Pages

நேசம் நம் சுவாசம் !

Tuesday, November 23, 2010

ப(ரமா)த்மா !

                        வாழ்ந்து  கொண்டிருக்கும் வரை  நம்மால் இயன்ற உதவியை நெருங்கியவருக்கு செய்ய வேண்டும் என்கிற துடிப்புடன் இயங்கியபடி  , அதே சமயத்தில்  வாய்த்திருக்கும் அரசுப் பணியை ஒரு அறப் பணியாகவும்  செய்து கொடிருக்கும் நான் , பிரகாஷ்.  'ரத்த வங்கியில் ரத்தம் கொடுக்கணுமா.... பிரகாஷக் கேளுங்க விவரம் சொல்லுவார்.... ' என்றோ... "இன்டேன் கேஸ் சிலிண்டர் கனக்ஷன என் பேருக்கு கொஞ்சம் மாத்தணும்.... பிரகாஷ்.." என்றோ..."பையனோட பாஸ்போர்ட்ட கிளியர் பண்ணிக் குடுப்பா.." என்றோ..."கொடேஷன் ஒர்டர்ல ஒரு சின்ன தப்பு சம்பவிச்சு... நம்முடே சிடுமூஞ்சி ஒபிசர் என்னை விளிச்சு... என்னோடோப்பம் சாரக் காணான் வரான் பற்றோ பிரகாஷ் " என்று பைங்கிளிக் குரலிலோ .... இப்படி யாராவது ஒருத்தர் என் டேபிள் முன்னால் நிற்பது வாடிக்கையான ஒரு விஷயம்.  பார்த்துக் கொண்டு இருக்கிற  லெட்ஜெர் பக்கத்திற்கு அடையாளம் வைத்து விட்டு அவர்களுடன் கிளம்பி விடுவேன்.
                  கனக்கச்சிதமாக வேலையை முடித்துக் கொடுப்பதால் என் மீது ஆபிசிலும் சரி, வெளி வட்டாரத்திலும் சரி எல்லோரும் மிகவும் அன்பு காட்டுவார்கள். அடிக்கடி என் எஸ்.ஓ வே "யோவ் , நீர் ஜெகஜ்ஜாலக் கில்லாடிய்யா" என்பார். எனக்கோ உள்ளுக்குள் கூசும்.  அவர் பெண்ணுக்கு கூட ஒரு காலேஜ் அட்மிஷன் வாங்கித் தந்திருக்கிறேன்.
                   இப்படி ஊருக்கே உழைத்து தேயும் என்னைப் புரிந்து கொள்ளாமல் "வீட்டில் இங்க இருக்கறத,அங்க நகத்தி வைக்காத ஜன்மம்" என்று தலையில் அடித்துக் கொள்வாள் என் சகதர்மினி, நளினி. "நாலு பேருக்கு நல்லது பண்ணினா புண்ணியம்" என்று நான் சமாதானம் சொல்கையில் அவள் தன் முகவாய்க்கட்டையை  தோளில் நொடித்துக் கொள்வதைப் பார்க்க வேண்டுமே... அட..அட..அடா..!
                    அதையும் மீறி , அவளுக்கு உதவும் எண்ணத்தில் காய் நறுக்க உட்கார்ந்தால் சிவராமன் மாதிரி யாராவது செல்போனில் தடதடக்கிறார்கள்.
                     "சொல்லு.. ஷிவா" என்றேன். ஷிவா என் முன்னாள் காலேஜ் நண்பன். இந்நாள் சகலை எனப்படுகிற ஷட்டகன்.
                     "பிரகாஷ்...சாயங்காலம் ஆபிஸ் முடிச்சிட்டு போற வழியிலே ஹோட்டல் மோனாவுக்கு வந்திடு... முக்கியமான ஒரு விஷயம் பேசணும்... ஒன்னோட ஹெல்ப் வேணும்...." என்றான் ஷிவா படபடப்பாக, "நளினிக்குத் தெரிய வேண்டாம்"
                     " என்னடா ட்ரிங்க்ஸ் பார்ட்டியா?" என்றேன் ரகசியமாய்.
                     "நேர்ல வா , சொல்றேன்" என்று கட் செய்தான்.

