Pages

நேசம் நம் சுவாசம் !

Showing posts with label ஊர் வம்பு. Show all posts
Showing posts with label ஊர் வம்பு. Show all posts

Sunday, June 19, 2011

பி(ஸ்)ஸி பேளா பாத்

நவீன பி(ஸ்)ஸி பேளா பாத் சாப்பிடலாம் வாங்க....

                      ந்த ‘கம்ப்யூட்டர்’, எல்லா துறைகளிலும்  புகுந்து கொலைவெறி தாண்டவம் ஆடும் இய்யுகத்தில் தமிழனின் பெருமைத்தளமான சமையல்துறையையும் விட்டுவைக்க வேண்டாம் என்கிற பேருள்ளம் கொண்டு ’பி(ஸ்)ஸி பேளா பாத்’ செய்து சாப்பிடும் முறை இவ்வாரம் வெளியிடப்படுகிறது.

                        சமையல் ‘ரெசிபி’ புத்தகங்கள் பெரும்பாலும் ‘சமைத்துப் பார்’ என்கிற ஒரு மாதிரியான கட்டளைத் தலைப்புடன்தான் வெளிவருகின்றன. விஷயம் தெரிவதாகக் காட்டிக் கொள்(ல்)கிற நண்பர் ஒருவரிடம் இது குறித்து கேட்டபோது,”ஆமாம்...அப்படித்தான் தலைப்பிடுகிறார்கள். ‘ரெசிபி’ பிரகாரம் செய்து பார்த்தோமே....டேஸ்டாக இல்லையே என்று எசகுபிசகாக யாராவது கேள்வி கேட்டுத் தொலைத்தால் ”நாங்கள் சமைத்துப் பார் என்றுதானே போட்டிருக்கிறோம்...உங்களை யார் சாப்பிடவெல்லாம் சொன்னது?’’என்று மடக்குக் கேள்வி கேட்டு அமுக்கிவிடலாம் என்ற தப்பித்தல் மனோபாவத்துடன் அவை அப்படி வெளியிடப்படுகிறன” என்றார்.

                     ஆனால், இந்த ‘ரெசிபி’ அந்த ரகம் இல்லை. தாராளமாக, மடிக்கணினியை அடுக்களைக்கு எடுத்துப் போய், ‘கேஸ்’அடுப்பின் ஜ்வாலைத் தொடர்பு எல்லைக்கு அப்பால் வைத்துக் கொண்டு வரிவரியாகப் படித்தபடி ஜூடான, ஜுவையான ’பி(ஸ்)ஸி பேளா பாத்’ தயாரிக்கலாம். தயாரிக்கப்பட்ட ‘மேற்படியை’ டைனிங் டேபிளுக்கு எடுத்துப் போய் தானும் சாப்பிட்டு மகிழலாம்....அகப்பட்டவர்க்கும் அளித்து மகிழலாம்.

                     முதலில் இந்த அய்ட்டங்களை ரெடி பண்ணிக் கொள்ளவும்.

                  கெட்டி அவல் ....... 250 கிராம்
                   பாசிப்பருப்பு ..........100 கிராம்
                  பெரிய வெங்காயம் ........ 2
                   பெங்களூர் தக்காளி ........ 2
                    உருளைக்கிழங்கு ..............2
                     கேரட் ........................................1
                    ஊறிய பச்சைப் பட்டாணி.......50 கிராம்
                     சாம்பார் பொடி ..................... 2 ஸ்பூன்
                     கரம் மசாலா பொடி ..............1 ஸ்பூன்
                      புளி ..........................        நெல்லிக்காய் அளவு
                      கொ.மல்லி விதை+கடலைப் பருப்பு+மி.வத்தல்+                                      (தம்மாத்துண்டு)தேங்காய்துருவல்
                      பச்சை கொத்துமல்லி 
                      முந்திரிப் பருப்பு+நெய்
                      ரீஃபைண்ட் ஆயில்
                       பட்டை,லவங்கம்,ஏலக்காய்

                       ஓக்கே....ரெடியா?

                       அடுப்பை பற்றவைத்து, ப்ரஷர் பேனில் கொஞ்சம்  ரீஃபைண்ட் ஆயிலையும் நெய்யையும் ஊற்றி பட்டை,லவங்கம்,ஏலக்காய் ஆகியவற்றை ஃப்ரை செய்து,  பொடிபொடியாக நறுக்கின பெரிய வெங்காயத்தை பொன்னிறமாக வதக்கி, அப்புறம் நறுக்கின மற்ற காய்கறிகளையும் போட்டு வதக்கி லேசாக ஒரு பெருமூச்சை உதிர்க்கவும்.
                        
                 பிறகு, சாம்பார் பொடியையும்  கரம் மசாலா பொடியையும் போட்டு வதக்கி, புளிக்கரைசலை அதில் ஊற்றி ஒரு கிளறு கிளறி கொதிக்க வைக்கவும்.
‘தள..புள’வென்று கொதிக்கத் தொடங்கும்போது தண்ணீரில் நனைத்த அவலையும், பாசிப்பருப்பையும் அதில் இடவும். ஒரு பங்கிற்கு சுமார் மூன்று பங்கு தண்ணீர் ஊற்றி, பிறகு தேவையான அளவு உப்பு இடவும்.
  
                  கொ.மல்லி விதை+கடலைப் பருப்பு+மி.வத்தல்+                               (தம்மாத்துண்டு) தேங்காய்துருவல் ஆகியவற்றை தனியே வறுத்து மிக்ஸியில் பொடித்துக் கொண்டு  அந்த பொடியையும்  ப்ரஷர் பேனில் கொதித்துக் கொண்டிருக்கும்  சமாச்சாரத்தில் போடவும்.

                 ப்ரஷர் பேனை மூடி வைத்து வெயிட்டைப் போடவும். மூன்று விசில் வரும் வரை அவரவர்க்கு இஷ்டப்பட்ட தெய்வங்களை வேண்டிக் கொள்ளலாம். மூன்றாம் விசில் அடித்த முப்பதாவது வினாடியில் அடுப்பை அணைக்கவும். 

                  சிறிது நேரம் தேவுடு காத்துவிட்டு மூடியைத் திறந்து நறுக்கின கொத்மல்லியையும் நெய்யில் பொறித்த முந்திரிப்பருப்பையும் அதில் போட்டு, நன்றாக கிளறி டைனிங் டேபிளுக்கு எடுத்து செல்லவும். 

                   பிரியமானவர்களுடன் அமர்ந்து பரிமாறி சூடாக,ஸ்பூன் உதவியுடன்  சாப்பிட்டு மகிழலாம். விருப்பத்திற்கு ஏற்றார்போல் காராபூந்தியோ, சிப்ஸோ சேர்த்துக்கொள்ளலாம்.
        
                   உங்களுடைய   குடும்பத்து உறுப்பினர் எவர்க்கேனும் ‘ஷுகர்’ இருந்தால் அவர்களுக்கு அவலுக்கு பதிலாக சம்பாகோதுமை ரவா உபயோகித்து செய்து தரலாம்.

 ****************

                 (பி.கு.:  திருமதி இந்த பதார்த்தத்தை செய்த போது “ஆஹ்ஹா.... ஓஹ்ஹோ”என்று பாராட்டியதன் விளைவு.....’இதை 'blog'ல் எழுதுங்களேன்’ என்ற அன்புக் கட்டளை. நீங்களும் செய்து பார்த்து, சாப்பிட்டுப் பார்த்து, பாராட்டித்தான் பாருங்களேன்!)

















                 
     















Saturday, June 4, 2011

நான் அடிச்சா தாங்கமாட்டே...


