Pages

நேசம் நம் சுவாசம் !

Sunday, June 19, 2011

பி(ஸ்)ஸி பேளா பாத்

நவீன பி(ஸ்)ஸி பேளா பாத் சாப்பிடலாம் வாங்க....

                      ந்த ‘கம்ப்யூட்டர்’, எல்லா துறைகளிலும்  புகுந்து கொலைவெறி தாண்டவம் ஆடும் இய்யுகத்தில் தமிழனின் பெருமைத்தளமான சமையல்துறையையும் விட்டுவைக்க வேண்டாம் என்கிற பேருள்ளம் கொண்டு ’பி(ஸ்)ஸி பேளா பாத்’ செய்து சாப்பிடும் முறை இவ்வாரம் வெளியிடப்படுகிறது.

                        சமையல் ‘ரெசிபி’ புத்தகங்கள் பெரும்பாலும் ‘சமைத்துப் பார்’ என்கிற ஒரு மாதிரியான கட்டளைத் தலைப்புடன்தான் வெளிவருகின்றன. விஷயம் தெரிவதாகக் காட்டிக் கொள்(ல்)கிற நண்பர் ஒருவரிடம் இது குறித்து கேட்டபோது,”ஆமாம்...அப்படித்தான் தலைப்பிடுகிறார்கள். ‘ரெசிபி’ பிரகாரம் செய்து பார்த்தோமே....டேஸ்டாக இல்லையே என்று எசகுபிசகாக யாராவது கேள்வி கேட்டுத் தொலைத்தால் ”நாங்கள் சமைத்துப் பார் என்றுதானே போட்டிருக்கிறோம்...உங்களை யார் சாப்பிடவெல்லாம் சொன்னது?’’என்று மடக்குக் கேள்வி கேட்டு அமுக்கிவிடலாம் என்ற தப்பித்தல் மனோபாவத்துடன் அவை அப்படி வெளியிடப்படுகிறன” என்றார்.

                     ஆனால், இந்த ‘ரெசிபி’ அந்த ரகம் இல்லை. தாராளமாக, மடிக்கணினியை அடுக்களைக்கு எடுத்துப் போய், ‘கேஸ்’அடுப்பின் ஜ்வாலைத் தொடர்பு எல்லைக்கு அப்பால் வைத்துக் கொண்டு வரிவரியாகப் படித்தபடி ஜூடான, ஜுவையான ’பி(ஸ்)ஸி பேளா பாத்’ தயாரிக்கலாம். தயாரிக்கப்பட்ட ‘மேற்படியை’ டைனிங் டேபிளுக்கு எடுத்துப் போய் தானும் சாப்பிட்டு மகிழலாம்....அகப்பட்டவர்க்கும் அளித்து மகிழலாம்.

                     முதலில் இந்த அய்ட்டங்களை ரெடி பண்ணிக் கொள்ளவும்.

                  கெட்டி அவல் ....... 250 கிராம்
                   பாசிப்பருப்பு ..........100 கிராம்
                  பெரிய வெங்காயம் ........ 2
                   பெங்களூர் தக்காளி ........ 2
                    உருளைக்கிழங்கு ..............2
                     கேரட் ........................................1
                    ஊறிய பச்சைப் பட்டாணி.......50 கிராம்
                     சாம்பார் பொடி ..................... 2 ஸ்பூன்
                     கரம் மசாலா பொடி ..............1 ஸ்பூன்
                      புளி ..........................        நெல்லிக்காய் அளவு
                      கொ.மல்லி விதை+கடலைப் பருப்பு+மி.வத்தல்+                                      (தம்மாத்துண்டு)தேங்காய்துருவல்
                      பச்சை கொத்துமல்லி 
                      முந்திரிப் பருப்பு+நெய்
                      ரீஃபைண்ட் ஆயில்
                       பட்டை,லவங்கம்,ஏலக்காய்

                       ஓக்கே....ரெடியா?

                       அடுப்பை பற்றவைத்து, ப்ரஷர் பேனில் கொஞ்சம்  ரீஃபைண்ட் ஆயிலையும் நெய்யையும் ஊற்றி பட்டை,லவங்கம்,ஏலக்காய் ஆகியவற்றை ஃப்ரை செய்து,  பொடிபொடியாக நறுக்கின பெரிய வெங்காயத்தை பொன்னிறமாக வதக்கி, அப்புறம் நறுக்கின மற்ற காய்கறிகளையும் போட்டு வதக்கி லேசாக ஒரு பெருமூச்சை உதிர்க்கவும்.
                        
