Pages

நேசம் நம் சுவாசம் !

Sunday, June 12, 2011

திண்ணை



                டில்லி  ‘ஃப்ளைட்’  சுமார் நாற்பது நிமிடம் தாமதமாகவே சென்னையில் தரையிறங்கியது.  சூட்கேசை இழுத்துக் கொண்டு நான் காரிடாரை அடைந்த போது, எப்போதும் போல் தூரத்தில்  ‘ரேம்ப்’புக்கு அருகில் முரளி எனக்காக சிறு புன்னகையுடன் காத்திருந்தான். 
                மீனம்பாக்கம் புதுப் பொலிவிற்கு தயாராகிக் கொண்டிருந்தது. ஆங்காங்கே ராட்சச க்ரேன்கள் கொத்துக்கொத்தாய் பைப்புகளை உயர்த்திக் கொண்டிருந்தன. இன்னும் எப்படியும் இரண்டு வருடங்களில் இந்த விமான நிலையம் கம்பீர அடையாளம் பெற்றுவிடும்.
                  ”வாக்கா.... “ என்று வறட்சியான குரலில் முரளி என்னை வரவேற்று, என் கையிலிருந்து சூட்கேசை வாங்கிக் கொண்டான்.”அரை மணி நேரத்திற்கு மேல லேட்டாயிடிச்சில்லே” - என்றான்.
                   துப்பட்டாவை சரி செய்தபடி“ம்” என்றேன், “அம்மா இப்போ எப்படி இருக்கா?”
                  “இந்த தரம் பொழைக்கறது கஷ்டம்னு டாக்டர் சொல்லிட்டார்க்கா” என்றவனின் குரல் உடைந்தது. அவன் முதுகை ஆதுரமாக தட்டியபடி, ”ரிலாக்ஸ், முரளி” என்றேன். வெளியில் வந்தோம்.
                   அவனுடைய காரில் பின் சீட்டில் நான் அமர, அவனும் என்னருகில் வந்தமர்ந்தான். என் கண் எழுப்பிய கேள்வியை உணர்ந்தவனாக,”ஒரு மாதிரி டென்ஷனா இருக்கிறதனால வண்டி எடுக்க வேண்டாம்னுட்டு டிரைவரை ஃபிக்ஸ் பண்ணியிருக்கேன்க்கா” - என்றான்.
                   ”என்ன டென்ஷன் இதுலே... நான் வேணா ஓட்டட்டா...” என்று நான் சொல்வதற்கும் டிரைவர்  வண்டியருகில் வருவதற்கும் சரியாக இருந்தது.
                    மீனம்பாக்கத்தை விட்டு நீங்கி, கார் ஜீ.எஸ்.டி ரோடில் செங்கல்பட்டை நோக்கி விரைந்தது. 
                    முரளியை சமாதானப்படுத்தும் விதமாக, அவன் பக்கம் திரும்பி,”என்னைக்காவது ஒரு நாள் மரணம் நிகழவேண்டியதுதானே, முரளி அதை நினைச்சு வருத்தப்படறதோ... பயப்படவோ கூடாது ” என்றேன். 
                    “இந்த அப்பாவும் ரொம்பப் படுத்தறார் அக்கா..” என்றான்.
                     “ஏன்... என்ன பண்றார்?”
                     டிரைவருக்கு நம் வீட்டு விவகாரங்கள் தெரிய வேண்டாம் என்று நினைத்தானோ என்னமோ, வெறுமனே”ப்ச்” என்றான், முரளி. நானும் அதற்குப் பிறகு ஒன்றும் கேட்டுக்கொள்ளவில்லை.
                     ப்பா, அம்மா, குழந்தைகள் என்று மகிழ்ச்சியோடு வாழ்ந்த குடும்பம்தான் எங்களுடையதும். அதெல்லாம் இருபது வருடங்களுக்கு முன்னால்..... என்றைக்கு அப்பா என்கிற  ஒரு நாகரீகமற்ற மனிதர் அம்மாவை விடுத்து வேறு ஒரு பெண்ணோடு  ஓடிப் போனாரோ.....அன்றோடு தொலைந்தது எங்கள் குடும்ப சந்தோஷம். அப்பா, எலெக்ட்ரிக் கம்பெனியில் வேலை பார்த்து வந்த போது,  கொக்கி போட்டு திருட்டுத்தனமாக மின்சார சப்ளை ஏற்பாடு பண்ணிக் கொடுத்து எக்ஸ்ட்ரா காசு பார்த்தவர். அம்மா பவிஷான குடும்பத்தில் இருந்து வந்தவள் . ஆதலால்,“வேண்டாம்  இந்த மாதிரியான கேவல பிழைப்பு “என்று மன்றாடிப் பார்த்தாள். “அஞ்சு குழந்தைகளை வள்ர்க்கணும்னா இந்த மாதிரி ஏதாவது குறுக்கு வழியில போனாத்தான் உண்டு” என்றார் அப்பா.
                     இரண்டு பேர்க்கும் ஒத்துப் போகவில்லை என்பதை  ஊர் உணர்வதற்கு முன்னால், வேறு ஜாதி பெண் ஒருத்தி உணர்ந்துகொண்டாள். தன் வீட்டிற்கு கொக்கி போட்டு மின்சாரம் கொடுத்தவரை, தான் கொக்கி போட்டு இழுத்துக்கொண்டாள்.
                      ‘நிலை குலைந்து போதல்’ என்கிற பதத்திற்கு அம்மாவின்  அழுகை   மூலம் அன்றுதான்அர்த்தம் அறிந்து கொண்டேன். ‘துரோகி...துரோகி’ என்று பித்துப் பிடித்தவளைப் போல் அரற்றிக் கொண்டேயிருந்த அம்மாவிற்கு ஆறுதலாக , அம்மாவின் தம்பி  கொஞ்ச காலம் எங்களைப் பார்த்துக் கொண்டார். ‘அந்த மஹா பாவி இருக்கிற ஊர்ல நான் இருக்க மாட்டேன்’ என்று சொல்லி, குஞ்சும்,குளுவான்களுமாக இருந்த எங்களை இழுத்துக் கொண்டு திருச்சியை விட்டு , முன்னே பின்னே தெரியாத செங்கல்பட்டுக்கு வந்தாள்.
                     எங்களையெல்லாம் ஆளாக்குவதற்கு அவள் பட்ட கஷ்டம் கொஞ்ச நஞ்சமா...மாமா அனுப்பின அரிசி,பருப்பு,சொல்ப பணம் இதெல்லாம் பத்து நாளுக்குத்தான் வரும். கடைத்தெரு ‘நடேசன் காபி க்ளப்’பில் இட்லி மாவரைத்துக் கொடுத்து, கல்யாண வீடுகளில் பட்சணம் செய்து தந்து, வடாம் இட்டு விற்று, அப்பளாம் இட்டு கடை,கடையாக ஏறி விற்று, படாத பாடு பட்டாள். என்னையும், அம்பியையும் எசெல்சி வரை படிக்க வைத்தாள். நாங்கள் தலையெடுத்து மீனாட்சி, அகல்யா, முரளி மூவரையும் டிகிரி வரையில் படிக்க வைத்தோம்.
             