                 ரொம்ப நாட்களுக்கு பிறகு எனது பால்ய நண்பன் அப்துல் கஃபூரை  கைபேசி மூலம் தொடர்பு கொண்ட போது, ‘ராசாவே உன்ன..காணாத நெஞ்சு.. காத்தாடி போலாடுதே’ என்ற  ட்யூன் முடிந்த பிறகு, செருமியபடி, “ஹலோ... சொல்லுங்க ...எல்லென்” என்றான்.
                  ஷேம,லாபங்களைப் பற்றி விசாரித்துவிட்டு, “கஃபூர்.... போன வாரம் திருச்சி போயிருந்தேன்... அப்ப நம்ப  மேத்ஸ் டீச்சர் கிருஷ்ணன் சாரப் பாத்தேன்” என்றேன்.
                   “ஹேய்... நம்ப ’மஞ்சள் மகிமை’ கிருஷ்ணன் சாரா ? எப்படிப்பா இருக்கார்”
                   “நல்லாவே இருக்கார்.... என்ன.. வயசாயிடிச்சதுனால லேசா டல்லடிக்கிறார் ... மத்தபடி ஓக்கே”
                    “உன்ன அடையாளம் கண்டுகிட்டாரா?”
                    “ம்ஹூம்...’முத பெஞ்சில உட்கார்ந்திருப்பேனே சார்... உங்களுக்கு வெத்தில, பாக்கு கூட வாங்கி வருவேனே சார்’ங்கிறேன்.... ஆமாம்.. ஆமாங்கிறார்... ஆனா அவரால சரியா புரிஞ்சிக்க முடியல”
                    “அப்புறம்...” என்ற கஃபூர், “ஒரு நிமிஷம்..எல்லென்... சிக்னல் சரியா கிடைக்கல... மாடிக்கு வர்றேன்” என்று சொல்லி விட்டு சில நொடி மெளனம் காத்து, “ ம்... இப்ப சொல்லு” என்றான்.
                    “அப்புறமென்ன... ’சார்... நான் கஃபூர் கிளாஸ்மேட் சார்’ ன்னதும், அவர் முகத்தில ’அப்படியா’ன்னு ...ஒரே சந்தோஷம்...ஒன்னெ நல்லா ஞாபகம் வச்சுருக்கார்”
                     “அப்படியா..”என்றவனின் குரலிலும் சந்தோஷம் தொனித்தது.”என்ன அவரால மறக்க முடியாது...எல்லென். அதே போல எனக்கும் அவர லேசில மறக்க முடியாது” என்றான்.
                        இந்த கைபேசி சம்பாஷணையில் நமக்கு தேவையான இடத்தில் தற்போது நாம் நிற்பதால் இந்த உரையாடலை இங்கேயே  'freeze'  செய்து விட்டு கதைக்கு வருவோம்.
                       1974 - 75 -இல் நானும் கஃபூரும் S.S.L.C. (அப்போது XI Std.,) படித்துக் கொண்டிருந்தோம். நான் காலாண்டுத் தேர்வுக்கு முன்னால் ‘டைபாய்டு’ ஜுரத்தில் படுத்துவிட்ட போது யக்ஞராமன் என்ற நண்பனும் இந்த கஃபூரும்தான் என் வீட்டிற்கு வந்து அன்றாடம் நடந்த  பாட விவரங்களை எனக்கு சொல்வர். அந்த நன்றி கலந்த நட்பு 35 வருடங்களுக்கு பிறகும் - இன்றளவும் - எனக்கு கஃபூருடன் தொடர்கிறது.
                       கஃபூர் ஒரு  above average student.  படிப்பில் மிகவும் ஆர்வம் மிக்கவன். எல்லா பாடங்களிலும் 70 - 80 என்று வாங்குபவன், கணக்கில் மட்டும் நொண்டியடிப்பான். 50 -ஐ  தாண்ட ’தலைகீழாய் நின்று தண்ணி குடிப்பான்’.  
                        ’கிருஷ்ணன் சார்ட்ட மட்டும் ட்யூஷன் எடுத்தேன்னா நல்லா மார்க் வாங்கலாம்டான்னு’ சொல்வான்... அவர்கிட்ட கேட்டுப் பார்த்தான்..கெஞ்சிப் பார்த்தான். ஆனா, அவர் ஏனோ காரணத்தினால அவனுக்கு ட்யூஷன் எடுக்கறத தவிர்த்துகிட்டே வந்தார்.
                        சம்பவ தினத்தன்று, க்ளாஸ் ரூமில் மேத்ஸ் க்ளாஸை  கிருஷ்ணன் சார், மிகுந்த ரசனையுடன் எடுத்துக் கொண்டிருக்கிறார்.  சார், ஒரு கோபிஷ்டர் என்பதால் எல்லோரும் மிகுந்த கவனத்துடன் பாடத்தைக் கவனிக்கிறோம். ஆனால், மூன்றாவது பெஞ்சில் , கஃபூரோ இடது கையை இடது கன்னத்திற்கு முட்டு கொடுத்தவாறு உட்கார்ந்திருந்த ‘போஸை’ பார்த்த சாருக்கு வந்ததே கோபம். கஃபூரை எழுந்திருக்கச் சொல்லி ‘பொளிச்’சென்று விட்டார், ஒரு அறை. என் காதுக்குள் ‘ஙொய்ங்’ஙென்றது. அதைத் தொடர்ந்து ,
                        “அய்யோ” என்று  ஒரு அலறல்... அடி வாங்கிய கஃபூர் கத்தவில்லை...அடி கொடுத்த சார்தான் அலறியிருக்கிறார். என்ன நடந்தது என்று நாங்கள் எழுந்து நின்று பார்க்கிறோம்......கஃபூரின் வாயிலிருந்து பல் உடைந்து ரத்தம் ‘குபுக்..குபுக்’கென்று தினத்தந்தி பாஷைக் கணக்காய்க் கொட்டுகிறது. ரத்ததைப் பார்த்த சாருக்கு கையும் ஓடவில்லை...காலும் ஓடவில்லை...அவர் தேகம் நடுங்குகிறது...டென்ஷனாகி விட்டார்...”லீடர் இவனை பாத்ரூமுக்கு கூட்டிக்கிட்டுப் போய் வாயைக் கழுவி, காண்டீன்ல  டீ வாங்கிக் கொடு....” என்று சொல்லி லீடர் கையில் ஐந்து ரூபாயைத் திணிக்கிறார்.
                      அன்று அவர் பட்ட பாடு எங்களுக்குத்தான் தெரியும்....எல்லாம் நல்ல படியாக நடந்தேறி, அவன் சொஸ்தமாக கிளாஸிற்கு வந்து சேர்ந்த பின்புதான் சாரின் முகம் மந்தஹாசமாகியது.(இரண்டு டீ போக மிச்ச சில்லறை அவர் கைக்கு போகவில்லை என்பது வேறு விஷயம்.)
                      அன்று நடந்த சம்பவத்தை ஹெட்மாஸ்டர் வரையில் கொண்டு போக மாட்டேன் என்று அவரிடம் கஃபூர் சத்தியம் செய்த போது, சார் அவனை உச்சிமுகராத குறைதான். 
                       ஆனால் அடுத்தடுத்த கிளாஸ்களில் சார்வாள் பொத்தாம்பொதுவாக,”ஓங்கி அடிச்சேன்னா, பல்லு முகரையெல்லாம் பிஞ்சிடும்” என்று ‘சிங்கம்’பட வசனம் மாதிரி பேசி உதார் விடும் போது எங்களுக்கு லேசாய் சிரிப்பு வரும்.
                        அதற்குப் பிறகு கஃபூர், ஒரு சரியான சந்தர்ப்பத்தில் ,” எங்கப்பா உங்களைப் பாக்கணும்னு சொன்னார்,சார்”னு சொல்லவும், சார் பதட்டமாகினாராம். “எதுக்கு..எதுக்கு?” என்றாராம்.
                        “உங்ககிட்ட மேத்ஸ் ட்யூஷன் சம்பந்தமா பேசணுமாம், சார்” என்றிருக்கிறான், கஃபூர்.
                        ‘ இதுக்கெல்லாம் அப்பா வந்து என்னத்துக்கு சொல்லணும்... நாளை முதல் நீ ட்யூஷனுக்கு வந்துடு” என்று சொல்லி விட்டாராம்.
                         அவரிடத்தில்  ட்யூஷன் படித்து கணக்கில் 100 க்கு 100 வாங்கியதை எல்லோரிடத்தும் ,எப்போதும் பெருமையாக சொல்லிக் கொள்ளும்  கஃபூர், அடி வாங்கிய அன்றைக்கு அவன் பல் வலியால் அவஸ்தைப் பட்டுக் கொண்டிருந்ததையும் , அதனால் கையூன்றி அமர்ந்திருந்ததையும், நயா பைசா செலவில்லாமல் பல் ‘பிடுங்க’ப்பட்டதையும் எவரிடத்தும் சொன்னதே இல்லை -  என்னைத் தவிர.