                       நேரில் பார்த்த போது பேயடித்தவன் போல் இருந்தான்.மொட்டை மாடி roof garden -இல் பியருடன் சங்கமிக்கும் சந்தர்ப்பத்தில் ,"நம்ப ரமா  அவளோட கிளாஸ் மேட் 'பத்மநாபன்'ன்னு ஒருத்தனைக் காதலிக்கிறாளாம். அவனைத்தான் கட்டிக்குவாளாம்." என்றவன் க்ளாஸ் அநியாயத்திற்கு நடுங்கியது.
                     "உனக்கு எப்படித் தெரிஞ்சுது?" என்றேன்.
                     "மொபைல்ல எப்பப் பார்த்தாலும் 'டீ பத்மா... டீ பத்மா..'ன்னு மணிக்கணக்கா பேசிகிட்டிருப்பா...அதுவுமில்லாம இ-மெயிலிலே பத்மா..பத்மான்னு வழிஞ்சு வழிஞ்சு லெட்டர். ரமாவோட பாஸ்வர்ட் தெரிஞ்சதாநால கண்டுபிடிச்சேன். யாருடி இதுன்னா பத்மநாபன் என்கிறாள்."
                    "கட்டி வெச்சிட வேண்டியதுதானே " என்றேன் சிப்சைக் கொறித்தபடி.
                    "அவன் வேற ஜாதி...வேற 'ஸ்டேட்'டா.....நமக்கு ஒத்து வராது"
                    "டேய்.... பாரதியாரே 'ஜாதிகள் இல்லையடி பாப்பா'ன்னு சொல்லியிருக்கார்டா"
                    "அது பாப்பாவுக்கு சொல்லியிருக்கார்.... எனக்கில்லே"
                    "சரி.... இப்ப என்ன பண்ணனும்னு சொல்றே?"என்றேன்.
                    "வெட்டணும்" என்றவன் என் திடுக்கிடலை உணர்ந்து, "அவங்க காதலை" என்றான்.
                    வேறொன்றுமில்லை ...அவனின் ஒரே மகள் ரமாதேவி  - நான் தூக்கி வளர்த்த என் ரமாக்  குட்டி - இன்று பெரிய பெண்ணாக வளர்ந்து படித்து, பட்டம் பெற்று, MNC -யில் வேலையாகி தன்னுடன் படித்த பத்மனாபனைக்  கல்யாணம் செய்து கொள்கிறேன் என்கிறாள்.  என் மைத்துனி கீதாவும் ஷிவாவும் அதற்கு பச்சைக் கொடி காண்பிக்க விரும்பவில்லை. ஜாதி, வேற மொழி ,குடும்ப கெளரவம்  ..அது..இது என்று பாவ்லா காட்டி எதிர்க்கிறார்கள்.
                    "ரெண்டு பேரையும் கூப்பிட்டு பேசுவோம். 'இந்த கல்யாணத்திற்கு நாங்கள் ஒப்புக்கொள்ள முடியவே முடியாது'ன்னு சொல்லிப் பார்ப்போம்."என்றேன்.
                    "அப்படியெல்லாம் அம்மாஞ்சி மாதிரி பேசினா நடக்காது,பிரகாஷ். ஜெர்க் ஆகிற மாதிரி மிரட்டணும்"
                    "சரி...நான் பாத்துக்கிறேன்.. கவலைய விடு" என்று சமாதானப்படுத்தி லேசாக மலை ஏறிக் கொண்டிருந்தவனை கீழிறக்கி, வீட்டிற்கு கொணர்ந்து, படுக்கையில் கிடத்தி விட்டு கிளம்பினேன்.