                 பிறகு, சாம்பார் பொடியையும்  கரம் மசாலா பொடியையும் போட்டு வதக்கி, புளிக்கரைசலை அதில் ஊற்றி ஒரு கிளறு கிளறி கொதிக்க வைக்கவும்.
‘தள..புள’வென்று கொதிக்கத் தொடங்கும்போது தண்ணீரில் நனைத்த அவலையும், பாசிப்பருப்பையும் அதில் இடவும். ஒரு பங்கிற்கு சுமார் மூன்று பங்கு தண்ணீர் ஊற்றி, பிறகு தேவையான அளவு உப்பு இடவும்.
  
                  கொ.மல்லி விதை+கடலைப் பருப்பு+மி.வத்தல்+                               (தம்மாத்துண்டு) தேங்காய்துருவல் ஆகியவற்றை தனியே வறுத்து மிக்ஸியில் பொடித்துக் கொண்டு  அந்த பொடியையும்  ப்ரஷர் பேனில் கொதித்துக் கொண்டிருக்கும்  சமாச்சாரத்தில் போடவும்.

                 ப்ரஷர் பேனை மூடி வைத்து வெயிட்டைப் போடவும். மூன்று விசில் வரும் வரை அவரவர்க்கு இஷ்டப்பட்ட தெய்வங்களை வேண்டிக் கொள்ளலாம். மூன்றாம் விசில் அடித்த முப்பதாவது வினாடியில் அடுப்பை அணைக்கவும். 

                  சிறிது நேரம் தேவுடு காத்துவிட்டு மூடியைத் திறந்து நறுக்கின கொத்மல்லியையும் நெய்யில் பொறித்த முந்திரிப்பருப்பையும் அதில் போட்டு, நன்றாக கிளறி டைனிங் டேபிளுக்கு எடுத்து செல்லவும். 

                   பிரியமானவர்களுடன் அமர்ந்து பரிமாறி சூடாக,ஸ்பூன் உதவியுடன்  சாப்பிட்டு மகிழலாம். விருப்பத்திற்கு ஏற்றார்போல் காராபூந்தியோ, சிப்ஸோ சேர்த்துக்கொள்ளலாம்.
        
                   உங்களுடைய   குடும்பத்து உறுப்பினர் எவர்க்கேனும் ‘ஷுகர்’ இருந்தால் அவர்களுக்கு அவலுக்கு பதிலாக சம்பாகோதுமை ரவா உபயோகித்து செய்து தரலாம்.

 ****************

                 (பி.கு.:  திருமதி இந்த பதார்த்தத்தை செய்த போது “ஆஹ்ஹா.... ஓஹ்ஹோ”என்று பாராட்டியதன் விளைவு.....’இதை 'blog'ல் எழுதுங்களேன்’ என்ற அன்புக் கட்டளை. நீங்களும் செய்து பார்த்து, சாப்பிட்டுப் பார்த்து, பாராட்டித்தான் பாருங்களேன்!)

















                 
     















