Pages

நேசம் நம் சுவாசம் !

Showing posts with label சிறுகதை. Show all posts
Showing posts with label சிறுகதை. Show all posts

Saturday, July 2, 2011




மாமா......சாமா.......பாமா.....
                          

   (முன் எச்சரிக்கை: படிச்சே ஆகணும்...ஆமா)

    

                     யாராவது ஒருத்தரைப் பாராட்டணும்னா எங்க காலத்தில எல்லாம் ஜோரா கைதட்டுவோம்...இல்லேன்னா ‘சபாஷ்’னு முதுகுல ஒரு ஷொட்டு கொடுப்போம்..கான்வென்ட்ல படிச்சிருந்த ஆக புத்திசாலிகளா இருந்தா ‘ஹிப்ஹிப்ஹுர்ரே’னு கத்துவோம்.

                     ஆனா, இந்த காலத்திலே... ஆம்பள,பொம்பள வித்தியாசம் இல்லாம எல்லாம் சேர்ந்துண்டு விசில் அடிக்குதுகள்.’தையா..தக்கா’ன்னு ஆடறதுகள்.இல்லேன்னா ‘ஓ’போடு’ ங்கிறதுகள்.. போதாகுறைக்கு ‘ஓ..போடு....ஓ .போடு”ன்னு ஒரு கண்றாவிப் பாட்டு வேற....

காலேஜ் லீவ் விட்டாச்சா?   ‘ஓ’போடு’.....

லெக்சரர் சூடிதார்ல வந்தாளா... ‘ஓ’போடு’....

கேண்டீன் சாம்பார்ல கரப்பான்பூச்சி  மிதந்ததா ... ‘ஓ’போடு’.

                        என்னமோப்பா...எனக்கு இந்த காலத்து பசங்களோட, கிஞ்சித்தும் ஒத்துப்போகவே முடியலே.. ஹ்ம்ம்ம்...சாம்பார்ல கரப்பான்பூச்சின்னதும் எனக்கு நம்ப சாமா - பாமா பத்தின நினைப்புதான் வர்றது.
                    
                        சாமா என்கிற சாமினாதன்.....கல்யாணத்துக்கு முன்னாடி சர்யான அசட்டு அம்மாஞ்சியா இருந்தவன், பாமா என்கிற சத்யபாமாவை கைபுடிச்சதுக்கபுறம் கெட்டிச்சமத்தா ஆயிட்டான்.....தானும் இந்த மாதிரி ஒரு நல்ல நிலைமைக்கு வந்துட்டமேன்னு சாமாவுக்கு மனசு கொள்ளாத சந்தோஷம்.அதனாலேயே அவனுக்கு ஆம்படையாகிட்ட கொள்ளை ப்ரியம். ’பாமா..பாமா’ன்னு அவ முந்தானையப் புடிச்சுண்டே சதா சுத்துவன். அந்த பதிவிரதாசிரோன்மணியும் அவனை இடுப்பில தூக்கி வச்சிக்காத குறைதான்...ஒரு கொழந்தையைப் பாத்துக்கறா மாதிரி அப்படி பாத்துப்போ. இவா ரெண்டு பேரோட அன்னியோன்யத்தைப் பாத்து பாத்து புளகாங்கிதப்படற நாலைந்து ஜனங்கள்ல நானும் ஒருத்தன்.


                        இப்ப , ஆரம்பிச்ச கதைக்கு வாங்கோ... ‘ஓ’போடுங்கிறதைப் பத்தி விசாலமாப் பேசினோமே...இவா ரெண்டு பேருக்கும் முன்னாடி ’ஓ’ போட்டுப் பாருமேன்...’ஓ’சாமா.....’ஓ’பாமா..ன்னு சொன்னா அபத்தமாக அல்லவா ஆகிடும்.... ஒசாமாவும்,ஒபாமாவும் ஒருத்தொருக்கொருத்தர் எலியும் பூனையுமா இருந்து, யார், யாரை முதல்ல காலி பண்றதுன்னு காத்திண்டு இருந்தா. ஆனா, நம்ப பாமாவும் சாமாவும் அன்புக்கு அடையாளம்...... ப்ரேமைக்கு அடையாளம்....நல்ல தாம்பத்யத்துக்கு அடையாளம்.. அதுக்காக  வேணும்னா அவாளுக்கு நாம ‘ஓ’போடலாம்.

                        நானும்,என் மனைவிசுப்புலக்‌ஷ்மியும் ஆண்டார்தெருவுக்கு ஜாகை மாத்திண்டு வந்ததுக்கப்புறம்தான் சாமா பரிச்சயம் ஆனான். சாமாவோடு வம்பு பேசறதுதான், ரிடையர்டான எனக்கு நல்ல பொழுதுபோக்கு. தெருவுல யார்யார் இருக்கா,என்ன பேரு,என்ன உத்தியோகம்கிற விபரங்கள் மற்றும் இன்ன பிற சமாச்சாரங்களை நான் சாமாவிடமிருந்துதான் கேட்டுத் தெரிந்து கொண்டேன்.
                        அவ்வப்போது என் மனைவி எங்கள் நாட்டுப்பெண்களின் பிரசவம் பார்க்க யு.எஸ். போகும்போதெல்லாம் சாமாதான் எனக்கு எடுபிடியாக எல்லா உதவியும் முகம் சுளிக்காமல் செய்வான்.ஒரு விஷயம் சொல்லட்டுமா...? அவனுக்கு சத்யபாமாவைப் பார்த்துவைத்து கல்யாணத்தை நடத்திக் கொடுத்தவனே நான்தான்.

                        சத்யபாமா நன்றாக சமைப்பள். விதம்,விதமாக சாதம் கலப்பதில் கெட்டிக்காரி. சாமாவுக்கு நிரந்தரமாக வருமானம் இல்லாமல் கஷ்டப்பட்ட காலத்தில் அவனிடம் ஒரு யோஜனை சொன்னேன்.”நோக்கோ சைக்கிள் ஓட்டத் தெரியும்... பாமாட்ட சொல்லி 5 பாக்கெட் புளிசாதம், 5 பாக்கெட் லெமன் சாதம், 5 பாக்கெட் கல்கண்டு சாதம், அதே மாதிரி தயிர் சாதம்னு கட்டிண்டு போயி பாக்கெட் பத்து ரூபாய்னு நம்ப கோர்ட் வாசல்ல வித்துப் பாரு...ஒரே வாரத்திலெ 5 பாக்கெட் பத்து பாக்கெட்டாகும்....பிசினெஸ் பிச்சிக்கும்” என்றேன். அப்படி நான் சொன்னபடியே நடந்ததும் ரெண்டு பேருக்கும் என் மேல அசாத்திய மரியாதை வந்துடுத்து. ‘கணேச மாமா எங்கள வாழ வைக்கிற தெய்வம்’னு ஊர் பூரா சொல்லிண்டிருக்குகள்.

                            அவா சின்னதா ஒரு மெஸ் ஆரமிச்சதுக்கும் அடியேன்தான் காரணி. ரெண்டு ஆளுக்கு சம்பளம் கொடுத்து மெஸ்ஸை நடத்தினாங்கன்னா அதுக்கு சாமா, பாமாவோட அற்புதமான உழைப்பும், பாமாவோட சமர்த்தும், சாமர்த்தியமும்தான் காரணம். மெஸ் வெச்சதுல அவாளோடல  வாழ்க்கைத்தரம் லேசாதான் உசந்தது. வசதியா வாழறதுக்கு ரொம்பவும் மெனக்கெட வேண்டியிருந்தது. என்ற  போதிலும் ரெண்டு பேர்கிட்டயும் கிஞ்சித்தும் அந்த அன்னியோன்னியம் குறையவேயில்லை.

                          ரு நாள் எனக்கு கிடச்ச ஒரு தகவலை சாமாகிட்ட சொல்லலாம்னு மெஸ்ஸுக்குப் போறேன். நல்ல மத்தியான வேளை. சாமா குஷி மூடில இருந்திருக்கவேணும்...குஷி மூடிலதான், அவன் தன்னோட கீச்சுக் குரல்ல பாடுவான்... அன்னிக்கு நான் அவன் மெஸ் வாசல்ல நிக்கறேன்...” அந்த சீரங்கத்தில் பல்லி கொல்கின்றவன்’ன்னுட்டு ’புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே’ பாட்டை துவம்சம் செய்து உச்சஸ்தாயில, கீச்சுக் குரல்ல சாமா பாடிண்டிருக்கான். பாமா அவன் பக்கத்தில உக்காந்திண்டு அவன் தலையில குட்டிண்டே “ள்”னு - சொல்லுங்கோ....நாக்கை மடிச்சு ‘ள்’ சொல்லுங்கோ”ன்னு பாடம் நடத்தறா... எனக்கா சிரிப்பை அடக்க முடியல... என்னப் பாத்ததும் ரெண்டு பேருக்கும் ஒரு மாதிரியா ஆயிடுத்து... “தோ பாருங்கோ மாமா... பல்லி கொல்கின்றவன்’ன்னு பெருமாள அபச்சாரம் பண்ணி பல்லியையும் கொல்றார்...பாட்டையும் கொல்றார் இவர்” என்றாள், பாமா.

                          நான் போன விஷயத்தை இருவரிடமும் சொன்னேன்.                           “அப்படியா ?”  என்று வாய் பிளந்து கேட்டனர் இருவரும். வேறொன்றுமில்லை.
’தில்லைநகர் பக்கம் ஒரு சாஃப்ட்வேர் கம்பெனி தொடங்க உள்ளது. சுமார் அறுபது பேர் வேலை பார்க்கப்போகிறார்கள். அவர்களுக்கு காலை டிஃபன், காஃபி, மதியம் லஞ்ச், சாயங்காலம் டிஃபன், காஃபி, டீ இதெல்லாம் அவாளோட கேண்டீன்ல தயார் பண்ணிக் கொடுக்க ஃப்ர்ஸ்ட் க்ளாஸ் ஆளா தேடிண்டிருக்கா. நல்ல தரமாகவும், டேஸ்டாகவும் இருக்கணும்கிறதுதான் ஒரே கண்டீஷன்..மாசத்துக்கு 2 லட்சம் புரளும்’ன்னேன். ’அவா நாலஞ்சு சமையல் காண்ட்ராக்டர பாத்திருக்காளாம். உன் பேரையும் சொல்லியிருக்கேன்....இங்கேயும் அவா வரலாம்....உன் மெஸ்ஸுலயும் வந்து சாப்பிட்டுப் பாக்கலாம்’ன்னு சொன்னேன்.

                      “மாமா, எங்கள ஆசிர்வாதம் பண்ணுங்கோ....எங்களுக்கே அந்த ஆர்டர் கிடைக்கணும்னு வாழ்த்துங்கோ”ன்னுட்டு சாமாவையும் இழுத்துப் போட்டுண்டு என் கால்ல விழறா, பாமா.     முன்னேறணும்கிற ஆர்வம் அசாத்தியமா உள்ள பொண்ணு.....ம்ம்..ம்ம்  ... எழுந்து நின்ன ரெண்டு பேர் கண்ணிலேர்ந்தும் தாரைதாரையா ஜலம் கொட்டறது.


                         ம்பெனியிலிருந்து பரமேஸ்வரப்பா என்ற கன்னடியர் வந்தார். இன்னொவாவில் வந்து இறங்கியவரை நான் அழைத்துக்கொண்டு மெஸ்ஸிற்குப் போனேன்.

                        சாமாவுக்கும்,பாமாவுக்கும் கையும் காலும் ஓடவில்லை. பரபரக்கிறார்கள். இருவர்க்கும் வேர்த்துக் கொட்டுகிறது. எனக்கு கன்னடா நன்றாக பேச வருமாதலால் பரமேஸ்வரப்பாவை  கவனித்துக் கொண்டேன்.

                        பாமா சமைத்துவைத்திருந்த ஐட்டங்களை அமரிக்கையாக டேஸ்ட் பார்த்த  பரமேஸ்வரப்பா “ஊட்டா ரெடியந்த்ரே தின்னு நோடானா”(சாப்பாடு ரெடின்னா சாப்பிட்டுப் பார்க்கிறேனே) என்றார்.

                       கடப்பைக் கல் பதித்த டேபிளை நல்லாத் துடைச்சு, பெரிய தலைவாழை இலை போட்டு பாயசம்,பச்சிடி,அப்பளாம், பொறியல், கூட்டுன்னு பரிமாறி ஜமாய்ச்சுட்டாள், பாமா. அது வரைக்கும் ஒரு ஓரமா நின்னுண்டிருந்த சாமா, சாம்பார் வாளியைத் தூக்கிண்டு வந்து மூக்கைத் துளைக்கற வாசனை வீசின முருங்கக்காய் + வெங்காய சாம்பார, சாதத்தில ஒரு கரண்டி எடுத்து ஊத்தறான்.

                       ”பிரமாதம்” என்று ரசித்து சாப்பிடத் தொடங்கிய பரமேஸ்வரப்பா, “சொல்ப சாம்பார்....” என்று கேட்கவும் சாமா,மறுபடியும் பரிமாறினான்.

                        அப்படி ரெண்டாம்  முறையாக பரிமாறப்பட்ட சாம்பாரில் வந்து விழுந்த வஸ்துவைப் பார்த்து, பரமேஸ்வரப்பா,”ஹேய்....காக்ரோச்” என்று காச்,மூச்சென்று கத்தவும், சகல நாடியும் ஒடுங்கிப்போனான், சாமா.
                       
                       ஒரு மின்னல் போல வந்தாள், பாமா. “ இது கரப்பான் பூச்சி இல்லை...சின்ன வெங்காயத்தை தோலுரிச்சுட்டு, அலம்பி, சல்லிவேரோடப் போட்டா சாம்பாரோட டேஸ்டே தனி” என்று சொன்னவள், சற்றும் யாரும் எதிர்பார்க்காத வகையில் - தருணத்தில் ‘அதை’ எடுத்து தன் வாயில் போட்டுக்கொண்டு சவைத்தபடி”மாமா....வெங்காயம்தான்” என்றாள் என்னைப் பார்த்து.   

                        ஆரம்பத்தில் கொஞ்சம் கலவரம் காட்டிய பரமேஸ்வரப்பா, பாமாவின் பிரகடனத்தை நம்பவேண்டியவராகி சமாதானமானார். பிறகு, இலையில் பரிமாறப்பட்ட அத்தனை பதார்த்தங்களையும் திருப்தியாக ஒரு கை பார்த்துவிட்டே எழுந்தார்.”ஒரு நிமிஷம் அது கரப்பான்பூச்சியோன்னு நினைச்சு உங்களையும், உங்க சமையலையும் கேவலப்படுத்திட்டேன்......ரொம்ப,ரொம்ப ஸாரி..”ன்னு பாமாகிட்ட மன்னிப்பு கேட்டுண்டார்.

                         அப்புறம்...

                         அப்புறமென்ன .... அந்த காண்ட்ராக்ட் சாமாவுக்கே கிடைத்தது. சாஃப்ட்வேர் கம்பெனி கேண்டீனில் ’சாமா + பாமா’வின் ராஜ்ஜியம் கொடிகட்டிப் பறக்கத் தொடங்கியது.

                        நேற்று கடை வீதியில் இருவரையும் பார்க்க நேர்ந்தது. “மாமா, காசிக்குப் போகணும்னு ஒரு ப்ரார்த்தனை....நீங்களும் எங்களோட வந்தே ஆகணும்” என்று என் கையைப் பிடித்துக் கொண்டு சாமா சொல்ல, பாமா அதை ஆமோதிக்கும் விதமாக என்னைக் கெஞ்சும் முகத்துடன் பார்த்தாள்.
   
                        “நான் எதுக்கு...நீங்க ரெண்டு பேரும் போய்ட்டு வாங்கோ” - என்றேன்.

