Pages

நேசம் நம் சுவாசம் !

Tuesday, February 15, 2011

அப்புடு.... இப்புடு....எப்புடு..?

         
            அப்புடு.... இப்புடு....எப்புடு..?                        
                                      (ரொம்ப தப்புடு)
(முன் குறிப்பு : முதலில் பின் குறிப்பு படிக்கவும்)





          என்.டி.ராமராவ்காரு     சி. எம். ஆக ஆந்திரத்தை 'ஓஹோ' என்று அரசாண்டு கொண்டிருந்த காலகட்டம் அது. வில்லாக சர்டிபிகேட்டுகளையும் , அம்பாக அப்ளிகேஷன்களையும் கருதிக்கொண்டு ,அடுத்த வேளை 'புவ்வாவு'க்கு   ஏதாவது வேலை  கிடைக்குமா என்று   நான் வேட்டையாடிகொண்டிருந்தேன். என்.டி.ராமராவ்காரு, என்னை உடனடியாக ஆந்திர  மாநிலத்திற்கு வருமாறும் ,எனக்கு ஒரு வேலைவாய்ப்பு தருவதில் பெருமைப்படுவதாகவும் கூறி (மன்றாடி) அழைக்காவிட்டாலும் நான் அங்கு போவதாக முடிவு செய்து ஒரு சுபயோக சுபதினத்தில் ஹைதராபாத்தில் எனது ரூ.199.95 பைசா பாட்டா செருப்பு கால்களைப் பதித்தேன்.

           எனது சித்தி வீடு  ஹைதராபாத்தில் பாலா நகரில் இருந்தது. 'எந்தடு பஸ்சுடு பாலா நகருடு போகுடு' என்று எல்லா தமிழ் வார்த்தையோடும் ஒரு 'டு'வை சேர்த்தடித்து எனக்கும் எனது ஒன்றரையணா ஜோல்னா பைக்கும்  அதிக சேதாரம் ஏற்படா வண்ணம் பேசி, சித்தி வீடடைந்தேன். சித்திக்கும் என் கசின்களுக்கும் , நான் யார் துணையும் இன்றி தனியாக அவர்கள் வீடடைந்ததில் ஆச்சர்யம். கசங்கிப் போயிருந்த காலரைத் தூக்கி விட்டுக் கொண்டு என் பிரதாபத்தை பீட்டர் விட்டேன். 
            தெலுங்கு ஒரு 'டப்பா லேங்குவேஜ்' என்கிற என் எண்ணத்தை தவிடு பொடியாக்கும் சம்பவம் அடுத்த இரண்டு நாட்களில் நடக்கப் போவது தெரியாமல் அன்று முழுவதும் தெனாவெட்டாய்  திரிந்தேன்.
              சித்தப்பு HAL -இல் எக்சிக்யூடிவ். கசின்ஸ்   பள்ளிப்  படிப்பில் இருந்தனர். சித்தியோ 'லேடிஸ் க்ளப்' பின் காரியதரிசினி. எல்லாரும் ரொம்ப பிசி. நான் மட்டும் தான் அந்த வீட்டில் வெட்டி ஆபீசர். 
               சம்பவ தினத்தன்று , சித்தப்பு ஆபிஸ்க்கு கிளம்பிட்டார். யுனிபார்மை மாட்டிக்  கொண்டு கசின்சும் ஸ்கூலுக்குப் போயாச்சு. அவர்கள் போகும் வழியில் இருக்கும் அரிசிக் கடையில் வீட்டிற்கு அரிசிப் போட சொல்லிவிடும்படி சித்தி அவர்களிடம் காலையிலேயே சொல்லியிருந்தார்கள்.  'buf  கொண்டைக்கு ஊசி குத்தியபடி  சித்தி என்னிடம் ,"நேர போய் லெப்ட்ல திரும்பினா மளிகைக் கடை.. ..அங்க இந்த லிஸ்ட்ட குடுததுடு. அங்கிருந்து எதிர் சாரிக்கு வந்து பால் பூத்தை ஒட்டின சந்துல நேர போயி ரைட் எடுத்தா அரிசிக் கடை ஒண்ணு இருக்கும். நம்ப வீட்டு நம்பரை எழுதி தர்றேன்... அவங்ககிட்ட காமிச்சு 'வாளு இண்டிக்கு பீயம் பம்ப்பால பாப்பா செப்பின்தா'ன்னு கேளு" என்றதும் ,'எவ்வளவோ செஞ்சுட்டோம் ...இதை செய்ய மாட்டோமா' என்று வீட்டு நம்பரை ஒரு தாளில் எழுதி எடுத்துக் கொண்டு  கிளம்பினேன்.
                 சாலையில் இறங்கினேன்.  'தொரகுனா இடுவண்டி சேவா' பாடல் எவர் வீட்டில் இருந்தோ கசிந்து கொண்டிருந்தது. அதை சட்டை செய்யாமல் மனது முழுக்க 'வாளு இண்டிக்கு பீயம் பம்ப்பால பாப்பா செப்பின்தா ?' என்று உருப்போட்டபடி மளிகைக் கடையை அடைந்து லிஸ்ட்டை விசிறியடித்து  விட்டு, அரிசிக் கடையை நோக்கிய என் இரண்டாம் கட்ட லட்சிய பயணத்தைத்  தொடர்ந்தேன். 
                  'வாளு இண்டிக்கு பீயம் பம்ப்பால பாப்பா செப்பின்தா ?'
                  'வாளு இண்டிக்கு பீயம் பம்ப்பால பாப்பா செப்பின்தா ?'
                   என்று சிவாஜி மாதிரி, கமல் மாதிரி , ரஜினி மாதிரி  விதவிதமான மாடுலேஷனில் ஜெபித்துகொண்டே போய் என் இலக்கை அடைந்தேன். கடையில் செம கூட்டம். மனதுக்குள் 'வாளு இண்டிக்கு பீயம் பம்ப்பால பாப்பா செப்பின்தா ?' ரீல் ஓடியது.
சின்ன வயசில் அம்மா சொன்ன 'அத்திரிமாக்கு கொழக்கட்டை' கதை ஞாபகம் வந்தது.
                   கூட்டம் குறைந்ததும் அடிமேல் அடி வைத்து முன்னேறினேன்... 
                   காதில் பெரிய பெரிய கடுக்கன்களுடன், வெற்றிலையை குதப்பிக் கொண்டு அமர்ந்திருந்த முதலாளியை நெருங்கினேன்... அவருடைய சாதா பார்வையே முறைப்பது போல் இருந்தது.. கையில் தயாராக வைத்திருந்த தாளை உயர்த்திக் காண்பித்து தயங்கி, தயங்கி "வா ...ளு...   இன் ...டி...க்கு   பி. பீ... யம்    ப....ம்......பா .....லா   ...."என்று நாக்கு தடுக்கி, கண்கள் பிதுங்கி, தொண்டைக்குள் என் இதயம் சிக்கி சீரழிந்து, சொல்ல வந்த வாக்கியத்தை முடிக்க இயலாமல் நான் தடுமாறி தட்டாமாலை  சுற்றிக் கொண்டிருந்ததை உணர்ந்த 'கடுக்கன்',தெலுங்கில் ஏதோ சொல்ல, நான், அம்பேல்  ஆனேன். ஆந்திரா முழுவதும் ராமராவ் 'கிருஷ்ண பரமாத்மா' வாக நிறைந்து  இருப்பார் போல...என் பக்கத்தில் நின்று கொண்டு என்னை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த அப்பேற்பட்ட ஒரு 'கிருஷ்ண பரமாத்மா',"ரைஸ்  பேக் ' அல்ரெடி சென்ட் டு யுவர் ஹௌஸ்" ன்னு முதலாளி சொல்றாருப்பா." என்றார்.
                என்னிடமிருந்து ஒரு பெருமூச்சு குதித்தது  !!
                                