Sunday, June 12, 2011

திண்ணை



                டில்லி  ‘ஃப்ளைட்’  சுமார் நாற்பது நிமிடம் தாமதமாகவே சென்னையில் தரையிறங்கியது.  சூட்கேசை இழுத்துக் கொண்டு நான் காரிடாரை அடைந்த போது, எப்போதும் போல் தூரத்தில்  ‘ரேம்ப்’புக்கு அருகில் முரளி எனக்காக சிறு புன்னகையுடன் காத்திருந்தான். 
                மீனம்பாக்கம் புதுப் பொலிவிற்கு தயாராகிக் கொண்டிருந்தது. ஆங்காங்கே ராட்சச க்ரேன்கள் கொத்துக்கொத்தாய் பைப்புகளை உயர்த்திக் கொண்டிருந்தன. இன்னும் எப்படியும் இரண்டு வருடங்களில் இந்த விமான நிலையம் கம்பீர அடையாளம் பெற்றுவிடும்.
                  ”வாக்கா.... “ என்று வறட்சியான குரலில் முரளி என்னை வரவேற்று, என் கையிலிருந்து சூட்கேசை வாங்கிக் கொண்டான்.”அரை மணி நேரத்திற்கு மேல லேட்டாயிடிச்சில்லே” - என்றான்.
                   துப்பட்டாவை சரி செய்தபடி“ம்” என்றேன், “அம்மா இப்போ எப்படி இருக்கா?”
                  “இந்த தரம் பொழைக்கறது கஷ்டம்னு டாக்டர் சொல்லிட்டார்க்கா” என்றவனின் குரல் உடைந்தது. அவன் முதுகை ஆதுரமாக தட்டியபடி, ”ரிலாக்ஸ், முரளி” என்றேன். வெளியில் வந்தோம்.
                   அவனுடைய காரில் பின் சீட்டில் நான் அமர, அவனும் என்னருகில் வந்தமர்ந்தான். என் கண் எழுப்பிய கேள்வியை உணர்ந்தவனாக,”ஒரு மாதிரி டென்ஷனா இருக்கிறதனால வண்டி எடுக்க வேண்டாம்னுட்டு டிரைவரை ஃபிக்ஸ் பண்ணியிருக்கேன்க்கா” - என்றான்.
                   ”என்ன டென்ஷன் இதுலே... நான் வேணா ஓட்டட்டா...” என்று நான் சொல்வதற்கும் டிரைவர்  வண்டியருகில் வருவதற்கும் சரியாக இருந்தது.
                    மீனம்பாக்கத்தை விட்டு நீங்கி, கார் ஜீ.எஸ்.டி ரோடில் செங்கல்பட்டை நோக்கி விரைந்தது. 
                    முரளியை சமாதானப்படுத்தும் விதமாக, அவன் பக்கம் திரும்பி,”என்னைக்காவது ஒரு நாள் மரணம் நிகழவேண்டியதுதானே, முரளி அதை நினைச்சு வருத்தப்படறதோ... பயப்படவோ கூடாது ” என்றேன். 
                    “இந்த அப்பாவும் ரொம்பப் படுத்தறார் அக்கா..” என்றான்.
                     “ஏன்... என்ன பண்றார்?”
                     டிரைவருக்கு நம் வீட்டு விவகாரங்கள் தெரிய வேண்டாம் என்று நினைத்தானோ என்னமோ, வெறுமனே”ப்ச்” என்றான், முரளி. நானும் அதற்குப் பிறகு ஒன்றும் கேட்டுக்கொள்ளவில்லை.
                     ப்பா, அம்மா, குழந்தைகள் என்று மகிழ்ச்சியோடு வாழ்ந்த குடும்பம்தான் எங்களுடையதும். அதெல்லாம் இருபது வருடங்களுக்கு முன்னால்..... என்றைக்கு அப்பா என்கிற  ஒரு நாகரீகமற்ற மனிதர் அம்மாவை விடுத்து வேறு ஒரு பெண்ணோடு  ஓடிப் போனாரோ.....அன்றோடு தொலைந்தது எங்கள் குடும்ப சந்தோஷம். அப்பா, எலெக்ட்ரிக் கம்பெனியில் வேலை பார்த்து வந்த போது,  கொக்கி போட்டு திருட்டுத்தனமாக மின்சார சப்ளை ஏற்பாடு பண்ணிக் கொடுத்து எக்ஸ்ட்ரா காசு பார்த்தவர். அம்மா பவிஷான குடும்பத்தில் இருந்து வந்தவள் . ஆதலால்,“வேண்டாம்  இந்த மாதிரியான கேவல பிழைப்பு “என்று மன்றாடிப் பார்த்தாள். “அஞ்சு குழந்தைகளை வள்ர்க்கணும்னா இந்த மாதிரி ஏதாவது குறுக்கு வழியில போனாத்தான் உண்டு” என்றார் அப்பா.
                     இரண்டு பேர்க்கும் ஒத்துப் போகவில்லை என்பதை  ஊர் உணர்வதற்கு முன்னால், வேறு ஜாதி பெண் ஒருத்தி உணர்ந்துகொண்டாள். தன் வீட்டிற்கு கொக்கி போட்டு மின்சாரம் கொடுத்தவரை, தான் கொக்கி போட்டு இழுத்துக்கொண்டாள்.
                      ‘நிலை குலைந்து போதல்’ என்கிற பதத்திற்கு அம்மாவின்  அழுகை   மூலம் அன்றுதான்அர்த்தம் அறிந்து கொண்டேன். ‘துரோகி...துரோகி’ என்று பித்துப் பிடித்தவளைப் போல் அரற்றிக் கொண்டேயிருந்த அம்மாவிற்கு ஆறுதலாக , அம்மாவின் தம்பி  கொஞ்ச காலம் எங்களைப் பார்த்துக் கொண்டார். ‘அந்த மஹா பாவி இருக்கிற ஊர்ல நான் இருக்க மாட்டேன்’ என்று சொல்லி, குஞ்சும்,குளுவான்களுமாக இருந்த எங்களை இழுத்துக் கொண்டு திருச்சியை விட்டு , முன்னே பின்னே தெரியாத செங்கல்பட்டுக்கு வந்தாள்.
                     எங்களையெல்லாம் ஆளாக்குவதற்கு அவள் பட்ட கஷ்டம் கொஞ்ச நஞ்சமா...மாமா அனுப்பின அரிசி,பருப்பு,சொல்ப பணம் இதெல்லாம் பத்து நாளுக்குத்தான் வரும். கடைத்தெரு ‘நடேசன் காபி க்ளப்’பில் இட்லி மாவரைத்துக் கொடுத்து, கல்யாண வீடுகளில் பட்சணம் செய்து தந்து, வடாம் இட்டு விற்று, அப்பளாம் இட்டு கடை,கடையாக ஏறி விற்று, படாத பாடு பட்டாள். என்னையும், அம்பியையும் எசெல்சி வரை படிக்க வைத்தாள். நாங்கள் தலையெடுத்து மீனாட்சி, அகல்யா, முரளி மூவரையும் டிகிரி வரையில் படிக்க வைத்தோம்.
             