                         “காண்டீன் காண்ட்ராக்ட் கிடைக்கணும்ன்னு வெறியோட இருந்ததால என்ன பண்றோம்கிறதுகூட தெரியாம சடார்னு அந்த கரப்பான்பூச்சியை வாயில போட்டு தின்ன பாவத்தைத் தொலைக்க நாங்க காசிக்குப் போறதா வேண்டிண்டோம்...அதுக்கு சாட்சியா நின்ன உங்க பாவமும் தொலைய வேண்டாமா, மாமா... அதனாலதான் உங்களையும் கூப்பிடறோம்” என்றாள்,பாமா.

*************



                         
















                   

Sunday, June 12, 2011

திண்ணை



                டில்லி  ‘ஃப்ளைட்’  சுமார் நாற்பது நிமிடம் தாமதமாகவே சென்னையில் தரையிறங்கியது.  சூட்கேசை இழுத்துக் கொண்டு நான் காரிடாரை அடைந்த போது, எப்போதும் போல் தூரத்தில்  ‘ரேம்ப்’புக்கு அருகில் முரளி எனக்காக சிறு புன்னகையுடன் காத்திருந்தான். 
                மீனம்பாக்கம் புதுப் பொலிவிற்கு தயாராகிக் கொண்டிருந்தது. ஆங்காங்கே ராட்சச க்ரேன்கள் கொத்துக்கொத்தாய் பைப்புகளை உயர்த்திக் கொண்டிருந்தன. இன்னும் எப்படியும் இரண்டு வருடங்களில் இந்த விமான நிலையம் கம்பீர அடையாளம் பெற்றுவிடும்.
                  ”வாக்கா.... “ என்று வறட்சியான குரலில் முரளி என்னை வரவேற்று, என் கையிலிருந்து சூட்கேசை வாங்கிக் கொண்டான்.”அரை மணி நேரத்திற்கு மேல லேட்டாயிடிச்சில்லே” - என்றான்.
                   துப்பட்டாவை சரி செய்தபடி“ம்” என்றேன், “அம்மா இப்போ எப்படி இருக்கா?”
                  “இந்த தரம் பொழைக்கறது கஷ்டம்னு டாக்டர் சொல்லிட்டார்க்கா” என்றவனின் குரல் உடைந்தது. அவன் முதுகை ஆதுரமாக தட்டியபடி, ”ரிலாக்ஸ், முரளி” என்றேன். வெளியில் வந்தோம்.
                   அவனுடைய காரில் பின் சீட்டில் நான் அமர, அவனும் என்னருகில் வந்தமர்ந்தான். என் கண் எழுப்பிய கேள்வியை உணர்ந்தவனாக,”ஒரு மாதிரி டென்ஷனா இருக்கிறதனால வண்டி எடுக்க வேண்டாம்னுட்டு டிரைவரை ஃபிக்ஸ் பண்ணியிருக்கேன்க்கா” - என்றான்.
                   ”என்ன டென்ஷன் இதுலே... நான் வேணா ஓட்டட்டா...” என்று நான் சொல்வதற்கும் டிரைவர்  வண்டியருகில் வருவதற்கும் சரியாக இருந்தது.
                    மீனம்பாக்கத்தை விட்டு நீங்கி, கார் ஜீ.எஸ்.டி ரோடில் செங்கல்பட்டை நோக்கி விரைந்தது. 
                    முரளியை சமாதானப்படுத்தும் விதமாக, அவன் பக்கம் திரும்பி,”என்னைக்காவது ஒரு நாள் மரணம் நிகழவேண்டியதுதானே, முரளி அதை நினைச்சு வருத்தப்படறதோ... பயப்படவோ கூடாது ” என்றேன். 
                    “இந்த அப்பாவும் ரொம்பப் படுத்தறார் அக்கா..” என்றான்.
                     “ஏன்... என்ன பண்றார்?”
                     டிரைவருக்கு நம் வீட்டு விவகாரங்கள் தெரிய வேண்டாம் என்று நினைத்தானோ என்னமோ, வெறுமனே”ப்ச்” என்றான், முரளி. நானும் அதற்குப் பிறகு ஒன்றும் கேட்டுக்கொள்ளவில்லை.
                     ப்பா, அம்மா, குழந்தைகள் என்று மகிழ்ச்சியோடு வாழ்ந்த குடும்பம்தான் எங்களுடையதும். அதெல்லாம் இருபது வருடங்களுக்கு முன்னால்..... என்றைக்கு அப்பா என்கிற  ஒரு நாகரீகமற்ற மனிதர் அம்மாவை விடுத்து வேறு ஒரு பெண்ணோடு  ஓடிப் போனாரோ.....அன்றோடு தொலைந்தது எங்கள் குடும்ப சந்தோஷம். அப்பா, எலெக்ட்ரிக் கம்பெனியில் வேலை பார்த்து வந்த போது,  கொக்கி போட்டு திருட்டுத்தனமாக மின்சார சப்ளை ஏற்பாடு பண்ணிக் கொடுத்து எக்ஸ்ட்ரா காசு பார்த்தவர். அம்மா பவிஷான குடும்பத்தில் இருந்து வந்தவள் . ஆதலால்,“வேண்டாம்  இந்த மாதிரியான கேவல பிழைப்பு “என்று மன்றாடிப் பார்த்தாள். “அஞ்சு குழந்தைகளை வள்ர்க்கணும்னா இந்த மாதிரி ஏதாவது குறுக்கு வழியில போனாத்தான் உண்டு” என்றார் அப்பா.
                     இரண்டு பேர்க்கும் ஒத்துப் போகவில்லை என்பதை  ஊர் உணர்வதற்கு முன்னால், வேறு ஜாதி பெண் ஒருத்தி உணர்ந்துகொண்டாள். தன் வீட்டிற்கு கொக்கி போட்டு மின்சாரம் கொடுத்தவரை, தான் கொக்கி போட்டு இழுத்துக்கொண்டாள்.
                      ‘நிலை குலைந்து போதல்’ என்கிற பதத்திற்கு அம்மாவின்  அழுகை   மூலம் அன்றுதான்அர்த்தம் அறிந்து கொண்டேன். ‘துரோகி...துரோகி’ என்று பித்துப் பிடித்தவளைப் போல் அரற்றிக் கொண்டேயிருந்த அம்மாவிற்கு ஆறுதலாக , அம்மாவின் தம்பி  கொஞ்ச காலம் எங்களைப் பார்த்துக் கொண்டார். ‘அந்த மஹா பாவி இருக்கிற ஊர்ல நான் இருக்க மாட்டேன்’ என்று சொல்லி, குஞ்சும்,குளுவான்களுமாக இருந்த எங்களை இழுத்துக் கொண்டு திருச்சியை விட்டு , முன்னே பின்னே தெரியாத செங்கல்பட்டுக்கு வந்தாள்.
                     எங்களையெல்லாம் ஆளாக்குவதற்கு அவள் பட்ட கஷ்டம் கொஞ்ச நஞ்சமா...மாமா அனுப்பின அரிசி,பருப்பு,சொல்ப பணம் இதெல்லாம் பத்து நாளுக்குத்தான் வரும். கடைத்தெரு ‘நடேசன் காபி க்ளப்’பில் இட்லி மாவரைத்துக் கொடுத்து, கல்யாண வீடுகளில் பட்சணம் செய்து தந்து, வடாம் இட்டு விற்று, அப்பளாம் இட்டு கடை,கடையாக ஏறி விற்று, படாத பாடு பட்டாள். என்னையும், அம்பியையும் எசெல்சி வரை படிக்க வைத்தாள். நாங்கள் தலையெடுத்து மீனாட்சி, அகல்யா, முரளி மூவரையும் டிகிரி வரையில் படிக்க வைத்தோம்.
             
                    ப்போது நடந்த சம்பவம் ஒன்று இன்றைக்கும் ஞாபகம் இருக்கிறது. ஸ்கூல் ஃபீஸ் கட்ட மறுநாள்தான் கடைசி. சாயந்திரம் ஸ்கூல் விட்டு வந்ததும் அம்மாவிடம் சொன்னேன். பரபரப்பாகிவிட்டாள். வளையல் ஜோடி ஒன்றை தலைப்பில் முடிந்து எடுத்துக்கொண்டு ,”நீ முன்னாடி போய் பெரிய சேட்டு கடையில இருந்தா கையை அசைச்சு எனக்கு சமிக்ஞை கொடு”ன்னு சொல்லிட்டு, என்னை போக சொல்றா. ஓட்டமும் நடையுமா போன நான், வேகமா வர்ற ஒரு சைக்கிள கவனிக்காம மோதி கீழ விழுந்து கால் முட்டியில சிராய்ச்சு, போட்டிருந்த ஒரே நல்ல பாசிபச்சை கலர் பாவாடையும் கிழிஞ்சு நின்னேன். ஆனாலும், அம்மா பார்க்கிறதுக்கு முன்னால, சுதாரிச்சுண்டு ஓடினால், சேட்டு கடையில பெரியவர் இல்ல. அவர் பையன்தான் இருந்தான்.
                    பெரியவர் மிக நல்ல மனிதர். ரொம்ப கறாராக பேச மாட்டார். தேவைக்கேற்ப பணம் கொடுத்து உதவுவார். அவர் கடையில் இல்லாத சமயங்களில் பெரும்பாலும் அம்மாவின் நகைகள் அங்கே போகாது.
                     அன்றைக்கு நான்காவது முறையில்தான் - இரவு எட்டரை மணிக்கு மேல்தான் - எங்களின் முயற்சிக்கு பலன் கிட்டியது.நகைக்கு எதிர்பார்த்த பணமும் கிடைத்தது.  பெரியவர், என்னை ”நல்லாப் படிக்கணும்..பாப்பா.... ஒங்க அம்மாவோட கஷ்டத்த உணர்ந்து படிம்மா” என்றார்.
                      இப்படியெல்லாம் கஷ்டங்களினூடே படித்து முன்னேறி ஒரு பிரைவேட் கம்பெனியில் எனக்கு வேலை கிடைத்து, இரண்டுமூன்று கம்பெனிகள் மாறி இன்று தில்லியில் ஒரு MNC- யில் நல்ல நிலையில் நான் இருப்பதற்கு அன்று அம்மா செய்த தியாகங்கள்தான் காரணம். ’ஆண்துணை இல்லாமல் போனால் என்ன , நான் பெற்றதுகளை கரையேற்றிக் காண்பிப்பேன்’ என்று அவள் எடுத்துக் கொண்ட வைராக்கியம் பெருமைப்படத்தக்கது.

                       முரளி வண்டியை நிறுத்தச் சொல்லி ஒரு கூல் டிரிங்ஸ் வாங்கி வந்தான். குடித்தோம். சிறிது நேரம் காரை விட்டிறங்கி நடந்தேன். இன்னும் கால் மணி நேரத்தில் வீட்டை அடைந்து விடலாம். படுத்த படுக்கையாய் இருக்கும் அம்மாவைப் பார்க்கலாம்.

                      முரளி, அப்பாவும் படுத்துவதாக சொன்னானே.... ஏதோ வேளாவேளைக்கு சாப்பாடு கிடைக்கிறதா என்று சாப்பிட்டுவிட்டு  ’சிவனே’ன்னு  இருக்க வேண்டியதுதானே...ஏன் தொந்தரவு செய்கிறார்?
                       அப்பா....
                       அப்படி ஒருத்தர் எங்களுக்கு இருக்கிறார் என்பதை நாங்கள் மறந்திருந்த சமயம் - அதாவது, நான் தில்லியில் செட்டில் ஆன பின்பு, அம்பி வேலைக்குப் போன பின்னால் , மீனாட்சிக்கும், அகல்யாவிற்கும் கல்யாணம் முடித்து வைத்ததற்கு பிறகு, முரளி P.O - வாக வேலையில் சேர சென்னை சென்றிருந்த நாளில் அப்பா, வீட்டுக் கதவைத் தட்டியிருக்கிறார்.
                        ’ எந்த மஹாபாவியின் முகத்தில் முழிக்கவே கூடாது’என்று சபதம் எடுத்திருந்தாளோஅந்த ‘மஹா பாவி’ வீட்டு வாசலில் நின்று ”என்னை மன்னிச்சுடு, சுப்பு” என்று கதறியதும் அம்மா ஆடிப் போய் விட்டாள். ஆனாலும், வீட்டிற்குள் வர அனுமதிக்கவில்லை.
                          அம்பியை விட்டு எனக்கு ஃபோன் போட்டு பேசச் சொன்னாள். அம்பி , “ஷ்யாமிளி....அப்பாவுக்கு இப்பத்தான் நம்ப நினைப்பு வந்திருக்கு” என்றான். அம்மாவிற்கு நேர்ந்த அவமதிப்புகளும், அவளை துவளடித்த துயரங்களும்,  முள்மேல் நிறுத்தி வைத்த  ஒவ்வொரு  கணமும் என் மனசில் வந்து போயின.
                           ஃபோனை அம்மாவிடம் கொடுக்கச் சொன்னேன்.”என்னையும், குழந்தைகளையும்  தவியா தவிக்க விட்டுட்டு எவ பின்னாடியோ ஓடிப்போன மனுஷனை இந்த வீட்டுக்குள்ள விடப்படாது, ஷ்யாமிளி” என்றாள், அம்மா. அவளின் உறுதியான குரலில் ஆவேசக் கலப்பில்லாத மனவலி புரிந்தது. நம்பிக்கை துரோகம் செய்தவனை ஏறெடுத்தும் பார்க்க விரும்பாத பெண்மனம் புலனானது.
                         ஃபோனை வாங்கி அந்த மனிதர் பேசினார். “நான் அப்படி செஞ்சது பெரிய தப்புதான்....கடவுளும் , காலமும் எனக்கு வேண்டிய அளவு தண்டனை கொடுத்திருக்கு....பெண்டாட்டியை வேண்டாம்னு உதறின கையும், ஓடிப் போன காலும் பாரிசம் தாக்கி, செயல் குறைஞ்சு போச்சு. புத்தி தெளிவாயிடுச்சி... நீங்க எல்லாரும் என்ன மேலும் தண்டிக்கறதா இருந்தாலும் அதயும் ஏத்துக்கறேன்... ஆனா,என்ன துரத்தி விட்டுடாதீங்க..... வீட்டுக்குள்ள வரக் கூடாதுன்னு சொன்னீங்கன்னா, இந்த திண்ணையில முடங்கி கிடக்கேன்...என்னை   போக மட்டும் சொல்லிடாதீங்க” என்று அழுதார் அப்பா.
                       அம்மாவின் பிடிவாதம் சற்று இளகியது. திண்ணையைத் தாண்டி வீட்டிற்குள் காலடி எடுத்துவைக்கக் கூடாது என்ற உத்தரவாதத்துடன் திண்ணையில் தங்கிக் கொள்ள சம்மதித்தாள்.
                         அதற்கு பிறகு செங்கல்பட்டு போயிருந்த சந்தர்ப்பங்களில் ஈனப்பிறவியாக தன்னை பாவித்துக்கொண்டு திண்ணையிலேயே  வசித்த அந்த மனிதரிடத்து எனக்கு  துளியும் பரிதாபம் தோன்றவில்லை. நாங்கள் யாராவது ஒருத்தர் தட்டில் சாப்பாடு  வைப்போம். எடுத்து சாப்பிட்டு விட்டு தட்டை கழுவி வைப்பார். அம்மா  கொண்டு வைத்தால் , ஒரு வித அசிரத்தையுடன்  தட்டை தள்ளி எறிவாள். 
                       தில்லியிலிருந்து ஒரு தரம் வந்திருந்த போது, அப்பாவிற்காக திண்ணையை ஒட்டியே ஒரு பாத்ரூம் கட்டிக் கொடுத்தேன்.

