Pages

நேசம் நம் சுவாசம் !

Sunday, November 28, 2010

வறுமையின் நிறம் சிவப்பு

பத்மஸ்ரீ கமல்ஹாசன்

Tuesday, November 23, 2010

ப(ரமா)த்மா !

                        வாழ்ந்து  கொண்டிருக்கும் வரை  நம்மால் இயன்ற உதவியை நெருங்கியவருக்கு செய்ய வேண்டும் என்கிற துடிப்புடன் இயங்கியபடி  , அதே சமயத்தில்  வாய்த்திருக்கும் அரசுப் பணியை ஒரு அறப் பணியாகவும்  செய்து கொடிருக்கும் நான் , பிரகாஷ்.  'ரத்த வங்கியில் ரத்தம் கொடுக்கணுமா.... பிரகாஷக் கேளுங்க விவரம் சொல்லுவார்.... ' என்றோ... "இன்டேன் கேஸ் சிலிண்டர் கனக்ஷன என் பேருக்கு கொஞ்சம் மாத்தணும்.... பிரகாஷ்.." என்றோ..."பையனோட பாஸ்போர்ட்ட கிளியர் பண்ணிக் குடுப்பா.." என்றோ..."கொடேஷன் ஒர்டர்ல ஒரு சின்ன தப்பு சம்பவிச்சு... நம்முடே சிடுமூஞ்சி ஒபிசர் என்னை விளிச்சு... என்னோடோப்பம் சாரக் காணான் வரான் பற்றோ பிரகாஷ் " என்று பைங்கிளிக் குரலிலோ .... இப்படி யாராவது ஒருத்தர் என் டேபிள் முன்னால் நிற்பது வாடிக்கையான ஒரு விஷயம்.  பார்த்துக் கொண்டு இருக்கிற  லெட்ஜெர் பக்கத்திற்கு அடையாளம் வைத்து விட்டு அவர்களுடன் கிளம்பி விடுவேன்.
                  கனக்கச்சிதமாக வேலையை முடித்துக் கொடுப்பதால் என் மீது ஆபிசிலும் சரி, வெளி வட்டாரத்திலும் சரி எல்லோரும் மிகவும் அன்பு காட்டுவார்கள். அடிக்கடி என் எஸ்.ஓ வே "யோவ் , நீர் ஜெகஜ்ஜாலக் கில்லாடிய்யா" என்பார். எனக்கோ உள்ளுக்குள் கூசும்.  அவர் பெண்ணுக்கு கூட ஒரு காலேஜ் அட்மிஷன் வாங்கித் தந்திருக்கிறேன்.
                   இப்படி ஊருக்கே உழைத்து தேயும் என்னைப் புரிந்து கொள்ளாமல் "வீட்டில் இங்க இருக்கறத,அங்க நகத்தி வைக்காத ஜன்மம்" என்று தலையில் அடித்துக் கொள்வாள் என் சகதர்மினி, நளினி. "நாலு பேருக்கு நல்லது பண்ணினா புண்ணியம்" என்று நான் சமாதானம் சொல்கையில் அவள் தன் முகவாய்க்கட்டையை  தோளில் நொடித்துக் கொள்வதைப் பார்க்க வேண்டுமே... அட..அட..அடா..!
                    அதையும் மீறி , அவளுக்கு உதவும் எண்ணத்தில் காய் நறுக்க உட்கார்ந்தால் சிவராமன் மாதிரி யாராவது செல்போனில் தடதடக்கிறார்கள்.
                     "சொல்லு.. ஷிவா" என்றேன். ஷிவா என் முன்னாள் காலேஜ் நண்பன். இந்நாள் சகலை எனப்படுகிற ஷட்டகன்.
                     "பிரகாஷ்...சாயங்காலம் ஆபிஸ் முடிச்சிட்டு போற வழியிலே ஹோட்டல் மோனாவுக்கு வந்திடு... முக்கியமான ஒரு விஷயம் பேசணும்... ஒன்னோட ஹெல்ப் வேணும்...." என்றான் ஷிவா படபடப்பாக, "நளினிக்குத் தெரிய வேண்டாம்"
                     " என்னடா ட்ரிங்க்ஸ் பார்ட்டியா?" என்றேன் ரகசியமாய்.
                     "நேர்ல வா , சொல்றேன்" என்று கட் செய்தான்.