                    ப்போது நடந்த சம்பவம் ஒன்று இன்றைக்கும் ஞாபகம் இருக்கிறது. ஸ்கூல் ஃபீஸ் கட்ட மறுநாள்தான் கடைசி. சாயந்திரம் ஸ்கூல் விட்டு வந்ததும் அம்மாவிடம் சொன்னேன். பரபரப்பாகிவிட்டாள். வளையல் ஜோடி ஒன்றை தலைப்பில் முடிந்து எடுத்துக்கொண்டு ,”நீ முன்னாடி போய் பெரிய சேட்டு கடையில இருந்தா கையை அசைச்சு எனக்கு சமிக்ஞை கொடு”ன்னு சொல்லிட்டு, என்னை போக சொல்றா. ஓட்டமும் நடையுமா போன நான், வேகமா வர்ற ஒரு சைக்கிள கவனிக்காம மோதி கீழ விழுந்து கால் முட்டியில சிராய்ச்சு, போட்டிருந்த ஒரே நல்ல பாசிபச்சை கலர் பாவாடையும் கிழிஞ்சு நின்னேன். ஆனாலும், அம்மா பார்க்கிறதுக்கு முன்னால, சுதாரிச்சுண்டு ஓடினால், சேட்டு கடையில பெரியவர் இல்ல. அவர் பையன்தான் இருந்தான்.
                    பெரியவர் மிக நல்ல மனிதர். ரொம்ப கறாராக பேச மாட்டார். தேவைக்கேற்ப பணம் கொடுத்து உதவுவார். அவர் கடையில் இல்லாத சமயங்களில் பெரும்பாலும் அம்மாவின் நகைகள் அங்கே போகாது.
                     அன்றைக்கு நான்காவது முறையில்தான் - இரவு எட்டரை மணிக்கு மேல்தான் - எங்களின் முயற்சிக்கு பலன் கிட்டியது.நகைக்கு எதிர்பார்த்த பணமும் கிடைத்தது.  பெரியவர், என்னை ”நல்லாப் படிக்கணும்..பாப்பா.... ஒங்க அம்மாவோட கஷ்டத்த உணர்ந்து படிம்மா” என்றார்.
                      இப்படியெல்லாம் கஷ்டங்களினூடே படித்து முன்னேறி ஒரு பிரைவேட் கம்பெனியில் எனக்கு வேலை கிடைத்து, இரண்டுமூன்று கம்பெனிகள் மாறி இன்று தில்லியில் ஒரு MNC- யில் நல்ல நிலையில் நான் இருப்பதற்கு அன்று அம்மா செய்த தியாகங்கள்தான் காரணம். ’ஆண்துணை இல்லாமல் போனால் என்ன , நான் பெற்றதுகளை கரையேற்றிக் காண்பிப்பேன்’ என்று அவள் எடுத்துக் கொண்ட வைராக்கியம் பெருமைப்படத்தக்கது.

                       முரளி வண்டியை நிறுத்தச் சொல்லி ஒரு கூல் டிரிங்ஸ் வாங்கி வந்தான். குடித்தோம். சிறிது நேரம் காரை விட்டிறங்கி நடந்தேன். இன்னும் கால் மணி நேரத்தில் வீட்டை அடைந்து விடலாம். படுத்த படுக்கையாய் இருக்கும் அம்மாவைப் பார்க்கலாம்.