**********
                    ம்மா, கிழிந்த நாராய் கட்டிலில் கிடந்தாள். குனிந்து அவள் காதருகில் ,”அம்மா, நாந்தாம்மா உன்னோட ஷ்யாமிளி வந்திருக்கேன்” என்றேன். கண்ணைத்திறக்கவில்லை. உதடுகளில் மட்டும் ம்லேசாய் அசைவு தெரிந்தது.
                    மகன்களும்,மருமள்களும், மாப்பிள்ளைகளும், பேரக் குழந்தைகளும் நன்றாகவே அம்மாவை கவனித்துக் கொண்டிருந்திருக்கிறார்கள். பெரும் வாழ்க்கையை இழப்பாகவே வாழ்ந்த மனுஷி,கடைசி மூச்சையும்  இழக்க தயாராகிக் கொண்டிருந்தாள். 
                    அம்மாவின் சுருங்கிப் போன கையைப் பிடித்தபடி அம்பி, “அம்மா உன்னை நினைச்சுத்தான் உருகிப் போவா.. கஷ்டத்தையெல்லாம் என் கூட சேர்ந்து தாங்கினா ஷ்யாமிளி.... நான் இருக்கேம்மா உனக்கு... கண்கலங்காதேம்மான்னு... எனக்கு பொண்ணுக்கு பொண்ணா, பிள்ளைக்கு பிள்ளையா இருந்தா....என்னை தெருவில விட்ட தெய்வம் அனுப்பித் தந்த ஊனுகோல் அவ’ன்னு வாய் ஓயாம புலம்பித் தீர்ப்பா......’குழந்தைகளை முன்னுக்குக் கொண்டு வரணும்கிற என்னோட வெறிக்கு ,தோள் கொடுத்து ஒத்தாசை பண்ணனும்னுட்டு, தான் கல்யாணமே பண்ணிக்கப் போறதில்லே’ன்னு என்கூடவே கைபிடிச்சு வந்தவ,ஷ்யாமிளி’ன்னு எப்பவும் உன்னைப் பத்தின பேச்சுத்தான்.... உன்னோட நினைப்புதான் ”
                    எங்களுக்காக உழைத்து  ஒடுங்கிப் போன அம்மாவின் கைகளைப் பிடித்துக் கொண்டேன். ஒரு வித கெஞ்சல் முகபாவனையுடன் ,திண்ணை ஜன்னல் வழியாக அப்பா எட்டியெட்டிப் பார்த்தார் .
                    அம்மாவின் மூச்சில் ஒருவித அசாதாரணம் தென்படவே , அவளருகில் குனிந்தேன். அம்மா ”மனசில வஞ்சனையோட இந்த உலகத்தை விட்டு பிரியாதே.... போனால் போகட்டும் என்று அப்பாவை மன்னித்து விடம்மா” என்று அவளைக் கட்டிக் கொண்டு ரஹஸ்யமாய் சொன்னேன். எனக்கான தன் பதிலை மிகவும் அமானுஷ்யமாக (subtle) சொல்லி விட்டு தலையை என் மடியில் சாய்த்தாள்.

**********
                 ல்லா பாரங்களையும் ஒரு பெருமூச்சுடன் உதறிவிட்டு கிளம்பிய அம்மாவை தலை நிறைய பூக்கள் சூட்டி, முகத்தில் மஞ்சள் பூசி, நெற்றியில் பெரிய குங்குமப்பொட்டுடன்  சுமங்கலியாக வழியனுப்பி வைத்தோம். ஒரு கணவனாக செய்ய வேண்டிய சாங்கியங்களை அப்பா ஒருவித குற்ற உணர்வு மேலிட செய்து முடித்தார். 
                   “நீங்க இனிமே திண்ணையில இருக்க வேண்டாம்.... நாளையிலிருந்து வீட்டிற்குள் வரலாம். அம்மாவிடம் கேட்டுவிட்டேன்” என்றேன். அந்த முகத்தில் ஒரு மலர்ச்சி தெரிந்தது.

                   றுநாள் காலையில்,  திண்ணையைப் போய் பார்க்கிறேன். திண்ணை காலியாக வெறிச்சோடிக் கிடந்தது.அந்த மனிதரைக் காணோம்.

************************

                  


 

             
                           
                                                   
                    






                   







Monday, February 7, 2011

சமய சஞ்சீவி



                               சமய சஞ்சீவி(!)

                         தே மாதிரி ஒரு தை மாதம்தான் ....திருச்சிக்கருகில் ஒரு கோவில் கும்பாபிஷேகம்....என் நண்பனும் தூரத்து உறவினனுமான தங்கராஜிற்கு அந்த கும்பாபிஷேகத்திற்கு  'சவுண்ட் சிஸ்டம்' செய்ய காண்ட்ராக்ட் கிடைத்தது.. அவனுக்கு ஏற்கெனவே நாலைந்து அல்லக்கை அசிஸ்டன்ட்கள் இருந்தாலும் ராஜகோபுர ஸ்பாட்டிற்கு ஒரு ஆள் தேவையாய் இருந்தது.  அவன் போதாத காலம், அவனை என்னிடம் அழைத்து வந்து,"பரமசிவம்... துறு துறுன்னு வேலை செய்யற ஆள் எவனாச்சும் இருந்தா சொல்லேன்" என்று என்னிடம் சொல்ல வைத்தது.
                   நாமதான் அடுத்தவங்களுக்கு உதவறத்துக்குன்னே இந்த ஜன்மம் எடுத்து தொலைச்சிருக்கமே .... உடனே ," 'கொசு' மணின்னு எங்க ஆபிஸ்ல ஒரு ஆள் இருக்கான்.லீவு போட்டு வேண்ணா வரச் சொல்றேன்.ரேட்டு பேசிக்கோ " என்றேன்.

                    கும்பாபிஷேக தினம்.  கூட்டம் 'ஜே..ஜே' என்று அலை மோதுகிறது. முதலமைச்சரின் வருகையினால் மாவட்டம் முழுவதிற்கும்  சிறப்பு விடுப்பு வேறு. அக்கம்பக்கம் ஊர்களில் இருந்தெல்லாம் ஜனங்கள் வந்து குவிந்து கொண்டிருந்தனர். மற்ற  கோபுரங்களுக்கு அல்லக்கைகளை அனுப்பிவிட்டு , 'கொசு' மணி சகிதம் காலை ஐந்து மணிக்கெல்லாம் தங்கராஜ் ராஜகோபுரம் ஏறிவிட்டான்.
                     ராஜகோபுரத்துக்கு மூணு ஐயர்மார்கள்.பெரிசு பெரிசாய் நாமம் போட்டுக்கொண்டு ரெண்டு 'மைக்' கேட்டனராம். தங்கராஜ் 'மைக்'கை செட் பண்ண'கொசு' மணி கேபிள் இழுத்து ஆம்ப்ளிபயரில் கனெக்ஷன் கொடுத்திருக்கிறான். 'மைக்'கைக் கண்டதும் ஐயர்மார்கள், அவர்கள் கோஷத்தை ஆரம்பித்து விட்டனர். தங்கராஜ் மற்ற கோபுர அல்லக்கைகளுடன் தொடர்பு கொண்டு ஏற்பாடுகளை சரி பார்த்துகொண்டான்.
                     மணி ஆறாகிறது....ஏழாகிறது.... எட்டாகிறது.... வெயில் சுறு சுறுவென்று ஏற ஆரம்பித்தது .பத்தரைக்குத்தான் கும்பாபிஷேகம் நடக்க இருக்கிறது. நேர்முக வர்ணனைக்கு ஒரு 'மைக்'கை ரெடி பண்ணும்போது தங்கராஜிற்கு தலைவலி ஆரம்பித்திருக்கிறது. பசியும் சேர்ந்து கொள்ளவே கொஞ்சம் தள்ளாட தொடங்கினான். போதாகுறைக்கு  'ஜிவ்'வென்று  வேத கோஷத்தை கணீரென்று   ஐயர்கள் ஓதத் துவங்கியதும் 'மல்டிபிள் டிஸார்டர்' அவனுக்கு ஆரம்பித்தது. 
                   "கொசு மணி  ..... பயங்கரமா தலை  வலிக்குதுப்பா.." என்று கூறியிருக்கிறான்.
                   "அண்ணே.. இங்கன ப்ளாஸ்க் ரொப்பி காபி இருக்குது...எடுத்தாரட்டா ?" என்று உதவும் கரங்களை நீட்டியிருக்கிறான், 'கொசு'மணி.
                   "காபியோட ஒரு சாரிடான் போட்டேன்னா தலைவலி ஓடிரும் 'கொசு' "
                   "இப்படி 200 அடிக்கு மேல நின்டுக்கிட்டு சாரிடான் கேட்டா எங்கண்ணே போறது?
                   "எதுனாச்சும் பண்ணு 'கொசு'மணி... தலைவலி மண்டயப் பொளக்குது"
                   வெயிலுக்குப்  போட்டிருந்த குல்லாயை எடுத்து தலையை சொறிந்தான், 'கொசு'மணி. தங்கராஜு படும் பாட்டை காண  சகிக்க முடியாமல் என்ன பண்ணலாம் என்ற யோசனையுடன் 'கொசு'மணி, கோபுர விளிம்பு வரை சென்று தன் தலையை ஒரு கையாலும், முகவாய்க்கட்டையை மறு கையாலும் சொறிந்தபடி யோசித்தான். கீழே இறங்கி போய் மாத்திரை வாங்கி மீண்டு வர முடியுமென்று அவனுக்குத் தோன்றவில்லை. கீழே பார்த்தால் புள்ளி,புள்ளியாய் ஜனங்கள்...
                   "ஆஹா...'என்று துள்ளிக்குதிக்காத குறையாக "இப்ப ரெடி பண்ணிடறேன் அண்ணே" என்று உற்சாகமாக அலைந்த அவன் கண்கள் எதையோ தேடின.
                   எல்லாம் வினாடி நேரத்தில் ரெடி ஆகின. தலையில் தான் போட்டிருந்த தொப்பிக்குள் ' ஒரு சாரிடான் வாங்கி அனுப்பவும், ப்ளீஸ்' என்று எழுதி ஒரு ஒரு ரூபாய் நாணயத்தையும் அந்த தொப்பிக்குள் இட்டு ,சாரம் காட்டி மிச்சமிருந்த கப்பாணி  கயிறில் தொப்பியைக் கட்டி மெதுவாக கீழே இறக்கினான்.
                    இடையிடையே "அண்ணே... கொஞ்சம் பொறுத்துக்குங்க... சாரிடான் இதோ வந்திடும்" என்று துடித்துக்  கொண்டிருக்கும் தங்கராஜிற்கு ஆறுதல் அளித்துக் கொண்டிருந்தான்.
                     அவன் சொன்னது போலவே சிறிது நேரத்தில் புண்ணியவான் எவரோ செய்த உதவியால் சாரிடான் 'கொசு'மணியின் கைக்கு வந்து சேர்ந்தது. 'பிளாஸ்கை' சரித்து ஒரு பெரிய சொம்பில் காபி எடுத்துக் கொண்டு , தலையைப் பிடித்தபடி அமர்ந்திருக்கும் தங்கராஜிடம் போய் ,"அண்ணே, காபியும் சாரிடானும் ரெடி...இந்தாங்க" என்றான்.
                    சஞ்சீவி மலையை தூக்கி வந்த அனுமானை ராமன் கட்டிக்கொண்டது போல் ஆலிங்கனம் செய்ய முன் வந்தபடி, தங்கராஜ் "கொசு மணி ....நீ பெரிய ஆளுய்யா " என்று கூற ,
                    " அண்ணே... ஒரு நிமிஷம்... ஒரு பத்து ரூபா கொடுங்க.."என்றான், 'கொசு'மணி.
                    'கொசு'மணி ஏதோ விளையாடுவதாக எண்ணிய தங்கராஜ், "தர்றேம்ப்பா... முதல்ல மாத்திரையை கொடு"எனவும்,
                     "அண்ணே... காசைக் கொடுங்க.. மாத்திரையும் காபியும் உங்க கைக்கு வரும்" என்று கறாராகக் கூறியிருக்கிறான்.
                     "என்னப்பா ... அநியாயமா இருக்கு.. சாரிடான் ஒரு ரூபாய்தானே"
                     "ஒரு ரூபாய்தான்னே... ஆனா ,அதை இவ்வளவு உயரத்திற்கு, நீங்க கேட்ட பத்து நிமிஷத்துக்குள்ளே, என் மூளையை கசக்கி ,கொண்டு வந்தேன் இல்லே...அதுக்கான பீஸ்தான் எச்சாவா நான் கேக்குறது... பத்து ரூவாவ கொடுத்திட்டு சாரிடான் போட்டு காபி குடிங்க அண்ணே .... இந்த டயத்தில காசை பாக்காதிங்க" என்றான்.
                      வேறு வழி தெரியாததால் தங்கராஜும் அப்படியே செய்தான்.

                     கும்பாபிஷேகத்தை  எல்லாம் நல்லபடியாக முடித்து  , இத்தனை விஷயத்தையும் ஒரே மூச்சில் என்னிடம் சொன்ன தங்கராஜ் அந்த சம்பவத்திற்குப் பிறகு இது நாள் வரை என்னிடம் வேறு எந்த உதவியும் கேட்கவே இல்லை...

             ***********














        



Sunday, January 16, 2011

கொசுத் தொல்லை

                 கடி - 1
                  மீப கால சினிமா ஒன்றில் "இந்த கொசுத் தொல்லை தாங்க முடியலயே" என்கிற வசனத்தைக் கேட்டிருப்பீர்கள். ரிஷி மூலம், நதி மூலம் என்பது போல் இந்த வசன மூலம் எது என்று பார்த்தால் அது எங்கள் பாக்டரிதான். இன்னும் சொல்லப் போனால் இரண்டு, மூன்று ஆண்டுகளுக்கு முன்பு எங்கள்  பாக்டரியின் , எங்கள் ப்ளாண்டில் சாட்சாத் எங்கள் போர்மன்  திருவாயிலிருந்து உதிர்ந்த வாக்கியம்தான் ,"இந்த கொசுத் தொல்லை தாங்க முடியலயே" என்பது.... இது எப்படியோ ,யார் மூலமோ அந்த காமெடி ட்ரேக் எழுதுபவர் காதிற்கு எட்டி அதை அவர்  'கபால்' என்று பிடித்துப் போட்டு காசு பார்த்து விட்டார்.
               என்ன , இந்த வசனம் என் அலுவலகத்தின் கைங்கர்யம்தான்  என்பதை என் நெருங்கிய நண்பர்கள், உறவின் முறையினர் ஒத்துக் கொண்டுவிட்டனர்... உங்களுக்கும் தெரிந்திருக்கட்டுமே என்பதால்தான் எழுதுகிறேன்...
                சரி...கதைக்குள் வருவோம்...இந்த கதையின் நாயகன் சுப்பிரமணியன்.....  I .T .I படித்து ,எங்கள் பாக்டரியில் சீனியர் டெக்னீஷியனாக 'வேலை பார்ப்பதாக' சொல்லிக் கொள்பவன். ஆள் நெடுநெடு என்று உயரமாய், கச்சலாய் இருப்பான்...கடினமான யூனிபார்மில் கொஞ்சம் பூசினாற்போலிருப்பான்...கண்கள் சதா அலை பாய்ந்து கொண்டே இருக்கும்... கமல்ஹாசன் மீசை  வைத்துக் கொள்ளும்போதெல்லாம் இவனும் மீசை  வைத்துக்  கொள்வான்...அவர் எடுத்தால் இவனும் எடுத்து விடுவான்...மற்றபடி, கொக்கு பறப்பதற்கு முன் ஒரு நடை நடக்குமே அது மாதிரித்தான் சுப்பிரமணியன், சாதாரணமாகவே  நடப்பான்.  நகரும்  பஸ்ஸை பிடிக்கும் அவசரம் அந்த நடையில் தெரியும்...
                  முன்பெல்லாம் அவனை 'கேயெஸ்'..'கேயெஸ்' என்று இனிஷியல் சொல்லித்தான் கூப்பிட்டுக் கொண்டிருந்தோம்...மூன்று வருஷத்திற்கு முன்னால் நடந்த யுனியன் எலெக்ஷனில் குதித்தபோது 'உங்கள் வைர வாக்குகளை தோழர் கொ.சு.மணிக்கு அளித்து இமாலய வெற்றி காண வைப்பீர்' என்ற வாசகங்களுடன்  ஜம்போ ப்ளேக்ஸ்யில் கம்பீர நடை பயின்று கொண்டிருந்தார் நம்ப தொரை..."டேய் நம்ப 'கேயெஸ்'டா" என்று அவனவனும் அடையாளம் கண்டுகொண்டு கூத்தாடினான்.எலெக்ஷன்ல  என்னமோ ஊத்திகிச்சுன்னாலும் அன்று முதல் எங்கள் பிளான்ட் தோழர் 'கேயெஸ்'ஸின் திருநாமம் 'கொசு மணி' என்று புனருத்தாரணம் ஆனது.
                நான் என்று மட்டுமில்லை ... பெரும்பாலோனோரும்  அவனுக்கு 'கேயெஸ்' என்ற சுருக்கப் பெயரை விட 'கொசு மணி' என்ற பெயரே மிகவும் பொருத்தமானது என்று கருதியதால் அந்த எலெக்ஷன் வந்தது ஒரு விதத்தில் நல்லதுதான் என்று உணர்ந்தோம் !
                   ஆனால் , தேர்தல் தோல்வியில் அவன் துவண்டு விடவில்லை...மாறாக கொசு மாதிரி 'சர்ட்'...சர்ட்' டென்று பறந்து கொண்டே இருந்தான்..உண்மையில் கொசு ஒரு புத்திசாலி ஜீவன். நாம் எளிதில் 'ரீச்' பண்ணமுடியாத நம் உடல் பிரதேசம் பார்த்து உட்கார்ந்து கடிக்கும். நாம் நின்று கொண்டிருந்தால் காலைப் பதம் பார்க்கும்... படுத்துக் கொண்டிருந்தால் முதுகில் தன் வாய்வரிசையை காண்பிக்கும் ... நாம் வளைந்து நெளிந்து அதை zero - in பண்ணி நெருங்குகையில் உறிஞ்ச வேண்டியதை உறிஞ்சிவிட்டு எஸ்கேப்..... வெறுமனே நம்மை நாமே அடித்துக் கொண்டு நம் கையை நாமே  பார்த்துக் கொண்டிருக்க வேண்டியதுதான்..
                  அதே போல்தான் நம்ப கொசு மணியும்... லேசில் சிக்காமல் பறப்பதில் கில்லாடி.. அப்படித்தான்  ஒரு நாள்............

