பாக்கணும்னு தோணிச்சா, அருண்?" என்றார் ,வாஞ்சையுடன்.

"அதில்லப்பா... பெங்களூர்ல ஒரு ஆபிஸ் வேலையை வச்சிக்கிட்டுத்தான் வந்தேன்... வர்ஷாவுக்கும் நல்ல வேளையா லீவு  கிடைக்கவும் அவ பேரண்ட்சோட  இருக்கிறேன்னு சொன்னா. என்னோட ஆபிஸ்  வேலையெல்லாம் முடிச்சிட்டேன். நாளைக்கு யு.எஸ்.  கிளம்பணும். அதுக்கு முன்னாடி உங்களைப் பாத்துட்டு ,உங்க ஆசிகளோட புறப்படலாம்னு வந்தேன்ப்பா"
அருண் கல்யாணமாகிப் போய் , 6 மாதம் கழித்து  இப்போதுதான்  வருவதால்   அவர்களுக்கிடையே   பேச நிறைய விஷயங்கள் இருந்தன. பேசினார்கள்.

பேசிக்கொண்டே , சுந்தரம்  மசாலா தடவிய சிக்கனை நன்றாக வேக வைத்து இறக்கி, வடிகட்டி, சுத்தமான நெய்யில் பொரித்தேடுத்தார். மற்றொரு சட்டியில் அரிந்த வெங்காயத்தையும், தக்காளியையும் வதக்கி எடுத்து , பொறித்த சிக்கனுடன் கலக்க அருணுக்குப் பிடித்தமான சிக்கன் சில்லி ப்ரை தயாரானது.

ரொம்ப நாட்களுக்கு அப்புறம் மூன்று பேரும் சேர்ந்து உட்கார்ந்து பேசிக்கொண்டே சாப்பிட்டதில் பெற்றோருக்கும், மகனுக்கும் மிகுந்த திருப்தி.

அன்று மாலை சுந்தரத்தையும், காமாட்சியையும் தன் காரிலேற்றிக் கொண்டு மயிலை, திருவல்லிக்கேணி கோவிலுக்கு கூட்டிப் போனான். இரவு டின்னருக்காக சரவணபவன்      a c ரூமில் உட்கார்ந்திருந்தபோது வர்ஷாவிடமிருந்து போன் வந்தது.

"உம்....உம் ....ம்.. வர்றேன்...வர்றேன்...சென்னைக்கு வந்து முழுசா எட்டு மணி நேரம் கூட ஆகல... அப்பா.. அம்மாவோட பேசிக்கிட்டு இருக்கேன்... நாளைக்கு நைட்டுதானே ப்ளைட்டு? வர்றேன்...வர்றேன்" என்றான்.

"என்னப்பா?" என்றார் சுந்தரம்.

"இல்லப்பா... நாளைக்கு பெங்களுர்ல ஏதோ 'பந்தா'ம் ... இன்னைக்கு நைட்டே கிளம்பி வந்துடுன்னு வர்ஷா சொல்றா..."

காமாட்சிக்கு மளுக்கென்று கண்களில் நீர் ததும்பியது.... "உடனே கிளம்பணுமா அருண்?" என்றாள்.

"ஒண்ணும் ஆகிடாதும்மா .... நாளைக்கு மதியத்திற்கு மேல கிளம்பினா போதும்...அஞ்சு மணி நேரத்தில பெங்களூர் போயிடலாம்... வர்ஷாவோட அம்மா எதனாச்சும் பயமுறுத்தியிருப்பாங்க.... உடனே இவளும் 'சீக்கிரமா கிளம்பி வா'ங்கிறா"

சாப்பிட்டு வீடு திரும்புவதற்குள் மூன்று போன் வந்து விட்டது...சுந்தரமே வர்ஷாவின் அம்மாவிடம் பேசினார்..."அருண் ஒண்ணும் சின்ன பாப்பா இல்ல... அவன் ஜாக்கிரதையா வந்து சேர்வான்" என்று சொல்லிப் பார்த்தார்."நாளே பேடா ...ஈவத்து  நைட்டே  பந்துபிட ஹேளி" என்றாள் வர்ஷாவின் அம்மா கொஞ்சம் கர்ண கடூரமாய் ,கன்னடாவில்... 

'என்ன சொல்றாங்கன்னே புரியலப்பா... நீ கிளம்பறதுன்னா கிளம்பு அருண்" என்ற சுந்தரத்தின் குரல் கம்மியது.