                      முரளி, அப்பாவும் படுத்துவதாக சொன்னானே.... ஏதோ வேளாவேளைக்கு சாப்பாடு கிடைக்கிறதா என்று சாப்பிட்டுவிட்டு  ’சிவனே’ன்னு  இருக்க வேண்டியதுதானே...ஏன் தொந்தரவு செய்கிறார்?
                       அப்பா....
                       அப்படி ஒருத்தர் எங்களுக்கு இருக்கிறார் என்பதை நாங்கள் மறந்திருந்த சமயம் - அதாவது, நான் தில்லியில் செட்டில் ஆன பின்பு, அம்பி வேலைக்குப் போன பின்னால் , மீனாட்சிக்கும், அகல்யாவிற்கும் கல்யாணம் முடித்து வைத்ததற்கு பிறகு, முரளி P.O - வாக வேலையில் சேர சென்னை சென்றிருந்த நாளில் அப்பா, வீட்டுக் கதவைத் தட்டியிருக்கிறார்.
                        ’ எந்த மஹாபாவியின் முகத்தில் முழிக்கவே கூடாது’என்று சபதம் எடுத்திருந்தாளோஅந்த ‘மஹா பாவி’ வீட்டு வாசலில் நின்று ”என்னை மன்னிச்சுடு, சுப்பு” என்று கதறியதும் அம்மா ஆடிப் போய் விட்டாள். ஆனாலும், வீட்டிற்குள் வர அனுமதிக்கவில்லை.
                          அம்பியை விட்டு எனக்கு ஃபோன் போட்டு பேசச் சொன்னாள். அம்பி , “ஷ்யாமிளி....அப்பாவுக்கு இப்பத்தான் நம்ப நினைப்பு வந்திருக்கு” என்றான். அம்மாவிற்கு நேர்ந்த அவமதிப்புகளும், அவளை துவளடித்த துயரங்களும்,  முள்மேல் நிறுத்தி வைத்த  ஒவ்வொரு  கணமும் என் மனசில் வந்து போயின.
                           ஃபோனை அம்மாவிடம் கொடுக்கச் சொன்னேன்.”என்னையும், குழந்தைகளையும்  தவியா தவிக்க விட்டுட்டு எவ பின்னாடியோ ஓடிப்போன மனுஷனை இந்த வீட்டுக்குள்ள விடப்படாது, ஷ்யாமிளி” என்றாள், அம்மா. அவளின் உறுதியான குரலில் ஆவேசக் கலப்பில்லாத மனவலி புரிந்தது. நம்பிக்கை துரோகம் செய்தவனை ஏறெடுத்தும் பார்க்க விரும்பாத பெண்மனம் புலனானது.
                         ஃபோனை வாங்கி அந்த மனிதர் பேசினார். “நான் அப்படி செஞ்சது பெரிய தப்புதான்....கடவுளும் , காலமும் எனக்கு வேண்டிய அளவு தண்டனை கொடுத்திருக்கு....பெண்டாட்டியை வேண்டாம்னு உதறின கையும், ஓடிப் போன காலும் பாரிசம் தாக்கி, செயல் குறைஞ்சு போச்சு. புத்தி தெளிவாயிடுச்சி... நீங்க எல்லாரும் என்ன மேலும் தண்டிக்கறதா இருந்தாலும் அதயும் ஏத்துக்கறேன்... ஆனா,என்ன துரத்தி விட்டுடாதீங்க..... வீட்டுக்குள்ள வரக் கூடாதுன்னு சொன்னீங்கன்னா, இந்த திண்ணையில முடங்கி கிடக்கேன்...என்னை   போக மட்டும் சொல்லிடாதீங்க” என்று அழுதார் அப்பா.
                       அம்மாவின் பிடிவாதம் சற்று இளகியது. திண்ணையைத் தாண்டி வீட்டிற்குள் காலடி எடுத்துவைக்கக் கூடாது என்ற உத்தரவாதத்துடன் திண்ணையில் தங்கிக் கொள்ள சம்மதித்தாள்.
                         அதற்கு பிறகு செங்கல்பட்டு போயிருந்த சந்தர்ப்பங்களில் ஈனப்பிறவியாக தன்னை பாவித்துக்கொண்டு திண்ணையிலேயே  வசித்த அந்த மனிதரிடத்து எனக்கு  துளியும் பரிதாபம் தோன்றவில்லை. நாங்கள் யாராவது ஒருத்தர் தட்டில் சாப்பாடு  வைப்போம். எடுத்து சாப்பிட்டு விட்டு தட்டை கழுவி வைப்பார். அம்மா  கொண்டு வைத்தால் , ஒரு வித அசிரத்தையுடன்  தட்டை தள்ளி எறிவாள். 
                       தில்லியிலிருந்து ஒரு தரம் வந்திருந்த போது, அப்பாவிற்காக திண்ணையை ஒட்டியே ஒரு பாத்ரூம் கட்டிக் கொடுத்தேன்.