                நான்  அப்போதுதான், நைட் ஷிப்டிற்கு வந்து என் சீட்டில் அமர்ந்தேன். உடனே போர்மேனிடமிருந்து போன்.
                "சார்,பரமசிவம் பேசறேன்" என்றேன்.
                "பரமசிவம் ,  அந்த கொசு மணி என்னய்யா நாலு மணிக்கெல்லாம் கிளம்பறான்...டூட்டி அஞ்சரை வரை உண்டுன்னு அவனுக்கு தெரியுமா..தெரியாதா?"
                "தெரியலியே சார்" -வில்லங்கத்தை விலை கொடுத்து வாங்கப் போகிறாய் என்று என் உள்மனம் ஊளையிட்டது. 
                 "அவன் கிளம்பி வாசல்ல நிக்கிறப்போ கையும் களவுமா புடிச்சிப்பிட்டேன். எங்க கிளம்பியாச்சு?ன்னு கேக்குறேன்.. தெனாவெட்டா "ஊட்டுக்கு'ன்றான்....நான்தான், 'ரீவைண்டிங் போன ரெண்டு மோட்டார் சரியாகி வந்திருச்சு... ஓட்டிப் பாத்துட்டு போ'ன்னு  சொல்லி ப்ளான்ட்டுக்கு அனுப்பி இருக்கேன்.அவன லேசில விடாதையா...இன்னிக்கு அவன் ஓட்டிப் பாத்திட்டுத்தான் போகணும்..." என்றார்.
                 ஆஹா, கெரகம் பிடிச்சிடிச்சு....இன்னிய ஷிப்டு உருப்பட்டாமாதிரிதான்..
                 "சரி,சார்" என்றேன் அவசர அவசரமாய்..
          ***************
                 "என்ன சார் , அந்த எருமைத்தலையன் எதுவும் சொன்னானா?" -எருமைத்தலையர் ,என்று செல்லமாக மணியால் விளிக்கப்பட்டவர் எங்கள் போர்மன்.
                 "ரீவைண்டாகி வந்திருக்கிற ரெண்டு மோட்டாரையும் ஓட்டிப் பாத்திட்டு அப்புறமா கிளம்புவியாம்" என்றேன்.
                "அந்தாள் என்னா சொன்னான்?" இது மணி. 'கொசு' மணி.
                 "ஒன்னை ஓட்டிப் பாத்திட்டு போகச்சொன்னார்" என்றேன்.
                 "இப்பிடியேத்தான் என் கையிலயும் அந்தாள் சொன்னான்...இனிமே நான் பாத்துக்கிறேன்" என்றபடி ரீவைண்டாகி வந்திருக்கிற ரெண்டு மோட்டாரையும் ஒரு மோசமான 'லுக்' விட்டான், கொசு மணி. என்னைப் பார்த்து,"ஒரு 'தம்'மடிச்சிட்டு, அப்டியே ஒரு டீ குடிச்சிட்டு  வந்திடறேன், சார் " என்று சொல்லி நகர்ந்தான்.
                  நேரம் ஓடிக் கொண்டிருந்தது.. ஆளைக் காணவில்லை. நான் எனது மற்ற வேலைகளில் கவனம் செலுத்த, இரவு ஏழு மணி போல் வந்து சேர்ந்தான்.
                  " என்ன மணி, மோட்டாரப் பாக்கலியா?" என்றேன்.
                  "அதுக்குத்தான் டூல்செல்லாம்  எடுத்திட்டு வந்தேன் சார்" என்றபடி ஒவ்வொரு மோட்டாரையும் தகுந்த இடைவெளி கொடுத்து நகர்த்தினான். அவை பழைய  மோட்டார்கள் . ரீவைண்ட் செய்து பெயிண்ட் அடித்து அனுப்பியிருந்தனர்.    ஒரு பார்வைக்கு 'சௌகார்'ஜானகிக்கு 'பேசியல்'  செய்து லிப்ஸ்டிக் அடித்தது போல் சமர்த்தாக இருந்தன அவை.
                   மணி,மோட்டாரின் அச்சைப் பிடித்து சுற்றினான். பிறகு.. சப்ளை  கொடுத்து  
ஓட விட்டான். ரெண்டு மோட்டாரும் பதிவிசாக ,புக்ககம் வந்த புது நாட்டுப்பெண்ணைப் போல் சப்தமில்லாமல் இயங்கின.
                  அரை மணிக்கொருதரம் அவறிற்கு ஜுரம் அடிக்கிறதா என்கிற ரீதியில் தொட்டு,தொட்டுப் பார்த்தான்.'பேரிங்' சவுண்ட் இல்லாமல் ஓடுகிறதா என்று  நீளமான திருப்புளியை மோட்டாரில் வைத்து மறுபக்கம் காதை வைத்து செக் பண்ணினான். ஓடிக்கொண்டிருந்த இரண்டு மோட்டாரையும் நவகிரகம் சுற்றுவது போல சுற்றி சுற்றி வந்தான், மணி.
                  ஒன்பது  மணி போல வேலை முடிந்து எல்லாவற்றையும் 'பேக்கப்' செய்து விட்டு என்னிடம் வந்தான்."சார் ரெண்டு மோட்டாரும் நல்லாத்தான் ஓடுது....டெஸ்ட் பண்ணிட்டேன்... ஒரு 'தம்' மடிச்சிட்டு வர்றேன்" என்றான் கொசு மணி.
                  "ஏன், மணி கிளம்பலியா வீட்டுக்கு?" என்றேன் நான்.
                  "அதெப்படி சார் ... ஓட்டிப் பாத்திட்டு போக சொன்னத்துக்கப்புறம்.....பாக்காம போனா என்னா மருவாதி சார்?" என்றான்.
                  "அதுதான் ஓட்டி பாத்திடியே மணி" என்றேன்.
                  "எங்கே சார் ஓட்டிப் பாத்து முடிச்சேன்... இப்பதான்  ஓட்டிப் பாத்திக்கிட்டு இருக்கேன் சார்....ஓட்டின்னா 'ஓவர் டைம்'" என்று விளக்கம் அளித்தான்.
                            **************
                    மறு நாள் போர்மன் ரூமில் ஒரே சத்தம்."எந்த முட்டாள் உன்னை 'ஓவர் டைம்' பாக்கச்சொன்னான்?" என்று மணியிடம் போர்மன் 'லபோ திபோ' என்று காட்டு கத்தல் போட்டார்.
                    "நீங்கதானே சார் நேத்து என்னை ஓட்டிப் பாத்துட்டு போக சொன்னீங்க " என்று படு பவ்யமாக கூறியிருக்கிறான்.
                     என்னிடம் விசாரித்தார், போர்மன். நானும் "நீங்கதானே அவனை ஓட்டிப் பாத்திட்டுப் போகச் சொன்னீங்க.." என்றேன் நமட்டு சிரிப்புடன்.
                      " யோவ்... நான் மோட்டாரத்தான் ஓட்டிபாக்க சொன்னேன்..இவனை ஓவர்டைம் பாக்க சொல்லலே.."
                      "எதையும் கிளியரா புரியறா மாதிரி , குளப்பமில்லாம சொல்ல கத்துக்குங்க"என்று சொல்லிவிட்டு "ம்ம் ம்ம் ...ஓ.டி ரெஜிஸ்டர்ல கையெழுத்துப் போடுங்க" என்று வந்த காரியத்தை முடித்துக் கொண்டு அவன் கிளம்பிப் போனதை ஊர்ஜிதப் படுத்தி விட்டு  எங்கள் போர்மேன் உதிர்த்த வாக்கியம்தான் ,"யோவ்...இந்த கொசுத் தொல்லை தாங்கமுடியலியே..." என்பது...


           (கடிகள் தொடரும் )




                  
                


Saturday, December 25, 2010










முற்பகல் செய்யின்....


"நறுக்கின வெங்காயம் போதும் ...அது அப்படியே  இருக்கட்டும்      மூணு  மொளகா வத்தலையும் பூண்டையும் மிக்சியில போட்டு நல்ல மையா அரைச்சு வை. நான் அதுக்குள்ளே சிக்கன கிளீன் பண்ணிடறேன்"

"சிக்கன டிரஸ் பண்ணித்தானே வாங்கி வந்தீங்க?"

"என்னாதான் அவங்க பண்ணிக் கொடுத்தாலும் நாம ஒரு தரம் கிளீன் பண்ணினாத்தான் எனக்கு திருப்தி"

"அமெரிக்கா பிள்ளை வர்ரான்னா நாலு தடவை கூட கிளீன் பண்ணுவீங்க சாமி.."

"ஏய்..இந்த கிண்டல்தானே வேணாங்கிறது ...அருண் வந்தாலும் சரி... இல்லேன்னாலும் சரி... நான் ரெண்டுவாட்டியாவது   கிளீன் பண்ணிட்டுத்தான் சில்லி ப்ரை பண்ணுவேன்"

"எங்கப்பாவுக்கும் சில்லி ப்ரைன்னா ரொம்பப் பிடிக்கும்....தாத்தா மாதிரியே பேரனும் எப்பப் பாத்தாலும் 'சில்லி ப்ரை,சில்லி ப்ரை'ன்னு கேக்கறான்"

"மிக்சியில அரைக்க சொன்னேனே .... அரைச்சிட்டியா? அப்பாவுக்குப் பிடிக்கும் ...ஆத்தாவுக்குப் பிடிக்கும்னுட்டு"

"எங்கப்பா பத்தி சொன்னதும் ஏன் இப்படி 'சுர்ர்ர்ர்'ன்னு வருது?"

"உனக்கு ஞாபகம் இருக்கோ இல்லியோ... என்னால மறக்க முடியுமா, காமாட்சி?"

"அடாடா ... ஆரம்பிச்சிட்டீங்களா ஒங்க புராணத்தே...எங்கப்பாவ எதுனாச்சும் சொல்லாட்டா உங்களுக்கு பொழுதே போகாது சாமி"

"சரி..சரி ... அரைச்சிட்டியா...அதை இப்படி வெச்சிட்டு நாலு தக்காளியே அரிஞ்சு வை"

பேசிக் கொண்டே சுந்தரம் , சிக்கனை சுத்தம் செய்து பெரிய துண்டுகளாக வெட்டி வைத்துக் கொண்டார். "உங்கப்பாவ நான் ரொம்ப மதிக்கிறேன்.. இல்லேன்னு சொல்லலே...ஆனாலும் அன்னைக்கு எக்மோர் ரயிலடியில சொன்னாரு பாரு... என்னதான் எங்கம்மா உன்னைய கொடும படுத்தினதாகவே இருக்கட்டும் ...உன்ன ஊருக்குக் கூட்டிட்டுப் போகும் போது ,'மாப்பிள்ளே ,எம் பொண்ண கண்ணுக்கு கண்ணா வளத்தேன்...அது  கலங்கி நிக்குது...  உங்கம்மா தன்னோட மருமகனு நினைக்க வேண்டாம்... தாயில்லாப் பிள்ளைன்னாவது நினைக்க வேண்டாமா?  இப்படி வாய்க்கு வந்தபடி பேசலாமா? உங்கம்மாதான் சொல்றாங்கன்னா நீங்களாவது கொஞ்சம் அனுசரணையா இருக்கக் கூடாதா ?  ம்..ம்ம்.....உங்களுக்கு ஒரு பொட்டப் பிள்ள பிறந்து அதக் கட்டிக் கொடுக்கும்போதுதான்  என்னோட வலி உங்களுக்குப் புரியும்'ங்கிறார்"

"அப்பா அப்ப சொன்னதுதான் நடக்காம  போயிடிச்சே...அப்புறம் அவருப் பேச்சு என்னத்துக்குங்க?"

சுந்தரம், வெட்டிய சிக்கன் துண்டுகளை மசாலாவுடன் சேர்த்துப் பிசைந்து       பாத்திரத்தின் மேல், தட்டைப் போட்டு மூடினார்."அதான் சிங்கக் குட்டி போல நமக்கு அருண் பிறந்தவுடனே , அந்த சம்பவத்த மறக்க நினைக்கேன்.முடியல"

"சிங்கக் குட்டி..சிங்கக் குட்டின்னு செல்லமாத்தான் வளத்தோம் ...என்னாச்சு. நாலெழுத்துப்  படிச்சுப் பெரிய ஆளா ஆனதும் ,அமெரிக்காப் போறேன்'ன்னு போனான்... கை நிறையா சம்பளம் வந்ததும் , சிங்கக் குட்டிக்கு தல கால் புரியல...கூட வேலைப் பாக்கிறப் பொண்ண கட்டிக்கிறேன்'னான்"

"சேர்ந்து  வாழப் போறவன் அவன்... அவன் சந்தோஷம்தான் நம்ம சந்தோசம். இந்த மட்டும் நம்ம நாட்டுப் பொண்ணா பாத்து வெச்சானே..அதை நினைச்சு சந்தோஷப்படுவியா"

"என்னதான் நம்ம நாட்டுப் பொண்ணுன்னு நீங்க  சமாதானம் சொன்னாலும் கன்னடப் பொண்ணு கன்னடப் பொண்ணுதான்... நம்ம தமிழ்ப் பொண்ணு தமிழ்ப் பொண்ணுதான்"

"சரி.. நடந்தது நடந்து போச்சு... அருண் வர்ற நேரம் ஆச்சு... அவன்கிட்ட இது மாதிரிப் பேசி அவன் மூட அப்செட் பண்ணிடாதே ,காமாட்சி.... புள்ள நாளைக்கு ப்ளைட்டப்  பிடிச்சு அமெரிக்கப் போறான்... நல்லபடியா போய்ச் சேரணும்"

அருணை நினைத்து பெருமைதான் சுந்தரத்துக்கும், காமாட்சிக்கும். ஆனாலும் ,அவன் 'வர்ஷாவைத்தான் கல்யாணம் பண்ணிக்கொள்வேன்' என்று பிடிவாதம் பிடித்ததில் லேசாய் வருத்தம். ஆனால் , வர்ஷாவின் அழகும், படிப்பும், சம்பளமும்,சமர்த்துதனமும் பெற்றவர்களுக்கு மிகவும் பிடித்துப் போனதால் , பெரிதாய் அங்கலாய்த்துக்  கொள்ளாமல்  அனுசரித்துப் போயினர்.