"ஒண்ணும் ஆகிடாதுப்பா.... நான் நாளைக்கே போறேன்..."

"வேண்டாம் அருண்...ஏதாவது ஒண்ணு கிடக்க ஒண்ணு ஆயிடிச்சின்னா ..என்னா பண்றது...வர்ஷா சொல்ற மாதிரி இப்பவே கிளம்பு...நாளைக்கு பகல் முழுசும் போன்லையே எங்களோட பேசிக்கிட்டிரு " என்றாள் காமாட்சி அரை மனதுடன்.

அவன், பாழாய்ப்போன 'பந்த்'தை சபித்துக் கொண்டே கிளம்பினான்..வர்ஷாவும் அவள் அம்மாவும் அனாவசியமாக கவலைப்பட்டு , தன்னைப் பெற்றவர்களுடன் இருக்க  விடாமல்  அவசரப்படுத்துவதின் மூர்க்கத்தையும் சபித்தான். சாயந்திரம்  6 மணிக்கு 'பந்த்' முடியப்போகிறது. இவன் சென்னையை விட்டு நாளை மதியம் கிளம்பினாலும் மாலை 'பந்த்' முடிந்ததும் பெங்களுர் அடைந்து விடலாம்.. இரவுதான் பிளைட் .... ஏன்தான் மாமியாரும் வர்ஷாவும் சேர்ந்துகொண்டு இப்படி ஓர் இக்கட்டான நெருக்கடியைத் தருகிறார்களோ என்று அவர்கள் மேல் கோபம் கோபமாக வந்தது, அருணுக்கு.

"அடுத்த தரம் வரும்போது ஆபிஸ் வேலையோட வராதேப்பா....எங்களுக்காக லீவு போட்டுட்டு வா" என்றார் சுந்தரம்.


வாசல் வரை வந்து வழியனுப்பி வைத்த சுந்தரத்திற்கும் காமாட்சிக்கும் மனசு இற்றுப் போனது.... பிள்ளை வருவான்..பிள்ளை வருவான்..  என்று ஆசை ஆசையாக காத்திருந்தது இந்த எட்டு மணி நேரத்தை கொண்டாடத்தானா? இனி எப்போது வரப் போகிறான்... எப்போது மீண்டும் அவனை மடியில் படுக்க வைத்துக்  கொண்டு தலை கோதி அவனோடு பேசப் போகிறோம்?' என்ற அங்கலாய்ப்பே  அவர்களுள் மிஞ்சியது.

ஆனால், சுந்தரத்திற்கு மட்டும் 'ஆண் பிள்ளை ஆனாலும் , பெண் பிள்ளை ஆனாலும் கட்டிக் கொடுத்துவிட்டோம்' என்றால் இப்படிப் பட்ட வலிகளை எல்லாம்   அனுபவித்துதான் தீர வேண்டும் போலிருக்கிறது என்று உறைக்க ஆரம்பித்தது. சுந்தரத்தின்  நினவு  விஸ்தீரணத்திற்குள் அவருடைய மாமனார் வந்துவிட்டுப் போனார். தன்னைப் பார்த்து அவர் ஏளனமாக சிரிப்பது போலவும் இருந்தது சுந்தரத்திற்கு.