                    ப்போது நடந்த சம்பவம் ஒன்று இன்றைக்கும் ஞாபகம் இருக்கிறது. ஸ்கூல் ஃபீஸ் கட்ட மறுநாள்தான் கடைசி. சாயந்திரம் ஸ்கூல் விட்டு வந்ததும் அம்மாவிடம் சொன்னேன். பரபரப்பாகிவிட்டாள். வளையல் ஜோடி ஒன்றை தலைப்பில் முடிந்து எடுத்துக்கொண்டு ,”நீ முன்னாடி போய் பெரிய சேட்டு கடையில இருந்தா கையை அசைச்சு எனக்கு சமிக்ஞை கொடு”ன்னு சொல்லிட்டு, என்னை போக சொல்றா. ஓட்டமும் நடையுமா போன நான், வேகமா வர்ற ஒரு சைக்கிள கவனிக்காம மோதி கீழ விழுந்து கால் முட்டியில சிராய்ச்சு, போட்டிருந்த ஒரே நல்ல பாசிபச்சை கலர் பாவாடையும் கிழிஞ்சு நின்னேன். ஆனாலும், அம்மா பார்க்கிறதுக்கு முன்னால, சுதாரிச்சுண்டு ஓடினால், சேட்டு கடையில பெரியவர் இல்ல. அவர் பையன்தான் இருந்தான்.
                    பெரியவர் மிக நல்ல மனிதர். ரொம்ப கறாராக பேச மாட்டார். தேவைக்கேற்ப பணம் கொடுத்து உதவுவார். அவர் கடையில் இல்லாத சமயங்களில் பெரும்பாலும் அம்மாவின் நகைகள் அங்கே போகாது.
                     அன்றைக்கு நான்காவது முறையில்தான் - இரவு எட்டரை மணிக்கு மேல்தான் - எங்களின் முயற்சிக்கு பலன் கிட்டியது.நகைக்கு எதிர்பார்த்த பணமும் கிடைத்தது.  பெரியவர், என்னை ”நல்லாப் படிக்கணும்..பாப்பா.... ஒங்க அம்மாவோட கஷ்டத்த உணர்ந்து படிம்மா” என்றார்.
                      இப்படியெல்லாம் கஷ்டங்களினூடே படித்து முன்னேறி ஒரு பிரைவேட் கம்பெனியில் எனக்கு வேலை கிடைத்து, இரண்டுமூன்று கம்பெனிகள் மாறி இன்று தில்லியில் ஒரு MNC- யில் நல்ல நிலையில் நான் இருப்பதற்கு அன்று அம்மா செய்த தியாகங்கள்தான் காரணம். ’ஆண்துணை இல்லாமல் போனால் என்ன , நான் பெற்றதுகளை கரையேற்றிக் காண்பிப்பேன்’ என்று அவள் எடுத்துக் கொண்ட வைராக்கியம் பெருமைப்படத்தக்கது.