                     வீடடைந்து நளினியிடம் விஷயத்தைக் கூறிக் கொண்டிருக்கும் போது , சிணுங்கியது செல்போன்."பெரியப்பா .... உங்ககிட்ட  கொஞ்சம் பேசணும்...இப்ப நீங்க  ப்ரீயா ?" என்றாள் ரமா.
                      ஷிவாவும் கீதாவும் அவர்களுக்குத் தெரிந்த ஒரு பணக்கார வீட்டு பையனுக்கு ரமாவைக்  கட்டிக் கொடுக்க ஏற்பாடு செய்ய, ஆனால் ரமாவோ  தான் நான்கு வருடங்களாக காதலிக்கும் பத்மா (எ)பத்மநாபனைத் தான்  கல்யாணம் செய்து கொள்ளப்போவதாக அறிவிப்பு வெளியிட்டு விட்டாள்.
                       " நீங்கதான் எங்க ரெண்டு பேருக்காகவும் பேசி அப்பா,அம்மா சம்மதத்தை வாங்கித் தரணும் பெரியப்பா ", என்ற சுபாவின் குரல் கெஞ்சியது.
                         " நீ சொல்றதெல்லாம் சரிம்மா....ஆனா , உங்கப்பா அம்மாவை எதிர்த்து நீ கல்யாணம் பண்ணிக்கறதை நான் அனுமதிக்கவோ அங்கீகரிக்கவோ முடியாது." என்றேன்  குரலில் கடுமையை வரவழைத்து.
                         "அப்படியா....நான் பத்மனாபனைக்  கல்யாணம் பண்ணிக்கறதை யாராலையும் தடுக்க முடியாது "என்றாள் வீறாப்பாக.
                                            
                          "இவ்வளவு பேச்சு பேசுவியா நீ.... உன்னோட காதல் விஷயம் பத்தி கொஞ்ச நேரத்துக்கு முன்னாடித்தான் உங்கப்பா சொன்னான். அவனுக்கு ஹெல்ப் பண்றதா வாக்கும் கொடுத்திட்டேன்... நான் கிருஷ்ணா பரமாத்மா மாதிரி....என் கிட்டே யார் முதல்ல உதவின்னு வர்றாங்களோ ,அவங்களுக்கு உதவர்றதுதான் என்னோட வழக்கம். இப்ப என் உதவி கேக்கிற நீ  நாலு வருஷமா என்ன பண்ணினே? முன்னாடியே கேட்டிருக்கலாமே...நிச்சயமா இந்த கல்யாணத்தே  நானே நடத்தி வச்சிருப்பேன்.ஆனா , நீ உன் பேரேன்ட்சையும் மதிக்கலே..என்கிட்டயும் சொல்லலே..நீ நினைக்கிறபடி இந்த கல்யாணம் நடக்காது, சுபா. சும்மா பெத்தவங்களைப் பகைச்சுக்காதே .....அவங்க சொல்றபடிக் கேளு...இல்லேன்னா அவங்கள கன்வின்ஸ் பண்ணப் பாரு" என்றேன்.

                      "போயும் போயும் உங்களை நம்பி பேசினேனே.... சாரி ...மிஸ்டர் பிரகாஷ்...உங்களால என்ன செய்ய முடியுமோ அதை செய்யுங்க...we cannot convince anybody anymore "
                      கொஞ்சம் கூட மரியாதை இல்லாமல் என்னை பெயர் சொல்லி அழைத்த அவளிடம் ஏகமாய் கோபம் வந்தது. "உன் காலை உடைக்கிறேன்  பாரு...கழுதை...என்ன திமிர்.....இப்ப சொல்றேன் கேட்டுக்க.... உன் காதல் கல்யாணம் எப்படி நடக்குதுன்னு  நான் பாத்துடறேன்.... " வயிற்றின் உள்ளே ஷிவா ஊற்றி கொடுத்த பீர் குலுங்க பீறிட்டு எழுந்தேன்.