                       நேரில் பார்த்த போது பேயடித்தவன் போல் இருந்தான்.மொட்டை மாடி roof garden -இல் பியருடன் சங்கமிக்கும் சந்தர்ப்பத்தில் ,"நம்ப ரமா  அவளோட கிளாஸ் மேட் 'பத்மநாபன்'ன்னு ஒருத்தனைக் காதலிக்கிறாளாம். அவனைத்தான் கட்டிக்குவாளாம்." என்றவன் க்ளாஸ் அநியாயத்திற்கு நடுங்கியது.
                     "உனக்கு எப்படித் தெரிஞ்சுது?" என்றேன்.
                     "மொபைல்ல எப்பப் பார்த்தாலும் 'டீ பத்மா... டீ பத்மா..'ன்னு மணிக்கணக்கா பேசிகிட்டிருப்பா...அதுவுமில்லாம இ-மெயிலிலே பத்மா..பத்மான்னு வழிஞ்சு வழிஞ்சு லெட்டர். ரமாவோட பாஸ்வர்ட் தெரிஞ்சதாநால கண்டுபிடிச்சேன். யாருடி இதுன்னா பத்மநாபன் என்கிறாள்."
                    "கட்டி வெச்சிட வேண்டியதுதானே " என்றேன் சிப்சைக் கொறித்தபடி.
                    "அவன் வேற ஜாதி...வேற 'ஸ்டேட்'டா.....நமக்கு ஒத்து வராது"
                    "டேய்.... பாரதியாரே 'ஜாதிகள் இல்லையடி பாப்பா'ன்னு சொல்லியிருக்கார்டா"
                    "அது பாப்பாவுக்கு சொல்லியிருக்கார்.... எனக்கில்லே"
                    "சரி.... இப்ப என்ன பண்ணனும்னு சொல்றே?"என்றேன்.
                    "வெட்டணும்" என்றவன் என் திடுக்கிடலை உணர்ந்து, "அவங்க காதலை" என்றான்.
                    வேறொன்றுமில்லை ...அவனின் ஒரே மகள் ரமாதேவி  - நான் தூக்கி வளர்த்த என் ரமாக்  குட்டி - இன்று பெரிய பெண்ணாக வளர்ந்து படித்து, பட்டம் பெற்று, MNC -யில் வேலையாகி தன்னுடன் படித்த பத்மனாபனைக்  கல்யாணம் செய்து கொள்கிறேன் என்கிறாள்.  என் மைத்துனி கீதாவும் ஷிவாவும் அதற்கு பச்சைக் கொடி காண்பிக்க விரும்பவில்லை. ஜாதி, வேற மொழி ,குடும்ப கெளரவம்  ..அது..இது என்று பாவ்லா காட்டி எதிர்க்கிறார்கள்.
                    "ரெண்டு பேரையும் கூப்பிட்டு பேசுவோம். 'இந்த கல்யாணத்திற்கு நாங்கள் ஒப்புக்கொள்ள முடியவே முடியாது'ன்னு சொல்லிப் பார்ப்போம்."என்றேன்.
                    "அப்படியெல்லாம் அம்மாஞ்சி மாதிரி பேசினா நடக்காது,பிரகாஷ். ஜெர்க் ஆகிற மாதிரி மிரட்டணும்"
                    "சரி...நான் பாத்துக்கிறேன்.. கவலைய விடு" என்று சமாதானப்படுத்தி லேசாக மலை ஏறிக் கொண்டிருந்தவனை கீழிறக்கி, வீட்டிற்கு கொணர்ந்து, படுக்கையில் கிடத்தி விட்டு கிளம்பினேன்.

                     வீடடைந்து நளினியிடம் விஷயத்தைக் கூறிக் கொண்டிருக்கும் போது , சிணுங்கியது செல்போன்."பெரியப்பா .... உங்ககிட்ட  கொஞ்சம் பேசணும்...இப்ப நீங்க  ப்ரீயா ?" என்றாள் ரமா.
                      ஷிவாவும் கீதாவும் அவர்களுக்குத் தெரிந்த ஒரு பணக்கார வீட்டு பையனுக்கு ரமாவைக்  கட்டிக் கொடுக்க ஏற்பாடு செய்ய, ஆனால் ரமாவோ  தான் நான்கு வருடங்களாக காதலிக்கும் பத்மா (எ)பத்மநாபனைத் தான்  கல்யாணம் செய்து கொள்ளப்போவதாக அறிவிப்பு வெளியிட்டு விட்டாள்.
                       " நீங்கதான் எங்க ரெண்டு பேருக்காகவும் பேசி அப்பா,அம்மா சம்மதத்தை வாங்கித் தரணும் பெரியப்பா ", என்ற சுபாவின் குரல் கெஞ்சியது.
                         " நீ சொல்றதெல்லாம் சரிம்மா....ஆனா , உங்கப்பா அம்மாவை எதிர்த்து நீ கல்யாணம் பண்ணிக்கறதை நான் அனுமதிக்கவோ அங்கீகரிக்கவோ முடியாது." என்றேன்  குரலில் கடுமையை வரவழைத்து.
                         "அப்படியா....நான் பத்மனாபனைக்  கல்யாணம் பண்ணிக்கறதை யாராலையும் தடுக்க முடியாது "என்றாள் வீறாப்பாக.
                                            
                          "இவ்வளவு பேச்சு பேசுவியா நீ.... உன்னோட காதல் விஷயம் பத்தி கொஞ்ச நேரத்துக்கு முன்னாடித்தான் உங்கப்பா சொன்னான். அவனுக்கு ஹெல்ப் பண்றதா வாக்கும் கொடுத்திட்டேன்... நான் கிருஷ்ணா பரமாத்மா மாதிரி....என் கிட்டே யார் முதல்ல உதவின்னு வர்றாங்களோ ,அவங்களுக்கு உதவர்றதுதான் என்னோட வழக்கம். இப்ப என் உதவி கேக்கிற நீ  நாலு வருஷமா என்ன பண்ணினே? முன்னாடியே கேட்டிருக்கலாமே...நிச்சயமா இந்த கல்யாணத்தே  நானே நடத்தி வச்சிருப்பேன்.ஆனா , நீ உன் பேரேன்ட்சையும் மதிக்கலே..என்கிட்டயும் சொல்லலே..நீ நினைக்கிறபடி இந்த கல்யாணம் நடக்காது, சுபா. சும்மா பெத்தவங்களைப் பகைச்சுக்காதே .....அவங்க சொல்றபடிக் கேளு...இல்லேன்னா அவங்கள கன்வின்ஸ் பண்ணப் பாரு" என்றேன்.

                      "போயும் போயும் உங்களை நம்பி பேசினேனே.... சாரி ...மிஸ்டர் பிரகாஷ்...உங்களால என்ன செய்ய முடியுமோ அதை செய்யுங்க...we cannot convince anybody anymore "
                      கொஞ்சம் கூட மரியாதை இல்லாமல் என்னை பெயர் சொல்லி அழைத்த அவளிடம் ஏகமாய் கோபம் வந்தது. "உன் காலை உடைக்கிறேன்  பாரு...கழுதை...என்ன திமிர்.....இப்ப சொல்றேன் கேட்டுக்க.... உன் காதல் கல்யாணம் எப்படி நடக்குதுன்னு  நான் பாத்துடறேன்.... " வயிற்றின் உள்ளே ஷிவா ஊற்றி கொடுத்த பீர் குலுங்க பீறிட்டு எழுந்தேன்.