                       முரளி வண்டியை நிறுத்தச் சொல்லி ஒரு கூல் டிரிங்ஸ் வாங்கி வந்தான். குடித்தோம். சிறிது நேரம் காரை விட்டிறங்கி நடந்தேன். இன்னும் கால் மணி நேரத்தில் வீட்டை அடைந்து விடலாம். படுத்த படுக்கையாய் இருக்கும் அம்மாவைப் பார்க்கலாம்.

                      முரளி, அப்பாவும் படுத்துவதாக சொன்னானே.... ஏதோ வேளாவேளைக்கு சாப்பாடு கிடைக்கிறதா என்று சாப்பிட்டுவிட்டு  ’சிவனே’ன்னு  இருக்க வேண்டியதுதானே...ஏன் தொந்தரவு செய்கிறார்?
                       அப்பா....
                       அப்படி ஒருத்தர் எங்களுக்கு இருக்கிறார் என்பதை நாங்கள் மறந்திருந்த சமயம் - அதாவது, நான் தில்லியில் செட்டில் ஆன பின்பு, அம்பி வேலைக்குப் போன பின்னால் , மீனாட்சிக்கும், அகல்யாவிற்கும் கல்யாணம் முடித்து வைத்ததற்கு பிறகு, முரளி P.O - வாக வேலையில் சேர சென்னை சென்றிருந்த நாளில் அப்பா, வீட்டுக் கதவைத் தட்டியிருக்கிறார்.
                        ’ எந்த மஹாபாவியின் முகத்தில் முழிக்கவே கூடாது’என்று சபதம் எடுத்திருந்தாளோஅந்த ‘மஹா பாவி’ வீட்டு வாசலில் நின்று ”என்னை மன்னிச்சுடு, சுப்பு” என்று கதறியதும் அம்மா ஆடிப் போய் விட்டாள். ஆனாலும், வீட்டிற்குள் வர அனுமதிக்கவில்லை.
                          அம்பியை விட்டு எனக்கு ஃபோன் போட்டு பேசச் சொன்னாள். அம்பி , “ஷ்யாமிளி....அப்பாவுக்கு இப்பத்தான் நம்ப நினைப்பு வந்திருக்கு” என்றான். அம்மாவிற்கு நேர்ந்த அவமதிப்புகளும், அவளை துவளடித்த துயரங்களும்,  முள்மேல் நிறுத்தி வைத்த  ஒவ்வொரு  கணமும் என் மனசில் வந்து போயின.
                           ஃபோனை அம்மாவிடம் கொடுக்கச் சொன்னேன்.”என்னையும், குழந்தைகளையும்  தவியா தவிக்க விட்டுட்டு எவ பின்னாடியோ ஓடிப்போன மனுஷனை இந்த வீட்டுக்குள்ள விடப்படாது, ஷ்யாமிளி” என்றாள், அம்மா. அவளின் உறுதியான குரலில் ஆவேசக் கலப்பில்லாத மனவலி புரிந்தது. நம்பிக்கை துரோகம் செய்தவனை ஏறெடுத்தும் பார்க்க விரும்பாத பெண்மனம் புலனானது.
                         ஃபோனை வாங்கி அந்த மனிதர் பேசினார். “நான் அப்படி செஞ்சது பெரிய தப்புதான்....கடவுளும் , காலமும் எனக்கு வேண்டிய அளவு தண்டனை கொடுத்திருக்கு....பெண்டாட்டியை வேண்டாம்னு உதறின கையும், ஓடிப் போன காலும் பாரிசம் தாக்கி, செயல் குறைஞ்சு போச்சு. புத்தி தெளிவாயிடுச்சி... நீங்க எல்லாரும் என்ன மேலும் தண்டிக்கறதா இருந்தாலும் அதயும் ஏத்துக்கறேன்... ஆனா,என்ன துரத்தி விட்டுடாதீங்க..... வீட்டுக்குள்ள வரக் கூடாதுன்னு சொன்னீங்கன்னா, இந்த திண்ணையில முடங்கி கிடக்கேன்...என்னை   போக மட்டும் சொல்லிடாதீங்க” என்று அழுதார் அப்பா.