                         றுநாள் காலை ஒன்பது மணிக்கு ,கீதா போனில் கூப்பிட்டு அழுதாள். ராத்திரி எட்டு மணிக்கு வரவேண்டிய ரமா  வீட்டிற்கு வரவில்லையாம்..ஷிவா செய்வதறியாமல் 'திரு திரு' வென்று  முழித்துக் கொண்டிருப்பதாகவும் அழுகையினூடே  கூறினாள். நானும் நளினியும் அவர்கள் வீட்டிற்கு பைக்கில் பறந்தோம்.
                          ஷிவா ஹேங்கோவரில் சொன்னதையே  திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டிருந்தான்."எம் பொண்ணு என்னை ஏமாத்திட்டாடா"
                           " ஒன்னும் கவலைப் படாதே ஷிவா ...எங்கயும் போயிருக்க மாட்டா ரமா ...ஆபிஸ்லயே தங்கியிருப்பா"
                           "எல்லா எடத்துக்கும் போன் போட்டுப் பாத்தாச்சு... ட்ரேஸ் பண்ண முடியல" என்றாள் கீதா. ஷிவாவோ,""எம் பொண்ணு என்னை ஏமாத்திட்டாடா" என்றான், திரும்பவும்.
                           டக் டக்கென்று முடிவுகள் எடுக்க வேண்டிய தருணம் இது . அவளுடைய செல்போன் சர்விஸ் வழங்கு கம்பெனியை தொடர்பு கொண்டு விஷயத்தை நாசுக்காக விளக்கி , அவர்களின் உதவியை நாடினேன். நம்பரை ட்ரேஸ் செய்து விட்டு அழைப்பதாக உறுதி கூறினார்கள். இருப்பு கொள்ளாமல் தவித்துக் கொண்டிருந்த எங்களுக்கு மதியம் அந்த கம்பெனியிலிருந்து போன் வந்தது. அந்த நம்பர் நேற்று இரவே திருத்தணி  டவர் சிக்னல் எல்லையில் இருந்ததாகவும் இன்று காலை பதினோரு மணிக்கு மேல் பெங்களூர் ரூட் டவர்களின் சிக்னல் எல்லை நோக்கி நகர்வதாகவும் ,வானிலை அறிக்கை 'ரமணன்' பாணியில் கூறினார்கள்.
                       ஆஹ  ..ஹா... இன்று நல்ல முகூர்த்த நாள்.. கல்யாணம் முடிந்து விட்டது...ரமா  நடத்தி காட்டி விட்டாள்....அவளின் பெற்றோர், என்னை , எல்லோரையும் முட்டாளாக்கி விட்டாள் ....
                       மெதுவாக விஷயத்தை ஷிவாவிடம் கூறினேன். அதிர்ச்சியில் அவன் அப்படியே உறைந்து விட்டான். " பேசாமல் போலீசில் கம்ப்ளைன்ட் குடுத்திடலாம்" என்றேன். "வேண்டாம் பிரகாஷ்... மானமே போய்டும்... அந்த சனியன் எக்கேடும் கேட்டுப் போகட்டும்... இனிமே அவ எங்க பொண்ணும் இல்லே.. நாங்க அவளைப் பெத்தவங்களும் இல்லே" என்று ஷிவா மனமுடைந்து அரற்றினான்.
                        "அப்படியெல்லாம் விடக் கூடாது ஷிவா....நம்மளே எல்லாம் ஒரே நாளில ஏமாற்றி முட்டாளாக்கிட்ட அவள சும்மா விடக் கூடாது. கடத்தல் கேசுல அந்தப் பையன உள்ளே பிடிச்சுப் போட்டோம்ன்னா கதறிக்கிட்டு நம்மகிட்ட ஓடி வருவா"

