Pages

நேசம் நம் சுவாசம் !

Sunday, July 1, 2012

திருப்திதானே....





அழுவது தெரியப்படாமல் தண்ணீரில் இருந்தேன்...

என்னை தரையில் தூக்கிப் போட்டு

துடிப்பதை ரசித்தாய்...

உயிர் பறக்கும் தருணம் பார்த்து மீண்டும் நீரில் விட்டாய்.....

பிழைத்தபின்,

 மறுபடியும் தரையில் போட்டாய்.....

 துடித்தேன் .....
.
.
.
.
.
.
எனக்கோ உயிர்த்துடிப்பு...

உனக்கோ அதுவும் ஒரு விளையாட்டு....

ஓவிய மரியாதை

              ல்லா காலத்திலும் ஓவியத்திற்கு என்று ஒரு மரியாதை இருக்கத்தான் செய்கிறது. இதை உணர்த்தும் வண்ணம் எனக்கு 1995-இல் நேர்ந்த அனுபவம் இது.

              அலுவல் நிமித்தமாக 1995, மே மாதம் 5-ஆம்தேதி  திருவனந்தபுரத்திலிருந்து டெல்லி செல்கிறேன்...அந்த இரண்டடுக்கு குளிர்பதன ’கோச்’சில் என்னுடன் பயணித்தவர்களில் இருவர் மிக நெருக்கமாயினர். அந்த இருவரும் சகோதரர்கள்..டெல்லியில் கணிணி உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் ’ஹிந்தி’யர்கள். தி.புரம் வரை அவர்களின் சாம்ராஜ்யம் விரிந்து கிடந்தது. எனவே அடிக்கடி பயணிப்பர். அண்ணன் தம்பிக்குள் அப்படியோர் அன்னியோன்னியம்...

                ஆரம்பத்தில் நானும் கொண்டுபோயிருந்த புத்தகங்களை மேய்ந்தேன்...டைரி எழுதினேன்....வேளாவேளைக்கு சாப்பிட்டு,ஜன்னல் வழி வேடிக்கைப் பார்த்து ஓய்ந்தேன்...அந்த சந்தர்ப்பத்தில் சகோதரர்களில் சின்னவரை வரையத்தோன்றவே பென்சில், பேப்பர் சகிதம் அமர்ந்து வரைந்தேன். எனக்கே ஆச்சர்யம்...அந்த இளைஞனின் முகம் அசத்தலாய் பேப்பரில் வந்து விட்டது.

                அவனிடம் காண்பித்தால் அவனோ,”ஆஹ்ஹா....ஓஹ்ஹோ”என்று ஹிந்தியில் பாராட்டி என்னைக் கட்டிக்கொண்டு முதுகில் தட்டுகிறான்.. அவன் அண்ணனோ ஒரு படி மேலே போய் “இந்த முறை நீ எங்கள் வீட்டிற்கு வந்தேயாக வேண்டும்” என்று அன்புக் கட்டளையிட்டான்.

                  சென்றேன்.
                  
                   ராஜோபசாரம்...அவர்களுடைய அப்பாவும் அம்மாவும் தங்கள் மகனின் படத்தைப் பார்த்து விட்டு என்னை விழுந்து விழுந்து கவனிக்கிறார்கள். ‘என்ன பிரமாதமாக செய்து விட்டேன் ? ’ என்று எனக்கோ உயிர் கூசுகிறது...’விட்டால் போதுமடா சாமி’ என்று குலதெய்வத்தை வேண்டிக்கொண்டேன்.

                  எல்லாம் ஆயிற்று...அன்று மாலை என்னை என் அலுவலகத்திற்கு தங்கள் காரிலேயே கொண்டு வந்து விட்டார்கள்...இல்லையெனில், கிடைக்கும் சர்தார்ஜி ஆட்டோக்காரரிடம்”மே கிங்ஸ்வே கேம்ப் ஜானா சாஹியே” என்று ஓட்டை ஹிந்தியில் உளறிக்கொட்டி கிளறியிருப்பேன்.

                  ஆங்...இந்தப் படம்..  டெல்லி சென்ற வேலை முடிந்து தி.புரம் திரும்பும்போது அந்த டெல்லி சகோதரர்களின் தந்தையை மனதுள் வாங்கி
வரைந்து அவர்களுக்கு அனுப்பினேன்...


முகங்கள்...

             வேலையில்லாமல் வெட்டி ஆஃபீசராக ஊரை கிரிவலம் சுற்றிக்கொண்டிருந்த நாட்களில் வரைந்த படம்... இன்றைக்கும் என் அப்பா ”அதெப்படி ஒவ்வோரு முகத்துலயும் உயிர் இருக்கிறா மாதிரி வரஞ்சே..” என்று சிலாகித்துப் பாராட்டும் படம்...