                       அம்மாவின் பிடிவாதம் சற்று இளகியது. திண்ணையைத் தாண்டி வீட்டிற்குள் காலடி எடுத்துவைக்கக் கூடாது என்ற உத்தரவாதத்துடன் திண்ணையில் தங்கிக் கொள்ள சம்மதித்தாள்.
                         அதற்கு பிறகு செங்கல்பட்டு போயிருந்த சந்தர்ப்பங்களில் ஈனப்பிறவியாக தன்னை பாவித்துக்கொண்டு திண்ணையிலேயே  வசித்த அந்த மனிதரிடத்து எனக்கு  துளியும் பரிதாபம் தோன்றவில்லை. நாங்கள் யாராவது ஒருத்தர் தட்டில் சாப்பாடு  வைப்போம். எடுத்து சாப்பிட்டு விட்டு தட்டை கழுவி வைப்பார். அம்மா  கொண்டு வைத்தால் , ஒரு வித அசிரத்தையுடன்  தட்டை தள்ளி எறிவாள். 
                       தில்லியிலிருந்து ஒரு தரம் வந்திருந்த போது, அப்பாவிற்காக திண்ணையை ஒட்டியே ஒரு பாத்ரூம் கட்டிக் கொடுத்தேன்.

**********
                    ம்மா, கிழிந்த நாராய் கட்டிலில் கிடந்தாள். குனிந்து அவள் காதருகில் ,”அம்மா, நாந்தாம்மா உன்னோட ஷ்யாமிளி வந்திருக்கேன்” என்றேன். கண்ணைத்திறக்கவில்லை. உதடுகளில் மட்டும் ம்லேசாய் அசைவு தெரிந்தது.
                    மகன்களும்,மருமள்களும், மாப்பிள்ளைகளும், பேரக் குழந்தைகளும் நன்றாகவே அம்மாவை கவனித்துக் கொண்டிருந்திருக்கிறார்கள். பெரும் வாழ்க்கையை இழப்பாகவே வாழ்ந்த மனுஷி,கடைசி மூச்சையும்  இழக்க தயாராகிக் கொண்டிருந்தாள். 
                    அம்மாவின் சுருங்கிப் போன கையைப் பிடித்தபடி அம்பி, “அம்மா உன்னை நினைச்சுத்தான் உருகிப் போவா.. கஷ்டத்தையெல்லாம் என் கூட சேர்ந்து தாங்கினா ஷ்யாமிளி.... நான் இருக்கேம்மா உனக்கு... கண்கலங்காதேம்மான்னு... எனக்கு பொண்ணுக்கு பொண்ணா, பிள்ளைக்கு பிள்ளையா இருந்தா....என்னை தெருவில விட்ட தெய்வம் அனுப்பித் தந்த ஊனுகோல் அவ’ன்னு வாய் ஓயாம புலம்பித் தீர்ப்பா......’குழந்தைகளை முன்னுக்குக் கொண்டு வரணும்கிற என்னோட வெறிக்கு ,தோள் கொடுத்து ஒத்தாசை பண்ணனும்னுட்டு, தான் கல்யாணமே பண்ணிக்கப் போறதில்லே’ன்னு என்கூடவே கைபிடிச்சு வந்தவ,ஷ்யாமிளி’ன்னு எப்பவும் உன்னைப் பத்தின பேச்சுத்தான்.... உன்னோட நினைப்புதான் ”
                    எங்களுக்காக உழைத்து  ஒடுங்கிப் போன அம்மாவின் கைகளைப் பிடித்துக் கொண்டேன். ஒரு வித கெஞ்சல் முகபாவனையுடன் ,திண்ணை ஜன்னல் வழியாக அப்பா எட்டியெட்டிப் பார்த்தார் .
                    அம்மாவின் மூச்சில் ஒருவித அசாதாரணம் தென்படவே , அவளருகில் குனிந்தேன். அம்மா ”மனசில வஞ்சனையோட இந்த உலகத்தை விட்டு பிரியாதே.... போனால் போகட்டும் என்று அப்பாவை மன்னித்து விடம்மா” என்று அவளைக் கட்டிக் கொண்டு ரஹஸ்யமாய் சொன்னேன். எனக்கான தன் பதிலை மிகவும் அமானுஷ்யமாக (subtle) சொல்லி விட்டு தலையை என் மடியில் சாய்த்தாள்.