என்னதான் பர்கர்,பீட்சா என்று அமெரிக்காவில் சாப்பிட்டு பழகினாலும் அருணுக்கு அப்பா செய்த சிக்கன் சில்லி ப்ரை என்றால்அத்தனை இஷ்டம். சுந்தரமும் சளைக்காமல் அவன் வரும்போதெல்லாம் செய்து கொடுத்து சாப்பிட வைத்து சந்தோஷப்படுவார்.

அரை மணி நேரம் தாண்டி அருண் காலிங் பெல்லை அழுத்தியவுடன் ,காமாட்சி ஓடிப் போய்க் கதவைத் திறந்தாள்.

"வாப்பா அருண்....என்ன வர்ஷா வரலியா?"

"இல்லம்மா"  என்றபடி வீட்டிற்குள் வந்த அருணை, சுந்தரம் கட்டிக் கொண்டார். "நீ இந்தியாவுக்கு வந்து 5 நாளாயிடிச்சு...இப்பத்தான் அப்பாவைப் பாக்கணும்,அம்மாவைப் பாக்கணும்னு தோணிச்சா, அருண்?" என்றார் ,வாஞ்சையுடன்.

"அதில்லப்பா... பெங்களூர்ல ஒரு ஆபிஸ் வேலையை வச்சிக்கிட்டுத்தான் வந்தேன்... வர்ஷாவுக்கும் நல்ல வேளையா லீவு  கிடைக்கவும் அவ பேரண்ட்சோட  இருக்கிறேன்னு சொன்னா. என்னோட ஆபிஸ்  வேலையெல்லாம் முடிச்சிட்டேன். நாளைக்கு யு.எஸ்.  கிளம்பணும். அதுக்கு முன்னாடி உங்களைப் பாத்துட்டு ,உங்க ஆசிகளோட புறப்படலாம்னு வந்தேன்ப்பா"
அருண் கல்யாணமாகிப் போய் , 6 மாதம் கழித்து  இப்போதுதான்  வருவதால்   அவர்களுக்கிடையே   பேச நிறைய விஷயங்கள் இருந்தன. பேசினார்கள்.

பேசிக்கொண்டே , சுந்தரம்  மசாலா தடவிய சிக்கனை நன்றாக வேக வைத்து இறக்கி, வடிகட்டி, சுத்தமான நெய்யில் பொரித்தேடுத்தார். மற்றொரு சட்டியில் அரிந்த வெங்காயத்தையும், தக்காளியையும் வதக்கி எடுத்து , பொறித்த சிக்கனுடன் கலக்க அருணுக்குப் பிடித்தமான சிக்கன் சில்லி ப்ரை தயாரானது.

ரொம்ப நாட்களுக்கு அப்புறம் மூன்று பேரும் சேர்ந்து உட்கார்ந்து பேசிக்கொண்டே சாப்பிட்டதில் பெற்றோருக்கும், மகனுக்கும் மிகுந்த திருப்தி.

அன்று மாலை சுந்தரத்தையும், காமாட்சியையும் தன் காரிலேற்றிக் கொண்டு மயிலை, திருவல்லிக்கேணி கோவிலுக்கு கூட்டிப் போனான். இரவு டின்னருக்காக சரவணபவன்      a c ரூமில் உட்கார்ந்திருந்தபோது வர்ஷாவிடமிருந்து போன் வந்தது.

"உம்....உம் ....ம்.. வர்றேன்...வர்றேன்...சென்னைக்கு வந்து முழுசா எட்டு மணி நேரம் கூட ஆகல... அப்பா.. அம்மாவோட பேசிக்கிட்டு இருக்கேன்... நாளைக்கு நைட்டுதானே ப்ளைட்டு? வர்றேன்...வர்றேன்" என்றான்.

"என்னப்பா?" என்றார் சுந்தரம்.

"இல்லப்பா... நாளைக்கு பெங்களுர்ல ஏதோ 'பந்தா'ம் ... இன்னைக்கு நைட்டே கிளம்பி வந்துடுன்னு வர்ஷா சொல்றா..."

காமாட்சிக்கு மளுக்கென்று கண்களில் நீர் ததும்பியது.... "உடனே கிளம்பணுமா அருண்?" என்றாள்.

"ஒண்ணும் ஆகிடாதும்மா .... நாளைக்கு மதியத்திற்கு மேல கிளம்பினா போதும்...அஞ்சு மணி நேரத்தில பெங்களூர் போயிடலாம்... வர்ஷாவோட அம்மா எதனாச்சும் பயமுறுத்தியிருப்பாங்க.... உடனே இவளும் 'சீக்கிரமா கிளம்பி வா'ங்கிறா"

சாப்பிட்டு வீடு திரும்புவதற்குள் மூன்று போன் வந்து விட்டது...சுந்தரமே வர்ஷாவின் அம்மாவிடம் பேசினார்..."அருண் ஒண்ணும் சின்ன பாப்பா இல்ல... அவன் ஜாக்கிரதையா வந்து சேர்வான்" என்று சொல்லிப் பார்த்தார்."நாளே பேடா ...ஈவத்து  நைட்டே  பந்துபிட ஹேளி" என்றாள் வர்ஷாவின் அம்மா கொஞ்சம் கர்ண கடூரமாய் ,கன்னடாவில்... 

'என்ன சொல்றாங்கன்னே புரியலப்பா... நீ கிளம்பறதுன்னா கிளம்பு அருண்" என்ற சுந்தரத்தின் குரல் கம்மியது.

"ஒண்ணும் ஆகிடாதுப்பா.... நான் நாளைக்கே போறேன்..."

"வேண்டாம் அருண்...ஏதாவது ஒண்ணு கிடக்க ஒண்ணு ஆயிடிச்சின்னா ..என்னா பண்றது...வர்ஷா சொல்ற மாதிரி இப்பவே கிளம்பு...நாளைக்கு பகல் முழுசும் போன்லையே எங்களோட பேசிக்கிட்டிரு " என்றாள் காமாட்சி அரை மனதுடன்.

அவன், பாழாய்ப்போன 'பந்த்'தை சபித்துக் கொண்டே கிளம்பினான்..வர்ஷாவும் அவள் அம்மாவும் அனாவசியமாக கவலைப்பட்டு , தன்னைப் பெற்றவர்களுடன் இருக்க  விடாமல்  அவசரப்படுத்துவதின் மூர்க்கத்தையும் சபித்தான். சாயந்திரம்  6 மணிக்கு 'பந்த்' முடியப்போகிறது. இவன் சென்னையை விட்டு நாளை மதியம் கிளம்பினாலும் மாலை 'பந்த்' முடிந்ததும் பெங்களுர் அடைந்து விடலாம்.. இரவுதான் பிளைட் .... ஏன்தான் மாமியாரும் வர்ஷாவும் சேர்ந்துகொண்டு இப்படி ஓர் இக்கட்டான நெருக்கடியைத் தருகிறார்களோ என்று அவர்கள் மேல் கோபம் கோபமாக வந்தது, அருணுக்கு.

"அடுத்த தரம் வரும்போது ஆபிஸ் வேலையோட வராதேப்பா....எங்களுக்காக லீவு போட்டுட்டு வா" என்றார் சுந்தரம்.


வாசல் வரை வந்து வழியனுப்பி வைத்த சுந்தரத்திற்கும் காமாட்சிக்கும் மனசு இற்றுப் போனது.... பிள்ளை வருவான்..பிள்ளை வருவான்..  என்று ஆசை ஆசையாக காத்திருந்தது இந்த எட்டு மணி நேரத்தை கொண்டாடத்தானா? இனி எப்போது வரப் போகிறான்... எப்போது மீண்டும் அவனை மடியில் படுக்க வைத்துக்  கொண்டு தலை கோதி அவனோடு பேசப் போகிறோம்?' என்ற அங்கலாய்ப்பே  அவர்களுள் மிஞ்சியது.

ஆனால், சுந்தரத்திற்கு மட்டும் 'ஆண் பிள்ளை ஆனாலும் , பெண் பிள்ளை ஆனாலும் கட்டிக் கொடுத்துவிட்டோம்' என்றால் இப்படிப் பட்ட வலிகளை எல்லாம்   அனுபவித்துதான் தீர வேண்டும் போலிருக்கிறது என்று உறைக்க ஆரம்பித்தது. சுந்தரத்தின்  நினவு  விஸ்தீரணத்திற்குள் அவருடைய மாமனார் வந்துவிட்டுப் போனார். தன்னைப் பார்த்து அவர் ஏளனமாக சிரிப்பது போலவும் இருந்தது சுந்தரத்திற்கு.

                              ****************
 

Saturday, December 11, 2010

'இரட்டை' அர்த்தம்

            றுபத்து நான்கு வயதில் 'பென்ஷன் வாங்கினோமா ...வேளாவேளைக்கு சாப்பிட்டோமா .... கச்சேரி கேட்டோமா ....உன்  போல் தலை நரைத்த தாத்தாக்களுடன் பேசி பொழுதை போக்கினோமா' என்றில்லாமல் கதை கதையாய் எழுதி என்னத்தை சாதிக்கப்போகிறாய் ? என்று நீங்கள் கேட்பது எனக்குத் தெரிகிறது...
               சாதிக்கப் போவது எதுவும்  இல்லைதான்...ஆனாலும் , சொல்லியே ஆக வேண்டிய விஷயங்கள் நிறைய்ய்ய்ய இருக்கின்றனவே. பெண்டாட்டி என்று ஒருத்தி இருந்தவரை அவளிடம் எல்லாவற்றையும் சொல்லித் தீர்த்தேன். மகராஜி, போன மார்ச் மாதம் மூச்சை நிறுத்திக்கொண்ட பிறகு யாரிடம் சொல்வேன் ? பேரன், பேத்தி எல்லோரும்  அவரவர் பாடங்களிலும் , இன்னபிற லோகாயத பயிற்சிகளிலும் மும்முரமாக இருப்பதால் அவர்களுக்கு என் பக்கத்தில் உட்காரவே நேரம் போதவில்லை. அதனால்தான் என் புலம்பல்களை கதைகளாக எழுதுகிறேன். அவற்றை வாசித்து , நீங்கள் கூறும் கருத்துரைகளே இந்த பட்ட மரத்திற்கு ஊற்றப்படும் உயிர் நீர்.
இதற்கும்  மேல் 'என்ன சாதிக்கப் போகிறாய் ?' என்று கேட்க மாட்டீர்கள்தானே....
               என்னமோ தெரியவில்லை சார் / மேடம் , இந்த 'இரட்டை ' சமாச்சாரங்கள் என்னை எப்போதும் உலுக்கிப் பார்த்திருக்கின்றன...சின்ன வயதில் 'சயாமீஸ் இரட்டையர்களை' பற்றிப் படித்து, அழுதிருக்கிறேன்... இறைவனின் படைப்பில் ஏன் இப்படி ஓர் அவலம் என்று ...
                அதே மாதிரி  இரட்டை வாழைப் பழத்தை யாரும் சாப்பிட முன் வரமாட்டார்கள். பிறக்கும் குழந்தை இரட்டையாய்ப் பிறக்கும் என்று பயப்படுவார்கள்...ஆனால் எனக்கோ இரட்டைக் குழந்தை வேண்டுமென்று இரட்டை வாழைப் பழத்தை தேடி வாங்கி சாப்பிடுவேன்.... அதிலும், கடவுள்  என்னிடம் பாராமுகமாய் நடந்து கொண்டார்  ...நினைத்தது நடக்காமல் போனது...
                அவ்வளவு ஏன் ? என் கல்யாணத்தின் போதும், க்ரஹப்ரவேசத்தின்போதும் சீராக வந்த ஜோடி பருப்பு தேங்காய் கூடுகளை இன்னமும் பாதுகாப்பாய் வைத்திருக்கிறேன் என்றால் பார்த்து கொள்ளுங்கள்.