**********                 
 

                  

                       
 
 









Sunday, May 22, 2011

                             சின்முத்ரா 



                 தியானத்தின் போது கைகளை இந்த படத்தில் உள்ளது போல் வைத்துக் கொண்டு த்யானிப்பது மிக விசேஷமானது. இதற்கு நாட்டிய  சாஸ்த்ரத்தில்  சின்முத்திரை என்று பெயர்.

                  தனித்தன்மைப் பெற்றிருப்பதாலும் , அதில்லாமல் மற்ற விரல்களின் இயக்கங்கள் ஸ்தம்பித்து விடும் என்பதாலும் கட்டை விரல்  - பரமனைக் குறிக்கிறது.
                  சுட்டிக் காண்பிப்பதின் மூலம் மனித தாத்பர்யத்தை உணர்த்துவதால் , சுட்டு விரல் - ஜீவனைக் குறிக்கிறது.

                  மோதிரம் அணிவதற்காக பிரத்தியேகமாக உள்ள மோதிர விரல் - பொன்னைக் குறிக்கிறது.

                  பாம்பைக் குறித்து , பாம்பு உறையும் இடத்தை உணர்த்தும்  பாம்பு விரல்  - மண்ணைக் குறிக்கிறது.

                  நளினமானதாலும் , மென்மையானதாலும் கடைசியான சிறு விரல்பெண்ணைக் குறிக்கிறது.

                  ‘அதாவது , சுட்டுவிரல் கட்டைவிரலைத் தவிர மற்ற மூன்று விரல்களுடன் இயைந்து அமைந்திருப்பது போல் ஜீவாத்மா எப்போதும் மண், பொன், பெண் ஆகியவற்றில் அமிழ்ந்து உழன்று கொண்டிருக்கிறது. அப்பேர்பட்ட ஜீவாத்மா , பரமாத்மாவை அடைய வேண்டுமானால் அம்மூன்றிலிருந்தும் விலகி வர வேண்டும். பிறகுதான் பரமனை அடைவது சாத்தியம்’ என்கிற அரிய தத்துவத்தை உணர்த்துகிறது இந்த சின்முத்திரை.   

*******************



Saturday, April 30, 2011

             பேரு....பெத்த (BEDDHA ) பேரு...




                         ந்த இன்டர்நெட் யுகத்தில் எதற்குத்தான் வெப்சைட்டை நோண்டுவது என்ற விவஸ்தையே இல்லாமல்போய் விட்டது.....ஊசி முதல்  ஊலல்லா   பாடல் வரை 'நெட்'டில் தான் தேடுகிறார்கள். இப்படித்தான் ஒருநாள் எனது ஷட்டகரின் மகள், தனக்கு நான்கு மாதங்களுக்கு பிறகு பிறக்க இருக்கும் குழந்தைக்காக இப்போதே 'நெட்'இல் பெயர் தேடிக் கொண்டிருந்தாள். நம் காலத்தில் எல்லாம் இதெற்கெல்லாம் இப்படியா ரூம் போட்டு யோசித்தார்கள்? 'சாமி பெயரை வை....இல்லையென்றால் தாத்தா,பாட்டி பெயரை வை' என்று சொல்லி விட்டு போய்க் கொண்டே இருப்பார்கள்.
                       அப்படித்தான் எனக்கு 'லக்ஷ்மிநாராயணன்' என்ற என் அம்மா வழி தாத்தாவின் பெயர்  வைக்கப்பட்டது.
                         அவர் நினைவாய் எனக்கு லக்ஷ்மிநாராயணன் என்ற நாமகரணம் சூட்டப்பட்டாலும், பெரியவரின் பெயரை எப்படி கூப்பிடுவது என்பதால் 'கிரிதரன்' என சம்பந்தாசம்பந்தம் இல்லாமல் ஒரு பெயரை வைத்து வீட்டில் கூப்பிட்டனர் . பின்னே என்ன லக்ஷ்மிநாராயணன் என்ற பெயரை சுருக்கி “நாணா” என்றோ “லக்‌ஷ்மணன்” என்றோ அழைத்திருக்கலாம்.
                        ஆனால், நண்பர்கள் என்னை 'லக்ஷ்மிநாராயணன்' என்று நீட்டிமுழக்காமல்   செல்லமாக 'லக்ஷ்மி' என்று  அழைத்தபோதுதான் சில சங்கடங்கள் உதித்தன.
                         நான் திருச்சியில் ஆறாப்பு  படித்துக்கொண்டிருந்தபோது ஒரு நாள் ஸ்கூலுக்குப்  போகிறேன். போகிற வழியில், பச்சை வர்ண தாவணி  வண்ணத்துப் பூச்சிகள் படிக்கும்  ’சாவித்திரி வித்யாசாலா பெண்கள் பள்ளிக்கூடத்தை’ தாண்டித்தான் போயாகவேண்டும். பின்னால் வந்து கொண்டிருந்த என் நண்பன் மனோகர் என்னை நோக்கி ,"லக்ஷ்மி" என்று விளிக்க, ஒரு தாவணி அக்கா அவனை முறைத்து ஏதோ திட்ட, நண்பன்  அன்றோடு என் சங்காத்தமே வேண்டாம் என்கிற முடிவிற்கு வந்து விட்டான். 
                          ரு முறை அப்படித்தான்....திருச்சி வானொலி நிலையத்தில் பணி புரிந்து கொண்டிருந்த போது, ஒரு வேளாண்  நிகழ்ச்சிக்காக ஒலிப்பதிவு செய்ய நாலைந்து அலுவலர்கள் ஜீப்பில் மயிலாடுதுறை சென்றோம். ஒரு  குறிப்பிட்ட B .D .O . விடம்  குரல் பதிவு செய்ய வேண்டி இருந்தது. B .D .O . ரெடியாக இருந்தால் என்னை அழைப்பதாகவும் அதன் பின் மைக், ரிகார்டரெல்லாம் செட் பண்ணிக் கொள்ளலாம் என்று சொல்லி விட்டு ஜீப்பை விட்டு இறங்கினார் என் நண்பரும் நிகழ்ச்சி பொறுப்பாளருமான கண்ணன்.
                         B .D .O . ஒலிப்பதிவிற்கு உடனே ஒத்துக் கொண்டிருக்கிறார். கண்ணனும் தன்னுடன் வந்த ஜீப் டிரைவரிடம் .'' ஒலிப்பதிவு பண்ணிடலாம்...லக்ஷ்மியை, வரச் சொல்லுங்க" என்றதும், அந்த B .D .O . தலையை சீப்பெடுத்து வாருகிறாராம், மீசையை வாருகிறாராம். வேர்வை துடைத்து 'மாவடித்து' கொள்கிறாராம். முக்கால் கையாக மடித்துவைத்த  சட்டையை அவசராவசரமாக முழுக்கையாக்கி, பொத்தானிட்டு  ரெடியானாராம். நான் மைக் ரெகார்டர் சகிதம் உள்ளே போனதும், "வாங்க லக்ஷ்மி, ரெகார்ட் பண்ணிடுவோம்" என்று என்னைப்பார்த்து கண்ணன் சொன்னதும் அந்த B .D .O .வின் முகம் ’ஙே’ என்றாகிவிட்டது !!
                         காதலித்துக்கொண்டிருந்த நாள்களில் , போனில் சாதாரணமாகப் பேசிக் கொண்டிருப்பவள் திடும்மென்று ,"டீ லக்ஷ்மி, அசைன்மென்ட் முடிச்சிட்டு சீக்கிரம் கொடுடீ...நான் எழுதணும்" என்று சொன்னாள் என்றால்  'பார்ட்டி'யின்  அப்ஸோ,அம்ஸோ 'அங்கிட்டு' அருகில் இருப்பதாக அர்த்தம். உஷாராகி விரைவாய் பேச்சுவார்த்தையை முடித்துக் கொள்வேன்.
                        இப்படி என் பெயரை சுருக்கி அழைத்ததால் ஏற்பட்ட சந்தோஷ/ சங்கடங்கள் ஒரு பக்கம் இருந்தாலும் இந்த அற்புதமான பெயரை மிகவும் நேசிக்கவே செய்கிறேன்.
                         தே திருச்சி வானொலி நிலையத்தில் பணிபுரிந்து கொண்டிருந்தபோது மற்றொரு மறக்கவொண்ணா சம்பவம். ஒரு நாள் ,
                          "லக்ஷ்மி...உங்களுக்கு ஒரு போன் கால்" - என்றார் ஒரு நண்பர்.
                          யாராயிருக்கும் என்கிற யோசனையுடன் நண்பர் கையிலிருந்து ரிசீவரை வாங்கி ,"ஹலோ" என்றேன்.
                           பரிச்சயமில்லாத ஆண் குரலொன்று ,"லக்ஷ்மிநாராயணன்தானே?' என்றது.
                           "ஹாங்"
                           "நான்தாண்டா கிரி, சித்தப்பா பேசறேன்"
                           "ஓ...சித்தப்பாவா?  சொல்லுங்க சித்தப்பா...எங்கேயிருந்து பேசறீங்க?"
                           "திண்டுக்கல்லில் இருந்துதான் பேசறேன்"
                            என் அப்பாவின் கடைசி தம்பி,அதாவது, எங்கள் சித்தப்பா அப்போது திண்டுக்கல்லில்தான் இருந்தார்.
                            "என்னாச்சு சித்தப்பா வாய்ஸ் என்னமோ மாதிரி இருக்கு ? தொண்டை கட்டியிருக்கா?" என்றேன் அக்கறையாய்.
                            ”ஆமாம்ப்பா” என்றவர் க்ஷேம லாபங்களை விசாரித்துவிட்டு, "உங்கம்மா VRS க்கு எழுதிக் கொடுத்திட்டாங்களா?" என்றார்.
                            சமையலறையே கதியாய்க் கிடக்கும் இல்லத்தரசியான அம்மாவாவது VRS ஆவது .... கொடுப்பதாவது.... எங்கியோ இடிக்குதே...என்று யோசித்தேன்...
                            "சார்...இது ஏதோ ராங் நம்பர்...உங்களுக்கு யார் வேணும்"
                            "லக்ஷ்மிநாராயணன்தானேப்பா நீ?"
                            "ஆமாம்"
                            "வீட்டிலே கூட உன்னை கிரின்னு  கூப்பிடுவாங்களே"
                            "வாஸ்தவம்தான்" என்றேன்.
                            "போன மார்ச்ல மெட்ராசிலிருந்து ட்ரான்ஸ்பர் வாங்கிகிட்டு திருச்சி வந்தியேப்பா"
                            எனக்கு நெற்றியில் வியர்த்தாலும் மண்டைக்குள் 'சுர்'ரென்று ரத்தம் சுழட்டி அடித்து நியூரான்களை உசுப்பி,'அடடா....கிளெரிகல் செக்ஷன் 
லக்ஷ்மிநாராயணன்' என்றது.
                            விஷயத்தை அவருக்கு விண்டுரைத்தேன்."அப்படியா, ஹாஹ்..ஹா' என்று போனுக்குள்ளிருந்து சிரித்தார்.
                             அப்புறம் அந்த லக்ஷ்மிநாராயணனை அழைத்து விஷயத்தை விளக்கினேன்.அவனது சித்தப்பாவிடம் பேசச் சொன்னேன்.
                              எங்கள் இரண்டு பேருக்கும் இருந்த அபூர்வ 'பெயர்கள் ஒற்றுமை' அந்த சம்பவத்திற்கு பிறகு இன்றுவரை எங்களுக்குள் ஒரு ஆரோக்கியமான  நட்பிற்கு வழி வகுத்தது என்பது வேறு விஷயம் !