                         றுநாள் காலை ஒன்பது மணிக்கு ,கீதா போனில் கூப்பிட்டு அழுதாள். ராத்திரி எட்டு மணிக்கு வரவேண்டிய ரமா  வீட்டிற்கு வரவில்லையாம்..ஷிவா செய்வதறியாமல் 'திரு திரு' வென்று  முழித்துக் கொண்டிருப்பதாகவும் அழுகையினூடே  கூறினாள். நானும் நளினியும் அவர்கள் வீட்டிற்கு பைக்கில் பறந்தோம்.
                          ஷிவா ஹேங்கோவரில் சொன்னதையே  திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டிருந்தான்."எம் பொண்ணு என்னை ஏமாத்திட்டாடா"
                           " ஒன்னும் கவலைப் படாதே ஷிவா ...எங்கயும் போயிருக்க மாட்டா ரமா ...ஆபிஸ்லயே தங்கியிருப்பா"
                           "எல்லா எடத்துக்கும் போன் போட்டுப் பாத்தாச்சு... ட்ரேஸ் பண்ண முடியல" என்றாள் கீதா. ஷிவாவோ,""எம் பொண்ணு என்னை ஏமாத்திட்டாடா" என்றான், திரும்பவும்.
                           டக் டக்கென்று முடிவுகள் எடுக்க வேண்டிய தருணம் இது . அவளுடைய செல்போன் சர்விஸ் வழங்கு கம்பெனியை தொடர்பு கொண்டு விஷயத்தை நாசுக்காக விளக்கி , அவர்களின் உதவியை நாடினேன். நம்பரை ட்ரேஸ் செய்து விட்டு அழைப்பதாக உறுதி கூறினார்கள். இருப்பு கொள்ளாமல் தவித்துக் கொண்டிருந்த எங்களுக்கு மதியம் அந்த கம்பெனியிலிருந்து போன் வந்தது. அந்த நம்பர் நேற்று இரவே திருத்தணி  டவர் சிக்னல் எல்லையில் இருந்ததாகவும் இன்று காலை பதினோரு மணிக்கு மேல் பெங்களூர் ரூட் டவர்களின் சிக்னல் எல்லை நோக்கி நகர்வதாகவும் ,வானிலை அறிக்கை 'ரமணன்' பாணியில் கூறினார்கள்.
                       ஆஹ  ..ஹா... இன்று நல்ல முகூர்த்த நாள்.. கல்யாணம் முடிந்து விட்டது...ரமா  நடத்தி காட்டி விட்டாள்....அவளின் பெற்றோர், என்னை , எல்லோரையும் முட்டாளாக்கி விட்டாள் ....
                       மெதுவாக விஷயத்தை ஷிவாவிடம் கூறினேன். அதிர்ச்சியில் அவன் அப்படியே உறைந்து விட்டான். " பேசாமல் போலீசில் கம்ப்ளைன்ட் குடுத்திடலாம்" என்றேன். "வேண்டாம் பிரகாஷ்... மானமே போய்டும்... அந்த சனியன் எக்கேடும் கேட்டுப் போகட்டும்... இனிமே அவ எங்க பொண்ணும் இல்லே.. நாங்க அவளைப் பெத்தவங்களும் இல்லே" என்று ஷிவா மனமுடைந்து அரற்றினான்.
                        "அப்படியெல்லாம் விடக் கூடாது ஷிவா....நம்மளே எல்லாம் ஒரே நாளில ஏமாற்றி முட்டாளாக்கிட்ட அவள சும்மா விடக் கூடாது. கடத்தல் கேசுல அந்தப் பையன உள்ளே பிடிச்சுப் போட்டோம்ன்னா கதறிக்கிட்டு நம்மகிட்ட ஓடி வருவா"

                         ரை மனதுடன் கீதாவும் , ஷிவாவும் போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்தனர்.
எஸ்.ஐ இடம் பேசினேன். இன்ஸ்பெக்டர் வரும் வரை கொஞ்சம் காத்திருக்க சொன்னார்.காத்திருந்தோம். ஷிவா மட்டும் புலம்பிக் கொண்டே இருந்தான்.
                          இன்ஸ்பெக்டர் வந்ததும் ,"உங்கள்ல பிரகாஷ் யாரு"ன்னு கேட்டார்.
                          "நான்தான்" என்ற போது எனக்குள் லேசாக வியர்த்தது .
                          "ரமா  உங்க பேர்ல ஒரு கம்ப்ளைன்ட் கொடுத்திருக்காங்க. 'மேஜரான  பொண்ணு , தனக்குப் பிடிச்சவன கல்யாணம் பண்ணிக்கறேன்' ன்னு சொன்னப்போ கால ஓடச்சிடுவேன்னு மிரட்டினியாமே..நீ.....அவ்வளவு பெரிய ஆளா நீ...உள்ள தள்ளி கம்பி என்ன வெச்சிடுவேன்  .. ஜாக்கிரதை" என்று என் மூக்கிற்கு அருகில் வந்து அடிப்பது போல் கையை ஓங்கினார்.
                          விஷயம் விபரீதமாகி விட்டது... ரமா  இப்போதும் முந்திக் கொண்டு எங்களை முட்டாளாக்கி விட்டாள் .சமாதான குரலில் எல்லா விஷயத்தையும் அவருக்கு விளக்கி , 'ரமாவை அப்படி மிரட்டியது என் தப்பு' என்று எழுதிக்  கொடுத்து விட்டு,'தப்பித்தோம்..பிழைத்தோம்'  என்று வீடடைந்தோம்.
                           ரமாவிடமிருந்து போன். "என்ன மிஸ்டர் பிரகாஷ்.... மூக்கு ஒடஞ்சுப் போச்சா....உலகத்தில நீங்க மட்டும்தான் பரமாத்மான்னு நினைக்காதீங்க.... உங்களை மாதிரித்தான் போலீசும். அவங்களும் யாரு முதல்ல கம்ப்ளைண்ட் பண்றாங்களோ அவங்கள நிரபராதியா வச்சுத்தான் விசாரிப்பாங்க....அங்க நடந்த விஷயத்தையும் எனக்கு சொல்லி ஹெல்ப் பண்ணுவாங்க" என்றாள். 
                             ஷிவாவுக்கும், கீதாவுக்கும் என்னைப் பார்ப்பதற்கே சங்கடமாகி விட்டது. "உன்னை அவமானப்படுத்தின அவ எங்க பொண்ணே இல்லேடா", என்று என்னைக் கட்டிக் கொண்டு அழுதான், ஷிவா.                          
                         ல்லாம் முடிந்து , ஷிவா தன் மகளுடன் ஒரு வருஷம் பேச்சு வார்த்தை இல்லாது இருந்தான். பேத்தி பிறந்ததும் "மகளே" என்று இவர்களும் " எனைப் பெற்றவர்களே" என்று ரமாவும் 'ஸ்லோ மோஷனில்'  பாசம் பொங்க கூடிக் கொண்டதும் என்னைப் பொறுத்த வரையில்  அனாவசிய செய்தி.      என்ன ..... ரமாவுக்கு நான்தான் வேண்டாதவன் ஆகி விட்டேன்...பேசுவதில்லை.
***********