**********
                    ம்மா, கிழிந்த நாராய் கட்டிலில் கிடந்தாள். குனிந்து அவள் காதருகில் ,”அம்மா, நாந்தாம்மா உன்னோட ஷ்யாமிளி வந்திருக்கேன்” என்றேன். கண்ணைத்திறக்கவில்லை. உதடுகளில் மட்டும் ம்லேசாய் அசைவு தெரிந்தது.
                    மகன்களும்,மருமள்களும், மாப்பிள்ளைகளும், பேரக் குழந்தைகளும் நன்றாகவே அம்மாவை கவனித்துக் கொண்டிருந்திருக்கிறார்கள். பெரும் வாழ்க்கையை இழப்பாகவே வாழ்ந்த மனுஷி,கடைசி மூச்சையும்  இழக்க தயாராகிக் கொண்டிருந்தாள். 
                    அம்மாவின் சுருங்கிப் போன கையைப் பிடித்தபடி அம்பி, “அம்மா உன்னை நினைச்சுத்தான் உருகிப் போவா.. கஷ்டத்தையெல்லாம் என் கூட சேர்ந்து தாங்கினா ஷ்யாமிளி.... நான் இருக்கேம்மா உனக்கு... கண்கலங்காதேம்மான்னு... எனக்கு பொண்ணுக்கு பொண்ணா, பிள்ளைக்கு பிள்ளையா இருந்தா....என்னை தெருவில விட்ட தெய்வம் அனுப்பித் தந்த ஊனுகோல் அவ’ன்னு வாய் ஓயாம புலம்பித் தீர்ப்பா......’குழந்தைகளை முன்னுக்குக் கொண்டு வரணும்கிற என்னோட வெறிக்கு ,தோள் கொடுத்து ஒத்தாசை பண்ணனும்னுட்டு, தான் கல்யாணமே பண்ணிக்கப் போறதில்லே’ன்னு என்கூடவே கைபிடிச்சு வந்தவ,ஷ்யாமிளி’ன்னு எப்பவும் உன்னைப் பத்தின பேச்சுத்தான்.... உன்னோட நினைப்புதான் ”
                    எங்களுக்காக உழைத்து  ஒடுங்கிப் போன அம்மாவின் கைகளைப் பிடித்துக் கொண்டேன். ஒரு வித கெஞ்சல் முகபாவனையுடன் ,திண்ணை ஜன்னல் வழியாக அப்பா எட்டியெட்டிப் பார்த்தார் .
                    அம்மாவின் மூச்சில் ஒருவித அசாதாரணம் தென்படவே , அவளருகில் குனிந்தேன். அம்மா ”மனசில வஞ்சனையோட இந்த உலகத்தை விட்டு பிரியாதே.... போனால் போகட்டும் என்று அப்பாவை மன்னித்து விடம்மா” என்று அவளைக் கட்டிக் கொண்டு ரஹஸ்யமாய் சொன்னேன். எனக்கான தன் பதிலை மிகவும் அமானுஷ்யமாக (subtle) சொல்லி விட்டு தலையை என் மடியில் சாய்த்தாள்.

**********
                 ல்லா பாரங்களையும் ஒரு பெருமூச்சுடன் உதறிவிட்டு கிளம்பிய அம்மாவை தலை நிறைய பூக்கள் சூட்டி, முகத்தில் மஞ்சள் பூசி, நெற்றியில் பெரிய குங்குமப்பொட்டுடன்  சுமங்கலியாக வழியனுப்பி வைத்தோம். ஒரு கணவனாக செய்ய வேண்டிய சாங்கியங்களை அப்பா ஒருவித குற்ற உணர்வு மேலிட செய்து முடித்தார். 
                   “நீங்க இனிமே திண்ணையில இருக்க வேண்டாம்.... நாளையிலிருந்து வீட்டிற்குள் வரலாம். அம்மாவிடம் கேட்டுவிட்டேன்” என்றேன். அந்த முகத்தில் ஒரு மலர்ச்சி தெரிந்தது.

                   றுநாள் காலையில்,  திண்ணையைப் போய் பார்க்கிறேன். திண்ணை காலியாக வெறிச்சோடிக் கிடந்தது.அந்த மனிதரைக் காணோம்.

************************

                  


 

             
                           
                                                   
                    






                   







Saturday, June 4, 2011

நான் அடிச்சா தாங்கமாட்டே...