************














                         

Sunday, March 27, 2011

தூங்கு மூஞ்சி மரம்



                  {கடந்த நாலைந்து வாரங்களாக ஆபிசிலும், வீட்டிலும் அய்யா பயங்கர பிசி... சிந்தனை குதிரை 'டொக்..டொக்'கென்று அதுபாட்டிற்கு ஓடிக் கொண்டிருந்தாலும் ஆற அமர உட்கார்ந்து இரண்டு வரி அடிக்க, மனசு ஒத்துழைக்க  வேணுமே...ம்ஹும்...நம் இனி(ணை)ய நண்பர்கள் "என்னாச்சு ?" என்று அக்கறையுடன் விசாரித்தனர்....எப்பொழுதும் என்னை எழுத உற்சாகப் படுத்தும் ஆர்.ஆர்.ஆர் சார், "ஆபிஸ், வீடுன்னு ஏதாவது காரணம் சொல்லாம எழுதுங்க " என்று அன்புக் கட்டளையிட்டார்...மேலும் , நலம் விசாரித்த பிரணவம் ரவிக்குமார் அவர்களுக்கும் கூடை கூடையாய் நன்றி கூறி தொடர்கிறேன்.}

             யாம் அறிந்த வரையில் எல்லா அரசு அலுவலகங்களின் முகப்பிலும் குறைந்தது ஒரு தூங்கு மூஞ்சி மரமாவது இருக்கிறது....'இது ஏன் ?' என்ற கேள்வி என் மூளையை அடிக்கடி பிறாண்டும். நானும் ,அங்கு பணி புரிவதாய் சொல்லிக் கொள்ளும் சில நண்பர்களிடம் கேட்டால் அவர்களுக்கும் தெரியவில்லை..'சிம்பாலிக் ஆக இருக்குமோ ' என்று என்னையே திரும்பிக் கேட்டு விட்டு  கொட்டாவி விட்டனர்..."ஏன் எதுக்குன்னு தெரியாதுப்பா...நாங்க மதியம் லஞ்ச் முடிச்சிட்டு வெற்றிலை பாக்கு,சிகரெட்,பான்,கடலை மிட்டாய் போன்றவற்றை அரட்டையுடன் அனுபவிக்க கிடைத்த நிழற்குடை..." என்றனர் வேறு சிலர்.

                   நமக்குத்தான் ஒரு விஷயம் கிடைத்து விட்டால் வேர் வரை சென்று அலசுவது வழக்கம் ஆயிற்றே... அதுவும் மரம் பற்றிய விபரம்.... விட்டு விடுவோமா...

                  இப்படித்தான் ஒரே ஒரு ஊரில் ஒரே ஒரு அரசு அலுவலகமாம்.... நகரத்தை விட்டு பதினான்கு கி.மீ. தொலைவில் ஜன நடமாட்டம் அதிகம் இல்லாத இடத்தில் அமைந்திருந்ததாம். பிரிட்டிஷ் காலத்து பில்டிங். சுற்றிலும் எக்கச்சக்கச்சக்க வெற்று நிலம்...
                   ஒரு முறை அந்த ஆபிஸின் உயரதிகாரி "ஆஹா இத்தனை இடம் வெறுமனே இருக்கிறதே.. உபயோகமாக ஏதாவது பயிர் பண்ணலாமே" என்று ஒரு ஐடியாவை உதிர்க்க மூன்றே மாதங்களில் பூச்செடிகளால் நிரம்பியது அந்த இடம்...விதம் விதமான ரோஜாக்களும், சாமந்திகளும், மல்லிகையும் அந்த பிரதேசத்தை மிக ரம்யமாக்கின.
                    அடுத்து வந்தது வல்லடி... ஆபிஸிற்கு லீவு போட்டிருந்தாலும் ஊழியர்கள் மெனக்கெட்டுஆபிஸிற்கு வந்து ஆளாளுக்கு இத்தனை பூப்பறித்துக் கொண்டு  போவதை வழக்கமாக்கி கொண்டனர். வேறு வேலை எதுவும் இல்லாமல் ஆபிஸிற்கு வந்த சிலர் ஆபிஸ் வேலையை புறம்தள்ளி விட்டு பூப் பறித்து அதை அங்கேயே தொடுத்து, விற்று நாலு காசும் பார்த்தனர் !
                    பிறகு வந்த அதிகாரி, இந்த ஒழுங்கீனத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வண்ணமாக எல்லா செடிகளையும் களைந்து விட்டு வாழை, மா, பலா என்று மரம் நாடும் யோசனையை முன் வைத்து நடத்திக் காட்டினார்... எல்லா மரங்களும் பலன் கொடுக்கத் தொடங்கியபோது, அந்த காய்களை 'எனக்கு..உனக்கு' என்று ஒவ்வொருத்தரும் அடிபிடி சண்டையில் இறங்கி பிரித்துக் கொள்வதைப் பார்த்து 'ட்ரான்ஸ்பர்' கேட்டாராம். அந்த அதிகாரி...
ஒருமுறை ஒரு பலாப் பழத்திற்காக வெட்டு குத்தே நடந்ததாக ஒரு தகவல்....