Sunday, November 21, 2010

'ரஜினி' காந்தம் !

                              போன சித்திரத்திற்கு நாம் தந்திருந்த கருத்தைப் பார்த்த நம் நண்பர்கள் சிலர் ," என்ன புலம்பல் வேண்டிக் கிடக்கு? ....எங்களுக்கு ஜாலியான 'எல்லென்' தான்  தெரியும்... இந்த டொய்ங்..டொய்ங்..எல்லாத்தையும் மூட்டை கட்டி வெச்சிட்டு ஜாலியா உங்க ஒவியங்கள வெளியிடுங்க" என்று அன்பு கட்டளை இட்டதற்கு இணங்கி, இந்த வாரம் சூப்பர் ஸ்டார்- ன் படம். எமக்கு மிகவும் பிடித்த கிரிம்சன் பிங்க் கலரில்.........                                                                                                                     என்ஜாய்....!  மக்களே !!
இது  எப்டி இருக்கு ?




Tuesday, November 16, 2010

பேசும் பொற்சித்திரங்கள்

             துக்கமும் சோகமும் எமது வாழ்க்கைத் தளத்தில் ஆளுக்கொரு பக்கமாய் இருந்து கொண்டு 'சடுகுடு' ஆடின காலகட்டம் அது (ஏப்ரல் '81). ஆறுதலாய் கிடைத்த நிழல், வயலினில்  சாதகம். அந்த அனுபவத்தை அறிமுகப்படுத்திய அதியற்புத நண்பரின் அண்மையும் , அந்த தருணமும் மனதில் உறைந்து கிடக்கின்றன.
             அப்போது வெளிவந்த 'ராஜபார்வை' படத்தின் ஸ்டில்லை எடுத்து வைத்து வரைந்தபோது ஏற்பட்ட பரவசமும்,நிறைவும் கண்களை பனிக்க வைத்தன.அந்த  படம் கமலுக்கு ஒரு மைல்கல் என்றால் , எமக்கோ  இந்த வரைபடம் நினைவுக்கீறல். வாழ்க வயலின்!
சாஸ்வத சோகம் 

Sunday, November 14, 2010

பேசும் பொற்சித்திரங்கள்


           ந்த பென்சில் ஓவியம் செப்டம்பர் ,80 -ம் வருடம் வரையப்பட்டது . அப்போது நாம் ஹைதராபாதில் இருந்த சித்தி வீட்டிற்கு சென்றிருந்த போது கண்ணில் தென்பட்ட ஜாக்கி ஷெராப் புகைப்படத்தைப் பார்த்து வரைந்தது.  ஏறத்தாழ 30  வயதாகிற இச்சித்திரம்தான்  நம் நினைவுக்கு தெரிந்து பழமையானது!    
பழைய  கம்பீரம்

Friday, November 5, 2010

தீபாவளித் திருநாள்

                     

     தீபாவளித்  திருநாள் 



               ப்படி,இப்படியென்று   2010 -ம் வருடத்திய தீபாவளி , நவம்பர் ஐந்தாம் தேதி வெள்ளிக்கிழமையன்று  கங்கா ஸ்நானத்துடன் (!) தொடங்கி , ரஜினி பேட்டியுடன் இனிதே நிறைவடைந்தது. பெரியவர்களின் ஆசிர்வாதங்களும், நட்பு  இதயங்களின் நெஞ்சார்ந்த வாழ்த்துகளும் கைபேசி மற்றும் தொலைபேசிகள் மூலம் சொஸ்தமாக வந்து சேர்ந்தன. குறும்(பு) செய்திகளுக்கும் குறைவில்லை. வழக்கம் போல் நாமும் தொடர்பு எல்லைக்கு அப்பாலிருந்தவர்களையும் வலுக்கட்டாயமாக அழைத்து வாழ்த்துகளை வாரி வழங்கினோம்!!