                              ****************
 

Saturday, December 11, 2010

'இரட்டை' அர்த்தம்

            றுபத்து நான்கு வயதில் 'பென்ஷன் வாங்கினோமா ...வேளாவேளைக்கு சாப்பிட்டோமா .... கச்சேரி கேட்டோமா ....உன்  போல் தலை நரைத்த தாத்தாக்களுடன் பேசி பொழுதை போக்கினோமா' என்றில்லாமல் கதை கதையாய் எழுதி என்னத்தை சாதிக்கப்போகிறாய் ? என்று நீங்கள் கேட்பது எனக்குத் தெரிகிறது...
               சாதிக்கப் போவது எதுவும்  இல்லைதான்...ஆனாலும் , சொல்லியே ஆக வேண்டிய விஷயங்கள் நிறைய்ய்ய்ய இருக்கின்றனவே. பெண்டாட்டி என்று ஒருத்தி இருந்தவரை அவளிடம் எல்லாவற்றையும் சொல்லித் தீர்த்தேன். மகராஜி, போன மார்ச் மாதம் மூச்சை நிறுத்திக்கொண்ட பிறகு யாரிடம் சொல்வேன் ? பேரன், பேத்தி எல்லோரும்  அவரவர் பாடங்களிலும் , இன்னபிற லோகாயத பயிற்சிகளிலும் மும்முரமாக இருப்பதால் அவர்களுக்கு என் பக்கத்தில் உட்காரவே நேரம் போதவில்லை. அதனால்தான் என் புலம்பல்களை கதைகளாக எழுதுகிறேன். அவற்றை வாசித்து , நீங்கள் கூறும் கருத்துரைகளே இந்த பட்ட மரத்திற்கு ஊற்றப்படும் உயிர் நீர்.
இதற்கும்  மேல் 'என்ன சாதிக்கப் போகிறாய் ?' என்று கேட்க மாட்டீர்கள்தானே....
               என்னமோ தெரியவில்லை சார் / மேடம் , இந்த 'இரட்டை ' சமாச்சாரங்கள் என்னை எப்போதும் உலுக்கிப் பார்த்திருக்கின்றன...சின்ன வயதில் 'சயாமீஸ் இரட்டையர்களை' பற்றிப் படித்து, அழுதிருக்கிறேன்... இறைவனின் படைப்பில் ஏன் இப்படி ஓர் அவலம் என்று ...
                அதே மாதிரி  இரட்டை வாழைப் பழத்தை யாரும் சாப்பிட முன் வரமாட்டார்கள். பிறக்கும் குழந்தை இரட்டையாய்ப் பிறக்கும் என்று பயப்படுவார்கள்...ஆனால் எனக்கோ இரட்டைக் குழந்தை வேண்டுமென்று இரட்டை வாழைப் பழத்தை தேடி வாங்கி சாப்பிடுவேன்.... அதிலும், கடவுள்  என்னிடம் பாராமுகமாய் நடந்து கொண்டார்  ...நினைத்தது நடக்காமல் போனது...
                அவ்வளவு ஏன் ? என் கல்யாணத்தின் போதும், க்ரஹப்ரவேசத்தின்போதும் சீராக வந்த ஜோடி பருப்பு தேங்காய் கூடுகளை இன்னமும் பாதுகாப்பாய் வைத்திருக்கிறேன் என்றால் பார்த்து கொள்ளுங்கள்.