                         ரை மனதுடன் கீதாவும் , ஷிவாவும் போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்தனர்.
எஸ்.ஐ இடம் பேசினேன். இன்ஸ்பெக்டர் வரும் வரை கொஞ்சம் காத்திருக்க சொன்னார்.காத்திருந்தோம். ஷிவா மட்டும் புலம்பிக் கொண்டே இருந்தான்.
                          இன்ஸ்பெக்டர் வந்ததும் ,"உங்கள்ல பிரகாஷ் யாரு"ன்னு கேட்டார்.
                          "நான்தான்" என்ற போது எனக்குள் லேசாக வியர்த்தது .
                          "ரமா  உங்க பேர்ல ஒரு கம்ப்ளைன்ட் கொடுத்திருக்காங்க. 'மேஜரான  பொண்ணு , தனக்குப் பிடிச்சவன கல்யாணம் பண்ணிக்கறேன்' ன்னு சொன்னப்போ கால ஓடச்சிடுவேன்னு மிரட்டினியாமே..நீ.....அவ்வளவு பெரிய ஆளா நீ...உள்ள தள்ளி கம்பி என்ன வெச்சிடுவேன்  .. ஜாக்கிரதை" என்று என் மூக்கிற்கு அருகில் வந்து அடிப்பது போல் கையை ஓங்கினார்.
                          விஷயம் விபரீதமாகி விட்டது... ரமா  இப்போதும் முந்திக் கொண்டு எங்களை முட்டாளாக்கி விட்டாள் .சமாதான குரலில் எல்லா விஷயத்தையும் அவருக்கு விளக்கி , 'ரமாவை அப்படி மிரட்டியது என் தப்பு' என்று எழுதிக்  கொடுத்து விட்டு,'தப்பித்தோம்..பிழைத்தோம்'  என்று வீடடைந்தோம்.
                           ரமாவிடமிருந்து போன். "என்ன மிஸ்டர் பிரகாஷ்.... மூக்கு ஒடஞ்சுப் போச்சா....உலகத்தில நீங்க மட்டும்தான் பரமாத்மான்னு நினைக்காதீங்க.... உங்களை மாதிரித்தான் போலீசும். அவங்களும் யாரு முதல்ல கம்ப்ளைண்ட் பண்றாங்களோ அவங்கள நிரபராதியா வச்சுத்தான் விசாரிப்பாங்க....அங்க நடந்த விஷயத்தையும் எனக்கு சொல்லி ஹெல்ப் பண்ணுவாங்க" என்றாள். 
                             ஷிவாவுக்கும், கீதாவுக்கும் என்னைப் பார்ப்பதற்கே சங்கடமாகி விட்டது. "உன்னை அவமானப்படுத்தின அவ எங்க பொண்ணே இல்லேடா", என்று என்னைக் கட்டிக் கொண்டு அழுதான், ஷிவா.                          
                         ல்லாம் முடிந்து , ஷிவா தன் மகளுடன் ஒரு வருஷம் பேச்சு வார்த்தை இல்லாது இருந்தான். பேத்தி பிறந்ததும் "மகளே" என்று இவர்களும் " எனைப் பெற்றவர்களே" என்று ரமாவும் 'ஸ்லோ மோஷனில்'  பாசம் பொங்க கூடிக் கொண்டதும் என்னைப் பொறுத்த வரையில்  அனாவசிய செய்தி.      என்ன ..... ரமாவுக்கு நான்தான் வேண்டாதவன் ஆகி விட்டேன்...பேசுவதில்லை.
***********


4 comments:

ரிஷபன் said...

கதை சூப்பர்! ஏன் இதை பத்திரிகைக்கு அனுப்பவில்லை?
என்ன ..... ரமாவுக்கு நான்தான் வேண்டாதவன் ஆகி விட்டேன்...பேசுவதில்லை.
எப்போதும் இதுதான் நிலைமை.. சண்டை போட்டவர்கள் ஒன்று சேர்ந்து விடுவார்கள்.

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

கதை நன்றாக வந்திருக்கிறது..அந்த இருபத்திஒன்பாதவது பாராவில் வந்த சுபா தான் யார் என்று தெரியவில்லை..

என்றென்றும் உங்கள் எல்லென்... said...

நீங்கள் சுட்டிக் காட்டிய தப்பு அடியேனின் கவனக்குறைவால் ஏற்பட்டது.(சுபா என்பதிற்கு பதிலாக ரமா என்று வாசிக்கவும்.) தங்களின் விமரிசனத்திற்கும் , சுட்டிக்காட்டலுக்கும் நன்றி.

naanhabi said...

இது கதையா இல்லை நாட்டு நடப்பா..? வீட்டுக்கு வீடு இப்போது ரமா வின் கதைகள்...அதில் கட்டாயமாக பிரகாஷ் போன்ற ஒரு victim கேரக்டர் கட்டாயம் இருப்பார். இதற்கு தீர்வாக ஒரு முடிவு இருந்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். 'நாடோடிகள்' படம் பார்த்தீர்களா?