               நேரில் வந்து வாழ்த்திய நண்பர்களிடம் ஸ்வீட்டை நீட்டிவிட்டு , "எங்க தாத்தா காலத்திலே' என்று நாம் ஆரம்பித்ததும்  , எம் உத்தம புத்திரன் ,"அப்ப  நான் கிளம்பறேன்"என்று பைக்கை ஓங்கி உதைத்துக் கிளப்பி தன சகாக்களை  காணச் சென்றான். வாழ்த்த வந்த நண்பர்களோ , எஸ்கேப்  ஆக வேறு வழி  தெரியாமல் சரணாகதித் தொனியில் "உங்க தாத்தா காலத்திலே...?" என்று ரொம்ப ஆவலை முகத்தில்  தேக்கிக் கேட்டனர்.

                  இது போதாதா நமக்கு.  கண்களை மூடிக் கொண்டு பழைய நினைவுகள் ஓட்டை டேபிள் பானாக சுற்றத் தொடங்கியது .."தாத்தா காலத்திலே , அவர் வசிச்ச கிராமத்துக்கு போவோம். தீபாவளிக்கு ரெண்டு நாளைக்கு முந்தியே , எங்க பாமிலி, எங்க சித்தப்பாக்கள்  பாமிலிஎன்று 8 பெரியவர்களும் சுமார் 20 சிறிய உருப்படிகளுமாக போய் இறங்குவோம். லேடீஸ் எல்லோரும் பட்சண, பலகார தயாரிப்புகளில் இறங்க , அப்பா,சித்தப்புஸ் எல்லோரும் கடைசி நேர ஷாபிங் செல்வர். தாத்தாவும் பாட்டியும் அவர்கள் காலத்திய தீபாவளியைப் பற்றி சிலாகித்து எங்களுக்கு கதை சொல்லியவற்றை மறக்க முடியுமா? நாங்கள் 20 பேரும் 'ஹா'வென்று வாய் பிளந்துக் கேட்டுக் கொண்டிருப்போம்.

                  அந்த இரண்டு நாட்களும்  'தீபாவளி,தீபாவளி' என்ற பினாத்தல்தான்... 'அவரவர் டிரெஸ்தான் ஒசத்தி' என்று  பீற்றிக்கொள்ளும்போது  ஏற்படும் ஆனந்தத்தை  விட 'அடுத்தவன் டிரெஸ் கலர் நல்லாவே  இல்லே...என்கிட்டே இதே மாதிரி ஒரு சட்டை இருந்தது ... ஒரே மாசத்துல டர்ரர்ர்ர்ர் ..ர்ர்ர்னு கிழிஞ்சுப் போச்சுன்னு'  சொல்லி கடுப்பு ஏத்தறதுல உண்டாகற உற்சாகம் இருக்கிறதே...அட..அட..அடா...!!! பாதிக்கபட்டவனோ / வளோ  தம் அம்மாவிடம் போய்ச் சொல்லி, அங்கே ஒரு சின்ன பாலிடிக்ஸ் அரங்கேறும்.

                 எங்களுக்கு மொத்தம் மூன்று சித்தப்பாக்கள். எல்லோரும் ,'தாம்..தூம்' என்று செலவழிப்பார்கள். ஒருவர் பட்டாசே ஆயிரம் ரூபாய்க்கு வாங்கி வருவார்.(எழுபது...எண்பதுகளில் ஆயிரம் என்பது பெரிய தொகை) இன்னொரு சித்தப்பு  ஆம்பிளப் பசங்களுக்கு மோதிரம் , சிகப்பு பிரேம் கூலிங் கிளாஸ் , கலைடாஸ்கோப் என்றும், பொம்பளப் பசங்களுக்கு ரிப்பன், வளையல், நெயில்பாலிஷ் என்றும் அள்ளி வழங்குவார். மூன்றாவது சித்தப்பு, பரிவாரங்கள் புடை சூழ ஹோட்டல் சென்று முந்திரி போட்டு ரவா தோசை வாங்கிக் கொடுத்து வீட்டில் வந்து தாத்தாவிடமிருந்து வாங்கிக் கட்டிக் கொள்வார். "வீட்டில இத்தனை செய்யும் போது எதுக்குக்  கூட்டிக்கிட்டுப் போனே" என்று தாத்தா சத்தம் போடுவார். பாவம் சித்தப்பா .

                  தீபாவளி நாளன்றைக்கு விடியல் மூன்று  மணிக்கெல்லாம் எழுந்து விடுவார் எம் அப்பா. இரண்டு பெரிய தவலைகளில் கிணற்று நீரை நிரப்பி , மண் அடுப்பில் ஏற்றி வைத்து வெந்நீர் வைத்து விட்டு எங்களை எழுப்புவார். " தீபாவளி வந்துடிச்சி... எழுந்திருங்க..எழுந்திருங்க " என்று எம் அப்பாவின் குரலைக் கேட்டதும் வாரிச் சுருட்டிக் கொண்டு எழுந்து , புழக்கடைப்பக்கம் ஓடுவோம்.

                    ஆஜானுபாகுவாய் இருப்பார் தாத்தா. முதலில் முதல் பேரனுக்கு தலைக்கு சுடச் சுட எண்ணெய் வைத்து விட்டு, பிறகு மற்ற பேரன் , பேத்திகளுக்கு எண்ணெய் தேய்த்து விடுவார். எண்ணெய் பட்டு கண்கள் ஒரு மாதிரி ஜிவு ஜிவுக்க போதா குறைக்கு , சரியாக காய்ந்திராத ஈர விறகு வேறு தன பங்கிற்கு புகையைக்  கிளப்பி பாடாய்ப் படுத்தும்.

                      எண்ணெய்  உடம்பில் சூடாய் வெந்நீர் ஊற்றப் படும்போது ஒரு சிலிர்ப்பு உண்டாகும். அதை அனுபவித்தபடி  இருக்கும்போதே சீயக்காய் தேய்க்கப்படும். அந்த காலத்தில் ஈகிள் பிராண்ட் சீயக்காய் பொடிதான். கண்ணில் பட்டதோ ....செம எரிச்சல் எரியும். இப்படி கண்ணில் சீயக்காய் விழுந்து ரெண்டு மூணு உருப்படிகள் 'வ்றாட்..வ்றாட்'டென்று கத்திக் கொண்டிருக்கும்.