                                ***************
                         
                அடுத்த காரியமாக, பாலாஜி பப்ளிகேஷன்ஸின் '30 நாட்களில் தெலுங்கு' எங்கே கிடைக்கும் என்று தேடத் தொடங்கினேன்..

                                 **************
(பின் குறிப்பு : பத்திரிகைகள் தமது சர்குலேஷன்  குறையும்போது ரஜினி படத்தைப்          போட்டு சர்குலேஷனை  எகிற வைக்கும் உத்தி இந்த இடுகையில் கையாளப்பட்டுள்ளது..)

16 comments:

பத்மநாபன் said...

எல்லென்....நல்ல ஒட்டமாக கொண்டு போயிருந்தீர்கள் இப்பதிவை...
//வாளு இண்டிக்கு பீயம் பம்ப்பால பாப்பா செப்பின்தா //...உங்களுக்கு மனப்பாடம் ஆச்சோ இல்லையோ எங்களுக்கு ஆகிவிட்டது... இதுல`` பீயம் பம்ப்பால `` க்கு மட்டும் அர்த்தம் சொல்லிருங்க தலை வெடிச்சுடும் போல இருக்கு ...
//அத்திரிமாக்கு கொழக்கட்டை//
அத்திரிப்பச்சா கத்தரிக்கா - எங்க பாட்டி சொன்ன கதை.

நல்ல நகைச்சுவை கதையெங்கும் தெளித்து பதித்து விட்டீர்கள்...

நீங்கள் வரைந்த சூப்பர் ஸ்டார் படம் அருமை...