                    ஆகையால்தான், அந்த சம்பவங்களுக்கு பிறகு இனிமேல் வெறும் நிழல் மட்டும் கொடுக்ககூடிய தூங்கு மூஞ்சி மரத்தை வளர்க்கவேண்டும் என்று தீர்மானித்து, ஒரு சுற்றறிக்கையை மற்ற அரசு அலுவலகங்களுக்கும் அனுப்பி புண்ணியம் கட்டிக் கொண்டார்களாம்... 


                    எனவே, இனிமேல் எந்த அரசு அலுவலகத்திற்கு நீங்கள் செல்ல நேர்ந்தாலும் அங்கு கிளைபரப்பிக் கொண்டிருக்கும் தூங்குமூஞ்சி மரத்தைப் பார்த்து 'சிம்பாலிக்'காக வைத்திருக்கிறார்கள் என்று மட்டும் நினைக்க வேண்டாம்...
         
                                        *************************************


           
 
 



 


Tuesday, February 15, 2011

அப்புடு.... இப்புடு....எப்புடு..?

         
            அப்புடு.... இப்புடு....எப்புடு..?                        
                                      (ரொம்ப தப்புடு)
(முன் குறிப்பு : முதலில் பின் குறிப்பு படிக்கவும்)





          என்.டி.ராமராவ்காரு     சி. எம். ஆக ஆந்திரத்தை 'ஓஹோ' என்று அரசாண்டு கொண்டிருந்த காலகட்டம் அது. வில்லாக சர்டிபிகேட்டுகளையும் , அம்பாக அப்ளிகேஷன்களையும் கருதிக்கொண்டு ,அடுத்த வேளை 'புவ்வாவு'க்கு   ஏதாவது வேலை  கிடைக்குமா என்று   நான் வேட்டையாடிகொண்டிருந்தேன். என்.டி.ராமராவ்காரு, என்னை உடனடியாக ஆந்திர  மாநிலத்திற்கு வருமாறும் ,எனக்கு ஒரு வேலைவாய்ப்பு தருவதில் பெருமைப்படுவதாகவும் கூறி (மன்றாடி) அழைக்காவிட்டாலும் நான் அங்கு போவதாக முடிவு செய்து ஒரு சுபயோக சுபதினத்தில் ஹைதராபாத்தில் எனது ரூ.199.95 பைசா பாட்டா செருப்பு கால்களைப் பதித்தேன்.

           எனது சித்தி வீடு  ஹைதராபாத்தில் பாலா நகரில் இருந்தது. 'எந்தடு பஸ்சுடு பாலா நகருடு போகுடு' என்று எல்லா தமிழ் வார்த்தையோடும் ஒரு 'டு'வை சேர்த்தடித்து எனக்கும் எனது ஒன்றரையணா ஜோல்னா பைக்கும்  அதிக சேதாரம் ஏற்படா வண்ணம் பேசி, சித்தி வீடடைந்தேன். சித்திக்கும் என் கசின்களுக்கும் , நான் யார் துணையும் இன்றி தனியாக அவர்கள் வீடடைந்ததில் ஆச்சர்யம். கசங்கிப் போயிருந்த காலரைத் தூக்கி விட்டுக் கொண்டு என் பிரதாபத்தை பீட்டர் விட்டேன். 
            தெலுங்கு ஒரு 'டப்பா லேங்குவேஜ்' என்கிற என் எண்ணத்தை தவிடு பொடியாக்கும் சம்பவம் அடுத்த இரண்டு நாட்களில் நடக்கப் போவது தெரியாமல் அன்று முழுவதும் தெனாவெட்டாய்  திரிந்தேன்.
              சித்தப்பு HAL -இல் எக்சிக்யூடிவ். கசின்ஸ்   பள்ளிப்  படிப்பில் இருந்தனர். சித்தியோ 'லேடிஸ் க்ளப்' பின் காரியதரிசினி. எல்லாரும் ரொம்ப பிசி. நான் மட்டும் தான் அந்த வீட்டில் வெட்டி ஆபீசர். 
               சம்பவ தினத்தன்று , சித்தப்பு ஆபிஸ்க்கு கிளம்பிட்டார். யுனிபார்மை மாட்டிக்  கொண்டு கசின்சும் ஸ்கூலுக்குப் போயாச்சு. அவர்கள் போகும் வழியில் இருக்கும் அரிசிக் கடையில் வீட்டிற்கு அரிசிப் போட சொல்லிவிடும்படி சித்தி அவர்களிடம் காலையிலேயே சொல்லியிருந்தார்கள்.  'buf  கொண்டைக்கு ஊசி குத்தியபடி  சித்தி என்னிடம் ,"நேர போய் லெப்ட்ல திரும்பினா மளிகைக் கடை.. ..அங்க இந்த லிஸ்ட்ட குடுததுடு. அங்கிருந்து எதிர் சாரிக்கு வந்து பால் பூத்தை ஒட்டின சந்துல நேர போயி ரைட் எடுத்தா அரிசிக் கடை ஒண்ணு இருக்கும். நம்ப வீட்டு நம்பரை எழுதி தர்றேன்... அவங்ககிட்ட காமிச்சு 'வாளு இண்டிக்கு பீயம் பம்ப்பால பாப்பா செப்பின்தா'ன்னு கேளு" என்றதும் ,'எவ்வளவோ செஞ்சுட்டோம் ...இதை செய்ய மாட்டோமா' என்று வீட்டு நம்பரை ஒரு தாளில் எழுதி எடுத்துக் கொண்டு  கிளம்பினேன்.
                 சாலையில் இறங்கினேன்.  'தொரகுனா இடுவண்டி சேவா' பாடல் எவர் வீட்டில் இருந்தோ கசிந்து கொண்டிருந்தது. அதை சட்டை செய்யாமல் மனது முழுக்க 'வாளு இண்டிக்கு பீயம் பம்ப்பால பாப்பா செப்பின்தா ?' என்று உருப்போட்டபடி மளிகைக் கடையை அடைந்து லிஸ்ட்டை விசிறியடித்து  விட்டு, அரிசிக் கடையை நோக்கிய என் இரண்டாம் கட்ட லட்சிய பயணத்தைத்  தொடர்ந்தேன். 
                  'வாளு இண்டிக்கு பீயம் பம்ப்பால பாப்பா செப்பின்தா ?'
                  'வாளு இண்டிக்கு பீயம் பம்ப்பால பாப்பா செப்பின்தா ?'
                   என்று சிவாஜி மாதிரி, கமல் மாதிரி , ரஜினி மாதிரி  விதவிதமான மாடுலேஷனில் ஜெபித்துகொண்டே போய் என் இலக்கை அடைந்தேன். கடையில் செம கூட்டம். மனதுக்குள் 'வாளு இண்டிக்கு பீயம் பம்ப்பால பாப்பா செப்பின்தா ?' ரீல் ஓடியது.
சின்ன வயசில் அம்மா சொன்ன 'அத்திரிமாக்கு கொழக்கட்டை' கதை ஞாபகம் வந்தது.
                   கூட்டம் குறைந்ததும் அடிமேல் அடி வைத்து முன்னேறினேன்... 
                   காதில் பெரிய பெரிய கடுக்கன்களுடன், வெற்றிலையை குதப்பிக் கொண்டு அமர்ந்திருந்த முதலாளியை நெருங்கினேன்... அவருடைய சாதா பார்வையே முறைப்பது போல் இருந்தது.. கையில் தயாராக வைத்திருந்த தாளை உயர்த்திக் காண்பித்து தயங்கி, தயங்கி "வா ...ளு...   இன் ...டி...க்கு   பி. பீ... யம்    ப....ம்......பா .....லா   ...."என்று நாக்கு தடுக்கி, கண்கள் பிதுங்கி, தொண்டைக்குள் என் இதயம் சிக்கி சீரழிந்து, சொல்ல வந்த வாக்கியத்தை முடிக்க இயலாமல் நான் தடுமாறி தட்டாமாலை  சுற்றிக் கொண்டிருந்ததை உணர்ந்த 'கடுக்கன்',தெலுங்கில் ஏதோ சொல்ல, நான், அம்பேல்  ஆனேன். ஆந்திரா முழுவதும் ராமராவ் 'கிருஷ்ண பரமாத்மா' வாக நிறைந்து  இருப்பார் போல...என் பக்கத்தில் நின்று கொண்டு என்னை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த அப்பேற்பட்ட ஒரு 'கிருஷ்ண பரமாத்மா',"ரைஸ்  பேக் ' அல்ரெடி சென்ட் டு யுவர் ஹௌஸ்" ன்னு முதலாளி சொல்றாருப்பா." என்றார்.
                என்னிடமிருந்து ஒரு பெருமூச்சு குதித்தது  !!
                                