                        குளித்து வந்தவுடன் தாத்தாதான் எல்லோருக்கும் அவரவருடைய துணிமணிகளை  சந்தன, குங்குமம் இட்டு ஆசிர்வாதம் செய்து கட்டிக் கொள்ள சொல்வார். அதற்கப்புறம் பெரியவர்கள் ஸ்நானம் பண்ணின  பிறகு, அவர்களின் பந்தோபஸ்துடன் வெடி,பட்டாசு, மத்தாப்பு வெடிக்க கிளம்புவோம்.

                         பொடிசுகள் நாங்கள் பொட்டு கேப், கம்பி மத்தாப்பு, கலசம், பாம்பு மாத்திரை, தரை சக்கரம் என்று ஜோலியைப் பார்க்க சித்தப்பாக்கள், அப்பா, தாததா எல்லோரும் பெரிய,பெரிய வெடிகளை வெடிப்பார்கள். தாத்தா ,ஒரு உபகரணம் வைத்திருப்பார். அதில் கந்தகத்  தூளை நிரப்பி,மூடி, ஓங்கி பாறாங்கல்லில் அடிக்க கிராமமே அதிரும். எங்கள் காதுகளுக்குள் 'ங்கொய்'என்கும்.

                        அதற்குப் பிறகு, தீபாவளி மருந்து சாப்பிட்டு , பட்சணங்களை ஒரு கை பார்ப்போம்.

                       இப்படி அழகாய் கொண்டாடிய தீபாவளி எங்கே? இப்போது ஏனோ, தானோவென்று  கொண்டாடும் தீபாவளி எங்கே? என்று மனம் ஏங்கத் தான் செய்கிறது.டெலிவிஷன் பாதியும், கணிப்பொறி பாதியுமாக நம் இளம் தலை முறையினரை  கட்டிப் போட்டு விட , செலேப்ரேஷன்  என்பது கூட ஒரு சம்பிரதாயமாக ஆகி விட்டதோ என்று எண்ணத் தோன்றுகிறது. நம் தாய்மார்கள்தான் அடுத்த தலைமுறையினர்க்கு நம் பாரம்பர்ய விழாக்களைப் பற்றி எடுத்துச் சொல்லி  அவர்களுக்கு அவற்றின் சிறப்புகளை உணர்த்த வேண்டும். "எம் பொண்ணு கிச்சன் பக்கமே வர மாட்டா.....கடையில போய்  என்ன வேணுமோ வாங்கிட்டு வந்து தீபாவளியை கொண்டாடிட வேண்டியதுதான் ..."என்று நம் தாய்மார்கள் கூறினால் , லட்டு,  மைசூர் பா, அச்சு முறுக்கு போன்ற பட்சணங்களை நம் வீட்டில், நாமே மிக சுகாதாரமாக செய்யலாம் என்பது நம் அடுத்த தலைமுறை குழந்தைகளுக்கு மிகுந்த ஆச்சர்யத்தைக் கொடுக்கும்.

                   யோசிப்போம். அடுத்த தீபாவளியை நிறைய மக்களுடன், உற்சாகமாக , நிறைய பலகாரங்கள் நம் வீட்டிலேயே செய்து ,டெலிவிஷனற்ற தீபாவளியாகக் கொண்டாட உறதி ஏற்போம்.

                    நான்  கண் விழித்த போது ஸ்வீட் சாப்பிட்டு முடித்து விட்டு நண்பர்கள் எப்போதோ கிளம்பிப் போயிருந்தனர் !!!



         

Monday, November 1, 2010

'வ' மேல் 'வ'
(தலைப்பு குறித்த விளக்கம், இறுதியில்)
கஸ்மாத்தாக , யதேச்சையாக ,தெய்வாதீனமாக ,தெய்வ சங்கல்பமாக - இந்த நான்கு வார்த்தைகளில் எதை வேண்டுமானாலும்  இன்று காலை நடந்த ஒரு சந்திப்பிற்கு நீங்கள் உபயோகப் படுத்தி கொள்ளலாம். எனக்கு ஆட்சேபணை இல்லை. 

சென்னை செல்லும் 'பல்லவனை'ப் பிடிக்க ஸ்ரீரங்கம் ஸ்டேஷனிற்கு ஐந்தே  முக்காலுக்கெல்லாம் வந்து விட்டேன். அதிகாலை நேரத்து சிலு சிலு காற்றை அனுபவித்தபடி , தொப்பையை தள்ளிக் கொண்டு 'உஸ்..புஸ்' என்று பிளாட்பாரத்தில் வாக்கிங் போகும் மனுஷாளை வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தேன். இன்றைக்கு என்று பல்லவன் லேட். ஆறு ஐம்பதுக்குத்தான் எதிர்பார்க்கப்படுவதாக வார்த்தைகளை வெட்டி வெட்டி அறிவித்தார்கள் .

'சரி, நிற்கும் நேரத்தில் டிபனை முடித்து விடலாமென்று' பிளாட்பார கடையை நோக்கி நடந்த போது தான், அந்த நடுத்தர வயது தம்பதிகளைப் பார்த்தேன். 'நமக்குத் தெரிந்த ஜனங்கள்...ஆனால் 'டக்'கென்று ஞாபகம் வரவில்லையே' என்ற மன நமைச்சலுடன் நான்கு இட்லிகளை சாப்பிட்டு முடித்தேன்.