**********
                 ல்லா பாரங்களையும் ஒரு பெருமூச்சுடன் உதறிவிட்டு கிளம்பிய அம்மாவை தலை நிறைய பூக்கள் சூட்டி, முகத்தில் மஞ்சள் பூசி, நெற்றியில் பெரிய குங்குமப்பொட்டுடன்  சுமங்கலியாக வழியனுப்பி வைத்தோம். ஒரு கணவனாக செய்ய வேண்டிய சாங்கியங்களை அப்பா ஒருவித குற்ற உணர்வு மேலிட செய்து முடித்தார். 
                   “நீங்க இனிமே திண்ணையில இருக்க வேண்டாம்.... நாளையிலிருந்து வீட்டிற்குள் வரலாம். அம்மாவிடம் கேட்டுவிட்டேன்” என்றேன். அந்த முகத்தில் ஒரு மலர்ச்சி தெரிந்தது.

                   றுநாள் காலையில்,  திண்ணையைப் போய் பார்க்கிறேன். திண்ணை காலியாக வெறிச்சோடிக் கிடந்தது.அந்த மனிதரைக் காணோம்.

************************

                  


 

             
                           
                                                   
                    






                   







13 comments:

பத்மநாபன் said...

ஓரு நொடி கூட கண் எடுக்காமல் கட்டிப் போட்டு படிக்க வைத்தது கதை... கடைசியில் வாசகர்களும் சேர்ந்து அப்பாவை தேட ஆரம்பித்து விடுவார்கள்..

Yaathoramani.blogspot.com said...

அருமையான் கதை
அந்த கடைசிப் பத்தி படித்ததும்
மெய்சிலிர்த்துப்போனேன்
திண்ணை வெறிச்சோடிக் கிடந்தது
என்பதற்காக அல்ல
அந்த மனிதரைக் காணோம் என்கிற
அந்த ஒற்றை வாக்கியம் அதிிகம் சொல்லிப் போகுது
சூப்பர் படைப்பு தொடர வாழ்த்துக்கள்

ரிஷபன் said...

பத்மநாபன் சொன்னது சரிதான். உணர்வு பூர்வமாய் படித்துக் கொண்டே போனால் கடைசியில் திண்ணை காலி என்றதும் பக்கென்று ஆனது..
மறக்க முடியாத அம்மா

A.R.ராஜகோபாலன் said...

என் அம்மாவின் வாழ்க்கையை படித்தது போல் ஒரு உணர்வு , எங்கள் அப்பா எங்களை விட்டு போகவில்லை என்றாலும் குடியை மணந்திருந்தார்.

அந்த மனிதர் என்ற வார்த்தையில் தெரிந்த அன்னியம் மனதை கலக்கியது . நல்ல படைப்பு எல்லென் சார்

வெங்கட் நாகராஜ் said...