                அமெரிக்காவில் அந்த இரட்டை கோபுரங்கள் தீவிரவாத விமானங்களால் தகர்க்கப்பட்ட நாளன்றும், அடுத்த நாளைக்கும் நான் கொலைப் பட்டினி கிடந்தேன், ஸ்வாமி!! மனசு இற்றுப் போனது !!
                தெருவில் பாவாடை சட்டை அணிந்து குஞ்சலம் , குஞ்சலமாக குழந்தைகள் நடக்கும்போது அவர்களின் ரெட்டை ஜடை அத்தனை அழகாய் என்னைக் கொல்லும். இதை எல்லாம் விடுங்கள்.... கோவிலுக்குப்  போனால் நீங்கள் என்ன பண்ணுவீர்கள் ? நேராகப் போய் மூலவரை தரிசிப்பதில்தானே உங்களின் மொத்த கவனமும் இருக்கும்... எனக்கு அப்படி இல்லை...மூலவர் சந்நிதிக்கு முன்னால் நிற்கும் அந்த த்வாரபாலகர்களுக்கு என் வந்தனத்தை செலுத்துவதிலேயே என் ஆர்வம் ததும்பும். சந்நிதானத்தில் இருக்கும் கடவுள் நம்மைக் காப்பாற்றுகிறார் என்றால், அந்த கடவுளையே காத்து நிற்கும் இந்த ஜோடி த்வாரபாலகர்கள், என்னைக் காப்பாற்றியவர்கள் ஆயிற்றே !!! ஆகையால் , அவர்களுக்கு எனது ஆன்மார்த்த வந்தனத்தை சமர்ப்பித்து விட்டு நிறைய சமயங்களில் மூலவரை தரிசிக்காமலே வந்திருக்கிறேன்.
                     என் ஒரே பையன் ரமேஷுக்கும், மகள்கள் சாருவுக்கும் , கோமளிக்கும் சொத்துபத்தைஎல்லாம் சமமாகப் பிரித்துக் கொடுத்து விட்டேன்.எல்லோர்க்கும் (மாப்பிள்ளைகள்,மாட்டுப்பெண் உட்பட) சந்தோஷம். சுப்புலஷ்மி கடைசிவரை போட்டுக் கொண்டிருந்த ஒரே ஒரு ரெட்டை வட சங்கிலியை மட்டும் நான் வைத்துக் கொண்டிருக்கிறேன். என்னுடன் சேர்த்து எரிக்க சொல்லி ரமேஷிடம் சொல்லியிருக்கிறேன்... என்ன செய்யப் போகிறானோ.....
                    சரி ..சரி... லூசு போல இருக்கிறது என்று முடிவு கட்டி, வேறு கதையை தேடி போய்விடாதீர்கள்...எல்லா கார்யங்களுக்கும் ஏதோ ஒரு காரணம் இல்லாமலா இருக்கும்? என்னுடைய  இந்த   இரட்டைப் பித்திற்க்கான காரணம் என்ன தெரியுமா?
                     என் கல்யாணத்திற்கு நான்கைந்து மாதங்களுக்கு முன்னால் நடந்த ஒரு சம்பவம். இப்பொழுது நினைத்தாலும் மெல்லிசாய் ஒரு நடுக்கம் தோன்றுகிறது. எனக்கும் சுப்புலஷ்மிக்கும் நிச்சயதார்த்தம் நடந்து ஆறு மாதத்திற்கு மேல் ஆகியிருக்கும். ஒரு பிப்ரவரி மாதம்...தேதியும் நினைவிருக்கிறது...சேலத்திற்கு ஒரு காரியமாகப் போய் விட்டு திருச்சிக்கு திரும்புகிறேன். சேலம் பஸ் ஸ்டாண்டிற்கு வந்த போதே இரவு மணி 11 ஆகிவிட்டது. சுலபத்தில் பஸ் கிடைக்கவில்லை.ரொம்ப நேரம் காத்திருந்துதான் பெங்களூரிலிருந்து  வந்த ஒரு பஸ்ஸைப் பிடிக்க முடிந்தது. டிரைவர் சீட்டிற்கு பின்னால் நான் அமர இடம் கிடைத்தது.
                  சேலத்தை விட்டு  கிளம்புகையில் நள்ளிரவு தாண்டி விட்டது. நாமக்கல் வந்ததும் , அந்த மூன்று பேர் அமரும் சீட்டில் நான் மட்டும். மற்றவர்கள் இறங்கி விட்டனர். நாமக்கல்லில் ஒரு குடும்பம் ஏறியது. இளம் வயது கணவன்,மனைவி மற்றும் இரு குழந்தைகள்.அவர்களுக்கு சீட்டு ஏற்பாடு செய்வதற்காக நடத்துனர் என்னை எழுந்திருக்க சொன்னதும்  எனக்கு கோபம் வந்தது.
                   "நான் சேலத்திலிர்ந்து வர்றேன்...இப்ப ஏறினவங்களுக்காக நான் இடம் மாறணுமா...முடியாது.." என்று சொல்ல வந்த நான் என் பாழாய்ப் போன இரட்டை செண்டிமெண்ட் தாக்கத்தால் உடனடியாக எழுந்து இடம் கொடுத்தேன். காரணம் , மொட்டு,மொட்டென்று பார்த்துக்கொண்டிருந்த  அந்த இரண்டு குழந்தைகளும் இரட்டையர்கள் !!