'யார்? யாராயிருக்கும்?... கீழச் சித்திரை வீதி ரங்கன் சொந்தக் காரர்களோ ? இல்லையே...அடையவளைஞ்சான் ஆரவாமுதனின் வீட்டில் பார்த்திருக்கிறோமோ? இல்லை ...திருவானைக்கா......'என்று பலவித யோசனைகளில் நான் சிக்கித் திளைத்துக் கொண்டிருந்ததை சற்றும் உணராத அந்த ந.வ.தம்பதிகள் இருபதடித் தொலைவில் என்னமோப் பேசிக் கொண்டிருந்தனர். 

பல்லவன் வந்ததும் , ஏசி சேர் கார் சீட்டில் நான் சென்று அமர, வண்டி கிளம்பியது. கொஞ்சம் ஆசுவாசமானதும் மனது மீண்டும்,'யார்...யார்..' என்று பிறாண்ட ஆரம்பித்தது.
'என்ன ஆச்சர்யம்... அவர்களும் எனது கம்பார்ட்மெண்ட்டை  நோக்கி, அதுவும் நான் அமர்ந்து கொண்டிருக்கும் சீட்டருகில் வந்து நின்று நம்பர் சோதித்துக் கொண்டிருக்க, "சீட் நம்பர் என்ன?" என்றேன். எனக்கடுத்த இரண்டு சீட்டுகளும் அவர்களுடையது!! 
அமர்ந்தனர். தங்களுக்குள் சன்ன குரலில் என்னமோ பேசிக் கொண்டனர். கொஞ்ச நேரம் கழித்து நான்தான் ஆரம்பித்தேன்,"நீங்க ஸ்ரீரங்கத்தில" என்று சாங்கோபாங்கமாகத் தொடங்கி , அந்தப் பெண்மணி என் நண்பன் முகுந்தனின் அக்கா என்றும், முகுந்தனுக்கு மட்டும் அவர்கள் குடும்பத்திலேயே சரியான வேலை கிடைக்காமல் , ஏதோ பிசினெஸ்   செய்து  கொண்டிருப்பதுப் பற்றியும் அறிந்து  கொண்டேன். ( நாங்கள் பேசின மற்ற  விஷயங்கள் இந்த கதையின் எல்கைகளுக்கு அப்பாற்பட்டதால், அவற்றை பிறிதொரு சந்தர்ப்பத்தில், பிறிதொரு கதையில் எழுதுகிறேன்.)

முகுந்தனும்  நானும் ஸ்ரீரங்கம் அரசுப் பள்ளியில் ஒன்றாகப் படித்து, சேஷாய் பாலிடெக்னிகில் 'டிப்ளமா' முடித்தோம். படிப்பை முடித்த கையுடன் 'வாழ்வே மாயம்' படம் பார்த்தோம். நாங்கள் ஐந்து  பேர் ஜமா சேர்ந்து ஸ்ரீரங்கத்தையே சைக்கிளில் சுற்றி சுற்றி வந்தோம். நானும் முகுந்தனும் மட்டும் எலெக்ட்ரிகல்  டிப்ளமா ஆனதால் ,வீட்டு வயரிங் , எரியாமல் போன லைட்டை சரி பார்த்து, ஓடவே ஓடாத டேபிள் பேனை கிரீஸ் அடித்து ஓட்டி கிடைத்த காசில், ஐந்து உறுப்பினர்களுடன்  'கமல்' ரசிகர் மன்றம் தொடங்கினோம். நாங்கள் ஐந்து பேரும் கமல் மாதிரியே ஸ்டெப்கட் செய்து கொண்டு,பெல்பாட்டம் பேன்ட் அணிந்து கொண்டு  , செய்த அலம்பல்களை ஸ்ரீரங்கத்தின் முன்னாள் தேவதைகள் _ இந்நாள் மடிசார் மாமிகள் , அவ்வளவு லேசில் மறந்திருக்க மாட்டார்கள். தினசரி , சாயங்காலம் மொட்டை கோபுரத்து சலூனில் கூடி , ஓசி சீப்பில் தலை வாரியபடி மறு நாளுக்கான திட்டமிடலில் ஈடுபடுவோம்.

எல்லாம் கொஞ்ச நாளைக்குத்தான்..... அக்கௌண்ட்ஸ் படித்திருந்த ரங்குவுக்கும், 'மொக்கு' சீனுவுக்கும் பேங்க்கில் வேலை கிடைக்க , ராமானுஜனை அவன் அப்பா எங்களோடு சேர்ந்து பார்த்தால் காலை ஒடித்து விடுவதாக மிரட்டியதால் அவனும் ஒதுங்க, நானும் முகுந்தனும் மட்டும் 'கமலைக்' கட்டிக் கொண்டு அழுதோம். எங்கள் பேட்சிலேயே  நாங்கள் இருவர் மட்டும்தான் உருப்படியாக எதுவும் வேலை கிடைக்காமல் ரொம்ப காலம் சுற்றிக் கொண்டிருந்தோம். நான் முகுந்தன் வீட்டிற்கு அவன் அப்பா இருக்காத சமயங்களில் அவ்வப்போது செல்வதுண்டு. இந்த அக்காவிற்கு ஏற்கெனவே கல்யாணமாகி விட்டதால், முகுந்தனுடைய வீட்டில் இவர்களை நான் எப்போதோ ஓரிரு முறை மட்டும் பார்த்திருக்கிறேன்.