ஒரு வித துடிப்போடுதான் படித்தேன் முழுக்கதையையும்… ஒரு இடத்தில் கூட விட்டுவிடமுடியாத பிடிப்பு இருந்தது உங்கள் கதையில். அதுவும் கடைசியில் முடிவு அப்படியே அமுக்கிப் போட்டுவிட்டது. நல்ல கதை எல்லென் சார்.

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

மறு நாள் காலை,திண்ணை மட்டுமா வெறிச்சோடிக் கிடந்தது...எங்கள் மனமும் தான்!
கஷ்டப் பட்ட/படும் அம்மாவிற்கு ஸ்னேகிதியாய் மூத்த பெண் வருவது கன கச்சிதம்!

Rathnavel Natarajan said...

நல்ல கதை.
மனசை நெகிழ வைக்கிறது.
நன்றி.

குறையொன்றுமில்லை. said...

குழந்தைகளை நல்லபடியா வளர்த்தி
ருந்தாலும் அவங்க வாழ் நாள்பூரா
ரொம்பவே கஷ்ட்டம் தானே பட்டாங்க.
சோகமான கதை.

நிலாமகள் said...

அம்மாவின் பாடுக‌ளும் வைராக்கிய‌ வாழ்வும் க‌ல‌ங்க‌டித்த‌து. 'அந்த‌ ம‌னித‌ர்' அம்மாவிற்கு இழைத்த‌ கொடுமைக்குப் பிராய‌சித்த‌மாய் ஒரு க‌ண‌வ‌ராய் செய்ய‌ வேண்டிய‌ ச‌ட‌ங்குக‌ளுக்காக‌ திண்ணையில் காத்திருந்த‌து போல் எல்லாம் முடிந்தும் உள்நுழைய‌ ம‌ன‌சின்றி மாய‌மாய் ம‌றைந்த‌து ம‌ன‌சை க‌ரைத்த‌து. குழ‌ந்தைக‌ளும் பாவ‌ம்தான். க‌தை நெடுநேர‌ம் ம‌ன‌சை க‌ன‌ப்ப‌டுத்தி உட்கார்ந்து கொண்ட‌து சார்.

வை.கோபாலகிருஷ்ணன் said...

கதை மிகவும் உருக்கமாக இருந்தது.

மனித உணர்வுகளைப் பிரதிபலிப்பதாக இருந்தது.

பொறுப்பாக இருந்து குடும்பத்தை ஒழுங்காக வழிநடத்திச் செல்ல வேண்டிய மனிதர், சபலத்துக்கு ஆளாகி, பாதைமாறி சென்றால் அதனால் அந்த குடும்பமே எவ்வளவு கஷ்டங்களுக்கு ஆளாக வேண்டியுள்ளது என்பதை அழகாக விளக்கியுள்ளது இந்தக்கதை.

தன் மனைவியே போனபின் தன் மேல் யாருக்கும் ஈவு இரக்கம் ஏற்படப்போவதில்லை என்பதை நன்கு உணர்ந்த அவர் திண்ணையைக் காலி செய்துகொண்டு எங்கேயே போய்விட்டார் என்பது சரியான முடிவு தான்.

சிறப்பான, சிந்திக்க வைத்த, சிறுகதையைத்தந்த தங்களுக்கு என் பாராட்டுக்கள். வாழ்த்துக்கள். நன்றிகள்.

என்றென்றும் உங்கள் எல்லென்... said...

ஒரு பேரிளம்பெண்ணின் வாழ்வில் நடந்த சம்பவத்தை மூன்றாவது மனிதனாக நான் பார்த்து, அதை ஒரு கதை வடிவில் வடித்திருந்தேன். நாவலாக எழுத எத்தனையோ சோக நிகழ்வுகள் அவளின் வாழ்க்கையில் இருந்தாலும், அவற்றை சுருக்கி சிறு கதையாக உருவாக்கியிருந்தேன்.
பாராட்டி எழுதிய அத்தனை உள்ளங்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி!!

மனோ சாமிநாதன் said...

மனதை நெகிழ வைத்த அருமையான சிறுகதை! துரோகங்களுக்கு மன்னிப்பு கிடையாது என்பதை உணர்த்தி விட்டு மறைந்த அம்மா மனதை கனமாக்குகிறார்!

இராஜராஜேஸ்வரி said...

சியாமளியின் அருமையான குணம் பாராட்ட வைக்கிறது.