                    "அங்கிளுக்கு தேங்க்ஸ் சொல்லுங்க" என்று அப்பா சொன்னதும் இரண்டில் ஒரு குழந்தை கை கூப்பியது... மற்றது எனக்கு கை கொடுத்தது...மஹா ம்ருதுவான பிஞ்சு ஸ்பரிசம்...
                    எனக்கு முன் பக்க ஏறு வழியின் ஜன்னலை ஒட்டின சீட் கிடைத்தது.இரவுப் பயணங்களில் பெரும்பாலும் நான் உறங்குவதில்லை. போதும் போதாததற்கு, அப்பாவிற்கும் ,அம்மாவிற்கும் நடுவில் படுத்துறங்கிக்  கொண்டிருந்த அந்த தளிர்களை பார்த்தபடியே என் பயணம் தொடர்ந்தது.
                     முசிறி வந்ததும் பஸ் நின்றது . டீ குடிக்க ஓட்டுனரும் , நடத்துனரும் இறங்கினர். தொடர்ந்து , பஸ்சிலிருந்த பெரும்பாலோர் இறங்கவே நானும் இறங்கி நின்றேன். சத்தமாக எஸ்.பி.பியின் குரல் , பிராந்தியத்தை கலக்கியது.அந்த குழந்தைகளை தோளுக்கு ஒன்றாய்  தூக்கிக் கொண்டு அந்த அப்பாவும் இறங்கி, தூங்கி வழிந்து கொண்டிருந்த , குழந்தைகளின் டிராயர் இறக்கி 'உச்சா'போக வைத்தார். இரண்டும் நடுங்கிக் கொண்டே போயின.இடுப்பை வளைத்து டிராயரை மேலே இழுத்துக் கொண்டன.
                    நான் அந்த குழந்தைகளையேப் பார்த்துக் கொண்டிருந்தேன். இரண்டும் நல்ல ரோஸ் நிறம். அழகென்றால் அப்படி ஓர் அழகு! செராக்ஸ் காப்பி மாதிரி இருந்தன . ஒரு குழந்தையை நான் வாங்கிக் கொண்டேன். பேர் கேட்டேன் ... ஸ்வெட்டரும்  தொப்பியும் அணிந்திருந்த அந்த குட்டி ,''நான் மகேஷ்... அவன் ரமேஷ் ..." என்றது.
                   அதற்குள் ரமேஷ் என்ற அந்த குழந்தை அப்பாவிடம் 'கடையில் விற்கும் பிஸ்கட் வேணும்' என்று கேட்க,'இங்கெல்லாம் நல்ல பிஸ்கெட்டா இருக்காது... திருச்சி போனதும் வாங்கித் தருவதாக' சொன்னார். அழுது   அடம் பிடிப்பான் என்று எதிர்பார்த்த எனக்கு ஏமாற்றம்.. மற்றும் ஆச்சர்யம்... "ஓக்கே..டாடி" என்ற குழந்தையை நான் வாங்கி உச்சி முகரணும் போலிருந்தது.
                    பஸ் முசிறியை விட்டு கிளம்பியது. பஸ்ஸில் டிரைவரையும் என்னையும் தவிர ,அனைவரும் சாமியாடிக் கொண்டிருந்தனர். மணி இரண்டேகால் ஆகியிருந்தது. டிரைவர் நல்ல வேகத்தில் போய்க் கொண்டிருந்தார்.  குறுகலான அந்த சாலையின் இடது புறம் நன்கு ஒதுக்கி ஓட்டியவர் வலது பக்கம் வந்த ஒரு வளைவை சமாளிக்கும் பொருட்டு வண்டியை ஒரேடியாக வலதுப் பக்கம் திருப்ப, எதிரே பார்க்காமல் எதிரே வந்த ஒரு லாரியுடன் நாங்கள்  பயணித்திருந்த  பஸ், 'டமால்' என்று மோதியது.
                      இத்தனை நடப்பவற்றையும் பார்த்துக்கொண்டிருந்த எனக்கு 'சர்ட்டென்று' தலையை சுற்றியது. எங்கள் பஸ்சிற்குள் 'ஓ'வென்று அலறல்.முன் பக்கத்து கண்ணாடி நொறுங்கி என் நெற்றியிலும் முகத்திலும் முள் முள்ளாக கண்ணாடி சிதறல்கள்.. அலறி அடித்துக் கொண்டு கீழிறங்கினேன். படபடப்பில் இருந்து , சுதாரித்துக் கொள்ள எனக்கு சிறிது அவகாசம் தேவைப்பட்டது.பின் பக்க வாயில் வழியாக சிலர் கத்தியபடி இறங்கினர். எல்லோருமாக நிதானபடுத்திக்கொண்டு  நிலைமையை ஆராய்ந்தோம். பஸ்சும் லாரியும் 'head on collission  ... லாரி டிரைவரின் உடம்பு எங்கள் பஸ்சிற்குள் செருகிக் கிடந்தது. எங்கள் பஸ் டிரைவரும் சம்பவ இடத்திலேயே  காலி. பஸ்சிற்குள் ஏறினேன்... மனம் பதைபதைத்தது... என்ன கொடூரம்.... டிரைவர் சீட்டிற்குப் பின்னால் இருந்த மூன்று சீட்டு பயணிகளும் ஸ்தல மரணம். ஐயோ... அந்த பிஞ்சு குழந்தைகளும் ,அப்பாவும், அம்மாவும் அடையாளம் தெரியாமல் கூழாகப்  பார்த்தேனே ஸ்வாமி  ....அந்தக்ஷணம் என் வசமில்லாமல் நான் பெரிதாய் அழத் தொடங்கினேன்.