ஒரு தரம் அவனுடைய வீட்டிற்கு சென்றிருந்த போது, வீடு கொள்ளாமல் கூட்டம்.வைகுண்ட ஏகாதசிக்காக ஒரு வாரம் முன்பே உறவினர்கள் வந்து ரொம்பி இருந்தனர் . "வாடா , ரகுபதி  ...நாம திண்ணைல உக்காந்துண்டு பேசலாம்" என்று முகுந்தன் என்னை இழுத்துக் கொண்டு வந்த நேரம் , அவனுடைய உறவினர் ஒருவர் அவன் அம்மாவிடம் "ஒண்ணும் கவலையே படாதே,எச்சுமி.... முகுந்தன் ஜாதகத்த அலசிப் பாத்துட்டேன் ... ஓஹோன்னு இருப்பான் பாரு.... அவனைப் பத்தி நீ கவலையே பட வேண்டாம்.. பிசினெஸ் பண்ணுவான்.... கால்மேல கால் போட்டு உக்காந்துண்டு சம்பாதிப்பான்..... நான் சொல்றது நடக்கறதா இல்லியான்னு வேணா பாரேன்" என்று ரொம்ப நம்பிக்கையா சொன்னார்.

முகுந்தனின் தாயார்," நீ சொன்னா சரிண்ணா" என்று ஒன்பது கஜப் புடவையின் முந்தானையில் மூக்கை சிந்திக் கொண்டே ,விரல்களால் கண்களைத் துடைத்துக்  கொண்டாள்.

"இதே ஊரிலயே பிசினெஸ் பண்ணினா , மன்றத்தையும் நடத்துவோம்டா" என்றான் முகுந்தன்.

"ன் பேர் என்னன்னு சொன்னே?" என்று முகுந்தன் அக்கா கேட்டதில் திடுக்கிட்டு நிஜ உலகத்திற்கு வந்தேன்.

"ரகுபதி" என்றேன்.

"முகுந்தனோட கால் ரெண்டையும் எடுத்தாச்சு, தெரியுமோல்யோ" என்று அடுத்த அதிர்ச்சி  அம்பு என் மேல் குத்தி நின்றது.

"என்னத்து? காலை ...எடுத்தாச்சா? என்ன சொல்றேள்?" என்று  அதிர்ந்து கத்தியே விட்டேன்..

"ஒனக்குத் தெரிஞ்சிருக்கும்னு நினைச்சேன் ...... போன வருஷம், ஒரு ஆக்சிடெண்ட்ல அடிபட்டு பொழச்சதே புனர்ஜென்மம்னு ஆயிடுத்து..கால எடுக்க வேண்டியதா ஆயிடுத்து"

"அடப் பாவமே... இப்ப என்ன பண்றான்?"

"முகுந்தன்,கூரியர் கம்பெனியில   வேலைப் பாத்திண்டு இருந்த போது விபத்து நடந்துது.கால் போனதுக்கு அப்புறம் இங்கே தாம்பரத்தில ஒரு செல்போன் சர்வீஸ் கடை ஆரம்பிச்சு நடத்திண்டு இருக்கான்."

மாம்பலத்தில் இறங்க வேண்டிய நான் தாம்பரம் வந்ததும் இறங்கிக் கொண்டேன். அக்கா கொடுத்த முகவரியை நோக்கி நடந்தேன். "முகுந்தா.. என் இனிய நண்பனே... உனக்கு என்ன ஒரு சோதனை!! 'கால் மேல கால் போட்டுண்டு சம்பாதிப்பான்'ன்னு சொல்லப்பட்ட ஜோசியமும் உன்னளவில தோத்துப் போய்டுத்தே..முகுந்தா" என்று அரற்றியபடியே அவன் கடையைக் கண்டுபிடித்தேன்.கடையில் நாலைந்து கஸ்டமர்கள் இருந்ததால், கொஞ்சம் வெயிட் பண்ணி, கூட்டம் கலைந்ததும், அவனை நெருங்கினேன்.

 என்னை அவனுக்கு அடையாளம் தெரியவில்லை. 'என்ன சார் வேணும்?" என்றான்.
"முகுந்தா... நான் ரகுபதிடா " என்றேன்.
என்னை எனது பிரெஞ்சு தாடியிலிருந்து மைனஸ் பண்ணிப் பார்த்து விட்டு ,"டேய்..ரகு " என்று கத்தியவன் கண்களில் மின்னல் வெளிச்சம்..."எப்படீடா இங்கே?' என்றான்.
"பல்லவன்ல பெரியாக்காவைப் பாத்தேண்டா...உன்னப் பத்தி சொன்னா...உடனேப் பாக்கணும்னு தோணித்து...ஓடி வந்துட்டேன்டா.."

சேரை விட்டு எழுந்திருக்க பிரயத்தனித்தான்... "கால் ரெண்டும் போய்டுச்சுடா"என்றவன் குரலில் சுய கழிவிரக்கம் எட்டிப் பார்த்தாலும் ,"பொழச்சுட்டேண்டா ...எப்படியும் மேல வந்துடுவேன்.." என்று நம்பிக்கை வார்த்தைகளாய் வெளி வந்தன.

" கால் மேல கால் போட்டுண்டு சம்பாதிப்பேன்னு ஒன்னோட சொந்தக்காரர் சொன்னது ஞாபகம் வர்றதுடா,முகுந்தா" என்ற என் குரல் உடைந்ததை என்னால் உணர முடிந்தது.

"சரியாத்தாண்டா  சொல்லியிருக்கார்... இப்ப பாரு ... இந்த கால் போய்ட்டா என்னா... வந்து நிக்கற அத்தனை  பேர் மொபைல் போனுக்கும்  டாப் அப், ரீ சார்ஜ்னு 'கால்' மேல 'கால்' போட்டு சொல்லித்தான் ஏற்பாடு பண்ணறேன்" என்று கட,கடவென சிரித்தான், முகுந்தன்.

எனக்கு ,ஏனோ  சிரிக்கத் தோன்றவில்லை. 


*************

(தலைப்பு குறித்த விளக்கம்:  தமிழில் 'கால் '  (1 /4 ) ,என்பதற்கு   'வ' என்ற எழுத்து எழுதப்பட்டது.)