                 ரொம்ப நாட்களுக்கு பிறகு எனது பால்ய நண்பன் அப்துல் கஃபூரை  கைபேசி மூலம் தொடர்பு கொண்ட போது, ‘ராசாவே உன்ன..காணாத நெஞ்சு.. காத்தாடி போலாடுதே’ என்ற  ட்யூன் முடிந்த பிறகு, செருமியபடி, “ஹலோ... சொல்லுங்க ...எல்லென்” என்றான்.
                  ஷேம,லாபங்களைப் பற்றி விசாரித்துவிட்டு, “கஃபூர்.... போன வாரம் திருச்சி போயிருந்தேன்... அப்ப நம்ப  மேத்ஸ் டீச்சர் கிருஷ்ணன் சாரப் பாத்தேன்” என்றேன்.
                   “ஹேய்... நம்ப ’மஞ்சள் மகிமை’ கிருஷ்ணன் சாரா ? எப்படிப்பா இருக்கார்”
                   “நல்லாவே இருக்கார்.... என்ன.. வயசாயிடிச்சதுனால லேசா டல்லடிக்கிறார் ... மத்தபடி ஓக்கே”
                    “உன்ன அடையாளம் கண்டுகிட்டாரா?”
                    “ம்ஹூம்...’முத பெஞ்சில உட்கார்ந்திருப்பேனே சார்... உங்களுக்கு வெத்தில, பாக்கு கூட வாங்கி வருவேனே சார்’ங்கிறேன்.... ஆமாம்.. ஆமாங்கிறார்... ஆனா அவரால சரியா புரிஞ்சிக்க முடியல”
                    “அப்புறம்...” என்ற கஃபூர், “ஒரு நிமிஷம்..எல்லென்... சிக்னல் சரியா கிடைக்கல... மாடிக்கு வர்றேன்” என்று சொல்லி விட்டு சில நொடி மெளனம் காத்து, “ ம்... இப்ப சொல்லு” என்றான்.
                    “அப்புறமென்ன... ’சார்... நான் கஃபூர் கிளாஸ்மேட் சார்’ ன்னதும், அவர் முகத்தில ’அப்படியா’ன்னு ...ஒரே சந்தோஷம்...ஒன்னெ நல்லா ஞாபகம் வச்சுருக்கார்”
                     “அப்படியா..”என்றவனின் குரலிலும் சந்தோஷம் தொனித்தது.”என்ன அவரால மறக்க முடியாது...எல்லென். அதே போல எனக்கும் அவர லேசில மறக்க முடியாது” என்றான்.
                        இந்த கைபேசி சம்பாஷணையில் நமக்கு தேவையான இடத்தில் தற்போது நாம் நிற்பதால் இந்த உரையாடலை இங்கேயே  'freeze'  செய்து விட்டு கதைக்கு வருவோம்.
                       1974 - 75 -இல் நானும் கஃபூரும் S.S.L.C. (அப்போது XI Std.,) படித்துக் கொண்டிருந்தோம். நான் காலாண்டுத் தேர்வுக்கு முன்னால் ‘டைபாய்டு’ ஜுரத்தில் படுத்துவிட்ட போது யக்ஞராமன் என்ற நண்பனும் இந்த கஃபூரும்தான் என் வீட்டிற்கு வந்து அன்றாடம் நடந்த  பாட விவரங்களை எனக்கு சொல்வர். அந்த நன்றி கலந்த நட்பு 35 வருடங்களுக்கு பிறகும் - இன்றளவும் - எனக்கு கஃபூருடன் தொடர்கிறது.
                       கஃபூர் ஒரு  above average student.  படிப்பில் மிகவும் ஆர்வம் மிக்கவன். எல்லா பாடங்களிலும் 70 - 80 என்று வாங்குபவன், கணக்கில் மட்டும் நொண்டியடிப்பான். 50 -ஐ  தாண்ட ’தலைகீழாய் நின்று தண்ணி குடிப்பான்’.  
                        ’கிருஷ்ணன் சார்ட்ட மட்டும் ட்யூஷன் எடுத்தேன்னா நல்லா மார்க் வாங்கலாம்டான்னு’ சொல்வான்... அவர்கிட்ட கேட்டுப் பார்த்தான்..கெஞ்சிப் பார்த்தான். ஆனா, அவர் ஏனோ காரணத்தினால அவனுக்கு ட்யூஷன் எடுக்கறத தவிர்த்துகிட்டே வந்தார்.