                அமெரிக்காவில் அந்த இரட்டை கோபுரங்கள் தீவிரவாத விமானங்களால் தகர்க்கப்பட்ட நாளன்றும், அடுத்த நாளைக்கும் நான் கொலைப் பட்டினி கிடந்தேன், ஸ்வாமி!! மனசு இற்றுப் போனது !!
                தெருவில் பாவாடை சட்டை அணிந்து குஞ்சலம் , குஞ்சலமாக குழந்தைகள் நடக்கும்போது அவர்களின் ரெட்டை ஜடை அத்தனை அழகாய் என்னைக் கொல்லும். இதை எல்லாம் விடுங்கள்.... கோவிலுக்குப்  போனால் நீங்கள் என்ன பண்ணுவீர்கள் ? நேராகப் போய் மூலவரை தரிசிப்பதில்தானே உங்களின் மொத்த கவனமும் இருக்கும்... எனக்கு அப்படி இல்லை...மூலவர் சந்நிதிக்கு முன்னால் நிற்கும் அந்த த்வாரபாலகர்களுக்கு என் வந்தனத்தை செலுத்துவதிலேயே என் ஆர்வம் ததும்பும். சந்நிதானத்தில் இருக்கும் கடவுள் நம்மைக் காப்பாற்றுகிறார் என்றால், அந்த கடவுளையே காத்து நிற்கும் இந்த ஜோடி த்வாரபாலகர்கள், என்னைக் காப்பாற்றியவர்கள் ஆயிற்றே !!! ஆகையால் , அவர்களுக்கு எனது ஆன்மார்த்த வந்தனத்தை சமர்ப்பித்து விட்டு நிறைய சமயங்களில் மூலவரை தரிசிக்காமலே வந்திருக்கிறேன்.
                     என் ஒரே பையன் ரமேஷுக்கும், மகள்கள் சாருவுக்கும் , கோமளிக்கும் சொத்துபத்தைஎல்லாம் சமமாகப் பிரித்துக் கொடுத்து விட்டேன்.எல்லோர்க்கும் (மாப்பிள்ளைகள்,மாட்டுப்பெண் உட்பட) சந்தோஷம். சுப்புலஷ்மி கடைசிவரை போட்டுக் கொண்டிருந்த ஒரே ஒரு ரெட்டை வட சங்கிலியை மட்டும் நான் வைத்துக் கொண்டிருக்கிறேன். என்னுடன் சேர்த்து எரிக்க சொல்லி ரமேஷிடம் சொல்லியிருக்கிறேன்... என்ன செய்யப் போகிறானோ.....
                    சரி ..சரி... லூசு போல இருக்கிறது என்று முடிவு கட்டி, வேறு கதையை தேடி போய்விடாதீர்கள்...எல்லா கார்யங்களுக்கும் ஏதோ ஒரு காரணம் இல்லாமலா இருக்கும்? என்னுடைய  இந்த   இரட்டைப் பித்திற்க்கான காரணம் என்ன தெரியுமா?
                     என் கல்யாணத்திற்கு நான்கைந்து மாதங்களுக்கு முன்னால் நடந்த ஒரு சம்பவம். இப்பொழுது நினைத்தாலும் மெல்லிசாய் ஒரு நடுக்கம் தோன்றுகிறது. எனக்கும் சுப்புலஷ்மிக்கும் நிச்சயதார்த்தம் நடந்து ஆறு மாதத்திற்கு மேல் ஆகியிருக்கும். ஒரு பிப்ரவரி மாதம்...தேதியும் நினைவிருக்கிறது...சேலத்திற்கு ஒரு காரியமாகப் போய் விட்டு திருச்சிக்கு திரும்புகிறேன். சேலம் பஸ் ஸ்டாண்டிற்கு வந்த போதே இரவு மணி 11 ஆகிவிட்டது. சுலபத்தில் பஸ் கிடைக்கவில்லை.ரொம்ப நேரம் காத்திருந்துதான் பெங்களூரிலிருந்து  வந்த ஒரு பஸ்ஸைப் பிடிக்க முடிந்தது. டிரைவர் சீட்டிற்கு பின்னால் நான் அமர இடம் கிடைத்தது.
                  சேலத்தை விட்டு  கிளம்புகையில் நள்ளிரவு தாண்டி விட்டது. நாமக்கல் வந்ததும் , அந்த மூன்று பேர் அமரும் சீட்டில் நான் மட்டும். மற்றவர்கள் இறங்கி விட்டனர். நாமக்கல்லில் ஒரு குடும்பம் ஏறியது. இளம் வயது கணவன்,மனைவி மற்றும் இரு குழந்தைகள்.அவர்களுக்கு சீட்டு ஏற்பாடு செய்வதற்காக நடத்துனர் என்னை எழுந்திருக்க சொன்னதும்  எனக்கு கோபம் வந்தது.
                   "நான் சேலத்திலிர்ந்து வர்றேன்...இப்ப ஏறினவங்களுக்காக நான் இடம் மாறணுமா...முடியாது.." என்று சொல்ல வந்த நான் என் பாழாய்ப் போன இரட்டை செண்டிமெண்ட் தாக்கத்தால் உடனடியாக எழுந்து இடம் கொடுத்தேன். காரணம் , மொட்டு,மொட்டென்று பார்த்துக்கொண்டிருந்த  அந்த இரண்டு குழந்தைகளும் இரட்டையர்கள் !!
                    "அங்கிளுக்கு தேங்க்ஸ் சொல்லுங்க" என்று அப்பா சொன்னதும் இரண்டில் ஒரு குழந்தை கை கூப்பியது... மற்றது எனக்கு கை கொடுத்தது...மஹா ம்ருதுவான பிஞ்சு ஸ்பரிசம்...
                    எனக்கு முன் பக்க ஏறு வழியின் ஜன்னலை ஒட்டின சீட் கிடைத்தது.இரவுப் பயணங்களில் பெரும்பாலும் நான் உறங்குவதில்லை. போதும் போதாததற்கு, அப்பாவிற்கும் ,அம்மாவிற்கும் நடுவில் படுத்துறங்கிக்  கொண்டிருந்த அந்த தளிர்களை பார்த்தபடியே என் பயணம் தொடர்ந்தது.
                     முசிறி வந்ததும் பஸ் நின்றது . டீ குடிக்க ஓட்டுனரும் , நடத்துனரும் இறங்கினர். தொடர்ந்து , பஸ்சிலிருந்த பெரும்பாலோர் இறங்கவே நானும் இறங்கி நின்றேன். சத்தமாக எஸ்.பி.பியின் குரல் , பிராந்தியத்தை கலக்கியது.அந்த குழந்தைகளை தோளுக்கு ஒன்றாய்  தூக்கிக் கொண்டு அந்த அப்பாவும் இறங்கி, தூங்கி வழிந்து கொண்டிருந்த , குழந்தைகளின் டிராயர் இறக்கி 'உச்சா'போக வைத்தார். இரண்டும் நடுங்கிக் கொண்டே போயின.இடுப்பை வளைத்து டிராயரை மேலே இழுத்துக் கொண்டன.
                    நான் அந்த குழந்தைகளையேப் பார்த்துக் கொண்டிருந்தேன். இரண்டும் நல்ல ரோஸ் நிறம். அழகென்றால் அப்படி ஓர் அழகு! செராக்ஸ் காப்பி மாதிரி இருந்தன . ஒரு குழந்தையை நான் வாங்கிக் கொண்டேன். பேர் கேட்டேன் ... ஸ்வெட்டரும்  தொப்பியும் அணிந்திருந்த அந்த குட்டி ,''நான் மகேஷ்... அவன் ரமேஷ் ..." என்றது.
                   அதற்குள் ரமேஷ் என்ற அந்த குழந்தை அப்பாவிடம் 'கடையில் விற்கும் பிஸ்கட் வேணும்' என்று கேட்க,'இங்கெல்லாம் நல்ல பிஸ்கெட்டா இருக்காது... திருச்சி போனதும் வாங்கித் தருவதாக' சொன்னார். அழுது   அடம் பிடிப்பான் என்று எதிர்பார்த்த எனக்கு ஏமாற்றம்.. மற்றும் ஆச்சர்யம்... "ஓக்கே..டாடி" என்ற குழந்தையை நான் வாங்கி உச்சி முகரணும் போலிருந்தது.
                    பஸ் முசிறியை விட்டு கிளம்பியது. பஸ்ஸில் டிரைவரையும் என்னையும் தவிர ,அனைவரும் சாமியாடிக் கொண்டிருந்தனர். மணி இரண்டேகால் ஆகியிருந்தது. டிரைவர் நல்ல வேகத்தில் போய்க் கொண்டிருந்தார்.  குறுகலான அந்த சாலையின் இடது புறம் நன்கு ஒதுக்கி ஓட்டியவர் வலது பக்கம் வந்த ஒரு வளைவை சமாளிக்கும் பொருட்டு வண்டியை ஒரேடியாக வலதுப் பக்கம் திருப்ப, எதிரே பார்க்காமல் எதிரே வந்த ஒரு லாரியுடன் நாங்கள்  பயணித்திருந்த  பஸ், 'டமால்' என்று மோதியது.
                      இத்தனை நடப்பவற்றையும் பார்த்துக்கொண்டிருந்த எனக்கு 'சர்ட்டென்று' தலையை சுற்றியது. எங்கள் பஸ்சிற்குள் 'ஓ'வென்று அலறல்.முன் பக்கத்து கண்ணாடி நொறுங்கி என் நெற்றியிலும் முகத்திலும் முள் முள்ளாக கண்ணாடி சிதறல்கள்.. அலறி அடித்துக் கொண்டு கீழிறங்கினேன். படபடப்பில் இருந்து , சுதாரித்துக் கொள்ள எனக்கு சிறிது அவகாசம் தேவைப்பட்டது.பின் பக்க வாயில் வழியாக சிலர் கத்தியபடி இறங்கினர். எல்லோருமாக நிதானபடுத்திக்கொண்டு  நிலைமையை ஆராய்ந்தோம். பஸ்சும் லாரியும் 'head on collission  ... லாரி டிரைவரின் உடம்பு எங்கள் பஸ்சிற்குள் செருகிக் கிடந்தது. எங்கள் பஸ் டிரைவரும் சம்பவ இடத்திலேயே  காலி. பஸ்சிற்குள் ஏறினேன்... மனம் பதைபதைத்தது... என்ன கொடூரம்.... டிரைவர் சீட்டிற்குப் பின்னால் இருந்த மூன்று சீட்டு பயணிகளும் ஸ்தல மரணம். ஐயோ... அந்த பிஞ்சு குழந்தைகளும் ,அப்பாவும், அம்மாவும் அடையாளம் தெரியாமல் கூழாகப்  பார்த்தேனே ஸ்வாமி  ....அந்தக்ஷணம் என் வசமில்லாமல் நான் பெரிதாய் அழத் தொடங்கினேன்.
                      அந்த ரோஜாப்பூ குழந்தைகள் என்ன பாவம் செய்தன... ஏன் இப்படி ஒரு கோர மரணம் அவற்றிற்கு...என்ன பாவம் செய்தார்கள் அந்த பெற்றோரும், கூட இறந்த அத்தனை ஜனங்களும்...
                     'கொஞ்ச நேரத்திற்கு  முன்னால் பிஸ்கட் கேட்ட ரமேஷ் குழந்தை இப்போது இல்லையே.... திருச்சிக்கு போய் வாங்கி தருவதாக சொன்ன அப்பா வாங்கி தராமலேயே போய் விட்டாரே.. தெய்வமே .... ஏன் இப்படி என் கண் முன்னால் இப்படி ஒரு பலி வாங்கினாய் ?' பஸ்ஸை சுற்றி சுற்றி வந்து என் முகத்து கண்ணாடி சிதறல்களை பிடுங்கியபடி அரற்றினேன்... இது கனவாக இருக்கக் கூடாதா ?   
                   கனவில்லை.... நிஜம்.  இறந்து போனவரும், காயமடைந்தவரும் ஏராளம். கூக்குரல்களும்,ஓலங்களும் வயிற்றை ஓங்கி அறைந்தன.
                    நிதானமாக யோசித்தேன்... நாமக்கல்லில் இந்த குடும்பம் ஏறாதிருந்தால் அந்த பிப்ரவரி இருபத்தாறாம் தேதியின் புலர் காலை பொழுதில் நான் இறந்திருப்பேன். இன்னும் சொல்லப் போனால் அவர்களின் இரட்டை குழந்தைகளால் இப்போது நான் பிழைத்து நிற்கிறேன்...ஒரு குழந்தையாய் இருந்திருந்தால் கூட அதே சீட்டில் 'அட்ஜஸ்ட்' பண்ணி உட்காரும்படி நடத்துனர் கூறியிருக்கக் கூடும் ...என்னைப் பிழைக்க வைத்து விட்டு தாம் மறைந்து போன அந்த இரட்டைக் குழந்தைகளின் நினைவாக இன்றும் நான் ஜோடி பருப்பு தேங்காய் கூட்டைப் பாதுகாத்து வைத்திருப்பது பைத்தியக்காரத்தனமா, சார் ?
                   அமெரிக்க இரட்டைகோபுரம்  தகர்ந்ததற்க்கு நான் பட்டினி கிடந்தது  தப்பா ,சார்?
                   கோயில் சாமியை விட்டு விட்டு த்வார பாலகர்களை மெய்ம்மறந்து வணங்குவது, சரியில்லையா மேடம்..?
                    சுப்புலஷ்மியின் ரெட்டை வட பவுன் சங்கிலியை எவர்க்கும் தராமல் என்னுடனே வைத்துக் கொண்டிருப்பது முட்டாள்தனமா..... நீங்களே சொல்லுங்கள் !! 

                                  ***********

Tuesday, November 23, 2010

ப(ரமா)த்மா !

                        வாழ்ந்து  கொண்டிருக்கும் வரை  நம்மால் இயன்ற உதவியை நெருங்கியவருக்கு செய்ய வேண்டும் என்கிற துடிப்புடன் இயங்கியபடி  , அதே சமயத்தில்  வாய்த்திருக்கும் அரசுப் பணியை ஒரு அறப் பணியாகவும்  செய்து கொடிருக்கும் நான் , பிரகாஷ்.  'ரத்த வங்கியில் ரத்தம் கொடுக்கணுமா.... பிரகாஷக் கேளுங்க விவரம் சொல்லுவார்.... ' என்றோ... "இன்டேன் கேஸ் சிலிண்டர் கனக்ஷன என் பேருக்கு கொஞ்சம் மாத்தணும்.... பிரகாஷ்.." என்றோ..."பையனோட பாஸ்போர்ட்ட கிளியர் பண்ணிக் குடுப்பா.." என்றோ..."கொடேஷன் ஒர்டர்ல ஒரு சின்ன தப்பு சம்பவிச்சு... நம்முடே சிடுமூஞ்சி ஒபிசர் என்னை விளிச்சு... என்னோடோப்பம் சாரக் காணான் வரான் பற்றோ பிரகாஷ் " என்று பைங்கிளிக் குரலிலோ .... இப்படி யாராவது ஒருத்தர் என் டேபிள் முன்னால் நிற்பது வாடிக்கையான ஒரு விஷயம்.  பார்த்துக் கொண்டு இருக்கிற  லெட்ஜெர் பக்கத்திற்கு அடையாளம் வைத்து விட்டு அவர்களுடன் கிளம்பி விடுவேன்.
                  கனக்கச்சிதமாக வேலையை முடித்துக் கொடுப்பதால் என் மீது ஆபிசிலும் சரி, வெளி வட்டாரத்திலும் சரி எல்லோரும் மிகவும் அன்பு காட்டுவார்கள். அடிக்கடி என் எஸ்.ஓ வே "யோவ் , நீர் ஜெகஜ்ஜாலக் கில்லாடிய்யா" என்பார். எனக்கோ உள்ளுக்குள் கூசும்.  அவர் பெண்ணுக்கு கூட ஒரு காலேஜ் அட்மிஷன் வாங்கித் தந்திருக்கிறேன்.
                   இப்படி ஊருக்கே உழைத்து தேயும் என்னைப் புரிந்து கொள்ளாமல் "வீட்டில் இங்க இருக்கறத,அங்க நகத்தி வைக்காத ஜன்மம்" என்று தலையில் அடித்துக் கொள்வாள் என் சகதர்மினி, நளினி. "நாலு பேருக்கு நல்லது பண்ணினா புண்ணியம்" என்று நான் சமாதானம் சொல்கையில் அவள் தன் முகவாய்க்கட்டையை  தோளில் நொடித்துக் கொள்வதைப் பார்க்க வேண்டுமே... அட..அட..அடா..!
                    அதையும் மீறி , அவளுக்கு உதவும் எண்ணத்தில் காய் நறுக்க உட்கார்ந்தால் சிவராமன் மாதிரி யாராவது செல்போனில் தடதடக்கிறார்கள்.
                     "சொல்லு.. ஷிவா" என்றேன். ஷிவா என் முன்னாள் காலேஜ் நண்பன். இந்நாள் சகலை எனப்படுகிற ஷட்டகன்.
                     "பிரகாஷ்...சாயங்காலம் ஆபிஸ் முடிச்சிட்டு போற வழியிலே ஹோட்டல் மோனாவுக்கு வந்திடு... முக்கியமான ஒரு விஷயம் பேசணும்... ஒன்னோட ஹெல்ப் வேணும்...." என்றான் ஷிவா படபடப்பாக, "நளினிக்குத் தெரிய வேண்டாம்"
                     " என்னடா ட்ரிங்க்ஸ் பார்ட்டியா?" என்றேன் ரகசியமாய்.
                     "நேர்ல வா , சொல்றேன்" என்று கட் செய்தான்.

                       நேரில் பார்த்த போது பேயடித்தவன் போல் இருந்தான்.மொட்டை மாடி roof garden -இல் பியருடன் சங்கமிக்கும் சந்தர்ப்பத்தில் ,"நம்ப ரமா  அவளோட கிளாஸ் மேட் 'பத்மநாபன்'ன்னு ஒருத்தனைக் காதலிக்கிறாளாம். அவனைத்தான் கட்டிக்குவாளாம்." என்றவன் க்ளாஸ் அநியாயத்திற்கு நடுங்கியது.
                     "உனக்கு எப்படித் தெரிஞ்சுது?" என்றேன்.
                     "மொபைல்ல எப்பப் பார்த்தாலும் 'டீ பத்மா... டீ பத்மா..'ன்னு மணிக்கணக்கா பேசிகிட்டிருப்பா...அதுவுமில்லாம இ-மெயிலிலே பத்மா..பத்மான்னு வழிஞ்சு வழிஞ்சு லெட்டர். ரமாவோட பாஸ்வர்ட் தெரிஞ்சதாநால கண்டுபிடிச்சேன். யாருடி இதுன்னா பத்மநாபன் என்கிறாள்."
                    "கட்டி வெச்சிட வேண்டியதுதானே " என்றேன் சிப்சைக் கொறித்தபடி.
                    "அவன் வேற ஜாதி...வேற 'ஸ்டேட்'டா.....நமக்கு ஒத்து வராது"
                    "டேய்.... பாரதியாரே 'ஜாதிகள் இல்லையடி பாப்பா'ன்னு சொல்லியிருக்கார்டா"
                    "அது பாப்பாவுக்கு சொல்லியிருக்கார்.... எனக்கில்லே"
                    "சரி.... இப்ப என்ன பண்ணனும்னு சொல்றே?"என்றேன்.
                    "வெட்டணும்" என்றவன் என் திடுக்கிடலை உணர்ந்து, "அவங்க காதலை" என்றான்.
                    வேறொன்றுமில்லை ...அவனின் ஒரே மகள் ரமாதேவி  - நான் தூக்கி வளர்த்த என் ரமாக்  குட்டி - இன்று பெரிய பெண்ணாக வளர்ந்து படித்து, பட்டம் பெற்று, MNC -யில் வேலையாகி தன்னுடன் படித்த பத்மனாபனைக்  கல்யாணம் செய்து கொள்கிறேன் என்கிறாள்.  என் மைத்துனி கீதாவும் ஷிவாவும் அதற்கு பச்சைக் கொடி காண்பிக்க விரும்பவில்லை. ஜாதி, வேற மொழி ,குடும்ப கெளரவம்  ..அது..இது என்று பாவ்லா காட்டி எதிர்க்கிறார்கள்.
                    "ரெண்டு பேரையும் கூப்பிட்டு பேசுவோம். 'இந்த கல்யாணத்திற்கு நாங்கள் ஒப்புக்கொள்ள முடியவே முடியாது'ன்னு சொல்லிப் பார்ப்போம்."என்றேன்.
                    "அப்படியெல்லாம் அம்மாஞ்சி மாதிரி பேசினா நடக்காது,பிரகாஷ். ஜெர்க் ஆகிற மாதிரி மிரட்டணும்"
                    "சரி...நான் பாத்துக்கிறேன்.. கவலைய விடு" என்று சமாதானப்படுத்தி லேசாக மலை ஏறிக் கொண்டிருந்தவனை கீழிறக்கி, வீட்டிற்கு கொணர்ந்து, படுக்கையில் கிடத்தி விட்டு கிளம்பினேன்.