                                ***************
                         
                அடுத்த காரியமாக, பாலாஜி பப்ளிகேஷன்ஸின் '30 நாட்களில் தெலுங்கு' எங்கே கிடைக்கும் என்று தேடத் தொடங்கினேன்..

                                 **************
(பின் குறிப்பு : பத்திரிகைகள் தமது சர்குலேஷன்  குறையும்போது ரஜினி படத்தைப்          போட்டு சர்குலேஷனை  எகிற வைக்கும் உத்தி இந்த இடுகையில் கையாளப்பட்டுள்ளது..)

Monday, January 10, 2011

Swami Vivekananda Speech at Chicago - Welcome Address

ஜனவரி 12 --சுவாமி விவேகானந்தாவின் ஜன்ம தினம் ... அவருடைய கம்பீரக் குரலைக் கேட்போம் ,வாருங்கள்..

Sunday, January 2, 2011

சங்கீத சீசன் 
            திருச்சி அகில இந்திய வானொலி நிலையத்தில் பணிபுரிந்த நாட்கள் எம் வாழ்வின் மறக்கவொண்ணாத இனிய நிகழ்வு....எத்தனையோ கச்சேரிகளை இசைப்பதிவு செய்யும் பாக்கியம் கிடைத்தது...மனம் நிறைந்த சந்தோஷத்துடன் குதூகலமாக பதிவு செய்த கச்சேரிகள் இன்றும் AIR -இன் இசைக் கருவூலத்தில் உள்ளன.
                  இசை விற்பன்னர்கள் மேடையேறி அமர்ந்ததும் எங்கள் எல்லோர்க்கும் ஒரு பரபரப்பு தொற்றிக்கொள்ளும். அவர்கள் ஸ்ருதியை சரிபார்க்கிற நேரத்திற்குள் நாங்கள் balancing  செய்ய தயாராக இருக்க வேண்டும். ரசிகாசைப் பார்த்து ஒரு புன்முறுவல் புரிந்து விட்டு அவர்கள் இசைக்கத் துவங்கும்போது balancing  பணி ஆரம்பிக்கும். அதாகப்பட்டது ,அந்த மேடையை அலங்கரிக்கும்  எல்லா கலைஞர்களின் குரல் மற்றும்  வாத்தியங்களின் ஒலி அளவை  amplifier  -இல்  தேவைக்கேற்ப கூட்டி, குறைத்து ரம்யமான இசையைக் காற்றில் தவழ விடும் ரசவாதம். கொஞ்சம் பிசகினாலும் எவரும்  ரசிக்க முடியாது.
                 எனக்கு இந்த வேலை சுலபமாக இருந்ததற்கு காரணம் இசை மீதான என் பிரத்யேக காதல். அனுபவித்து balancing   -ஐ முடித்து விட்டு மேடையை அலங்கரிக்கும் அந்த இசை மேதையை கிடைத்த பேப்பரில்  வரைந்து 'தனி' நேரத்தின்போது அவரிடம் ஆட்டோக்ராப் வாங்கி விடுவேன்....  அப்பேர்ப்பட்ட சந்தர்ப்பங்களில் வரையப்பட்ட சில ஓவியங்கள் இந்த வாரம் உங்களின் பார்வைக்கு...


                   27 .04 .1981 அன்று குன்னக்குடி திரு. வைத்யநாதன் அவர்களின் கச்சேரி. தன் மோகன சிரிப்பை சிந்தியபடி வியப்பில் தன் கண்களை அகல விரித்து ,"ஆஹா ... என்னை படமா வரைஞ்சுட்டேளா?  பேஷ்" என்றபடி கையெழுத்து போட்டுக் கொடுத்தார்.




                      திருவாரூரில் நடந்த சங்கீத மும்மூர்த்திகள் விழாவில் மண்டலின் வாசித்த U  சீனிவாஸ் ஒரு பால் வடியும் முகம் கொண்ட குழந்தை  ... 89 -ம் வருடம்.



                    1993 -ம் வருடம் திருமதி சரஸ்வதி ராமநாதன் அவர்களின் அறிமுகம் கிடைத்தது.. அந்த பாசம் மிகுந்த சகோதரியின் அறிவுத்திறனையும், பேச்சுதிறனையும் அருகிருந்து ரசிக்கும் வாய்ப்பு கிடைத்தது.வாய் நிறைய எனை 'லக்ஷ்மிநாராயணன்' என்று அழைத்து அன்பு பாராட்டிய பெருந்தகை .




                    மார்ச் மாதம்..... 1989  -ம் வருடம் . மிகவும் சாஸ்த்ரீயமாய் வாசித்துக் கொண்டிருந்தார் லால்குடி திரு.ஜெயராமன். கையெழுத்தில் தன் பங்கிற்கு வயலினை வரைந்து விட்டு 'இது எப்படி இருக்கு ?' என்ற பாணியில் என்னைப் பார்த்து முறுவலித்தார்.





                     திருவாரூர் கச்சேரி... சாயந்திரம்  ஆறு மணிக்கு...மூணே முக்காலுக்கெல்லாம் 'வேகு வேகென்று' தனது வாத்திய பெட்டி சகிதம் பந்தலுக்குள் நுழைகிறார், அந்த கலைஞர். ஒரு சேரில் அமர்ந்து இளைப்பாறிக்கொண்டிருந்த எனக்கு தூக்கிவாரிப் போட்டது... அட.. இது கத்ரி அல்லவா...ஓடோடிச்சென்று வரவேற்கிறேன்.."எனக்கு ஒரு ஒரு மணி நேரம் ரெஸ்ட் எடுக்கணும்... கொஞ்சம் ஏற்பாடு பண்ண முடியுமா?" என்று மிக பணிவுடன் கேட்ட அந்த மாமேதையை இப்போது நினைத்தாலும் சிலிர்க்கிறது. காரியதரிசிஇடத்து  கூட்டிச் சென்று  அவருக்கு உதவ முடிந்ததது.
                    வழக்கம் போல் 'தனி ஆவர்த்தனத்தின்' போது அவருடைய படத்தை நீட்டி ஆட்டோக்ராப் கேட்டபோது  "ஓ ...நீங்களா?"என்று என்னையும் நினைவில் வைத்து கேட்டு , கையெழுத்து போட்டுக் கொடுத்தார்.



என்ன தவம் செய்தேனோ !!