                        சம்பவ தினத்தன்று, க்ளாஸ் ரூமில் மேத்ஸ் க்ளாஸை  கிருஷ்ணன் சார், மிகுந்த ரசனையுடன் எடுத்துக் கொண்டிருக்கிறார்.  சார், ஒரு கோபிஷ்டர் என்பதால் எல்லோரும் மிகுந்த கவனத்துடன் பாடத்தைக் கவனிக்கிறோம். ஆனால், மூன்றாவது பெஞ்சில் , கஃபூரோ இடது கையை இடது கன்னத்திற்கு முட்டு கொடுத்தவாறு உட்கார்ந்திருந்த ‘போஸை’ பார்த்த சாருக்கு வந்ததே கோபம். கஃபூரை எழுந்திருக்கச் சொல்லி ‘பொளிச்’சென்று விட்டார், ஒரு அறை. என் காதுக்குள் ‘ஙொய்ங்’ஙென்றது. அதைத் தொடர்ந்து ,
                        “அய்யோ” என்று  ஒரு அலறல்... அடி வாங்கிய கஃபூர் கத்தவில்லை...அடி கொடுத்த சார்தான் அலறியிருக்கிறார். என்ன நடந்தது என்று நாங்கள் எழுந்து நின்று பார்க்கிறோம்......கஃபூரின் வாயிலிருந்து பல் உடைந்து ரத்தம் ‘குபுக்..குபுக்’கென்று தினத்தந்தி பாஷைக் கணக்காய்க் கொட்டுகிறது. ரத்ததைப் பார்த்த சாருக்கு கையும் ஓடவில்லை...காலும் ஓடவில்லை...அவர் தேகம் நடுங்குகிறது...டென்ஷனாகி விட்டார்...”லீடர் இவனை பாத்ரூமுக்கு கூட்டிக்கிட்டுப் போய் வாயைக் கழுவி, காண்டீன்ல  டீ வாங்கிக் கொடு....” என்று சொல்லி லீடர் கையில் ஐந்து ரூபாயைத் திணிக்கிறார்.
                      அன்று அவர் பட்ட பாடு எங்களுக்குத்தான் தெரியும்....எல்லாம் நல்ல படியாக நடந்தேறி, அவன் சொஸ்தமாக கிளாஸிற்கு வந்து சேர்ந்த பின்புதான் சாரின் முகம் மந்தஹாசமாகியது.(இரண்டு டீ போக மிச்ச சில்லறை அவர் கைக்கு போகவில்லை என்பது வேறு விஷயம்.)
                      அன்று நடந்த சம்பவத்தை ஹெட்மாஸ்டர் வரையில் கொண்டு போக மாட்டேன் என்று அவரிடம் கஃபூர் சத்தியம் செய்த போது, சார் அவனை உச்சிமுகராத குறைதான். 
                       ஆனால் அடுத்தடுத்த கிளாஸ்களில் சார்வாள் பொத்தாம்பொதுவாக,”ஓங்கி அடிச்சேன்னா, பல்லு முகரையெல்லாம் பிஞ்சிடும்” என்று ‘சிங்கம்’பட வசனம் மாதிரி பேசி உதார் விடும் போது எங்களுக்கு லேசாய் சிரிப்பு வரும்.
                        அதற்குப் பிறகு கஃபூர், ஒரு சரியான சந்தர்ப்பத்தில் ,” எங்கப்பா உங்களைப் பாக்கணும்னு சொன்னார்,சார்”னு சொல்லவும், சார் பதட்டமாகினாராம். “எதுக்கு..எதுக்கு?” என்றாராம்.
                        “உங்ககிட்ட மேத்ஸ் ட்யூஷன் சம்பந்தமா பேசணுமாம், சார்” என்றிருக்கிறான், கஃபூர்.
                        ‘ இதுக்கெல்லாம் அப்பா வந்து என்னத்துக்கு சொல்லணும்... நாளை முதல் நீ ட்யூஷனுக்கு வந்துடு” என்று சொல்லி விட்டாராம்.
                         அவரிடத்தில்  ட்யூஷன் படித்து கணக்கில் 100 க்கு 100 வாங்கியதை எல்லோரிடத்தும் ,எப்போதும் பெருமையாக சொல்லிக் கொள்ளும்  கஃபூர், அடி வாங்கிய அன்றைக்கு அவன் பல் வலியால் அவஸ்தைப் பட்டுக் கொண்டிருந்ததையும் , அதனால் கையூன்றி அமர்ந்திருந்ததையும், நயா பைசா செலவில்லாமல் பல் ‘பிடுங்க’ப்பட்டதையும் எவரிடத்தும் சொன்னதே இல்லை -  என்னைத் தவிர.

**********