                     வீடடைந்து நளினியிடம் விஷயத்தைக் கூறிக் கொண்டிருக்கும் போது , சிணுங்கியது செல்போன்."பெரியப்பா .... உங்ககிட்ட  கொஞ்சம் பேசணும்...இப்ப நீங்க  ப்ரீயா ?" என்றாள் ரமா.
                      ஷிவாவும் கீதாவும் அவர்களுக்குத் தெரிந்த ஒரு பணக்கார வீட்டு பையனுக்கு ரமாவைக்  கட்டிக் கொடுக்க ஏற்பாடு செய்ய, ஆனால் ரமாவோ  தான் நான்கு வருடங்களாக காதலிக்கும் பத்மா (எ)பத்மநாபனைத் தான்  கல்யாணம் செய்து கொள்ளப்போவதாக அறிவிப்பு வெளியிட்டு விட்டாள்.
                       " நீங்கதான் எங்க ரெண்டு பேருக்காகவும் பேசி அப்பா,அம்மா சம்மதத்தை வாங்கித் தரணும் பெரியப்பா ", என்ற சுபாவின் குரல் கெஞ்சியது.
                         " நீ சொல்றதெல்லாம் சரிம்மா....ஆனா , உங்கப்பா அம்மாவை எதிர்த்து நீ கல்யாணம் பண்ணிக்கறதை நான் அனுமதிக்கவோ அங்கீகரிக்கவோ முடியாது." என்றேன்  குரலில் கடுமையை வரவழைத்து.
                         "அப்படியா....நான் பத்மனாபனைக்  கல்யாணம் பண்ணிக்கறதை யாராலையும் தடுக்க முடியாது "என்றாள் வீறாப்பாக.
                                            
                          "இவ்வளவு பேச்சு பேசுவியா நீ.... உன்னோட காதல் விஷயம் பத்தி கொஞ்ச நேரத்துக்கு முன்னாடித்தான் உங்கப்பா சொன்னான். அவனுக்கு ஹெல்ப் பண்றதா வாக்கும் கொடுத்திட்டேன்... நான் கிருஷ்ணா பரமாத்மா மாதிரி....என் கிட்டே யார் முதல்ல உதவின்னு வர்றாங்களோ ,அவங்களுக்கு உதவர்றதுதான் என்னோட வழக்கம். இப்ப என் உதவி கேக்கிற நீ  நாலு வருஷமா என்ன பண்ணினே? முன்னாடியே கேட்டிருக்கலாமே...நிச்சயமா இந்த கல்யாணத்தே  நானே நடத்தி வச்சிருப்பேன்.ஆனா , நீ உன் பேரேன்ட்சையும் மதிக்கலே..என்கிட்டயும் சொல்லலே..நீ நினைக்கிறபடி இந்த கல்யாணம் நடக்காது, சுபா. சும்மா பெத்தவங்களைப் பகைச்சுக்காதே .....அவங்க சொல்றபடிக் கேளு...இல்லேன்னா அவங்கள கன்வின்ஸ் பண்ணப் பாரு" என்றேன்.

                      "போயும் போயும் உங்களை நம்பி பேசினேனே.... சாரி ...மிஸ்டர் பிரகாஷ்...உங்களால என்ன செய்ய முடியுமோ அதை செய்யுங்க...we cannot convince anybody anymore "
                      கொஞ்சம் கூட மரியாதை இல்லாமல் என்னை பெயர் சொல்லி அழைத்த அவளிடம் ஏகமாய் கோபம் வந்தது. "உன் காலை உடைக்கிறேன்  பாரு...கழுதை...என்ன திமிர்.....இப்ப சொல்றேன் கேட்டுக்க.... உன் காதல் கல்யாணம் எப்படி நடக்குதுன்னு  நான் பாத்துடறேன்.... " வயிற்றின் உள்ளே ஷிவா ஊற்றி கொடுத்த பீர் குலுங்க பீறிட்டு எழுந்தேன்.

                         றுநாள் காலை ஒன்பது மணிக்கு ,கீதா போனில் கூப்பிட்டு அழுதாள். ராத்திரி எட்டு மணிக்கு வரவேண்டிய ரமா  வீட்டிற்கு வரவில்லையாம்..ஷிவா செய்வதறியாமல் 'திரு திரு' வென்று  முழித்துக் கொண்டிருப்பதாகவும் அழுகையினூடே  கூறினாள். நானும் நளினியும் அவர்கள் வீட்டிற்கு பைக்கில் பறந்தோம்.
                          ஷிவா ஹேங்கோவரில் சொன்னதையே  திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டிருந்தான்."எம் பொண்ணு என்னை ஏமாத்திட்டாடா"
                           " ஒன்னும் கவலைப் படாதே ஷிவா ...எங்கயும் போயிருக்க மாட்டா ரமா ...ஆபிஸ்லயே தங்கியிருப்பா"
                           "எல்லா எடத்துக்கும் போன் போட்டுப் பாத்தாச்சு... ட்ரேஸ் பண்ண முடியல" என்றாள் கீதா. ஷிவாவோ,""எம் பொண்ணு என்னை ஏமாத்திட்டாடா" என்றான், திரும்பவும்.
                           டக் டக்கென்று முடிவுகள் எடுக்க வேண்டிய தருணம் இது . அவளுடைய செல்போன் சர்விஸ் வழங்கு கம்பெனியை தொடர்பு கொண்டு விஷயத்தை நாசுக்காக விளக்கி , அவர்களின் உதவியை நாடினேன். நம்பரை ட்ரேஸ் செய்து விட்டு அழைப்பதாக உறுதி கூறினார்கள். இருப்பு கொள்ளாமல் தவித்துக் கொண்டிருந்த எங்களுக்கு மதியம் அந்த கம்பெனியிலிருந்து போன் வந்தது. அந்த நம்பர் நேற்று இரவே திருத்தணி  டவர் சிக்னல் எல்லையில் இருந்ததாகவும் இன்று காலை பதினோரு மணிக்கு மேல் பெங்களூர் ரூட் டவர்களின் சிக்னல் எல்லை நோக்கி நகர்வதாகவும் ,வானிலை அறிக்கை 'ரமணன்' பாணியில் கூறினார்கள்.
                       ஆஹ  ..ஹா... இன்று நல்ல முகூர்த்த நாள்.. கல்யாணம் முடிந்து விட்டது...ரமா  நடத்தி காட்டி விட்டாள்....அவளின் பெற்றோர், என்னை , எல்லோரையும் முட்டாளாக்கி விட்டாள் ....
                       மெதுவாக விஷயத்தை ஷிவாவிடம் கூறினேன். அதிர்ச்சியில் அவன் அப்படியே உறைந்து விட்டான். " பேசாமல் போலீசில் கம்ப்ளைன்ட் குடுத்திடலாம்" என்றேன். "வேண்டாம் பிரகாஷ்... மானமே போய்டும்... அந்த சனியன் எக்கேடும் கேட்டுப் போகட்டும்... இனிமே அவ எங்க பொண்ணும் இல்லே.. நாங்க அவளைப் பெத்தவங்களும் இல்லே" என்று ஷிவா மனமுடைந்து அரற்றினான்.
                        "அப்படியெல்லாம் விடக் கூடாது ஷிவா....நம்மளே எல்லாம் ஒரே நாளில ஏமாற்றி முட்டாளாக்கிட்ட அவள சும்மா விடக் கூடாது. கடத்தல் கேசுல அந்தப் பையன உள்ளே பிடிச்சுப் போட்டோம்ன்னா கதறிக்கிட்டு நம்மகிட்ட ஓடி வருவா"

                         ரை மனதுடன் கீதாவும் , ஷிவாவும் போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்தனர்.
எஸ்.ஐ இடம் பேசினேன். இன்ஸ்பெக்டர் வரும் வரை கொஞ்சம் காத்திருக்க சொன்னார்.காத்திருந்தோம். ஷிவா மட்டும் புலம்பிக் கொண்டே இருந்தான்.
                          இன்ஸ்பெக்டர் வந்ததும் ,"உங்கள்ல பிரகாஷ் யாரு"ன்னு கேட்டார்.
                          "நான்தான்" என்ற போது எனக்குள் லேசாக வியர்த்தது .
                          "ரமா  உங்க பேர்ல ஒரு கம்ப்ளைன்ட் கொடுத்திருக்காங்க. 'மேஜரான  பொண்ணு , தனக்குப் பிடிச்சவன கல்யாணம் பண்ணிக்கறேன்' ன்னு சொன்னப்போ கால ஓடச்சிடுவேன்னு மிரட்டினியாமே..நீ.....அவ்வளவு பெரிய ஆளா நீ...உள்ள தள்ளி கம்பி என்ன வெச்சிடுவேன்  .. ஜாக்கிரதை" என்று என் மூக்கிற்கு அருகில் வந்து அடிப்பது போல் கையை ஓங்கினார்.
                          விஷயம் விபரீதமாகி விட்டது... ரமா  இப்போதும் முந்திக் கொண்டு எங்களை முட்டாளாக்கி விட்டாள் .சமாதான குரலில் எல்லா விஷயத்தையும் அவருக்கு விளக்கி , 'ரமாவை அப்படி மிரட்டியது என் தப்பு' என்று எழுதிக்  கொடுத்து விட்டு,'தப்பித்தோம்..பிழைத்தோம்'  என்று வீடடைந்தோம்.
                           ரமாவிடமிருந்து போன். "என்ன மிஸ்டர் பிரகாஷ்.... மூக்கு ஒடஞ்சுப் போச்சா....உலகத்தில நீங்க மட்டும்தான் பரமாத்மான்னு நினைக்காதீங்க.... உங்களை மாதிரித்தான் போலீசும். அவங்களும் யாரு முதல்ல கம்ப்ளைண்ட் பண்றாங்களோ அவங்கள நிரபராதியா வச்சுத்தான் விசாரிப்பாங்க....அங்க நடந்த விஷயத்தையும் எனக்கு சொல்லி ஹெல்ப் பண்ணுவாங்க" என்றாள். 
                             ஷிவாவுக்கும், கீதாவுக்கும் என்னைப் பார்ப்பதற்கே சங்கடமாகி விட்டது. "உன்னை அவமானப்படுத்தின அவ எங்க பொண்ணே இல்லேடா", என்று என்னைக் கட்டிக் கொண்டு அழுதான், ஷிவா.                          
                         ல்லாம் முடிந்து , ஷிவா தன் மகளுடன் ஒரு வருஷம் பேச்சு வார்த்தை இல்லாது இருந்தான். பேத்தி பிறந்ததும் "மகளே" என்று இவர்களும் " எனைப் பெற்றவர்களே" என்று ரமாவும் 'ஸ்லோ மோஷனில்'  பாசம் பொங்க கூடிக் கொண்டதும் என்னைப் பொறுத்த வரையில்  அனாவசிய செய்தி.      என்ன ..... ரமாவுக்கு நான்தான் வேண்டாதவன் ஆகி விட்டேன்...பேசுவதில்லை.
***********


Monday, November 1, 2010

'வ' மேல் 'வ'
(தலைப்பு குறித்த விளக்கம், இறுதியில்)
கஸ்மாத்தாக , யதேச்சையாக ,தெய்வாதீனமாக ,தெய்வ சங்கல்பமாக - இந்த நான்கு வார்த்தைகளில் எதை வேண்டுமானாலும்  இன்று காலை நடந்த ஒரு சந்திப்பிற்கு நீங்கள் உபயோகப் படுத்தி கொள்ளலாம். எனக்கு ஆட்சேபணை இல்லை. 

சென்னை செல்லும் 'பல்லவனை'ப் பிடிக்க ஸ்ரீரங்கம் ஸ்டேஷனிற்கு ஐந்தே  முக்காலுக்கெல்லாம் வந்து விட்டேன். அதிகாலை நேரத்து சிலு சிலு காற்றை அனுபவித்தபடி , தொப்பையை தள்ளிக் கொண்டு 'உஸ்..புஸ்' என்று பிளாட்பாரத்தில் வாக்கிங் போகும் மனுஷாளை வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தேன். இன்றைக்கு என்று பல்லவன் லேட். ஆறு ஐம்பதுக்குத்தான் எதிர்பார்க்கப்படுவதாக வார்த்தைகளை வெட்டி வெட்டி அறிவித்தார்கள் .

'சரி, நிற்கும் நேரத்தில் டிபனை முடித்து விடலாமென்று' பிளாட்பார கடையை நோக்கி நடந்த போது தான், அந்த நடுத்தர வயது தம்பதிகளைப் பார்த்தேன். 'நமக்குத் தெரிந்த ஜனங்கள்...ஆனால் 'டக்'கென்று ஞாபகம் வரவில்லையே' என்ற மன நமைச்சலுடன் நான்கு இட்லிகளை சாப்பிட்டு முடித்தேன்.

'யார்? யாராயிருக்கும்?... கீழச் சித்திரை வீதி ரங்கன் சொந்தக் காரர்களோ ? இல்லையே...அடையவளைஞ்சான் ஆரவாமுதனின் வீட்டில் பார்த்திருக்கிறோமோ? இல்லை ...திருவானைக்கா......'என்று பலவித யோசனைகளில் நான் சிக்கித் திளைத்துக் கொண்டிருந்ததை சற்றும் உணராத அந்த ந.வ.தம்பதிகள் இருபதடித் தொலைவில் என்னமோப் பேசிக் கொண்டிருந்தனர். 

பல்லவன் வந்ததும் , ஏசி சேர் கார் சீட்டில் நான் சென்று அமர, வண்டி கிளம்பியது. கொஞ்சம் ஆசுவாசமானதும் மனது மீண்டும்,'யார்...யார்..' என்று பிறாண்ட ஆரம்பித்தது.
'என்ன ஆச்சர்யம்... அவர்களும் எனது கம்பார்ட்மெண்ட்டை  நோக்கி, அதுவும் நான் அமர்ந்து கொண்டிருக்கும் சீட்டருகில் வந்து நின்று நம்பர் சோதித்துக் கொண்டிருக்க, "சீட் நம்பர் என்ன?" என்றேன். எனக்கடுத்த இரண்டு சீட்டுகளும் அவர்களுடையது!! 
அமர்ந்தனர். தங்களுக்குள் சன்ன குரலில் என்னமோ பேசிக் கொண்டனர். கொஞ்ச நேரம் கழித்து நான்தான் ஆரம்பித்தேன்,"நீங்க ஸ்ரீரங்கத்தில" என்று சாங்கோபாங்கமாகத் தொடங்கி , அந்தப் பெண்மணி என் நண்பன் முகுந்தனின் அக்கா என்றும், முகுந்தனுக்கு மட்டும் அவர்கள் குடும்பத்திலேயே சரியான வேலை கிடைக்காமல் , ஏதோ பிசினெஸ்   செய்து  கொண்டிருப்பதுப் பற்றியும் அறிந்து  கொண்டேன். ( நாங்கள் பேசின மற்ற  விஷயங்கள் இந்த கதையின் எல்கைகளுக்கு அப்பாற்பட்டதால், அவற்றை பிறிதொரு சந்தர்ப்பத்தில், பிறிதொரு கதையில் எழுதுகிறேன்.)