Friday, December 31, 2010

"புத்தாண்டு நல்வாழ்த்துகள்-2011"

               ந்த வார துவக்கத்தில் திருச்சிக்கு செல்லும் பாக்கியம் கிடைத்தது.அங்கு அடியேன் சென்று இறங்கிய நாள் தொட்டு ,மீண்டும் சென்னைக்கு ரயில் ஏறும் வரையில் மூன்று நாட்களும் நசநசவென்று தூறலும், மழையும் ! நல்லவனாகவே இருக்கப்படாதப்பா...என்று என்னை நானே சபித்தேன்.. ஏனெனில், போன காரியத்தை கவனிக்க முடியாமல் இப்படி மழையால்  தொந்தரவு வரும் என்றால் எதற்காக இத்தனை நல்லவனாக இருக்க வேண்டும்? ( ஹி..ஹி கொஞ்சம் ஓவராயிடிச்சோ?)

               மழைக்காக ஒதுங்குவதற்கு இடம் தேடியபோது சின்னையா  பிள்ளை சத்திரத்தில் தற்போது அமைத்திருக்கும் ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் தென்பட்டது. அங்கிருந்த ப்ரொவ்சிங் சென்டருக்குப் போய் வலையை மேய்ந்துவிட்டு வலைப்பூவை முகர்ந்து கொண்டிருந்தபோது என் பக்கத்து சிஸ்டத்தில் ஏதோ டைப் அடித்துக் கொண்டிருந்த ஒரு நடுத்தர வயது மனிதர் தன் வேலையை விட்டு விட்டு என் வலைப்பூவை நோட்டமிடத் தொடங்கினார்.
"என்ன ப்ளாகா?" என்றார்.
"அமாம்" என்றேன், கித்தாப்பாக.
"என்ன பேர்ல எழுதறீங்க?"
"எல்லென் என்ற பெயரில்"- இது நான்.
விஷயம் தெரிந்த ஆசாமி போல இருக்கிறதே என்று நான் யோசிக்கும் முன்பே , அவர் எழுந்து என் கையைக் குலுக்கினார். " சமீபத்தில்தான் ப்ளாக்கில் உங்கள் படைப்புகளை பதிவு பண்ணத்தொடங்கி இருக்கிறீர்கள் அல்லவா? வெரி குட்... நன்றாக இருக்கிறது... கதைகளும் சரி... உங்கள் ஓவியங்களும் ரசனைக்குரியதாய் உள்ளன...தொடர்ந்து எழுதுங்கள் ", என்று என்னை உற்சாகப்படுத்தினார் .
எனக்குள் ஒரு நடுக்கம் பரவியது... " ஐயா ...தாங்கள்......?" என்று இழுத்தேன்.
"ஹாஹ்ஹா.... நானா ? " என்று சிரித்தவர், தனது ஜோல்னாப் பைக்குள்  கைவிட்டு  தன் விசிட்டிங் கார்டை நீட்ட , எனக்கு வியப்பும் சந்தோஷமும்... அந்த மனிதர்  வேறு யாருமில்லை... உயர்திரு ஆரண்யநிவாஸ் ஆர்.ராமமூர்த்தி அவர்கள்தான் !! அடியேன்  ஒரு ப்ளாக்கைத் தொடங்குவதற்கு இவருடைய ப்ளாக்கே காரணம். எமது ஒவ்வொரு படைப்பையும் கண்ணில் விளக்கெண்ணை விட்டுக் கொண்டு பார்த்து விமரிசனம் செய்து உற்சாகம் ஊட்டிய பெருமகனார்... என் கண் முன்னே... ஆஹா ,என்ன பாக்கியம் செய்திருக்கிறேன் ... அவர் கைகளை கால்களாய் எண்ணி ஒற்றிக் கொண்டேன்... பொது இடமானதால் அவ்வளவு மரியாதைதான் செய்ய முடிந்தது...
அவருடைய சிறிய வேலை அந்த சென்டரில்  முடிந்ததும் வெளியில் வந்து வெகு நேரம் பேசினோம். மிகுந்த எதார்த்த சிந்தனைகளுடனும் அதீத நகைச்சுவை உணர்வுகளுடனும் அவர் பேசியவை அனைத்தும் இப்போதும் எனக்குள் ஒலித்துக் கொண்டிருக்கின்றன. 
மூன்று ப்ளாக்குகள் எழுதுகிறார்.... .எனினும் சற்றும் கர்வமே இன்றி முதல் அறிமுகத்திலேயே  என்னுடன் அத்தனை நட்பு பாராட்டினார்... அவருடைய  பாசாங்கற்ற 
எழுத்துகளைப் போலவே அவரும் இருந்தார்... அவருடைய கீர்த்தனைகளைப் பற்றி சிலாகித்து நான் பேசிய போது அடக்கத்துடன் "எல்லாம் அவன் அருள்..." என்றார்.
"வீடு, தி.கோயிலில்தான் ... வாருங்களேன்.." என்றார்...
முகவரி வாங்கி பத்திரப் படுத்திக் கொண்டேன்... "அடுத்த முறை வரும்போது அவசியம் வருகிறேன்" என்றேன்."வரும்போது மறக்காமல் ஒரு கோணிப்பை எடுத்து வருகிறேன்... உங்கள் இல்லத்தில் விளைந்திருக்கும் மா, கொய்யா, மாதுளை,சப்போட்டா பழங்களை அள்ளிச் செல்வேன்" என்று அடியேன்  சொன்னேன். 
"மிகவும் சந்தோஷம்.... நான் எழுதியதை இன்னமும் நினைவு வைத்துள்ளீர்களே' என்றவர் "புத்தாண்டு நல்வாழ்த்துகள்-2011"என்று கூறி விடை பெற்றார்.
             அன்று பெய்த மழையை மிகவும் வாழ்த்தினேன் !
 

Friday, November 5, 2010

தீபாவளித் திருநாள்

                     

     தீபாவளித்  திருநாள் 



               ப்படி,இப்படியென்று   2010 -ம் வருடத்திய தீபாவளி , நவம்பர் ஐந்தாம் தேதி வெள்ளிக்கிழமையன்று  கங்கா ஸ்நானத்துடன் (!) தொடங்கி , ரஜினி பேட்டியுடன் இனிதே நிறைவடைந்தது. பெரியவர்களின் ஆசிர்வாதங்களும், நட்பு  இதயங்களின் நெஞ்சார்ந்த வாழ்த்துகளும் கைபேசி மற்றும் தொலைபேசிகள் மூலம் சொஸ்தமாக வந்து சேர்ந்தன. குறும்(பு) செய்திகளுக்கும் குறைவில்லை. வழக்கம் போல் நாமும் தொடர்பு எல்லைக்கு அப்பாலிருந்தவர்களையும் வலுக்கட்டாயமாக அழைத்து வாழ்த்துகளை வாரி வழங்கினோம்!!

               நேரில் வந்து வாழ்த்திய நண்பர்களிடம் ஸ்வீட்டை நீட்டிவிட்டு , "எங்க தாத்தா காலத்திலே' என்று நாம் ஆரம்பித்ததும்  , எம் உத்தம புத்திரன் ,"அப்ப  நான் கிளம்பறேன்"என்று பைக்கை ஓங்கி உதைத்துக் கிளப்பி தன சகாக்களை  காணச் சென்றான். வாழ்த்த வந்த நண்பர்களோ , எஸ்கேப்  ஆக வேறு வழி  தெரியாமல் சரணாகதித் தொனியில் "உங்க தாத்தா காலத்திலே...?" என்று ரொம்ப ஆவலை முகத்தில்  தேக்கிக் கேட்டனர்.

                  இது போதாதா நமக்கு.  கண்களை மூடிக் கொண்டு பழைய நினைவுகள் ஓட்டை டேபிள் பானாக சுற்றத் தொடங்கியது .."தாத்தா காலத்திலே , அவர் வசிச்ச கிராமத்துக்கு போவோம். தீபாவளிக்கு ரெண்டு நாளைக்கு முந்தியே , எங்க பாமிலி, எங்க சித்தப்பாக்கள்  பாமிலிஎன்று 8 பெரியவர்களும் சுமார் 20 சிறிய உருப்படிகளுமாக போய் இறங்குவோம். லேடீஸ் எல்லோரும் பட்சண, பலகார தயாரிப்புகளில் இறங்க , அப்பா,சித்தப்புஸ் எல்லோரும் கடைசி நேர ஷாபிங் செல்வர். தாத்தாவும் பாட்டியும் அவர்கள் காலத்திய தீபாவளியைப் பற்றி சிலாகித்து எங்களுக்கு கதை சொல்லியவற்றை மறக்க முடியுமா? நாங்கள் 20 பேரும் 'ஹா'வென்று வாய் பிளந்துக் கேட்டுக் கொண்டிருப்போம்.