                      அந்த ரோஜாப்பூ குழந்தைகள் என்ன பாவம் செய்தன... ஏன் இப்படி ஒரு கோர மரணம் அவற்றிற்கு...என்ன பாவம் செய்தார்கள் அந்த பெற்றோரும், கூட இறந்த அத்தனை ஜனங்களும்...
                     'கொஞ்ச நேரத்திற்கு  முன்னால் பிஸ்கட் கேட்ட ரமேஷ் குழந்தை இப்போது இல்லையே.... திருச்சிக்கு போய் வாங்கி தருவதாக சொன்ன அப்பா வாங்கி தராமலேயே போய் விட்டாரே.. தெய்வமே .... ஏன் இப்படி என் கண் முன்னால் இப்படி ஒரு பலி வாங்கினாய் ?' பஸ்ஸை சுற்றி சுற்றி வந்து என் முகத்து கண்ணாடி சிதறல்களை பிடுங்கியபடி அரற்றினேன்... இது கனவாக இருக்கக் கூடாதா ?   
                   கனவில்லை.... நிஜம்.  இறந்து போனவரும், காயமடைந்தவரும் ஏராளம். கூக்குரல்களும்,ஓலங்களும் வயிற்றை ஓங்கி அறைந்தன.
                    நிதானமாக யோசித்தேன்... நாமக்கல்லில் இந்த குடும்பம் ஏறாதிருந்தால் அந்த பிப்ரவரி இருபத்தாறாம் தேதியின் புலர் காலை பொழுதில் நான் இறந்திருப்பேன். இன்னும் சொல்லப் போனால் அவர்களின் இரட்டை குழந்தைகளால் இப்போது நான் பிழைத்து நிற்கிறேன்...ஒரு குழந்தையாய் இருந்திருந்தால் கூட அதே சீட்டில் 'அட்ஜஸ்ட்' பண்ணி உட்காரும்படி நடத்துனர் கூறியிருக்கக் கூடும் ...என்னைப் பிழைக்க வைத்து விட்டு தாம் மறைந்து போன அந்த இரட்டைக் குழந்தைகளின் நினைவாக இன்றும் நான் ஜோடி பருப்பு தேங்காய் கூட்டைப் பாதுகாத்து வைத்திருப்பது பைத்தியக்காரத்தனமா, சார் ?
                   அமெரிக்க இரட்டைகோபுரம்  தகர்ந்ததற்க்கு நான் பட்டினி கிடந்தது  தப்பா ,சார்?
                   கோயில் சாமியை விட்டு விட்டு த்வார பாலகர்களை மெய்ம்மறந்து வணங்குவது, சரியில்லையா மேடம்..?
                    சுப்புலஷ்மியின் ரெட்டை வட பவுன் சங்கிலியை எவர்க்கும் தராமல் என்னுடனே வைத்துக் கொண்டிருப்பது முட்டாள்தனமா..... நீங்களே சொல்லுங்கள் !! 

                                  ***********

Sunday, December 5, 2010

வாழ்க நீ எம்மான்!

ஹே ராம் !
        இந்த படம் 1983-இன் ஜூலை மாத முற்பகுதியில் தொடங்கப்பட்டு , 22-ம் தேதி நிறைவு பெற்றது. தேசப் பிதாவின் உருவம் புள்ளிப் புள்ளியாய் உருப்பெற்றபோது அளவிட முடியாத சந்தோஷம் பெருகியது. எம் பெற்றோரும், நெருங்கியவர்களும் ஸ்லாகித்துப் பாராட்டிய ஓவியம். ஆனால், இந்த ஓவியத்தை இப்போது பார்க்கையில் , மதுவிலக்கு ரத்து, கோடி,கோடியாக லஞ்சம், ஊழல், சாத்வீகத்தை விழுங்கும் வன்முறைகள், விவசாயத்தையும், கிராமங்களையும் புறக்கணித்த நடைமுறை வாழ்க்கை - என்ற எத்தனையோ புள்ளிகளால் 'மஹாத்மாவை ரணப்படுத்துகிறோமோ' என்கிற நடுக்கம் தோன்றுகிறது.
                                             'எல்லாம் மாறுதலுக்குட்பட்டதே'