முகுந்தனும்  நானும் ஸ்ரீரங்கம் அரசுப் பள்ளியில் ஒன்றாகப் படித்து, சேஷாய் பாலிடெக்னிகில் 'டிப்ளமா' முடித்தோம். படிப்பை முடித்த கையுடன் 'வாழ்வே மாயம்' படம் பார்த்தோம். நாங்கள் ஐந்து  பேர் ஜமா சேர்ந்து ஸ்ரீரங்கத்தையே சைக்கிளில் சுற்றி சுற்றி வந்தோம். நானும் முகுந்தனும் மட்டும் எலெக்ட்ரிகல்  டிப்ளமா ஆனதால் ,வீட்டு வயரிங் , எரியாமல் போன லைட்டை சரி பார்த்து, ஓடவே ஓடாத டேபிள் பேனை கிரீஸ் அடித்து ஓட்டி கிடைத்த காசில், ஐந்து உறுப்பினர்களுடன்  'கமல்' ரசிகர் மன்றம் தொடங்கினோம். நாங்கள் ஐந்து பேரும் கமல் மாதிரியே ஸ்டெப்கட் செய்து கொண்டு,பெல்பாட்டம் பேன்ட் அணிந்து கொண்டு  , செய்த அலம்பல்களை ஸ்ரீரங்கத்தின் முன்னாள் தேவதைகள் _ இந்நாள் மடிசார் மாமிகள் , அவ்வளவு லேசில் மறந்திருக்க மாட்டார்கள். தினசரி , சாயங்காலம் மொட்டை கோபுரத்து சலூனில் கூடி , ஓசி சீப்பில் தலை வாரியபடி மறு நாளுக்கான திட்டமிடலில் ஈடுபடுவோம்.

எல்லாம் கொஞ்ச நாளைக்குத்தான்..... அக்கௌண்ட்ஸ் படித்திருந்த ரங்குவுக்கும், 'மொக்கு' சீனுவுக்கும் பேங்க்கில் வேலை கிடைக்க , ராமானுஜனை அவன் அப்பா எங்களோடு சேர்ந்து பார்த்தால் காலை ஒடித்து விடுவதாக மிரட்டியதால் அவனும் ஒதுங்க, நானும் முகுந்தனும் மட்டும் 'கமலைக்' கட்டிக் கொண்டு அழுதோம். எங்கள் பேட்சிலேயே  நாங்கள் இருவர் மட்டும்தான் உருப்படியாக எதுவும் வேலை கிடைக்காமல் ரொம்ப காலம் சுற்றிக் கொண்டிருந்தோம். நான் முகுந்தன் வீட்டிற்கு அவன் அப்பா இருக்காத சமயங்களில் அவ்வப்போது செல்வதுண்டு. இந்த அக்காவிற்கு ஏற்கெனவே கல்யாணமாகி விட்டதால், முகுந்தனுடைய வீட்டில் இவர்களை நான் எப்போதோ ஓரிரு முறை மட்டும் பார்த்திருக்கிறேன்.

ஒரு தரம் அவனுடைய வீட்டிற்கு சென்றிருந்த போது, வீடு கொள்ளாமல் கூட்டம்.வைகுண்ட ஏகாதசிக்காக ஒரு வாரம் முன்பே உறவினர்கள் வந்து ரொம்பி இருந்தனர் . "வாடா , ரகுபதி  ...நாம திண்ணைல உக்காந்துண்டு பேசலாம்" என்று முகுந்தன் என்னை இழுத்துக் கொண்டு வந்த நேரம் , அவனுடைய உறவினர் ஒருவர் அவன் அம்மாவிடம் "ஒண்ணும் கவலையே படாதே,எச்சுமி.... முகுந்தன் ஜாதகத்த அலசிப் பாத்துட்டேன் ... ஓஹோன்னு இருப்பான் பாரு.... அவனைப் பத்தி நீ கவலையே பட வேண்டாம்.. பிசினெஸ் பண்ணுவான்.... கால்மேல கால் போட்டு உக்காந்துண்டு சம்பாதிப்பான்..... நான் சொல்றது நடக்கறதா இல்லியான்னு வேணா பாரேன்" என்று ரொம்ப நம்பிக்கையா சொன்னார்.

முகுந்தனின் தாயார்," நீ சொன்னா சரிண்ணா" என்று ஒன்பது கஜப் புடவையின் முந்தானையில் மூக்கை சிந்திக் கொண்டே ,விரல்களால் கண்களைத் துடைத்துக்  கொண்டாள்.

"இதே ஊரிலயே பிசினெஸ் பண்ணினா , மன்றத்தையும் நடத்துவோம்டா" என்றான் முகுந்தன்.

"ன் பேர் என்னன்னு சொன்னே?" என்று முகுந்தன் அக்கா கேட்டதில் திடுக்கிட்டு நிஜ உலகத்திற்கு வந்தேன்.

"ரகுபதி" என்றேன்.

"முகுந்தனோட கால் ரெண்டையும் எடுத்தாச்சு, தெரியுமோல்யோ" என்று அடுத்த அதிர்ச்சி  அம்பு என் மேல் குத்தி நின்றது.

"என்னத்து? காலை ...எடுத்தாச்சா? என்ன சொல்றேள்?" என்று  அதிர்ந்து கத்தியே விட்டேன்..

"ஒனக்குத் தெரிஞ்சிருக்கும்னு நினைச்சேன் ...... போன வருஷம், ஒரு ஆக்சிடெண்ட்ல அடிபட்டு பொழச்சதே புனர்ஜென்மம்னு ஆயிடுத்து..கால எடுக்க வேண்டியதா ஆயிடுத்து"

"அடப் பாவமே... இப்ப என்ன பண்றான்?"

"முகுந்தன்,கூரியர் கம்பெனியில   வேலைப் பாத்திண்டு இருந்த போது விபத்து நடந்துது.கால் போனதுக்கு அப்புறம் இங்கே தாம்பரத்தில ஒரு செல்போன் சர்வீஸ் கடை ஆரம்பிச்சு நடத்திண்டு இருக்கான்."

மாம்பலத்தில் இறங்க வேண்டிய நான் தாம்பரம் வந்ததும் இறங்கிக் கொண்டேன். அக்கா கொடுத்த முகவரியை நோக்கி நடந்தேன். "முகுந்தா.. என் இனிய நண்பனே... உனக்கு என்ன ஒரு சோதனை!! 'கால் மேல கால் போட்டுண்டு சம்பாதிப்பான்'ன்னு சொல்லப்பட்ட ஜோசியமும் உன்னளவில தோத்துப் போய்டுத்தே..முகுந்தா" என்று அரற்றியபடியே அவன் கடையைக் கண்டுபிடித்தேன்.கடையில் நாலைந்து கஸ்டமர்கள் இருந்ததால், கொஞ்சம் வெயிட் பண்ணி, கூட்டம் கலைந்ததும், அவனை நெருங்கினேன்.

 என்னை அவனுக்கு அடையாளம் தெரியவில்லை. 'என்ன சார் வேணும்?" என்றான்.
"முகுந்தா... நான் ரகுபதிடா " என்றேன்.
என்னை எனது பிரெஞ்சு தாடியிலிருந்து மைனஸ் பண்ணிப் பார்த்து விட்டு ,"டேய்..ரகு " என்று கத்தியவன் கண்களில் மின்னல் வெளிச்சம்..."எப்படீடா இங்கே?' என்றான்.
"பல்லவன்ல பெரியாக்காவைப் பாத்தேண்டா...உன்னப் பத்தி சொன்னா...உடனேப் பாக்கணும்னு தோணித்து...ஓடி வந்துட்டேன்டா.."

சேரை விட்டு எழுந்திருக்க பிரயத்தனித்தான்... "கால் ரெண்டும் போய்டுச்சுடா"என்றவன் குரலில் சுய கழிவிரக்கம் எட்டிப் பார்த்தாலும் ,"பொழச்சுட்டேண்டா ...எப்படியும் மேல வந்துடுவேன்.." என்று நம்பிக்கை வார்த்தைகளாய் வெளி வந்தன.

" கால் மேல கால் போட்டுண்டு சம்பாதிப்பேன்னு ஒன்னோட சொந்தக்காரர் சொன்னது ஞாபகம் வர்றதுடா,முகுந்தா" என்ற என் குரல் உடைந்ததை என்னால் உணர முடிந்தது.

"சரியாத்தாண்டா  சொல்லியிருக்கார்... இப்ப பாரு ... இந்த கால் போய்ட்டா என்னா... வந்து நிக்கற அத்தனை  பேர் மொபைல் போனுக்கும்  டாப் அப், ரீ சார்ஜ்னு 'கால்' மேல 'கால்' போட்டு சொல்லித்தான் ஏற்பாடு பண்ணறேன்" என்று கட,கடவென சிரித்தான், முகுந்தன்.

எனக்கு ,ஏனோ  சிரிக்கத் தோன்றவில்லை. 


*************

(தலைப்பு குறித்த விளக்கம்:  தமிழில் 'கால் '  (1 /4 ) ,என்பதற்கு   'வ' என்ற எழுத்து எழுதப்பட்டது.)





























Friday, October 29, 2010

ரசமான ரசம் !
(இந்த கதையைப் போல்  எல்லோருடைய வாழ்க்கையிலும் சம்பவங்கள் நடந்திருக்கும்.... 'நமக்கு  முன் கூட்டியே இப்படி நடக்கும் என்று தெரியாமல் போனதே' என்று எத்தனையோ முறை புலம்பியிருப்போம்... அப்படித்தெரியாமல் போவதுதான்  வாழ்க்கையின் சுவாரஸ்யமே! )

"என்ன, இன்னிக்கும் சாம்பார்தானா ,ரசமில்லையா  ?"-என்றான் ரூபன், சலிப்புடன்.(அப்படி கேட்டிருக்க வேண்டாம்.)

"ஒங்க அருமை புள்ளையை   கடைக்கு அனுப்பி தக்காளி,கொத்துமல்லி,பூண்டு வாங்கிட்டு வரச் சொல்லுங்க ...வேணா ரசம் வைக்கிறேன்" -இது சுமதி.

"குயந்தை புஸ்தகத்தே எடுத்து வெச்சிண்டு  படிக்கறதே அபூர்வம்...படிக்கட்டும். நானே போயி வாங்கிட்டு வந்துடறேன்" என்றபடி  செய்தித்தாளை  கடாசி விட்டு சட்டையை மாட்டிக்கொண்டு கிளம்பினான். (கிளம்பியிருக்கவேண்டாம்.)

செருப்பை மாட்டிக்கொண்டிருக்கையில் "இந்தாங்க ஸ்கூட்டர் சாவி" என்றாள் சுமதி.

"ஆமா இங்க இருக்கற மார்கெட்டுக்கு ஸ்கூட்டர்ல போகணுமா?..நடந்தே போயிட்டு வந்துடறேன்" என்று தெருவில் இறங்கினான்.  (ஸ்கூட்டர்லியே போயிருக்கலாம்)

நடந்து மெயின் ரோடை அடைந்ததும், ட்ராபிக் சிக்னலுக்காக அவனை ஒட்டி வந்து நின்றது ஒரு பேருந்து. 'அவ்வளவு தூரம் நடக்கணுமா? ரெண்டு ரூபா கொடுத்து மார்க்கெட்டுக்கு போயிடலாமே..' என்று (தோன்றாமலிருந்திருக்கலாம்) தோன்றியது.

பஸ்சிலும் கூட்டமில்லை. பின்பக்க நுழைவு வழியாக ஏறி சீட்டில் அமர்ந்தான், ரூபன். கண்டக்டர் , டிரைவருக்கருகில் நின்றுகொண்டு பேசிக்கொண்டிருந்தார்.'இங்க வரட்டும்.. டிக்கட் வாங்கிக் கொள்ளலாம்' என்று இரண்டு ரூபாய் நாணயத்தை கையில் வைத்துகொண்டு வெளியில்  வேடிக்கை பார்த்தபடியிருந்தான்.(அப்படியே வேடிக்கை பார்த்துக் கொண்டேயிருந்திருக்கலாம்)

ஏதேச்சையாக  ரூபன் பஸ்சிற்குள் பார்க்க, அவனுக்கு முந்தைய சீட்டில் அமர்ந்திருந்த ஒரு பெரியவரின் ஜிப்பாவை ஒரு ரௌடி 'ப்ளேடு' போடவும் ரூபனுக்குத் தூக்கிவாரிப் போட்டது! "ஐயோ..திருடன்" என்று கத்தியபடி 'ஆக்ஷன் கிங் அர்ஜுனாக' தன்னை பாவித்துக் கொண்டு ,ரூபன் அந்த ரௌடியின் முதுகுப் புற சட்டையைக் கோர்த்துப் பிடித்து ஓங்கி ஒரு குத்து விட்டான். 'சர்ட்'டென்று  திரும்பிய ரௌடி , பின்பக்க நுழைவு வழியாக இறங்கி ஓட முயல, ரூபனும் அவனைத் துரத்திக் கொண்டு ரன்னிங்கிலேயே இறங்கி துரத்த, அவன் சற்றும் எதிர்பாராத சந்தர்ப்பத்தில் ரௌடி, ரூபனுடைய  இடது  கையில்  'சரக்'கென்று கத்தியை செருகி வெளியே எடுத்ததில் 'குபுக்'கென்று ரத்தம் கொட்டியது. கொட்டிய 'ஏ' பாசிடிவைப்  பார்த்த  ரூபன், மயங்கி சரிய  ரௌடி'எஸ்'ஆனான்.

'சடன்'  ப்ரேக் போட்டு நின்ற பஸ்சில்லிருந்து கண்டக்டரும், பர்சைப் பறி கொடுத்த  பெரியவர் உட்பட அனைவரும் இறங்கி ஓடி வந்தனர்.

"பிக்பாக்கெட்டுங்க  நிறைய பேர் சுத்தறுதுனால நான் பைசாவே பர்சுல வைக்காமே பைக்குளையே வெச்சுக்குவேன்...இது  தெரியாம இப்படி  குத்துப்படணும்னு ஒன் தலையெழுத்து  " என்று பெரியவர் சொன்னதும்,  "யோவ்.. டிக்கெட் வாங்கிட்டியா இல்லியா" என்று கண்டக்டர் கேட்டதும் மயக்க நிலைக்குப் பயணப்பட்டுக் கொண்டிருந்த ரூபனுக்கு அமானுஷ்யமாகக் கேட்டது.

***** 
ஹாஸ்பிடல்.

கையில்  கட்டுப் போட்டபடிக் கட்டிலில் கிடக்கும் ரூபனுக்கருகில் மூக்கை முந்தானையில் சிந்தியபடியிருந்தாள், சுமதி."என்னங்க... பசிக்குதா... சாப்பிடறீங்களா?" என்றாள்.

"ம்ம்ம் ...ம்ம்"   என்று முனகியபடி உட்கார்ந்தான் , ரூபன்.

தட்டில் ,சோறிட்டு சாம்பாரை ஊற்றியவளிடம் "என்ன, இன்னிக்கும் சாம்பார்தானா,ரசமில்லையா  ?"என்று இத்தனைக்கும் காரணமான முதல் வரி கேள்வியைக் கேட்டு விட்டு நாக்கைக் கடித்துக் கொண்டான், ரூபன்.