                  அந்த இரண்டு நாட்களும்  'தீபாவளி,தீபாவளி' என்ற பினாத்தல்தான்... 'அவரவர் டிரெஸ்தான் ஒசத்தி' என்று  பீற்றிக்கொள்ளும்போது  ஏற்படும் ஆனந்தத்தை  விட 'அடுத்தவன் டிரெஸ் கலர் நல்லாவே  இல்லே...என்கிட்டே இதே மாதிரி ஒரு சட்டை இருந்தது ... ஒரே மாசத்துல டர்ரர்ர்ர்ர் ..ர்ர்ர்னு கிழிஞ்சுப் போச்சுன்னு'  சொல்லி கடுப்பு ஏத்தறதுல உண்டாகற உற்சாகம் இருக்கிறதே...அட..அட..அடா...!!! பாதிக்கபட்டவனோ / வளோ  தம் அம்மாவிடம் போய்ச் சொல்லி, அங்கே ஒரு சின்ன பாலிடிக்ஸ் அரங்கேறும்.

                 எங்களுக்கு மொத்தம் மூன்று சித்தப்பாக்கள். எல்லோரும் ,'தாம்..தூம்' என்று செலவழிப்பார்கள். ஒருவர் பட்டாசே ஆயிரம் ரூபாய்க்கு வாங்கி வருவார்.(எழுபது...எண்பதுகளில் ஆயிரம் என்பது பெரிய தொகை) இன்னொரு சித்தப்பு  ஆம்பிளப் பசங்களுக்கு மோதிரம் , சிகப்பு பிரேம் கூலிங் கிளாஸ் , கலைடாஸ்கோப் என்றும், பொம்பளப் பசங்களுக்கு ரிப்பன், வளையல், நெயில்பாலிஷ் என்றும் அள்ளி வழங்குவார். மூன்றாவது சித்தப்பு, பரிவாரங்கள் புடை சூழ ஹோட்டல் சென்று முந்திரி போட்டு ரவா தோசை வாங்கிக் கொடுத்து வீட்டில் வந்து தாத்தாவிடமிருந்து வாங்கிக் கட்டிக் கொள்வார். "வீட்டில இத்தனை செய்யும் போது எதுக்குக்  கூட்டிக்கிட்டுப் போனே" என்று தாத்தா சத்தம் போடுவார். பாவம் சித்தப்பா .

                  தீபாவளி நாளன்றைக்கு விடியல் மூன்று  மணிக்கெல்லாம் எழுந்து விடுவார் எம் அப்பா. இரண்டு பெரிய தவலைகளில் கிணற்று நீரை நிரப்பி , மண் அடுப்பில் ஏற்றி வைத்து வெந்நீர் வைத்து விட்டு எங்களை எழுப்புவார். " தீபாவளி வந்துடிச்சி... எழுந்திருங்க..எழுந்திருங்க " என்று எம் அப்பாவின் குரலைக் கேட்டதும் வாரிச் சுருட்டிக் கொண்டு எழுந்து , புழக்கடைப்பக்கம் ஓடுவோம்.

                    ஆஜானுபாகுவாய் இருப்பார் தாத்தா. முதலில் முதல் பேரனுக்கு தலைக்கு சுடச் சுட எண்ணெய் வைத்து விட்டு, பிறகு மற்ற பேரன் , பேத்திகளுக்கு எண்ணெய் தேய்த்து விடுவார். எண்ணெய் பட்டு கண்கள் ஒரு மாதிரி ஜிவு ஜிவுக்க போதா குறைக்கு , சரியாக காய்ந்திராத ஈர விறகு வேறு தன பங்கிற்கு புகையைக்  கிளப்பி பாடாய்ப் படுத்தும்.

                      எண்ணெய்  உடம்பில் சூடாய் வெந்நீர் ஊற்றப் படும்போது ஒரு சிலிர்ப்பு உண்டாகும். அதை அனுபவித்தபடி  இருக்கும்போதே சீயக்காய் தேய்க்கப்படும். அந்த காலத்தில் ஈகிள் பிராண்ட் சீயக்காய் பொடிதான். கண்ணில் பட்டதோ ....செம எரிச்சல் எரியும். இப்படி கண்ணில் சீயக்காய் விழுந்து ரெண்டு மூணு உருப்படிகள் 'வ்றாட்..வ்றாட்'டென்று கத்திக் கொண்டிருக்கும்.

                        குளித்து வந்தவுடன் தாத்தாதான் எல்லோருக்கும் அவரவருடைய துணிமணிகளை  சந்தன, குங்குமம் இட்டு ஆசிர்வாதம் செய்து கட்டிக் கொள்ள சொல்வார். அதற்கப்புறம் பெரியவர்கள் ஸ்நானம் பண்ணின  பிறகு, அவர்களின் பந்தோபஸ்துடன் வெடி,பட்டாசு, மத்தாப்பு வெடிக்க கிளம்புவோம்.

                         பொடிசுகள் நாங்கள் பொட்டு கேப், கம்பி மத்தாப்பு, கலசம், பாம்பு மாத்திரை, தரை சக்கரம் என்று ஜோலியைப் பார்க்க சித்தப்பாக்கள், அப்பா, தாததா எல்லோரும் பெரிய,பெரிய வெடிகளை வெடிப்பார்கள். தாத்தா ,ஒரு உபகரணம் வைத்திருப்பார். அதில் கந்தகத்  தூளை நிரப்பி,மூடி, ஓங்கி பாறாங்கல்லில் அடிக்க கிராமமே அதிரும். எங்கள் காதுகளுக்குள் 'ங்கொய்'என்கும்.

                        அதற்குப் பிறகு, தீபாவளி மருந்து சாப்பிட்டு , பட்சணங்களை ஒரு கை பார்ப்போம்.

                       இப்படி அழகாய் கொண்டாடிய தீபாவளி எங்கே? இப்போது ஏனோ, தானோவென்று  கொண்டாடும் தீபாவளி எங்கே? என்று மனம் ஏங்கத் தான் செய்கிறது.டெலிவிஷன் பாதியும், கணிப்பொறி பாதியுமாக நம் இளம் தலை முறையினரை  கட்டிப் போட்டு விட , செலேப்ரேஷன்  என்பது கூட ஒரு சம்பிரதாயமாக ஆகி விட்டதோ என்று எண்ணத் தோன்றுகிறது. நம் தாய்மார்கள்தான் அடுத்த தலைமுறையினர்க்கு நம் பாரம்பர்ய விழாக்களைப் பற்றி எடுத்துச் சொல்லி  அவர்களுக்கு அவற்றின் சிறப்புகளை உணர்த்த வேண்டும். "எம் பொண்ணு கிச்சன் பக்கமே வர மாட்டா.....கடையில போய்  என்ன வேணுமோ வாங்கிட்டு வந்து தீபாவளியை கொண்டாடிட வேண்டியதுதான் ..."என்று நம் தாய்மார்கள் கூறினால் , லட்டு,  மைசூர் பா, அச்சு முறுக்கு போன்ற பட்சணங்களை நம் வீட்டில், நாமே மிக சுகாதாரமாக செய்யலாம் என்பது நம் அடுத்த தலைமுறை குழந்தைகளுக்கு மிகுந்த ஆச்சர்யத்தைக் கொடுக்கும்.

                   யோசிப்போம். அடுத்த தீபாவளியை நிறைய மக்களுடன், உற்சாகமாக , நிறைய பலகாரங்கள் நம் வீட்டிலேயே செய்து ,டெலிவிஷனற்ற தீபாவளியாகக் கொண்டாட உறதி ஏற்போம்.

                    நான்  கண் விழித்த போது ஸ்வீட் சாப்பிட்டு முடித்து விட்டு நண்பர்கள் எப்போதோ கிளம்பிப் போயிருந்தனர் !!!