Pages

நேசம் நம் சுவாசம் !

Sunday, March 27, 2011

தூங்கு மூஞ்சி மரம்



                  {கடந்த நாலைந்து வாரங்களாக ஆபிசிலும், வீட்டிலும் அய்யா பயங்கர பிசி... சிந்தனை குதிரை 'டொக்..டொக்'கென்று அதுபாட்டிற்கு ஓடிக் கொண்டிருந்தாலும் ஆற அமர உட்கார்ந்து இரண்டு வரி அடிக்க, மனசு ஒத்துழைக்க  வேணுமே...ம்ஹும்...நம் இனி(ணை)ய நண்பர்கள் "என்னாச்சு ?" என்று அக்கறையுடன் விசாரித்தனர்....எப்பொழுதும் என்னை எழுத உற்சாகப் படுத்தும் ஆர்.ஆர்.ஆர் சார், "ஆபிஸ், வீடுன்னு ஏதாவது காரணம் சொல்லாம எழுதுங்க " என்று அன்புக் கட்டளையிட்டார்...மேலும் , நலம் விசாரித்த பிரணவம் ரவிக்குமார் அவர்களுக்கும் கூடை கூடையாய் நன்றி கூறி தொடர்கிறேன்.}

             யாம் அறிந்த வரையில் எல்லா அரசு அலுவலகங்களின் முகப்பிலும் குறைந்தது ஒரு தூங்கு மூஞ்சி மரமாவது இருக்கிறது....'இது ஏன் ?' என்ற கேள்வி என் மூளையை அடிக்கடி பிறாண்டும். நானும் ,அங்கு பணி புரிவதாய் சொல்லிக் கொள்ளும் சில நண்பர்களிடம் கேட்டால் அவர்களுக்கும் தெரியவில்லை..'சிம்பாலிக் ஆக இருக்குமோ ' என்று என்னையே திரும்பிக் கேட்டு விட்டு  கொட்டாவி விட்டனர்..."ஏன் எதுக்குன்னு தெரியாதுப்பா...நாங்க மதியம் லஞ்ச் முடிச்சிட்டு வெற்றிலை பாக்கு,சிகரெட்,பான்,கடலை மிட்டாய் போன்றவற்றை அரட்டையுடன் அனுபவிக்க கிடைத்த நிழற்குடை..." என்றனர் வேறு சிலர்.

                   நமக்குத்தான் ஒரு விஷயம் கிடைத்து விட்டால் வேர் வரை சென்று அலசுவது வழக்கம் ஆயிற்றே... அதுவும் மரம் பற்றிய விபரம்.... விட்டு விடுவோமா...

                  இப்படித்தான் ஒரே ஒரு ஊரில் ஒரே ஒரு அரசு அலுவலகமாம்.... நகரத்தை விட்டு பதினான்கு கி.மீ. தொலைவில் ஜன நடமாட்டம் அதிகம் இல்லாத இடத்தில் அமைந்திருந்ததாம். பிரிட்டிஷ் காலத்து பில்டிங். சுற்றிலும் எக்கச்சக்கச்சக்க வெற்று நிலம்...
                   ஒரு முறை அந்த ஆபிஸின் உயரதிகாரி "ஆஹா இத்தனை இடம் வெறுமனே இருக்கிறதே.. உபயோகமாக ஏதாவது பயிர் பண்ணலாமே" என்று ஒரு ஐடியாவை உதிர்க்க மூன்றே மாதங்களில் பூச்செடிகளால் நிரம்பியது அந்த இடம்...விதம் விதமான ரோஜாக்களும், சாமந்திகளும், மல்லிகையும் அந்த பிரதேசத்தை மிக ரம்யமாக்கின.
                    அடுத்து வந்தது வல்லடி... ஆபிஸிற்கு லீவு போட்டிருந்தாலும் ஊழியர்கள் மெனக்கெட்டுஆபிஸிற்கு வந்து ஆளாளுக்கு இத்தனை பூப்பறித்துக் கொண்டு  போவதை வழக்கமாக்கி கொண்டனர். வேறு வேலை எதுவும் இல்லாமல் ஆபிஸிற்கு வந்த சிலர் ஆபிஸ் வேலையை புறம்தள்ளி விட்டு பூப் பறித்து அதை அங்கேயே தொடுத்து, விற்று நாலு காசும் பார்த்தனர் !
                    பிறகு வந்த அதிகாரி, இந்த ஒழுங்கீனத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வண்ணமாக எல்லா செடிகளையும் களைந்து விட்டு வாழை, மா, பலா என்று மரம் நாடும் யோசனையை முன் வைத்து நடத்திக் காட்டினார்... எல்லா மரங்களும் பலன் கொடுக்கத் தொடங்கியபோது, அந்த காய்களை 'எனக்கு..உனக்கு' என்று ஒவ்வொருத்தரும் அடிபிடி சண்டையில் இறங்கி பிரித்துக் கொள்வதைப் பார்த்து 'ட்ரான்ஸ்பர்' கேட்டாராம். அந்த அதிகாரி...
ஒருமுறை ஒரு பலாப் பழத்திற்காக வெட்டு குத்தே நடந்ததாக ஒரு தகவல்....


                    ஆகையால்தான், அந்த சம்பவங்களுக்கு பிறகு இனிமேல் வெறும் நிழல் மட்டும் கொடுக்ககூடிய தூங்கு மூஞ்சி மரத்தை வளர்க்கவேண்டும் என்று தீர்மானித்து, ஒரு சுற்றறிக்கையை மற்ற அரசு அலுவலகங்களுக்கும் அனுப்பி புண்ணியம் கட்டிக் கொண்டார்களாம்... 


                    எனவே, இனிமேல் எந்த அரசு அலுவலகத்திற்கு நீங்கள் செல்ல நேர்ந்தாலும் அங்கு கிளைபரப்பிக் கொண்டிருக்கும் தூங்குமூஞ்சி மரத்தைப் பார்த்து 'சிம்பாலிக்'காக வைத்திருக்கிறார்கள் என்று மட்டும் நினைக்க வேண்டாம்...
         
                                        *************************************