என்றென்றும் உங்கள் எல்லென்... said...

வருகைக்கும் தங்களின் உடனடி விமரிசனத்திற்கும் மிகவும் நன்றி...திரு.பத்மநாபன் சார்... 'பீயம் பம்ப்பால' என்றால் 'அரிசி அனுப்பச் சொல்லி' என்று நான் அர்த்தப் படுத்திக் கொண்டேன்...நமது சக வலைப்பூ தெலுங்கு விற்பன்னர்கள் தெளிவுபடுத்தலாம்.(தவிர...அந்த ரஜினி படம்...நான் வரைந்ததல்ல...நெட்டில் சுட்டது)

Pranavam Ravikumar said...

நகைச்சுவை கதை அருமை!

Chitra said...

(பின் குறிப்பு : பத்திரிகைகள் தமது சர்குலேஷன் குறையும்போது ரஜினி படத்தைப் போட்டு சர்குலேஷனை எகிற வைக்கும் உத்தி இந்த இடுகையில் கையாளப்பட்டுள்ளது..)


.....அப்புடு, ஹிட்ஸ்டு அதிகடு வரடு!!!

வெங்கட் நாகராஜ் said...

நல்ல வேகத்தில் சென்றது உங்கள் பகிர்வு. பீயம் கடைக்காரர் நல்ல தெலுங்கு வில்லன் மாதிரி இருந்ததில பயம் ஒச்சேசிந்தி போல! நான் வெத்தல பாக்கு இந்த மாதிரி வாங்க போய் இருக்கேன் – சிறு வயதில்!

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

சூப்பர்...எங்கேயோ போய் விட்டீர்கள், ஸார்!

naanhabi said...

முதலில் ரஜினி படம்.... சூப்பர் ஒ சூப்பர்! கத..... சால பாகுந்தி...நீறு எப்புடு மாட்லாடுன்னாரு...? ராமாராவுகாறு எக்கட, எப்புடு உன்னாரு...? சால் செப்புமையா எல்லென் காரு..
-மு ஹபிகாறு..

மனோ சாமிநாதன் said...

வேகமான, சுறுசுறுப்பான பகிர்வு! ரஜினியின் ஓவியமும் அருமை!

மோகன்ஜி said...

அடடா எல்லன்... ஆந்திராவை அதிரடியாய் வாகை சூடியிருக்கிரீர்கள்.
வாள்ளு= அவங்க
இண்டிகி= வீட்டுக்கு
பிய்யம் =அரிசி
பம்ப்பால=அனுப்பணும்

சரியாத்தான் புரிஞ்சுகிட்டீங்க. நல்ல நகைச் சுவை உணர்வு மிகு. அப்புடப்புடு ஈலாக ராயண்டி எல்லேன்காரு! மள்ளி கலுத்தாம்..

எல் கே said...

ஹஹஹா .. எனக்கும் இதே மாதிரிதான் தெலுங்கு பேச வரும்... அப்புறம் ஹிட வேணும்னா, தலைப்பில் ரஜினி பேரை வைக்கணும்...

////அத்திரிமாக்கு கொழக்கட்டை///

அத்திரிப்பச்சா கொழுக்கட்டை சொல்லி இருக்காங்க

சிவகுமாரன் said...

நல்லா வாய்விட்டு சிரிச்சேன் . மோகன்ஜி புண்ணியத்துல அர்த்தம் புரிஞ்சது.

குறையொன்றுமில்லை. said...

உங்களுக்கு நல்ல நகைச்சுவை உணர்வு. ரொம்ப நேரமா சிரிச்சுண்டே இருந்தேன். ஒரொரு பாஷையும் கற்றுக்கொள்ளும் வரை நாம காமெடி பீஸ், பீசாயிடுவோம்.ரொம்ப நல்லா இருக்கு.

aarvie88 said...

reminded me of the kozhukattai story!!!!

என்றென்றும் உங்கள் எல்லென்... said...

விமரிசனங்கள் மூலம் என்னை உற்சாகப்படுத்தி மேலும் எழுத தூண்டும் உங்கள் அனைவர்க்கும் நன்றி !!

நிலாமகள் said...

இப்புடு தான் (போன வாரம்) நெல்லூர் போசி ஒஸ்தாமு மீரு. கையோடு உங்க பதிவைப் படிக்கவும் வெகு சுவையாக உள்ளது. உங்க தயவில் வெங்கட் நாகராஜ்-க்கும், மோகன்ஜி-க்கும் 'தெலுங்கு நஸ்ஸ தெலுசுன்னு' மீருக்கு தெரிஞ்சு போச்சுடு. ரொம்ப தேங்க்சுடு!

இராஜராஜேஸ்வரி said...

நல்ல நகைச்சுவை